சில ரோஜாக்கள்


பக்கவாட்டுக் கிளைகள்
ஜனவரி 28, 2010, 12:31 பிற்பகல்
கோப்பு வகை: Poems

இந்த மரத்தினை வெட்டுவதை
உங்கள் வெற்றியாய் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
போன்சாய் மரங்கள்
பக்கவாட்டில் கிளைபரப்புவது
உஙகளுக்கு புரிவதேயில்லை.

o



மண்ணோடு போய்
ஜனவரி 28, 2010, 12:31 பிற்பகல்
கோப்பு வகை: Poems

ஒரு பூச்செடியை பிடிங்கி வேறொரு
இடத்தில் நடுகையில்
வேருடன் சேர்த்து மண்ணையும்
எடுத்துப் போகிறீர்கள்
பூச்செடிக்கு காட்டும் கருணையில் கொஞ்சம்
மண்ணுக்கும் காட்டுங்கள்.
o



கதாரசிகன்
ஜனவரி 28, 2010, 12:30 பிற்பகல்
கோப்பு வகை: Poems

நேற்றிரவு
தன் சோகத்தை
அவள் சொல்லத் தொடங்கையில்
என் வலிகளை
பகிர்ந்துகொள்ள அழைத்திருந்தேன்.
பின்
அவள் கதையை
கேட்டுக்கொண்டிருந்தேன்.
கேட்டுக்கொண்டே இருந்தேன்
கேட்டுக்கொண்டு மட்டுமே இருந்தேன்
o



இறக்கை முளைக்கும் பேனாக்கள்
ஜனவரி 28, 2010, 12:30 பிற்பகல்
கோப்பு வகை: Poems

சில நேரங்களில் பேனாக்களுக்கு
இறகுகள் முளைத்துவிடுகிறது
தொடக்கூடாத தெருக்களின் மேல்
பறந்து செல்கிறது
சில நேரங்களில் பேனாக்களுக்கு
ஊசி முளைக்கிறது
மறந்து போன பிரியங்களை
குத்திப்போகிறது
சில நேரங்களில் பேனாக்களுக்கு
துப்பாக்கி முளைக்கிறது
யோசிப்பதற்கு நேரம் கொடுக்காமல்
அழித்துவிடுகிறது
எப்பொழுதும் பேனாக்களுக்கு
எழுத்துகள் முளைப்பதேயில்லை



கவிதை எழுதுவோர் கதை (நன்றி உயிரோசை)
ஜனவரி 25, 2010, 5:15 பிற்பகல்
கோப்பு வகை: Poems

இந்த கவிதை
அடுத்த தலைமுறையில்
நிற்காது என்றான்
அந்த கவிஞன்.
அடுத்த தலைமுறையில்
கவிஞர்களுக்கு பஞ்சம் வரப்போவதாய்
உனக்கு யார் சொன்னது?
0

அணில் தூங்கும் இடம் பற்றி
கவலைப்பட ஒரு கவிஞன் இருந்தான்.
அவன் தூங்கும் இடம் பற்றி
கவலைப்பட இங்கு யாருமில்லை.
o

“கவிஞர்கள் பெரும்பாலும்
இளவயதிலேயே இறந்து விடுவது
ஏன்?” என்றாள் அவள்
“இப்படி கேள்வி கேட்பதால்தான்”.
o

மரத்திலிருந்து உதிரும் பூக்களை
கணக்கெடுக்க வேண்டியிருக்கிறது
குழந்தையின் விளையாட்டுகளை
கவனிக்க வேண்டியிருக்கிறது
சூழ்நிலையின் அபத்தங்களுக்கு
காத்திருக்க வேண்டியிருக்கிறது
துரோகத்தின் கணங்களை
நினைவில் வைத்திருக்க வேண்டும்
சொந்த விஷயங்களை
அவர்களுக்கு விளக்கமாய் சொல்ல வேண்டும்.
கவிஞனாய் இருப்பதற்கு பதில் சும்மா இருக்கலாம்.
o

அந்த கவிஞன் திருடன்.
இவன் கோழை.
இன்னொருத்தன் குடிகாரன்.
மற்றொருவன் ஸ்த்ரீலோலன்.
கவிதாயினி ஒருத்தி காமம் பீடித்தவள்.
இன்னொருத்தி சிகரெட் ரசிப்பவள்.
ஒருத்தி திமிர் பிடித்தவள்.
போதும்.
இனி
அவர்களின் எழுத்துக்களைப்பற்றி பேசுங்கள்.
o

நன்றி உயிரோசை



செல்வராகவன் – ஆயிரத்தில் ஒருவன்
ஜனவரி 20, 2010, 8:21 மு.பகல்
கோப்பு வகை: Poems

ஆயிரத்தில் ஒருவனின் விமர்சனங்கள் பிரமிக்க வைக்கின்றன. படம் குறித்த எக்கச்சக்கமான எதிர்மறை விமர்சனங்களை படிக்கையில் நகைக்க வைத்தாலும் கொஞ்சம் எரிச்சலாகக் கூட வருகிறது. லாஜிக் இல்லை என்கிறார்கள். இவர்களை எதைக் கொண்டு அடிக்க எனத் தெரியவில்லை. சொல்பவர்கள் இதே இயக்குனரின் துள்ளுவதோ இளமை போன்ற படங்களை ரசித்தவர்கள்.

கதா நாயகனின் ஆடைகளும் அவனது ஆரம்பக்காட்சியும் பருத்திவீரத்தனம். அவனது வசனங்கள், நடவடிக்கைகள் எம்.ஜி.ஆர் ரசிகனாய்க்காட்டுவது போன்றவை B&C மக்களை தியேட்டருக்கு இழுப்பதற்கு மட்டுமே என அப்பட்டமாய் தெரிகிறது. கட்சி சார்பு தொலைக்காட்சிகள் திட்டமிட்டு மிகைப்படுத்தவோ இருட்டடிக்கவோ செய்-யும்/கிறது.

இதை ஒருவகையில் மேஜிக்கல்-ரியலிச கதையாகக் கொள்ளலாம். மேஜிக், பாட்டிக் கதைகளில் வரும் அதே ஏழுகடல்-ஏழுமலை தாண்டி கிளியின் வயிற்றில் உயிர் இருக்கும் பழைய கதை. ஏழுகடல்-மலைக்கு பதிலாக ஏழு தடைகள். உயிருக்கு பதிலாக சோழ இளவரசன். தேடிப்போகும் தளபதி என எளிதான சிறு பிள்ளைக்கதை, இந்தக் கதை நினைவுக்கு வராமல் பிரமிப்பில் வைத்திருக்கும் திரைக்கதை.நவராத்திரி கொலுவில் ஏழு படிகளில் இருக்கும் வெவ்வேறு வகை உயிரிகள் ஒவ்வொரு தடைக்கும் பயன்படுத்தி இருப்பது தற்செயலாய் அமைந்ததாய்க்கூட இருக்கலாம்.

ரியலிசம், அவதாரைக் கொண்டாடிய அதே காரணம். வலுத்தவன் சிறுபான்மையினருக்கு செய்யும் சிறுமைகள். இதை ஒரு பார்வையில் மட்டும் பார்த்து , இழிவான வியாபாரம் எனத் திட்டுபவர்கள் மற்ற இன அழிவுகளையும் ஒருங்கே தேடிப்பார்த்தால் பொதுப்படையான அம்சம் இதில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது எளிதாய் புரியும்

ஒளியியல் ( நடராஜர் நிழல்) , ஒலியியல் (சத்ததினால் பைத்தியம் பிடிக்க வைக்கும் கிராமம்) விஞ்ஞானம் ஆரம்பக்காலத்திலேயே இருந்ததற்கான ஆதாரமான அந்த காட்சியமைப்புகள், வெறும் கற்பனையல்ல பழைய காவியங்களில் சொல்லப்பட்டதை எடுத்தாண்டதாய் செல்வராகவன் சொன்னதையும் இங்கு ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.

ஒரு காட்சியில் காறிதுப்பும் ரீமாசென் ‘ழ’ விற்கு செய்வதுபோல் நாக்கை செய்வார். பின் குத்துக்காலிட்டு மண் தூற்றிவிட்டு செல்வார். கிராமத்துக் கிழவிகளிடம் அந்தக் காட்சியைப் பார்த்தவன் என்ற முறையில் ஆச்சர்யமுற்றேன். அந்த தமிழும்,தமிழர் வழக்கங்களும் , ‘பொறுத்தது போதும் பொங்கியெழு’ காலத்திய ராஜா ராணி படங்களில் கூட காட்சிப்படுத்தப் படவில்லை.

இறுதிக்காட்சியின் நடனம்,இசை காதுக்குள் கருவி அடைத்து சினிமாப்பாடல் கேட்கும் இன்றைய தலைமுறைக்கு காட்டுமிராண்டித் தனமாய் இருக்கலாம். இதுதான் தமிழனின் இசை என்பது இன்றைய தமிழ் தாங்கிகளுக்கு தெரியுமா எனத் தெரியவில்லை.

எதிர்மறை விமர்சனங்கள் குறித்து பொதுப்படையாய் சிந்தித்துப் பார்த்தால் எப்போதோ படித்த கோட்பாடு நினைவுக்கு வருகிறது

“புத்திசாலியாக ஆக முடியாத முட்டாள்கள் புத்திசாலிகளை குறை சொல்வதன் மூலம் தன்னை அதிபுத்திசாலியாக காட்ட முனைகின்றனர்.”

என்ன சொல்ல வருகிறேன் எனப் புரிகிறதா?

குத்துப்பாட்டு , மார்கெட் சண்டை , முதலமைச்சர்களை வழியில் பார்த்து வம்பு வளர்த்து ஜெயிக்கும் ஹீரோ , சென்னைக்கு முதல் முதலாக வந்து எல்லா ரவுடிகளையும் ஒழிக்கும் ‘வருங்கால முதல்வர்’ , உலகத்தையே அழிக்கும் பாமை இடது கையில் ஒயரை வெட்டி தடுக்கும் ‘வருங்கால அமேரிக்க ஜனாதிபதி’ ஹீரோ கதைகளுக்கு நடுவே இதையும் எடுக்கத் துணிந்த செல்வராகவன் உண்மையிலேயே ஆயிரத்தில் ஒருவன்.



அழிவுக்கால பெவிகால் பருந்து (நன் றி -உயிரோசை)
ஜனவரி 12, 2010, 7:42 மு.பகல்
கோப்பு வகை: Poems

ஓய்விலிருக்கிறது பறந்தலைந்த
பெவிகால் பருந்து
ஒவ்வொரு கல்லெறிதலிலும்
தன் சிறகுகளை பரிசளித்தபடி
மெளனத்திலிருக்கிறது
பறந்தலைந்த நினைவுகளில்
வெளித் தெரிகிறது
கிரகணம் கொண்ட நிலா
புன்னகை முகமூடியின் புறத்தில்
இறுதிச் சிறகு எரிந்து விழும்
பொழுதுகளிலும் உங்களுக்கு பரிசளிக்கப்படும்
இன்னும் ஒரு கண்ணீர்கதை
வழக்கம்போல் அதையும் புறக்கணித்துவிடுங்கள்.

நன்றி -உயிரோசை



நிதர்சனங்களுக்கு அருகிலிருந்து
ஜனவரி 11, 2010, 6:59 மு.பகல்
கோப்பு வகை: Poems

என்
வார்த்தைகளில்
சில உண்மைகள் ஒளிந்திருக்கின்றன
நீங்கள் ‘ர்’ மற்றும் ‘த்’
பற்றி மட்டுமே கேட்கிறீர்கள்
அதையும் புரிந்து கொண்டீர்களா
எனத் தெரியவில்லை

o

அவரைப்போல் எழுதுவதில்
எனக்கென்ன தனித்துவம் இருக்கிறது
என்றான் நண்பனொருவன்.
அவரைப்பற்றியே இவர்களுக்கு தெரியாத பொழுது
தனித்துவம் என்ன வேண்டியிருக்கிறது.
தலைமுடி.

o

என் கல்லறைக்கு வருபவர்களிடம்
எழுந்து ஒன்று கேட்க வேண்டும்
நான் உயிரோடு இருக்கையில்
நீங்கள் ஏன் வரவில்லை?

o

கவனம் தவறி
புத்தகத்தில் சிறைபட்ட
ஈயொன்று
எத்தனை பக்கங்கள் படித்திருக்கும்?

நன்றி- கீற்று



அலைந்து திரிபவனின் அழகியல் – Buks that I re ad 2009
ஜனவரி 8, 2010, 8:09 மு.பகல்
கோப்பு வகை: Poems

தை சொல்லிகளாலானது நமது உலகம். பாட்டிக் கதைகளில் தொடங்கி பாட்டில் கதைகளுக்குள் தொண்ணூறு வருட வாழ்க்கையை எளிதில் சொல்லி விடலாம். கதைகள் சொல்வதற்கும் கேட்பதற்கும் நேரமில்லாத காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மெளனத்தை கேட்டிராத செவிகள் நகரத்தானுடையது. கிராமத்து அமைதியிலிருந்து வந்தவன் இரைச்சலை எதிர்கொள்ளும் மனபிறழ்வு மிகவும் கொடுமையானது. அமைதியைத்தேடும் காதுகளிலிருந்து இரைச்சலை எடுத்துவீச புத்தகத்தை தவிர இந்த நகரத்தில் எதுவுமில்லை. இந்தப்பதிவு 2009ல் காதுகளிலிருந்து இரைச்சலைப் பிரித்த சில காகித மலர்களின் தொகுப்பு.

o

1. கணையாழியின் கடைசி பக்கங்கள் – சுஜாதா
கற்றதும் பெற்றதும் காலத்திலேயே இணையத்தில் தேடிப்படித்தது. கடந்த புத்தக திருவிழாவில் வாங்கி இன்னொரு முறை படித்தேன். எழுத்தாளனின் பத்தி எழுத்து எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அழகிய எடுத்துக்காட்டு. கல்யாண்ஜி,கமல ஹாசன்,பாலுமகேந்திரா என இன்றைய ஜாம்பவான்களை அவர்கள் அறிமுகமான காலத்திலேயே ‘இவன் வருவான்யா’ வகையான தீர்க்கதரிசனங்கள் பிரமிப்பூட்டுகின்றன. சாரு பற்றிய தீர்க்கதரிசனம் இப்படி போகிறது.

‘தமிழில் போர்னோ எழுத்து எக்ஸிஸ்டென்சியலிசமும் பேன்ஸி பனியனுமாய் இப்பொழுது வயதுக்கு வந்துவிட்டது. போர்னோ எழுத்து கங்கை போல் புனிதமும் அழகியலும் கலந்தது. அதில் இது போன்றவையும் மிதந்து செல்கின்றன. சற்றே பழுப்பு நிறத்தில்’.

புரிகிறதா?

o

2. கனவுத் தொழிற்சாலை – சுஜாதா
நாவலுக்கும் கிசுகிசுவுக்கும் நடுவிலுள்ள புத்தகமாய் தோன்றியது. திரைப்பட தொழிலில் இயங்கும் சுவாரசியமான, எரிச்சலூட்டும், வாய்விட்டு சிரிக்க வைக்கும் கதாபாத்திரங்கங்கள். நிஜமாகக் கூட இருக்கலாம்.

o

3. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – தொகுதி 1 & 2 – சுஜாதா:
வாத்தியாரின் சிறுகதைகளை மொத்தமாய் வாசிக்கும் அனுபவம் ரசனைக்குரியது. ஆறு மணி நேரத்தில் 110 சிறுகதைகளைப்படிப்பதென்பது சுஜாதாவின் கதைகளில் மட்டும்தான் முடியும் எனத் தோன்றுகிறது. களம் , கதாபாத்திரத்தின் மன நிலைகளில் சுஜாதா காட்டியிருக்கும் வித்தியாசம் அருமை.

o

4. மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள் – சாரு நிவேதிதா
சாரு நிவேதிதாவின் புத்தகங்களில் முதலில் வாங்கியது. சிறுகதை தொகுப்பு. பெயர் கூட கேள்விப்பட்டிராத சிறு பத்திரிக்கைகளில், நான் பிறப்பதற்கு முந்தைய வருடங்களில் வெளிவந்தது. முதல் சிறுகதையான “முள்” மட்டுமே சாருவைப் பற்றிய தெளிவுரை கொடுக்க போதுமானது.

o

5. காம ரூபக் கதைகள் – சாரு நிவேதிதா
டைரி குறிப்புகள் முறையில் எழுதப்பட்ட நாவல். குட்டிக் கதைகள் எனும் பெயரில் சாருவின் தளத்தில் வெளிவந்ததாம். சாராம்சம் 51 வயது எழுத்தாளரை காதலிக்கும் மாணவிக்கும் எழுத்தாளருக்குமான சினேகம். இந்த புத்தகத்தைதான் Ch1 பதிவர் முழுமையான பொய், சாரு பொய் சொல்கிறார் எனக் குதித்தார், ஒரு நாவல் நூறு சதம் உண்மையாக இருக்கவேண்டியதில்லையே.

o

6. கடவுளும் நானும் – சாரு நிவேதிதா
டவுளுக்கும் தனக்குமான தொடர்புகள் பற்றி சாரு தனது தளத்தில் எழுதிய எழுதாத கட்டுரைகளின் தொகுப்பு. சின்ன புத்தகம். லேண்ட் மார்க்கில் வாங்கி,வீட்டிற்கு வரும் பாதையில் பேருந்து நிலையத்திலேயே படித்து முடித்தது.

o

7. வரம்பு மீறிய பிரதிகள் – சாரு நிவேதிதா
சாருவின் புத்தக/தனிமனித விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு . சுஜாதாவின் எழுத்துக்களைக் கொண்டாடும் விமர்சனம். புதுமைப்பித்தனின் சிறுகதைகள் குறித்த பிம்பத்தை உடைத்தெரிந்த விமர்சனத்திர்க்கு பின் அந்த புத்தகத்தை தொட முடியாமல் புதுமைப்பித்தன் தொகுதியை படித்து முடித்துவிட்டு மறுபடியும் தொடர்ந்தேன்.

o

8. ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா
ந்த வருடத்தில் நான் படித்த புத்தகங்களில் ஆகச் சிறந்த புத்தகம் என தயங்காமல் சொல்வேன். அட்டைப்படத்திலிருந்து உள்ளடக்கம் வரை தமிழ் சூழலில் விலக்கப்பட்ட / மறைக்கப்பட்ட பகுதிகளை எடுத்தாள்கிறது புத்தகம். முதல் அத்தியாயத்தில் பெண்ணினை விளித்து 62 வேலைகளில் ஏதாவது ஒன்றை செய்து கொண்டிருக்கலாம் என வரிசைப் படுத்துகிறான் மாயாண்டி. நேரடி/மறைமுக அர்த்தங்கள் தவிர்த்து வேறு எதுவும் பெண்களுக்கு ஆண் கொடுத்திருக்கிறானா என சிந்தித்துப் பார்த்தாள் ஆணாக நான் தலை குனியத் தான் வேண்டியிருக்கிறது. நான் கேட்டவரை நிறைய பதிவர்கள் இந்த நூலைப் படித்திருக்கிறார்கள். யாருமே இதைப்பற்றி எழுதியதாய் தெரியவில்லை. நான் மட்டும் ஏன்?.இந்த அளவோடு நிறுத்திக் கொள்கிறேன்.

o

9. புதிய பத்து நூல்கள் – சாரு:
மீபத்தில் வெளியான சாருவின் பத்து நூல்கள். புத்தக வெளியீட்டு விழாவிற்கு போய் அங்கேயே வாங்கியது. ரெண்டாம் ஆட்டம், தாந்தேயின் சிறுத்தை தவிர மற்ற எட்டு புத்தகங்களும் கடந்த ஆண்டில் சாருவின் தளத்தில் வெளியானவற்றையே தலைப்புகளுக்கேற்ப பகுத்திருக்கிறார்கள். இணையத்தில் படிப்பதற்கும் புத்தகத்தில் படிப்பதற்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது.வாங்கிய இரண்டு நாள்களிலேயே முடித்துவிட்டேன்.

o

10. கல்யாண்ஜி கவிதைகள்
ல்யாண்ஜியின் பெரும்பாலான கவிதைகள் கொண்ட தொகுப்பு. புதுமைபித்தன் பதிப்பகம்.கல்யாண்ஜியும் திருநெல்வேலி என்பது காலரை தூக்கி விட்டுக் கொள்ள வேண்டிய விஷயம்தான். குழப்பங்கள் அற்ற எளிய நடை. சொல்விளையாட்டுகளில் சிறக்கிறார்.

o

11 . தேர்ந்தெடுத்த கவிதைகள் – கல்யாண்ஜி
முந்தய தொகுதியில் இல்லாதவை கொண்ட சின்ன கவிதை தொகுப்பு.

o

12. எஸ்.புல்லட் – அய்யப்ப மாதவன்
லைத்தளத்தில் தொடர்ந்து படித்துவந்தாலும் புத்தகமாக படிக்கும் முதல் தொகுப்பு. கடினமான மொழியினை அழகியலோடு கையாண்டு பிரமிப்புகளை பரிசளித்தவர். ஒவ்வொரு கவிதையின் வீச்சும் வாழ்நாளின் 20 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.

o

13 . காதல் @ காதலிகள்.காம் – பா.விஜய்
றுபடியும் ஒரு தேவதைத்தனமான கவிதை தொகுப்பு. விகடனுக்காக எழுதியது என நினைக்கிறேன். வெவ்வேறு இடங்களில் நிகழும் காதல்கதைகளும் வர்ணனைகளும் அழகு.
‘நீ வருவதால்தான் அலுவலகம் அழகுலமாகிறது’ ‘கல்லூரிகளை ஆசிர்வதிக்கவே தேவதைகளை அனுப்புகிறார்கள் பெற்றோர்கள்’ போன்ற ஜிலுஜிலு வரிகள் நிறைய. புத்தகம் எனக்கு பரிசாக வந்தது.

o

14. பெண்கள் பண்டிகை – பா.விஜய்

முந்தைய புத்தகம் தந்த ஆசையில் இதை வாங்கினேன். கொடுமை. வித்தக கவிஞரின் 10ஓ 20ஓ புத்தகங்களை கலைஞர் வெளியிட்டார் நியாபகம் இருக்கிறதா?. அந்த எண்ணிக்கைகாக அவசர அவசரமாக எழுதியது போல. யாரவது ‘ஊரில் அழகான பெண்’ணுக்கு பரிசாக குடுக்கலாம் என இருக்கிறேன்

o

15. ஜெயகாந்தன் நாவல்கள்- முழுத் தொகுதி
மொத்தம் 5 புத்தகங்களில் சுமார் 15 நாவல்கள். ஆறு நாவல்கள் மட்டும் படித்திருக்கிறேன். அந்த காலகட்டத்திற்கான எழுத்து போல. ஏராளமான விவரணைகள். நாவலாசிரியர் நாவலில் நடக்கும் எல்லா சம்பவங்களுக்கும் தன் கருத்தை திணிப்பது அப்பட்டமான அந்த காலத்தனம்.

o

16. விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
ஜெயமோகனின் எழுத்துக்களைவிட்டு பெரும்பாலும் விலகியே இருக்கிறேன். அவரது இணையதளமும் , சாருவும் கூட ஒரு காரணம். இருந்தாலும் விஷ்ணுபுரம் குறித்து கேள்விப்பட்ட கதைகள் வாசிக்கத் தூண்டியது. இந்த வருடத்தில் படித்ததிலேயே பெரிய புத்தகம். இதன் குறியீடுகளைப் பற்றி இதுவரை என்னிடம் பலர் சொல்லி விட்டனர். சாரம் : இந்துத்துவ பிரதி- தமிழர்களை இழிவாய்க்குறிக்கிறது இன்னும் என்னென்னவோ. இருந்தாலும் கட்டுடைத்தலன்றி புனைவு தளத்தில் சுவாரஸ்யமாகவே இருந்தது. மேலும் எனது கருத்துகள் இங்கே.

o

17. டேபிள் டென்னிஸ் – கோபிகிருஷ்ணன்:
சின்னஞ்சிறு நாவல். சாருவின் எழுத்துக்கள் கோபியின் சாயல் என்ற பேச்சு எழுகிறது. எனக்கு அப்படி தெரியவில்லை. சாருவின் எழுத்துக்களில் தெரியும் ஏக்கம் கோபியிடம் இல்லை. ஒரு கொண்டாட்டம் , ரசிப்பு , விட்டேற்றித் தனம் அழகாய் இருக்கிறது.

o

18.கடலும் கிழவனும் – எர்னெஸ்ட் கெமிங்வே
புலிட்சர் விருது பெற்ற ‘The Old man and the Sea’ இன் தமிழாக்கம். தமிழாக்கம் மோசமாய் இருந்தாலும் கதையை ரசிக்க முடிகிறது. சாதாரணக் கதை. ஒரு வயதானவனிடம் வந்து சேரும் தொந்தரவுகளை திமிங்கலமாய் புரிந்து கொண்டால் உளவியல் நாவலாய் ரசிக்கலாம்.

o

19. என் பெயர் ராமஷேசன் – ஆதவன்
தவன் வரிசையில் எனக்கு முதல் புத்தகம். நடுத்தர வர்க்கத்தானின் மூன்று காதல்கள் என எளிதாய் சொல்ல முடியும்.ஆனால் ஒவ்வொரு வார்த்தையிலும் பேசும் கதாபாத்திரத்தின் உளவியல் இடத்தில் வாசிப்பவனை தன்னை உணரச் செய்வதே ஆதவனின் வெற்றி எனலாம்.

o

20. இடாகினிப் பேய்கள் – கோபிகிருஷ்ணன்
சுயசரிதைத்தனமான நாவல். அங்கங்கே கதாபாத்திரங்கள் பற்றிய வர்ணனைக்கு தனது சிறுகதைகளில் ஏதேனும் ஒன்றை சுட்டியிருப்பது அழகு.

o

21 .மிஸ்டர் வேதாந்தம் – தேவன்
சிறுவயதில் படித்த தும்பறியும் சாம்பு இன்னும் நினைவிறுக்கிறது. கட்டுக் குடுமியுடன் நகரத்திற்கு வந்தவனின் அறியாமையும், சலனங்களும், விறுவிறுப்பான நடையும் ரசிக்க வைக்கின்றன. ஆனந்தவிகடன்/குமுதம்/குங்குமம் இதழ்களை குப்பையெனக் கருதும் தீவிர இலக்கிய வாதிகள் இதைப்படிக்க வேண்டாம்.

o

22. ஜெயகாந்தன் சிறுகதைகள் – முழுத் தொகுதி
ஜெயகாந்தன் நாவல்கள் முழுத் தொகுதியுடன் சேர்த்து வாங்கியது. சிறுகதைவாசிப்பு சுஜாதாவிடம் தொடங்கியதால் ஜெயகாந்தனின் நீட்டி முழக்கும் நடை சோர்வூட்டியது என்றே சொல்லலாம். பெண்களின் அடிமைத் தனமே பெரும்பான்மையான கதைகளை குத்தகைக்கு எடுத்திருக்கிறது.இரண்டாயிரத்து எட்டுகளில் குஷ்புவின் கொடும்பாவிகளை எரிக்கும் சமூகத்தில் இந்தக் கதைகளை எழுபதுகளில் எழுத நிச்சயம் தைரியம் வேண்டும்.

o

23. அசோகமித்திரன் சிறுகதைகள் -முழுத் தொகுதி
ஒரு சுஜாதா ரசிகனுக்கு ஏற்ற எழுத்துகள் அசோகமித்திரனுடையவை. கதை என்றால் நான்கு பக்கம் இருக்கவேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் இல்லாமல் ஒரு பக்கம்/அரைபக்கங்களில் கூட பொட்டில் அடிக்கும் சிறுகதைகள் உண்மையிலேயே விறுவிறுப்பு

o

24.சிறப்பு சிறுகதைகள் – விகடன் பிரசுரம்
வெகுஜன எழுத்தாளர்களிடம் புதிதாய் வாங்கிய சிறுகதைகளின் தொகுப்பு. எல்லா கதைகளிலும் ‘விகடன் சிறுகதை கேட்டிருக்கிறதே’ என அவசரம் தெரிகிறது. இருந்தாலும் பயணங்களில் பொழுது போக்கிற்கு ஏற்றது.

o

25.ரா.முருகன் சிறுகதைகள் – முழுத் தொகுதி
ரு வெகுஜன எழுத்தாளனின் தேர்ந்த கதைகளின் தொகுப்பு. எதிர்ப்பார்க்கும் திருப்பம்,புன்னகை,சுபம் எல்லாம் தரும் சிறுகதைகள். களங்கள் மட்டுமே ஒரு தேர்ந்த வாசிப்பாளனின் கைவண்ணமெனச் சொல்கின்றன.

o

26. தூயோன் -கோபி கிருஷ்ணன்
சிறுகதை தொகுப்பு, சுயசரிதைத்தனம் ,தொடாத தொடத் தயங்கும் களங்கள். படித்ததை முழுவதுமாய் புரிந்து கொண்டேனா என்ற சந்தேகம் தொடரவே செய்கிறது.

o

27. மாலன் சிறுகதைதொகுப்பு
த்திரிக்கைகளில் இடம் நிரப்புவதற்காக எழுதப்பட்ட கதைகள் என மாலனே முன்னுரையில் சொல்லியிருக்கிறார். நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

o

28 . மலையாள சிறுகதைகள் – சுரா பதிப்பகம்
லையாளா எழுத்தாளர்கள் வைக்கம் முகமது பஷீர் மற்றும் பி.கேசவதேவ் ஆகியோரின் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு. சின்ன முடிச்சுகள்தான். சுவாரசிய நடையில் பல பக்கம் போவதால் அழகிய மானை துரத்திக் கொண்டே ஓடும் உணர்வே எழுகிறது.

o

29. புதுமைபித்தன் சிறுகதைகள் – முழுத்தொகுதி
பெரும்பாலான சிறுகதைகளை இணையத்தில் தேடி படித்திருந்தாலும், சாருவின் விமர்சனத்திற்கு பின் முழுத் தொகுதியை தேடி வாங்கினேன். மத்தியதர வர்க்கத்தின் மதிப்பீடுகள், திருநெல்வேலி சைவப்பிள்ளையின் பிரச்சினைகள் என குறுகிய வட்டத்திற்குள் சுற்றினாலும் ஏதோ ஒரு ஈர்ப்பினைத் தருகிறது.பழக்க தோஷமாய்க்கூட இருக்கலாம்.

o

30.பிரபஞ்சன் சிறுகதைகள் – முழுத் தொகுதி
ரண்டு புத்தகங்கள். விறுவிறுப்பு, ரசனை களம். அடுத்த கதை,அடுத்த கதை என இழுக்கும் நடை. ரசிக்கக் கூடிய எழுத்துதான்.

o

31. எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள்- முழுத் தொகுதி
னிமையை விரட்டவே வாசிப்பை துணைக்கழைக்கிறேன். மீண்டும் மீண்டும் மனதின் ஆழத்திலிருந்து பிரிவுகளை,வலிகளை,துரோகங்களை வலிக்க வலிக்க முன்னெடுத்து வைக்கிறது சிறுகதைகள் ஒவ்வொன்றும். சிறுவயதில் கேட்ட விடுகதைகளை விடுவிக்க துடிக்கும் மனதினை திரும்பத் தருகிறது இன்னும் சில சிறுகதைகள். இந்த வருடத்தின் படித்த சிறுகதை தொகுப்புகளில் ஆகச்சிறந்ததென நிச்சயமாய் சொல்வேன்.

o

32. கதாவிலாசம் – எஸ்.ரா
எஸ்
.ரா ரசித்த சிறுகதைகள் குறித்த விமர்சனங்களின் தொகுப்பு. சில இடங்களில் சிறுகதை எழுதியவருக்கும் தனக்குமான உறவைப் பற்றியும் சொல்லிக் கொள்கிறார். ஒவ்வொரு சிறுகதையைப் பற்றியும் சொல்வதற்கு முன்னால் அந்த கதைக்கு எடுத்துக்காட்டாக எஸ்.ரா சொல்லும் சம்பவங்கள் ஒவ்வொன்றுமே தனிச் சிறுகதை.

o

33. நம் காலத்து நாவல்கள்-எஸ்.ரா
சென்ற புத்தக கண்காட்சியில் எஸ்.ராவை நேரில் பார்த்ததுமே அவரிடம் கையெப்பம் வாங்க அவர் புத்தகத்தை தேடிய அவசரத்தில் கையில் கிடைத்தது. CH1ன் வினய், உலக கவிஞர்கள் என டக்குமுரோ கொட்டாராவெல்லாம் வைத்து ஒரு பதிவு எழுதினாரே நியாபகம் இருக்கிறதா? கிட்டத்தட்ட அந்த மாதிரி ஒரே தலைசுற்றவைக்கும் நாடுகள் எழுத்தாளர்கள் ,அவர்களின் நாவல்கள் என என்னை விட்டு வெகு தூரத்தில் இருப்பவனின் குரல் போல புரியாத பாஷையிலேயே இருந்தன. கதை சுறுக்கங்களை மட்டும் ரசித்தேன்.

o

34. மனிதனுக்குள் மிருகம் – மதன்
வெகுஜன வாசகர்களுக்கான உளவியல் கட்டுரை. மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் மிருகத்தை வரலாற்றை இழுத்துப்போட்டு சொல்லும் ‘வந்தார்கள் வென்றார்கள்’ பாணி புத்தகம்.

o

35. பெண்ணின் மறுபக்கம் -டாக்டர் ஷாலினி.
ரு மருத்துவரின் உளவியல் கட்டுரை என உள்ளடக்கத்தை வைத்துச் சொன்னாலும் , எழுத்து நடை தேர்ந்த வெகுஜன எழுத்தாளர்க்கு உரியது.

o



கொலை – தேவதைகளின் குலத்தொழில்
ஜனவரி 6, 2010, 2:21 பிற்பகல்
கோப்பு வகை: Poems

உனக்குப் பிடிக்காத வரிகளை

கவிதையிலிருந்து நானே அடித்து விடுவேன்

யாரைக் கொண்டு அடிக்க

உனக்குப் பிடிக்காத என்னை.

o

சாகத் துணிந்தவன்

கோழை கவிஞனென‌

சட்டை பிடிக்கிறான்

நண்பனொருவன்.

என் உயிர் உருவ

இன்னொருத்திக்கு உரிமை இருக்கும் பொழுது

என் உயிர் உருவி எறிய

எனக்கு உரிமையில்லையா என்ன.

o

புன்னகைகளால் கொன்றாய்

வார்த்தைகளால் கொன்றாய்

மெளனங்களால் கொல்கிறாய்

கொலை தேவதைகளின் குலத்தொழிலா?

o

நினைவுகள் பறக்கும் தேநீருடன்

உதடுகள் சுடும்

எதிரில் இல்லாத

உனது பெயர்

o

உன் பார்வை படாத இடத்தில்

இந்த கவிதைகள் எழுதி வைப்பதன்

காரணம் கேட்கிறாள்

நம்மைத் தெரிந்த தோழி ஒருத்தி

என் பார்வை போதாதா

இவைகளை உனக்குச் சொல்ல.

நன்றி : கீற்று