அலைந்து திரிபவன் அழகியல் – Books I Read @ 2012

பின்னூட்டமொன்றை இடுக

2009 | 2010 | 2011

வாசிப்பு ஒரு போதையாக மாறிப்போகும் சாத்தியங்களைக் கொண்டது. எந்தக் களத்தில் தொடங்குகிறோமோ, அதன் ஆழங்களை நோக்கி அதன் சாத்தியங்களை நோக்கி இழுத்துச் செல்லக்கூடியது. முன்முடிவுகளைக் கழற்றிவைத்து, அரசியல்கள், தனிப்பட்ட காழ்ப்புகள், கிசுகிசு கேட்கும் மனநிலைகள் எல்லாவற்றையும் விடுத்து, புனைவுகளை, அதன் புதிர்த்தன்மையுடன் வாசிக்கும் மனம், மீளுருவாக்கம் செய்து நிகழ்வுகளைத் தனக்குள் நடத்தி, அதன் மறைகண்ணிகளைத் தேடும் வாசக மனம் வாய்க்க வேண்டும் என்பதே பிரார்த்தனை. 2012ல் வாசிப்பு குறைவு. அடிக்கடி அறை மாற்றிக்கொண்டிருந்ததும், புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டதும், இணைய மேய்ச்சல்களில் காலம் செலவிட்டதுமென சமாதானங்களைச் சொல்லிக்கொள்ளவேண்டியதுதான். எதையும் ஒரு சட்டமாக குறுக்கிக்கொள்ளாமல், அந்த நொடிக்காக வாழ்வதென ஆசை கொண்டபின், இத்தனை புத்தகங்களை இந்த வருடம் வாசித்தாகவேண்டுமென மட்டும் சட்டம் போட்டுக்கொள்ள முடியுமா என்ன?

உலோகம் – ஜெயமோகன்

இந்த நாவலின் பின்னாலிருக்கும் அரசியலோ (அப்படி யாரும் இருந்தால்) இதில் குறிப்பால் உணர்த்தப்பட்டிருக்கும் மனிதர்களோ எதைப்பற்றிய அறிதல் இல்லாமல், அவற்றைத் தெரிந்து கொள்ளும் விருப்பமில்லாமல்தான் படித்தேன். ஈழப்பின்னணியில் ஒரு திரில்லர் போன்ற விளம்பர வாக்கியங்கள் கொடுத்திருந்த நெருடல்வேறு. இலக்கியத்தரத்தில் ஒரு திரில்லர் வகையறா வாசக-விளம்பரங்கள் வேறு. ஆனாலும், எல்லா நெருடல்களையும் தாண்டி, பரபரவென படித்து முடிக்க முடிந்தது. ஜெமோவின் பிற புனைவுகளில் நிகழும் மின்னல் தருணங்களும் கூடவே. குறிப்பாக நாயகனின் தொடையில் வெளியேறாமல் தங்கிவிட்ட தோட்டாவின் விவரணைகள் வரும் இடங்களிலெல்லாம், முன்னோ பின்னோ, விருப்பமில்லாமல் செய்யும் ஒரு நிகழ்வு ஒட்டிக்கொண்டேயிருந்தாக உணர்ந்தேன். ஜெமோ இல்லையா? :)
விசும்பு – ஜெயமோகன்


புத்தகக் கண்காட்சியில் வாங்கி, வரும்வழியிலேயே (ரெயில்வே ஸ்டேஷனிலோ, ரயிலிலோ, நினைவில்லை) படித்து முடித்த புத்தகம். அறிவியல் புனைகதைகள் என நான் படித்தவை சுஜாதா மட்டும்தான். அதைத்தாண்டி எதுவும் தெரியாது. (சுஜாதா தவிர மற்றவர்கள் அனைவரும் எழுதியவை சுஜாதாவின் சாயல் என்றும், சுஜாதாவின் கதைகளே மேலை நாட்டு உருவல் என்றும் பிரியும் இன்ன பிற கிளைக்கதைகளை விட்டுவிடுவோம் ) என்றாலும், ஜெமோவின் களம் வேறாக இருக்கிறது. மறுவாசிப்பு செய்யாமல் யோசித்துப்பார்த்தால் கூட சித்த மருத்துவம் சார்ந்த சிறுகதையொன்று உடனடியாக நினைவுக்கு வருகிறது. ரசவாதம், தியான முறைகள் என்றெல்லாம் ஜெமோவின் வழக்கமான இந்திய ஞான மரபிற்குள்ளான சாத்தியங்கள்தான் இந்த தொகுப்பு முழுவதும் என்றே நம்புகிறேன். வழக்கமான ஆய்வுக்கூடம் – நரைத்த தலை புரபசர்களெல்லாம் குறைந்து, ஏற்கனவே நமது சூழல் பார்த்திருக்கக்கூடும் சாதாரண வயதானவர்களின் அறிவியல்தான் இந்த தொகுப்பு முழுவதும் கிடைக்கிறது.

குட்டி இளவரசன் (மொழிபெயர்ப்பு) – ஆந்த்வான் து செந்த்


குழந்தைகளுக்கான கதைதான். இருந்தாலும், குட்டி இளவரசனின் கதையை எல்லா சமகால அரசியல்களையும் பேசும் சுருக்கப்பட்ட வடிவமாகவே உணர்ந்தேன். எல்லா வேலையும் தானே செய்யும், தினமும் பலமுறை சூரிய உதயத்தைக் காணும் கிரகம், அதிலிருந்து வெளியேறி பிற கிரகங்களுக்குச் செல்லும்போது அவன் சந்திக்கும் மனிதர்கள் எல்லாமே தனித்துவிடப்பட்ட ஒருவனின் மனக்குமுறல்களாகவே தோன்றியது. அவனை எல்லா விதத்திலும் எல்லாவற்றிலிமிருந்து விலகிக்கொண்ட ஒரு தனி மனிதனாகவும், அவன் சந்திக்கும் கிரகங்களை அதன் உரிமையாளர்களை அவன் தனது குறுகிய வட்டத்திலிருந்து வெளிவரும்போது உலகம் அவனை எதிர்க்கொள்ளும் விதமாகவும், ஒவ்வொரு காட்சியையும் விரித்துக்கொண்டே வாசிக்க முடிகிறது. எத்தனை பெரிய உலகம் இது… எத்தனை குறுகிய வட்டம் நமது? அவன் கேட்கும் கேள்விகளில், அவன் உணர்வுகளில் எதை எதையோ ஒப்பிட்டுப் பார்த்து குழப்பிக்கொள்ள எத்தனை குதர்க்கமான மனம் எனது? :)

மேன்ஷன் கவிதைகள் – பவுத்த அய்யனார்

தனிப்பட்ட முறையில் , ஆண்களின் உலகம் பற்றிய எழுத்துகளில் ஒரு ஆர்வமிருக்கிறது. பொதுவாக தனிமை – குறித்து ஆயிரக்கணக்கான கவிதைகளை அள்ளிக்கொட்ட எத்தனை பேர் இருந்தாலும், மேன்ஷன்களைப் பற்றி எத்தனை தூரம் எழுதப்பட்டிருக்கிறது எனத் தெரியவில்லை. திருவல்லிக்கேணியின் மேன்சன்களில் கொட்டிக்கிடக்கும் கதைகளைப்பற்றி அங்கு தங்கியிருந்த நண்பன் சொல்லியிருந்தவை தந்த மயக்கத்தின் காரணமாகவே இதன் பால் ஈர்ப்பு வந்தது. ஆண்களின் தனிமை உலகை எளிய வார்த்தைகளில் தடதடவென தட்டிப்போகும் தொகுப்பாகவே பார்க்கிறேன். எதோ ஒரு கவிதையின் முடிவாக வரும் ”பிரம்மாண்ட நகரின் சிறிய குடுவைக்குள் மின்விசிறி நான்” போதாதா?
மயன் சபை – தபசி


எளிய மொழியில் மின்னல்கணங்களைப் பிடித்துவைக்கும் கவிதைகளை எழுதுபவர்களும், அந்தக் கவிதைகளும் இருக்கும் இலக்கிய குறுவட்டத்திற்குள் ஒரு ரகசிய வட்டமாக இயங்கிவருகிறார்களோ என்றொரு சந்தேகம் உண்டு எனக்கு. தபசியை அறிமுகம் செய்தது வினாயகமுருகன் என்பதாலும் இந்த சந்தேகம் வந்திருக்கலாம். மிக எளிய மொழி. மிக நுண்ணிய கணங்கள். ஒரு வாராந்தரியைப் படிக்கும் வேகத்தில் படிக்க முடிகிறது. ஒரு புன்னகையுடன், அதன் குறியீடு என்ன கேள்விகள் என்னென்ன என்றெல்லாம் மண்டையை உடைத்துக்கொள்ளாமல், ஒரு அனுபவஸ்தரிடம் கதை கேட்கும் பாணியில் இந்தக் கீற்றுகளை புன்னகைத்தே உள்வாங்கிவிட முடிகிறது. எந்தக்குழந்தையும் நல்லக் குழந்தைதான் பாடலை மேற்கோள் காட்டும் கவிதை ”அப்பா ஊதாரியாய் இருந்தால், எல்லாம் அம்மா தலையில்தான் விடியும் என முடிகிறது. வாவ்!

எம்ஜி ஆர் கொலைவழக்கு – ஷோபா சக்தி

ஷோபா சக்தியின் இணைய எழுத்துகளை மட்டுமே வாசித்திருக்கிறேன். அச்சுப்படைப்புகள் எதுவும் வாசித்ததில்லை. பொதுவாக எனக்கு நிகழும் தடுமாற்றம்தான் இந்த புத்தகம் வாசிக்கும்போது. ஒன்று மொழி. எந்தவித முன் அனுபவமும், இந்த மொழியுடன் எனக்குக் கிடையாது என்பதால், பக்கங்களைக் கடக்க, பொருளை உணர கொஞ்சம் கூடுதல் நேரம் எடுக்கிறது (சில வட்டார வழக்கு வார்த்தைகள் தென் தமிழகத்தின் சில வட்டார வார்த்தைகளுடன் ஒத்துப்போவது இன்ப அதிர்ச்சி). இரண்டாவது அரசியல். எனது அறியாமைதான் வேறென்ன? இதைத்தாண்டி சிறுகதைக்குள் நுழையலாமென்றால், என் தேடலுக்கான எதுவும் கிடைக்கவில்லை. காரணம் , மொழியும் அரசியலும் அன்னியப்பட்டுப் போனபின், கிட்டத்தட்ட சுயசரிதைத்தன்மை கொண்ட கதைகளில் எதை எடுத்துச் செல்வது?
யுரேகா என்றொரு நகரம் – எம்,ஜி சுரேஷ்

எம்ஜிசுரேஷினைப் படிக்கும்போதெல்லாம் ஒரு குழப்பம் வருகிறது. இவை இலக்கிய பெர்சுகளின் பார்வையில், இலக்கியத்துக்குக் கீழ்வருமா, இல்லை வணிக எழுத்தின் கீழ் வருமா? (பிரேம் – ரமேஷ் படிக்கும்போதும் இந்தக் குழப்பம் வரும்) யுரேகா என்றொரு நகரம் ஆராய்ச்சியாளர்கள் கண்டடையும் தொலைந்து போன அல்லது புதையுண்டுபோன ஒரு பழங்கால நகரம். அதற்கான ஆராய்சியாளர்களின் உழைப்பு, அந்த இடத்தை அவர்கள் அடையும் நாட்கள் என விரியும் நாவல், அத்தனை நிச்சயத்தன்மையுடன் நிகழ்கிறது. புதையுண்ட நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட கற்களின் புகைப்படம் கூட நடுவில் வருகிறது . இறுதி அத்யாயத்தில் கொண்டை ஊசி வளைவில் பொசுக்கென திரும்பும்போது, இன்னொரு முறை நாவலை படிக்கத் தோன்றுகிறது.
நகுலன் – நவீனன் டைரி

நகுலன் ஒரு போதை. இது இந்த வருடம் படித்த நாவல் என்பதைவிட, இந்த வருடம் தொடங்கிய நாவல் என்றே சொல்லலாம். எதோ ஒரு இடைவெளியில், மனம் கனத்து கண்ணீர் பொங்கும் நேரத்தில், அல்லது கொண்டாட்டமாய் ஒரு ஆட்டம் போடத்தோன்றும் நாளில், அல்லது எதுவுமற்ற வெளியில் மனம் அடங்கியிருக்கும் நாளில் என எந்த மன நிலையில் புரட்டினாலும், எதோ ஒரு திடுக்கிடலை, சந்தோசத்தை, புன்னகையை அதன் நொடி ஆச்சர்யத்தை எப்போதும் நகுலனின் நாவல்கள் கொடுத்துக்கொண்டேயிருக்கின்றன. ஒரு நாளில் டைரிப்பகுதியை, ஒரு நாளில் சம்பாஷணைப்பகுதியை, இன்னொரு நாளில் கவிதைப் பகுதியை என தொடர்ந்து பலமுறை, முழுவதுமாகவும், இடையிலிருந்தும், சில பக்கங்களென்றும் விதவிதமாய் படித்துப்பார்த்தாயிற்று. ஒரு நாளும் நாவல் அதன் நிச்சய-ஆச்சர்யத்திலிருந்து தவறியதேயில்லை. நகுலன் போதை. வேறென்ன்ன சொல்ல? :)
பாம்புத் தைலம் – பேயோன்

இந்த முகம் (எனக்குத்) தெரியாத மனுஷனுக்கு மட்டும் எங்கிருந்து பகடி இத்தனை சரளமாக வருகிறது எனத் தெரியவில்லை. அதுவும், துணுக்குத் தோரணம் கட்டும் சிறுபிள்ளைத் தனமில்லை, நுண்ணிய இதுவரையிலான படைப்புகளின் போலித்தன்மையை வஞ்சமாய்ப் புகழும் பகடி. கட்டுரைகளின் முதல் வரி கூட, ஏற்கனவே படித்த கட்டுரைகளின் தேய்வழக்கு முறையில் ஆரம்பித்து, சின்ன டுவிஸ்ட், சின்ன நகைச்சுவையுடன் கைவருகிறது. தாம்பரம் பயணக்கட்டுரை அதன்பிறகு எந்த எழுத்தாளருடைய எந்த பயணக்கட்டுரை படித்தாலும் நினைவுக்கு வரும். பேயோன் பேயோன் தான்.
மங்கலத்து தேவதைகள் & எட்றா வண்டிய – வாமுகோமு

மணி பாரதியாகட்டும், சாமி நாதனாகட்டும் ,பொன்ராசு உள்ளிட்ட இன்ன பிற பாத்திரங்கள் ஆகட்டும், வாமுகோமுவின் நாயகர்கள் கனவுகள் அற்றவர்கள். பெண்களைத் தேவதையென்றுயர்த்தி, பின் மனைவியென்று அடக்கித் தூக்கிப்போட்டு உடைக்காதவர்கள். காமத்தை, அதன் கனலை, மழைக்காலத்தில் கடந்து போகும் தெரு நெருப்பைப்போல அதன் பழக்கத்தில் மிகச்சுலபமாய் அண்மித்தும் தொலைவுற்றும் கடந்து செல்கிறவர்கள். சினிமாக்களைப்போல, கெட்ட கணவன் திருந்தி கிளைமாக்ஸில் திரு நீறு வைத்து கோவிலுக்குப்போய் பத்தினி தெய்வத்தின் வேண்டுதலை நிறைவேற்றாதாவர்கள். குடியும் காமமும் அதன் நெளிவு சுழிவுகளும் அதன் ஓட்டத்தில் அனுபவத்தில் தெரிந்த தெளிவுள்ள எளியவர்கள். இதே விரிவும் களமும், எதிர்பாலுக்கும் சம அளவில் கொடுக்கப்பட்டிருக்கும். அய்யய்ய்யோ நான்லாம் காதலிக்கமாட்டேன்பா அப்பா திட்டுவார் என்றெல்லாம் அலட்டிக்கொள்ளாதவர்கள். அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் என சுற்றியிருக்கும் பதினாறுமுழத்தை இழுத்துவிட்டுக்கொள்ளாதவர்கள். வாழ்க்கை . எல்லா கிராமப்புறங்களின் கிண்டல் கேலி காமம் சாதி. கூடவே வாமுகோமுவின் அனுபவத்திலிருந்து ஊர்கள், மொழி நடை. எத்தனை நாவல், எத்தனை சிறுகதைகள் படித்தாலும் இதே கூட்டணியில்தான் வெவ்வேறு ஆள்கள், வெவ்வேறு காதலையும், வெவ்வேறு பின்னணிகளையும் , வெவ்வேறு தொழில்களையும் வைத்துக்கொண்டு வருகிறார்கள். ஆனால் களம் ஒன்றேதான்.

அழிக்கப்பிறந்தவன் – யுவகிருஷ்ணா


யுவகிருஷ்ணாவின் பதிவுகளை, அறிமுகம் கிடைத்த நாளிலிருந்து தொடர்ந்து படித்துக்கொண்டிருப்பவன் என்ற முறையில், யுவாவின் எழுத்துக்களைப்போலவே அவரின் தொடக்கங்கள் பிடிக்கும். சரியாகச் சொல்வதென்றால், முதல்வரி. தலைப்பு ஒன்றைச் சொல்லியிருக்கும், அதன் மீதான நம் முன்முடிவு ஒன்றாக இருக்கும், முதல் வரி இரண்டிற்கும் சம்பந்தமே இல்லாத ஒரு இடத்தில் ஆரம்பிக்கும், கிட்டத்தட்ட ஐந்தாறுவரிகளுக்கு ஏன் இதைப்பேசிக்கொண்டிருக்கிறார் என்ற உள் யோசனையுடன் ஓடி, திடீரென தலைப்புக்கும் களத்திற்கும் உள்ளே வருவார். இந்த நாவலிலும் முதல் வரி அப்படித்தான் இருந்தது. “இயக்குனர் ஷங்கர் கமிஷனர் அலுவலகத்தில் காத்துக்கொண்டிருந்தார்” நிலையத்தில் நின்றுகொண்டிருக்கும் உங்களை நகரும் ரயிலுக்குள் பொசுக்கென ஒருவர் பிடித்து இழுத்தால் ஏற்படும் அதிர்ச்சி. தொடர்ந்து திருட்டு டிவிடி, வாப்பா, பர்மா பஜாரின் நிழல் உலகம், இருள் பூசிய சப்வேக்களின் மறைகதைகள் என தடதடக்கும் ரயில் வேகத்தில் ஓடுகிறது கதை. அட்டை டூ அட்டை அட்டகாசம் என்ற பழைய விளம்பர வரி தெரியுமா உங்களுக்கு? நம்பி படிக்கலாம் :)

மாதொருபாகன் – பெருமாள்முருகன்


பெருமாள்முருகன் பற்றி அவர் எழுதிய எல்லா படைப்புகளையும் வாசித்தவர்கள் யாராவது விரிவாக பேசவேண்டும். எந்த சுயவிளம்பரங்களும், படைப்புகளுக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும் விளையாட்டுத்தனங்களும் அற்று எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கியிருக்கும் ஒரு ஆளுமையெனத் தோன்றுகிறது. என் கடன் எழுதிக்கிடப்பதே வகையறாவெல்லாம் இணைய வெளியில் சாத்தியமில்லை என்பதாலேயே இந்த ஆச்சர்யம். வாமுகோமுவின் கொங்கு நிலத்திற்கும், பெருமாள் முருகனின் கொங்கு நிலத்திற்குமான பொதுவாக வேறுபாடாக நான் கருதுவது, வாமுகோமுவின் ஊர்கள், கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடைப்பட்டவை. தறியோட்டிகளாலும், பஞ்சாலைத் தொழிலாளர்களாலும் ஆன ஒரு கடாமுடா வகையறா. பெருமாள் முருகனின் ஊர்கள் பச்சை நிலம் கொண்டவை. நகரத்தின் சாயல்களற்ற வெள்ளந்தி மனிதர்களாலானவை. காமத்தை புறங்கையால் ஒதுக்கி உறவுகளும், மண்வாசனையும், வீம்புகளும் பிணைந்தவை. மாதொருபாகன் குழந்தையில்லாத தம்பதிகளின் வாழ்வைப்பேசுகிறது. 20களின் இறுதியில் திருமணம் செய்து ”பிளானிங்கில்” இருக்கும் இன்றைய தலமுறையில் எவ்வளவு தூரம் ’மலடி’ ‘மலடன்’ போன்ற உளவியல் தாக்குதல்கள் இருக்கின்றன என யோசித்தோமானால், குறைவென்றே தோன்றுகிறது. அதன் நெருக்கடிகள், உறவினர்களின் குத்தல் பேச்சுகள், அதற்கான வேண்டுதல்கள் என பச்சை ரத்தம் ஒழுகும் மன உலகம் அது. அத்தனை வீரியமாய் இதில் வெளிப்பட்டிருக்கிறது. நேர்கோட்டில் பயணிக்கும் இந்த வகை கூட ரசிக்கவே வைக்கிறது. இவரின் இன்னபிற புத்தகங்களையும் படிக்கவேண்டும்.

ராஸலீலா – சாரு நிவேதிதா


ஹா. வாசிப்பைப்பற்றி பேசும்போது சாரு இல்லாமலா? ராஸலீலா குறித்த குறிப்புகள் சாருவினைத் தொடர்ந்து படிக்கும் யாருக்கும் தொடர்ந்து கொடுக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும். இதை தன் படைப்புகளில் சிறந்ததென்று சாருவே சொல்லிக்கொள்வதும், வாசகர் வட்டத்தில் பிறமொழி எழுத்தாளர்களைப் பற்றி பேச்சுவரும்போது அவர்களைப்படித்தவர்கள், அதைவிட ராஸலீலா சிலபல மடங்குகள் சிறப்பென்று புகழ்வதுவும், அந்த அரசியல் இன்னபிறவுக்குள் நமக்கு வேலையில்லை. புத்தகம் பேசட்டும். ராஸலீலாவின் சாருவின் வழக்கமான புள்ளிகள் அத்தனையும் உண்டு. தனித்துவிடப்பட்ட எழுத்தாளன், சுயபுலம்பல்கள், காமம். கூடவே இதில் டெல்லியும் குமாஸ்தா வேலையும், அரசாங்க அலுவலகங்களின் பின்புலமும், அதன் அபத்தங்களும். அதே விறுவிறுப்பாக, நேர்ந்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டியைப்போல் இழுத்துச் செல்லும் மொழி நடையும். ஆனால் இதைச் சாருவின் படைப்புகளில் சிறந்ததென்று ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஆட்டுக்குட்டியை இழுத்துச் செல்லும் மொழி நடை என்று சொன்னேனில்லையா? இதில் நீண்ட தூரத்திற்கு நடையோ நடையென நீள் நடை. ஆட்டுக்குட்டி கால் வலித்துச் சோர்ந்து தரையில் படுக்குமளவு அதீத விளக்கங்கள், அதீத விவரணைகள் இன்னும் பல இழுவைகள். ஒரு பிரபல மலையாள இதழில் தொடராக வெளிவந்ததாக சாரு சொன்னதாக நினைவு. எனில், அந்த இதழுக்கான சமரசங்களாக இருக்கலாம் என்று கூட ஒரு சந்தேகம் வருகிறது. ஆனாலும், முதல் முறையாக சாருவை ஆரம்பிப்பவர்கள், ராஸா லீலாவை தாராளமாகத் தொடங்கலாம். காமம் என்ற வார்த்தையே ஆபாசம் என நினைப்பவர்கள் சாருவை விட்டு தூரம் செல்லலாம். உங்களுக்கு நல்ல்லது. எதற்கு தேவையில்லாமல் ரத்த அழுத்தத்தை ஏற்றிக்கொண்டு? :)

எல்லாமே பிறருக்கு தைரியமாக பரிந்துரைக்கும் படைப்புகளாகவே இந்த வருடம் அமைந்திருக்கிறது. எதையும் நொந்து கொண்ட நினைவில்லை. ஆரம்பித்து சலிப்புற்று பாதியில் நிறுத்திய புத்தகங்களை தொடர்வதற்கான மன நிலை வாய்க்காமல், அவை இந்த பட்டியலில் வராமல் போனது கூட காரணமாக இருக்கலாம். எப்படியோ, என் காலங்களை சில புத்தகங்கள் தன் புதிர்களால் தொடர்ந்து கொண்டிருக்கும்வரை வாழ்வில் ருசியிருக்கும்.

பிரியத்துக்குரியவளின் கழுத்தை அறுப்பது

1 பின்னூட்டம்

சாவித்துவாரத்தின் வழியாக‌
ஒருவருக்கொருவர் பிரிவினை அறிவித்துக்கொள்ளும்பொழுது

விலகிச் செல்லும் தொடர்வண்டியை
காற்றுப்பந்தினை முழுங்கியபடி கையசைக்கும்பொழுது

ஒரு பயணத்தின்
நடு வழியில் கையசைத்து
இறங்கும்போது

நீண்ட‌ இடைவெளிக்குப்பின்
ஒரு நீ
நீங்க‌ளாக மாறியிருக்கும்பொழுது

புகைப்படத்தில் உடைந்த கண்ணாடிச் சில்லு
அறுக்கிறது

பெரும் கனவை
மிச்சமின்றி.
0

அந்த மரத்தில்
எப்போதாவது

அந்த பழைய குருவி
வந்தமரும்

இப்போது அது
அதே மரமில்லை.

அந்தக் குருவி அமர்வதுமில்லை.

0

படுக்கையிலிருந்து சில அடி தூரத்தில்
மிதந்து கொண்டிருப்பதாக‌
ஒரு கனவு உண்டு

பாம்புகளுடன் கைகுலுக்கி
விளையாடும் கனவு இன்னொரு நாளைக்கு

மெழுகுவர்த்தியை அறுப்பதுபோல‌
கேக் வெட்டுவது போல‌
தெளிவுடன்
பிரியத்துக்குரியவளின் கழுத்தை அறுப்பது போன்ற‌
கனவு
எப்போதாவ‌து வ‌ரும்பொழுது

க‌ன‌வென்றே தெரிவ‌தில்லை.

0

காகித‌ங்க‌ளைப் ப‌ற‌க்க‌விடுவ‌து
கிழித்து முக‌த்தில் அடிப்ப‌து
த‌ரையில் குத்துவ‌து
முக‌த்தைத் திருப்பிக் கொள்வ‌து
க‌ல்லெறிவ‌து

என் தேர்வுக‌ளில் இல்லை

என் அக‌ங்கார‌ம்
புன்ன‌கைத்துப் பேசிக்கொண்டிருப்ப‌து

எதையும் தொடாம‌ல்
யாரோ போல‌.

oOo

பிகு: க‌விதை தொகுப்பினை இப்பொழுது PDF ஆக‌ த‌ர‌விற‌க்கிக்கொள்ள‌லாம்.

என்னைப் பெருங்கனவு என அழைப்பார்கள்

1 பின்னூட்டம்

” தற்கொலைன்றது கண நேர மயக்கம்னு சொல்றத கேட்ருக்கீங்களா சார்? தெரியாதவன் அப்டித்தான் சொல்லிட்டு திரியுறான். ஆனா எனக்கு அப்டித்தோணல. இதெல்லாம் ஆழமா விழுந்து மெல்ல முளைக்கிற செடி மாதிரி கொஞ்சம் கொஞ்சமா பரந்து விரிஞ்சு, இதுக்கு மேல வளர இடம் இல்லைன்னு தெரியும்போதுதான் நீங்க பார்க்குற எக்ஸ்ட்ரா விழுது”

“ஹ்ம். கேள்விப்பட்டிருக்கேன். தூக்கம் சரியா இருக்கா? ஒரு நாளைக்கு எவ்ளோ நேரம் தூங்குறீங்க?”

”விஷயம் புரிபடமா உளறிட்டு இருக்கேன்னு நினைக்கிறீங்க. இன்சோம்னியாவா இருக்கும். டிரக்ட் அடிக்ட். அல்லது பிராடு பார்ட்டின்னு நினைக்கிறீங்க, கரெக்டா டாக்டர்?”

“அப்டியெல்லாம் நான் எதும் நினைக்கல ஷிவா. உங்களுக்கு என்ன விதமான டிஸ்கம்பர்ட்ஸ் இருக்குன்னு தெரிஞ்சா ஒரு வேளை அதுக்கான சரியான கவுன்சலிங்க் என்னால குடுக்க முடியும்னு நினைக்கிறேன்”

“டிஸ்கம்பர்ட்? எல்லாமே டிஸ்கம்பர்ட்தான் டாக்டர். எதுவும் பிடிக்கல. எல்லாத்து மேலையும் கோவம் வருது. லிப்ட்வாசல்ல யாரையும் போகவிடாம நடுல நின்னுகிட்டு கதையடிச்சுட்டு இருக்கிறவனப் பாத்தா இழுத்துப்போட்டு சாத்தணும்போல இருக்கு. காபி எடுக்கிறதுக்காக பின்னாடி 4 பேர் நின்னுட்டு இருக்கும்போது மெஷின் பக்கத்துல நின்னு ஆற அமர கலை நயத்தோட டீ ஆத்துறவங்களப்பாத்தா கோபம் வருது. திடீர்னு ரோட்ல செல்போன்ல பேசிட்டு எதிர்பக்கத்த பாத்துட்டு நடந்துவர்றவன் வண்டிய ஏத்தி கொல்லணும்னு தோணுது. தப்பில்லையா டாக்டர்??”

“தப்புன்னு தோணுதுல்ல.. யூ ஆர் நார்மல்னுதான் நினைக்கிறேன். எதுக்கும் கொஞ்சம் மாத்திரை எழுதித் தரவா? ”

“எதுக்கு மாத்திரை? என்னோட பிரச்சினை வெறும் பிரமை. சும்மா சப்கான்ஷியஸ் மைண்ட அமைதிப்படுத்தி அனுப்பலாம்னு பாக்குறீங்களா?”

“எதுவும் நான் சொல்லலீங்க.”

”எது சொன்னாலும் அதுக்கு பின்னாடி சில காரணம் எப்பவும் இருக்குமில்லையா?”

“அப்டில்லாம் எதும் இருக்கத் தேவையில்லையே? தவிரவும், என்னோட உள் நோக்கத்த நீங்க சரியாத்தான் புரிஞ்சுகிட்டீங்கன்னு எப்படி நம்புறீங்க?”

“பாத்துருக்கேன் டாக்டர். நிறைய மனுஷங்களப் பாத்திருக்கேன். ஒவ்வொரு மனுசனையும் ஒரு ஆய்வுக்கூட எலி மாதிரி இன்னிக்கும் பாத்த்துட்டு இருக்கேன். சைக்காலஜின்றதே சக மனுசனப் பத்தின புரிதல்னா, சக மனுசனப் புரிஞ்சுக்கத் தெரிஞ்சவன் ஒரு சைக்காலஜிஸ்ட்டா இருக்க வாய்ப்பில்லையா?

“இருக்கலாம்”

”ஒவ்வொருத்தரோட உள் நோக்கத்தையும் என்னால படிக்க முடியுது டாக்டர். பார்வை, ஒரு வார்த்தைன்னு ரொம்ப சுலபமா என்ன நினைக்கிறான், என்ன சொல்லவர்றான்னு முன்கூட்டியே சுலபமா கண்டுபிடிக்க முடியுது”

” நல்ல விஷயம்தானே? இதையேன் பிரச்சினைன்னு நினைக்கிறீங்க? மனுஷங்களோட பழகுறதுதான் பிரச்சினை எல்லாருக்கும்? அது சுலபமா வருதுன்னா நல்லதுதானே?”

“அப்டி இல்ல டாக்டர். எடுத்துக்காட்டுக்குச் சொல்லணும்னா, உங்களோட இந்த பதில நான் எதிர்பார்த்தேன். நீங்க இப்படித்தான் சொல்லுவீங்கன்னு தெரியும். இதுக்கு என்ன சொல்லுவீங்கன்னும் தெரியும்னா, இதுக்கு மேல உங்க கிட்ட என்ன பேசுறதுன்னு சொல்லுங்க. கிட்டத்தட்ட என் பதில், அதற்கான உங்க பதில், அதற்கான என்னோட பதில்னு மொத்த கான்வெர்ஷேனுமே முன்னாடியே ஒரு சினிமா மாதிரி எனக்குள்ள ஓடுனா, நாம பேசுறதுக்கு என்ன இருக்கு? கிட்டத்தட்ட நானே என்கிட்ட பேசிக்கிற மாதிரி ஆகாதா?”

“உங்ககிட்டையே எப்பவாது பேசியிருக்கீங்களா?”

“யூ மீன் தனியா பேசிட்டு இருக்கிறது? அப்டி குறிப்பிட்டுச் சொல்ற மாதிரி எதுவும் இல்ல. ஆனா நான் யார் கூட பேசினாலும், அது என்கூட நானே பேசிக்கிற மாதிரிதான். ஒரு கட்டத்துல யார் யாரைக்கூப்ட்றாங்கிறது கூட தெரியுறதில்ல. கொஞ்ச நேரம் நம்மளோட ப்யூச்சர் கான்வெர்ஷேன எனக்குள்ள ஓட்டிப்பாத்தா, என் பேர் சொல்லிக் கூப்டாக்கூட என் மூளை வேலை செய்யுறதில்ல. நான் டாக்டராவும் எதிர்ல இருக்கிற நீங்க, கவுன்சலிங்குக்கு வந்த நானாவும் மாறிட்றோம்.”

“இதனால எதும் குழப்பம் வந்திருக்கா?”

“ஹா ஹா. இந்தக் கேள்விய எதிர்பார்த்தேன். ஒரு வேளை கிளம்பும்போது உங்ககிட்ட நான் பீஸ் கேட்டா என்ன பண்ணுவீங்க டாக்டர்?”

“ஹா ஹா. ரெண்டு பேரும் இடம் மாறிட்டோம்னு உங்களுக்குப் புரியவைக்க முடியுமில்லையா? அதுக்காக பீஸ் கேட்றாதீங்க”

”அப்டி இல்ல டாக்டர். பொதுவா பேசும் போது கான்சியஸ் மைண்ட் பதில் சொல்லும், சப்கான்ஷியஸ் மைண்ட் கேட்டு உள்வாங்கிக்கும். எனக்கு ரெண்டும் இடம் மாறிடுது. கான்சியஸ் மைண்ட் எல்லாத்தையும் உள்வாங்கி சப்கான்சியஸ் மைண்ட் ரெண்டா பிரிஞ்சு பேசிட்டு இருக்கு. பேசி முடிக்கும்போது எங்க இருக்கேன் யார்ன்றதுலையெல்லாம் பெரிய குழப்பமே வந்துடுது “

“அப்ப உங்க பிரச்சினை உங்களுக்கே தெளிவா தெரியும்னு சொல்றீங்களா? மருந்தும் தெரியுமா?”

“இல்ல, இதெயெல்லாம் என்னோட சிம்டம்ஸ் வச்சு நெட்டுல மேஞ்சது. மருந்துன்னு எதுவும் சொல்லப்படல.”

“உங்க சப்கான்சியஸ் மைண்ட் என்ன சொல்லுது?”

”தற்கொலை பண்ணிக்கச் சொல்லுது டாக்டர்”

“காதுல குரல் கேட்குதா?”

“பாத்தீங்களா மறுபடி சாதாரண அப்ஸஸிவ் டிசார்டர் அல்லது பைபோலார் டிஸார்டர் வச்சே பேசிட்டு இருக்கீங்க. என் பிரச்சினை அது இல்லை. அயம் கிளியர் அண்ட் பெர்பெக்ட். ஆக்சுவலி பிக்சல் பெர்பெக்ட் அண்ட் கிரிஸ்டல் கிளியர் அதான் கொஞ்சம் பிரச்சினை”

“அப்ப தற்கொலை?”

“அதான் சொன்னனே.. ப்யூச்சர் கான்வெர்ஷேசன்ஸ். பேச்ச முடிச்சு கிளம்பினப்புறம் கூட எதிராளி கூட தொடர்ந்து பேசிட்டே இருக்கிறேன். எல்லா கான்வெர்ஷேசன்லையும் தற்கொலைதான் தீர்வுன்னு சொல்றாங்க எல்லா பிரண்ட்ஸும்”

“பிரண்ட்ஸ் உங்க கிட்ட சொன்னாங்களா?”

“கான்வெர்ஷேசன்ல இல்ல. என்னோட சப்கான்சியஸ்குள்ள ஓட்ற ப்யூச்சர் கான்வெர்ஷசன்ல தற்கொலைல முடியுது கான்வெர்ஷேசன்”

”அப்ப நம்ம கான்வெர்ஷேசனும் அப்டித்தான் முடியுமா? நான் வேற வார்த்தைகள்ல, பேச்சுவார்த்தையைத் தொடராத இடத்துல முடிச்சா?”

“அதையும் நண்பர்கள் கூட முயற்சி பண்ணிப்பாத்துட்டேன். ஒருத்தன் கூட வாண்டடா சண்டை போட்டு இன்னியோட பிரிஞ்சுரலாம், ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கவேண்டாம்னு முடிச்சேன்”

”அப்ப ப்யூச்சர் கான்வெர்ஷன் எதுவும் இருக்க வாய்ப்பில்லையே?”

“அங்கதான் பிரச்சினை. ப்யூச்சர் கான்வெர்ஷேசன்ல, என்னோட தப்ப உணர்ந்து அவன்கிட்ட மன்னிப்பு கேட்டு, அவனும் மன்னிச்சு ஏன் சண்டைபோட்டோம்னு பேச ஆரம்பிச்சு தற்கொலை பண்ணிக்கலாம்னுதான் அதுவும் முடிஞ்சுது”

”என்ன விதமான தீர்வு சரியாவரும்னு நீங்க நினைக்கிறீங்க?”

“செடடிவ் ஹிப்னோதெரபி. மயக்கத்துக்கு கொண்டு போய் ஆழ்மனசோட எண்ணங்கள மாத்துறது”

“அது சரியா வருமா? எப்படி நம்புறீங்க”

“ நான் முழுச்சிருக்கிற வரைக்கும், என்ன எந்த கேள்வியாலையும் உங்களாலல மடக்க முடியாது. சப்கான்சியஸ் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நீங்க எனக்கு செடடிவ் தரணும்”

“ஆனா ஹிப்னோ தெரபினா உங்க சப்கான்சியஸ் கிட்டத்தான நான் பேச வேண்டியிருக்கும். அதுல எதும் குழப்பம் வராதா?”

”வராது. கான்சியஸ் அண்ட் டூ வெர்சன்ஸ் ஆஃப் சப்கான்சியஸ் மொத்தம் மூணு பேரா பிரிஞ்சு பேசுறதுதான் என்னோட பிராப்ளம். செடடிவ் எடுத்துட்டா, கான்சியஸ் மைண்ட் இல்லாம போய்டும், சப்கான்சியஸ் கூட மட்டும்தான நீங்க பேசப்போறீங்க?”

“மொதல்ல ரெண்டு பேரா பேசுறோம்னு சொன்னீங்க. இப்ப மூணு பேர்ன்றீங்க?”

”அதான் சொன்னனே ஏற்கனவே இன்னும் உங்ககிட்ட பேசிட்டே இருந்தா இது இன்னும் விரியும், மூணு நாலுன்னு”

”செடடிவ் கண்டிப்பா என்கிட்ட இருந்து எதிர்பாக்குறீங்களா?”

“இல்ல டாக்டர், வரும்போதே ட்ரையஸோலம் எடுத்துட்டுதான் வந்தேன்.”

“வாட்? இதெல்லாம் யாரக்கேட்டு பண்ணீங்க? எங்க கிடைச்சது?”

“உங்களுக்குத் தெரியாதா டாக்டர். மூணு மடங்கு காசு குடுத்தா எதை வேணா வாங்கலாம்”

“வந்து பெட்ல படுங்க”

”தற்கொலைங்கிறது கண நேரத்து முடிவுன்னு நினைக்கிறீங்களா டாக்டர்?”

“என்ன உளர்றீங்க ஷிவா? இந்த பெட்ல வந்து படுங்க”

“ நான் இப்ப இந்த ஜன்னல் வழியா குதிச்சா என் எல்லா பிரச்சினையும் முடிஞ்சுரும் இல்லையா டாக்டர்?”

“ நான்சென்ஸ். பெட்ல படுங்க”

“இப்ப உங்க பிபி ஏறுதா டாக்டர்? கண்விழி விரியுறது இங்க தெரியுது. ”

“உங்களால என்ன இழுக்க முடியாது டாக்டர்”

..

“பெட்ல இல்ல. அங்க தெரியுற தரையில போய் படுக்கப்போறேன்”

மூன்றாவது மாடியிலிருந்து ஷிவா கீழே குதித்து மண்டை சிதறியதை ஊரே பார்த்தது. ”டாக்டர் கதவடைச்சுட்டு தனக்குத்தானே பேசிட்டு இருந்தாராம் அப்புறம் ஜன்னல் வழியா குதிச்சிட்டாராம்” என யாரோ போனில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

பெரிய அழி போட்ட வீடு

3 பின்னூட்டங்கள்

லெட்சுமிப்பாட்டி வீட்டிற்குள் நுழையும் பொழுது மணி மூன்று நாப்பது. வெயில் மெல்ல தாழத் தொடங்கியிருந்தது. அக்ரஹாரத்தில் கடைசி மூலையில் பெரிய வீடு என அப்பா சொல்லி அனுப்பியிருந்தார். வலதுபக்கமும் இடதுபக்கமும் படுத்தால் கூட என் உயரத்தில் பாதி மிச்சமிருக்கும் அளவுக்கு அகலம். வாசல் என்னைவிட மெலிந்து கிடந்தது. உள்ளிருந்து யாராவது வெளியே வந்தால் நானே வழிவிட்டு நின்றால்தான் அவர்கள் வெளியே போக முடியும். அழிக்கதவு திண்ணை என யாராவது வெள்ளைக்காரன் கடந்து சென்றால் இரண்டு மணி நேரம் நின்று போட்டோ எடுத்துவிட்டுதான் போகும் அளவு புராதனமான வீடு. படியேறி பித்தளைப்பூணை கதவில் அடித்தேன் (இரு கையாலும் தான். என் உடல் வலுதான் உங்களுத்தெரியுமே?)

‘யார்ரது..’

யாரென்று சொல்லுவது. பேரன் என்றெல்லாம் சொல்லமுடியாது. அக்ரஹாரத்தில் பாதிவீட்டில் இருப்பவர்கள் ரத்தவழிப்பேரன்கள். பிறரும் கூட தூரத்துச் சொந்தத்தில் (”ஓர்ப்பிடியாளோட அம்மா இருக்காளோல்யோ? அவ மருமான் வழி புள்ளையாண்டான்.. உனக்கு சித்தப்பண்டா!”) பேரன் வகையறாதான் தெருமுழுவதும். இன்னொரு முறையும் கதவைத்தட்டினேன்.

”கேக்குறனோல்யோ? கதவ பாட்டு தட்டிண்ட்ருந்தா பெரியவாளுக்கு என்ன மரியாதை”

பாட்டிதான் கதவைத் திறந்தாள். அப்படியொன்றும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. சின்ன வயதில் எதோ ஒரு கல்யாணத்தில் என் கன்னத்தைக்கொஞ்சிய அதே பாட்டிதான். அதே நடக்கமுடியாத பெருத்த ஆகிருதி. என்ன உயரம்தான் குறைந்திருந்தது போல் தோன்றியது. சின்ன வயதில் என் கை தூக்கி பாட்டி இடுப்பில் ஏறிய நினைவு மங்கலாக இருக்கிறது. இப்போது கிட்டத்தட்ட நான் கை நீட்டி பாட்டியின் கன்னத்தைக் கிள்ளிக்கொஞ்சலாம்.

“ஸ்ரீராமானா.. வாடா.. என்ன இந்தக் கிழவியைப்பாக்கணும்னு இப்பதான் தோணுச்சா நோக்கு? ஏண்டா முழிச்சுண்டே நிக்குற.. நம்ம ஆம்தான். உள்ற வா.”

“ஆமா பாட்டி.தாத்தா இல்லையா ஆத்துல?”

“இவ்ளொ நேரம் இங்கதான் இருந்தார். இப்பதான் எழுந்து வெளிய போனார். நாளைக்கு யார்க்கோ திதியாம். தர்ப்பை பறிக்கணும்னு..”

உடலை நடத்தமுடியாமல் நடத்திக்கூட்டிக்கொண்டு போய்க்கொண்டிருந்தாள் பாட்டி.முதுமையில் உடல் பெரிய சுமை. பெரிய உடல் இன்னும் சுமை.

“என்னடா நாம்பாட்டு பேசிண்டே இருக்கேன்.. நீ அமைதியா வர்ற… இரு. ஜலம் எடுத்துண்டு வர்றேன்.”

“இல்ல பாட்டி. வேண்டாம். இப்பதான் காபிகுடிச்சுட்டு வர்றேன்.”

நாக்கைக்கடித்துக்கொண்டேன். சொல்லியிருக்கக்கூடாது. மெதுவாய் அசைந்து கட்டிலில் அமர்ந்தாள். எதிரில் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு நானும் அமர்ந்தேன்.

”எங்கடா.. கடக்காப்பியா? கடங்காரா.. கண்ட இடத்துல கண்டதக் குடிப்பாளோ? பாட்டி ஒருத்தி இருப்பாளே… போய் காப்பிப்போட்றீன்னு சொல்வோம்னு தோணுச்சா? உன்னச்சொல்லிக்குத்தமில்லடா.. இந்தக்காலத்துக்கோந்தேழ் அப்படி வளந்துட்டேள். எங்க காலத்துல வெளியில ஜலம் வாங்கித் தரமாட்டார் எந்த்தோப்பனார். சரி.. சந்தியாவது பண்றியா.. இல்ல அதையும் விட்டொழிச்சாச்சா?”

இதுதான் பாட்டி. வாயைத் திறந்தால் மூடத்தெரியாது. சந்தியாவந்தனத்தில் தொடங்கும் பேச்சு வளரும் திசை பிடிபட்டு பயமுறுத்தியது.சொல்லித்தான் ஆகவேண்டும்.

“கடையில இல்ல பாட்டி. பெரிய அழி ஆத்துக்குப் போயிருந்தேன். அங்கதான் மாமி குடுத்தா”

சேலைத்தலைப்பால் விசிறிக்கொண்டதை நிறுத்தி என்னை தீர்க்கமாய்ப்பார்த்தாள். அண்ணாந்து விட்டத்தைப் பார்த்தாள். மின்விசிறி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கரக் கரக் சத்ததைத் துப்பிக்கொண்டிருந்தது

ஒரு நிமிடம் முழுமையாக அமைதியாக இருந்தாள். தப்பான இடத்தில் சொல்லக்கூடாத ஆளைப்பற்றிச் சொன்னது என் தவறுதான். பெருமூச்சுடன் எழுந்து சமையக்கட்டுக்குப் போனாள்.

“இருடா காப்பி கலந்துண்டு வர்றேன்”

இனி ஒன்றும் சொல்லமுடியாது, அந்த வீட்டில் காப்பி குடித்தால் இங்கும் குடித்துதான் ஆகவேண்டும்.

o

’வாடா பேராண்டி.. இப்பதான் வழிதெரிஞ்சுதா? காப்பி சாப்டியோ?”

சத்தத்துடன் வருவதுதான் தாத்தாவின் பழக்கம். முடியை இழுத்து பின்னந்தலையில் ப வடிவத்தில் கொண்டையிட்டிருந்தார். அழுக்கேறிய துண்டு கையில் கட்டுத் தர்ப்பை. துளித்துளியாய் வியர்த்த உடம்பில் தேர்வடம் சைஸில் அழுக்கேறிய பூணூல். மடித்துக்கட்டிய மயில்கண் வேஷ்டி.
“வாங்கோ தாத்தா.. பாட்டி இப்பதான் காப்பி கலந்துட்டுவரேன்னு உள்ள போனாள் நீங்க வரேள்.”

“அம்மா எப்படியிருக்கா? தோப்பனார்? சின்னவன் கோயம்புத்தூர்ல தானே படிக்கிறான்”

“அம்மாப்பால்லாம் நல்லா இருக்கா. BE பண்றான். ஏரோநாட்டிக்ஸ்.”

”ஏறோவோ கிறோவோ. படிச்சு நல்லா இருந்தா சரி. எங்களமாதிரி மணியடிச்சுண்டு தட்டப்பாத்துட்டு இருக்கிறதுக்கு.. உன் கல்யாணப்பேச்சு எந்த நிலமையில இருக்கு?”

“எல்லாம் முடிவாயிடுத்து. பொண்ணு அம்பாசமுத்ரம்தான். ராமானுஜ அய்யங்கார் பேத்திதான் பேசியிருக்கா. பத்திரிக்கை குடுக்கத்தான் நானே வந்தேன்”

” ஓ! பெரிய மனுசன் நீரே வந்தீரோ? உங்காத்து சின்னவர் உங்கப்பன் என்ன பண்றான்? வழி மறந்துட்டனோ?”

விஷம். நாக்கெல்லாம். உடம்பெல்லாம். மனசெல்லாம். எரிச்சலைக்காட்டமுடியாது.

“அவர் கல்யாண வேலையா அலைஞ்சுண்டுருக்கார். அவரே வர்றேன்னார். நாந்தான், நீங்க வேலையப் பாருங்கோ. தாத்தாவப் பாத்து ரொம்ப நாளாச்சு. நானே பாத்து பத்ரிக்கை குடுத்து சேவிச்சுண்டு வர்றேன்ன்னு வம்படியா வாங்கிட்டு வந்தேன்”

“அதானே? நம்மாத்து புள்ளைங்களுக்கு மட்டு மரியாதைன்றது என்ன இருக்கு? வேலையிடத்துல பெரியவாளக் கூட பேர்சொல்லித்தான் கூப்டுவீங்கண்ணு கிச்சா கூட சொன்னான்.”

பேச்சை வளர்க்கவும் கூடாது. நிறுத்தவும் முடியாது.
‘அந்தாத்துக்குப் போயிருந்தேன். கண்ணந்தாத்தா உங்கள சேவிச்சதா சொல்லச்சொன்னார்” குரலைத் தாழ்த்திச் சொன்னேன்.

தாத்தா அடுக்களை பக்கம் எட்டிப்பார்த்துவிட்டு திரும்பினார்.
“எப்படியிருக்கா எல்லாம்?இந்தா பத்து வீடு தள்ளியிருக்கா.. உம்பாட்டி பண்ண கூத்துல அடிபட்டாக்கூடா ஏன்னு கேட்கமுடியாதுண்ணா ஆகிப்போச்சு. கூடப்பொறந்த தம்பியை விலக்கிறதுக்கு கல்லாண்ணா ஆகிப்போனா உம்பாட்டி?”

இத்தனை முறை கேட்டு கிட்டத்தட்ட மனதில் ஊறிப்போன கதையை திரும்பவும் சொல்லப்போகிறார். இந்த பாழாய்ப்போன காப்பி சீக்கிரம் வந்து தொலைத்தால் தேவலை.

“கண்ணந்தான் என்ன பண்ணுவான் பாவம். கிச்சாக்கு பூணூல் போட்றதுக்காக எல்லாம் வரிஞ்சிட்டு நின்னோம். அந்தா இந்தான்னு எங்கல்யாணம், கண்ணன் கல்யாணம், ரெங்கு கல்யாணம்னு கதை சுத்திண்ட்டு இருந்துது. கண்ணன் விதி, வாய்விட்டு எங்கக்கா சொர்ண லட்சுமி. நீ கருப்பிதான ரெங்கு.. 60 குடுக்கலைன்னா தாலி கட்டமாட்டேனுட்டார் உங்காத்துக்காரர்னு வெளையாட்டாதான் சொன்னான். ரெங்கு பயித்தியக்காரி பொசுக்குன்னு போய் தொங்கிட்டள். நாராயண விளையாட்டு. , லெச்சு அன்னிக்கு நின்ன நிலைய அதுக்குமுன்னாடியும் யாரும் பாக்கல.. அதுக்கப்புறமும் யாரும் பாக்கல.. கண்ணனப்புடிச்சு உலுப்பு உலுப்புன்னு உலுப்பிட்டா. அவணும் என்ன பண்ணுவான். ரெங்கு கெடக்குறா லட்சுமி மடியில. இவன் கண்ணுல தாரைதாரையா உட்டுண்டு.. மன்னிச்சுடுக்கா மன்னிச்சுடு ரெங்குன்னு பினாத்துறான். ஒவ்வொருத்தரையா விழுந்து சேவிக்கிறான். ரெங்கு ஆத்துக்காரர் கூட பதறிட்டார். இவன்னா… கத்துறா அந்தக்கத்து கத்துறா. அவன் வீட்டொழிஞ்சு போனாத்தான் ரங்குவ மடியிறக்குவன்ன்னு அடம். யாராச்சும் கேட்கமுடியுமோ? கோவவந்தா தேவின்னா அவ. சூர்ணமும் மடிசாரும்

60களின் திரையொன்று விரிந்து பார்த்த படத்தையே மறுபடி பார்ப்பதுபோல் அந்தக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பாட்டி காப்பி கொண்டுவந்துவிட்டாள்
0

”என்ன பேசிண்டிருக்கேள் தாத்தனும் பேரனும்?”

சிவந்த கண்களுடன், கையில் டபராசெட் காப்பியுடன் பாட்டி வந்தாள். தூக்கக்கலக்கம் இன்னும் போகாதுபோல் திடீர் களைப்பு. கனத்த உடம்பில்லையா.. வயது வேறு. திடீர் சோர்வுகள்.

”இவன் கல்யாணம் உறுதியாகிடுச்சுடுடி.. அம்பாசமுத்திரம் ராமானுஜம் இருக்காணோல்யோ?”

“யார்ரு?”

“அதாண்டி.. உன் புள்ளாண்டானோட ஷட்டகர் தெந்திருப்பேரில இருக்காரே? அவரோட சித்தப்பா புள்ளை. உன் பேத்தி ரெங்கு சடங்குக்குக்கூட வந்திருந்தானேடீ? அவன் மக.”

எனக்கு ஒரு நிமிசம் தலை சுற்றியது. வரப்போகும் சகதர்மினி பல கிலோமீட்டர் தூரத்துச் சொந்த வழி முறைப்பெண் என்பதுமட்டும் குத்துமதிப்பாக புரிந்தது.அந்த வகையில் சந்தோசம்.
பாட்டி முகத்தில் களைப்பு நீங்கி கண்கள் பளீரிட்டது.

“அட கல்யாண மாப்பிள்ளையா நாரயண கிருபை நாராயண கிருபை.. அதான் இந்தப்பக்கம் காத்தடிக்குது. இல்லைன்னா இந்த குழா போட்ட பிராமணனாவது பெரியவளாத்தேடி வர்றதாவது…”

மையமாக சிரித்து வைத்தேன்.

“வெக்கப்பட்றதெல்லாம் அப்புறம் பண்ணலாம். கண்ண பரமாத்மா வர்றாணோல்யோ?”

எனக்கும் தாத்தாவும் ஒரு சேர தூக்கிவாரிப்போட்டது. பகைக்குப் பிறகு அவர் பெயரை பாட்டி உச்சரித்தே குடும்பத்தில் யாரும் பார்த்ததில்லை. நாங்கள் சொன்னால் கூட வெறித்தாற்போல் பார்ப்பவள். ‘அந்த வீடு’ ‘ பெரிய அழி வீட்டுப்பிராமணன்’ ‘கொலைகாரன்’ ‘கட்டேல போறவன்’ இதுதான் பாட்டி சொல்லி நான்,தம்பி,அம்மா, அப்பா எல்லாரும் கேட்டது.

”ஹ்ம்ம்.. வர்றேன்னு சொல்லியிருக்கார்.. நீங்க சொன்னா…”

” நான் என்னடா சொல்றது.. அவாஅவா சொந்தம் அவாவாளுக்கு. வரட்டுமே.. வர்றவாள ஏந்தடுக்கணும்..”

பாட்டி காப்பி போட வழக்கத்தைவிட அதிக நேரம் எடுத்துக்கொண்டதின் காரணம் மெல்ல துலங்கத்தொடங்கியது.

”எப்டியிருக்கா எல்லாம்?”

“ நல்லா இருக்கா பாட்டி. உங்களத்தான் கேட்டுக்கேட்டு மாஞ்சார் தாத்தா. சேவிச்சதா சொல்லச்சொன்னார். உங்க மூணு பேர் சின்னவயசெல்லாம் சொல்லி கண்ணு கலங்கிட்டார் தெரியுமோ? நீங்கதான் வளத்தேளாமே?”

பாட்டி தலைதிருப்பி தூரத்தில் வாசலை வெறித்தாள். வாசலில் செவலை நாயொன்று போய்க்கொண்டிருந்தது. கருப்பும் சிவப்புமாய் குட்டிகள் தாயின் நடைக்கு ஈடுகொடுத்து ஓடிக்கொண்டே மடியைக் கவ்வ குதியலுடன் போய்க்கொண்டிருந்தன.

“எங்கம்மா போனப்போ எனக்கு பதினாலு வயசு. அவனுக்கு பத்து இருக்கும். ரெங்கு நாலோ அஞ்சோ. எந்தோப்பனார் மடப்பள்ளி தபசி. ஆத்துக்கு தூங்குறதுக்குதான் வருவார். இதுகளா.. ரெண்டும் அசமஞ்சங்கள். 10 நிமிசம் கண்ணசந்தா மூக்கொழுகிட்டே யார்வீட்டுக்காது போய்டும்கள். கட்டி இழுத்து கழுவிவிட்டு துடைச்சு.. புள்ளைளா பாத்துட்டேன்.”

பாட்டியின் கண்கள் பளபளத்தது.

”எனக்கு இவஞ்செல்லம். இவனுக்கு அவ. அவளா.. அடங்கப்பிடாரி.. வார்த்தை சொன்னா ஜலம் காவேரியா கொட்டிடும். இந்த பெரியமனுஷன் அவள எதுக்கு திட்டுறேக்கான்னு என்னண்ட சண்டைக்கு வருவன். நாக்கெல்லாம் ஆதிஷேசனே வந்து படுத்தாப்புலதான். என்னையே என்ன வார்த்தையெல்லாம் கேட்றுக்கான். தாயில்லாப்புள்ளையாச்சேன்னு நானும் லேசுபாசா விட்டுட்டேன். கடங்காரி.. அப்பவே கேட்றுந்தா, ரெங்கு போய்ருப்பாளா?”

நானும் தாத்தாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். கதை முழுவதுமாய் மாறும் அதிர்ச்சி அவர் கண்ணிலும்

” வளர்த்த மார் எரிஞ்சுதுடா… இவன வெளியப்போன்னு சொன்னேந்தான். அதுக்காக வரவே கூடாதுன்னா சொன்னேன்?”

“இல்லபாட்டி.. கிச்சா மாமா கல்யாணத்தப்ப கூட..”

“என்ன சொன்னேன்? விருப்பம் இருந்தா வர்றட்டும்னுதானே சொன்னேன்? எங்காத்து பிராமணனக்கூட அனுப்பிச்சிருந்தேனே? அவனுக்கென்ன அவ்ளோ வீம்பு… நான் போய் வெத்தல பாக்கு வச்சு சேவிச்சாதான் வருவாராமா? தாய்மாமன் – அத்தைன்னு கிச்சாக்கு யார் இருக்கா அவாள விட்டா ? நலுங்குசுத்ததுக்கெல்லாம் அவாளே வரலாமோல்யோ உருத்து இருக்குண்ணு நெஞ்ச நிமித்துனா யார் கேட்கமுடியும்ன்றேன்”

லேசாக சிரித்துத் தொலைத்தேன். பாட்டி பார்த்துவிட்டாள்.

“சிரிக்கிறயா.. கிழவிக்கு வீம்புன்னா? அவனுக்கு அவ்ளோ வீம்புனா மடி ஆச்சாரம் பாக்காம தூக்கித் திரிஞ்ச எனக்கு எவ்ளோ இருக்கும். காலம் போன கடைசியில தோண்றதுடா. இந்த உடம்பத் தூக்கிண்டு போய், கண்ணனாத்து திண்ணையில சாத்தி ஒரு சொம்பு ஜலம் கேட்டு வாங்கிப்புடணும்னு… ரெங்குவும் எல்லாத்தையும் நாராயண காலடியிலிருந்து பாத்துண்டுதானே இருக்கிறா.. அவளா பாத்து செய்யட்டும்.”

”எங்கல்யாணத்துக்கு ரெண்டு பேரும் சேர்ந்து என்னை ஆசிர்வதிக்கணும் பாட்டி”

“யாரு அவனா.. என்கூடையா.. நானோ ஆத்துக்காரரோ முன்வாசலுக்கு வந்தா பொறவாசலுக்கு ஓடுவான்.. பாக்கலாம். நாராயணன் எந்தலையில என்ன எழுதியிருக்கான்னு…”

தெருவிளக்குகள் எரியத் தொடங்கின. அழிக்கதவின் கோடுகள் எங்கள் எல்லார் மீதும் விழுந்தது.

”அப்போ பாட்டி… நான் வரட்டுமா? நாழியாயிடுத்து… அம்மாப்பா கூட இன்னொரு நாள் பத்திரிக்கையோட வந்து சேவிக்கிறேன்.”

”ஷேமமா இருடாப்பா ஷேமமா இரு. பொண்கொழந்தேள பெத்துக்கோ. பாசம் வைக்குங்கள். நல்லது கெட்டதுக்கு ரெண்டு சொட்டு கண்ணீர் விட, சபை நிறைய பூ வைக்க பொண்கொழந்தேள்தான் சரி. எல்லாத்துக்கும் இடிச்சபுளி மாதிரி திருட்டு முழி முழிக்கிற உன்ன மாதிரியே தடியன் வந்துடப்போறான். எல்லாத்துக்குமேல, நம்மாத்துக்கு வர்ற பெண் கொழந்தேள்ளாம் ரங்குதாண்டா… ரங்க நாயகின்னு பேர் வை. “

“பாட்டி கல்யாணப்பத்திரிக்கை கொடுக்க வந்தா பொண்ணுக்கு பேர் வைக்கிறேளே பாட்டி.. சரி பையன் பொறந்தா என்ன பண்றதாம்? ரங்க நாயகன்ன்னு வச்சிடலாமா?”

”பெரியவா சொன்னா வெடுக்குன்னு பேசு. ஆதிஷேஷண்டா நாக்கு. அத அடக்கு. கொட்டுன விஷத்த வருஷக்கணக்கா அள்ள முடியாத எங்க கதையெல்லாம் எதுக்கு சொல்றோம்னு நினைக்கிற.. ஆதிஷேஷன நீங்களாவது அடக்கி வைக்கணும்னுதான். பத்திரமா ஆத்துக்குப் போய்ச் சேரு..”

திரும்பி நடந்தேன்.. கதவைத் திறக்கும் போது பாட்டி கூப்பிட்டாள்.

“ராமா”

“சொல்லுங்கோ”

“பையன்னா வாசுதேவன்னு பேர் வை. கண்ணன்னு கூப்டு முத்தங்கொஞ்சிக்கலாம்பாரு”

பவுர்ணமி போலிருக்கிறது. குழல் விளக்குடன் நிலவும் சேர்ந்து தெருவெல்லாம் வெளிச்சமாகக்கிடந்தது.

O

(அலுவலகத்தில் நடந்த ஒரு சிறுகதைப்போட்டிக்கு, ஜூலை -12 ல் எழுதியது. வழக்கம்போல வெற்றிபெறவில்லை என்பது தனிக்கதை)

This e-mail and any files transmitted with it are for the sole use of the intended recipient(s) and may contain confidential and privileged information. If you are not the intended recipient(s), please reply to the sender and destroy all copies of the original message. Any unauthorized review, use, disclosure, dissemination, forwarding, printing or copying of this email, and/or any action taken in reliance on the contents of this e-mail is strictly prohibited and may be unlawful.

Womens Day – எங்கள் பையன்களை எங்களைப்போல் வளர்க்காதீர்கள்

2 பின்னூட்டங்கள்

சோ கால்ட் கூட்டுமனசாட்சியை நிருப்யா கொஞ்சம் அசைத்துப்பார்த்துவிட்டாள் இல்லையா? தண்டனைச் சட்டங்களின் படி, குழந்தை என வரையறுக்கப்பட்ட ஆணும், இந்த குடும்ப முறையில், காதலைப் பற்றி பேசக்கூட தடை இருக்கும், அவன் அண்ணனும் ஒரே கடப்பாரையைத்தான் தனியாக மாட்டிய பெண்ணிடம் உபயோகித்திருக்கிறார்கள் இல்லையா?

ஊடகங்களுக்கு எல்லாமே டி.ஆர்.பிக்கான தீனிமட்டுமே. எல்லா பாலியல் வன்முறை வழக்குகளும் தூசு தட்டப்பட்டன, இளம்பெண் தனியே இரவில் தன் காதலனுடன் சென்றால் இப்படியெல்லாம் நடப்பது சகஜம் தான் என மேதைகள் சொன்னார்கள். அதே மேதைகளின் ஆண்பிரதிநிதிகள் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதிலடி கொடுத்தார்கள். இளம்பெண்ணுக்குப் பதிலாக, குழந்தைகளும் வயதான கிழவிகளும், வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வுகள் வெளி வந்தன. இரவில் மட்டுமில்லை, நண்பகலில், மாலையில், அதிகாலையில் வன்முறை நிகழ்வுகள் இருந்தன. காதலனுடன் மட்டுமில்லை. அண்ணனுடன், தந்தையுடன், என எல்லா சக உறவுகளுடன் சென்ற போதும் இதே வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன என புட்டுப்புட்டு வைத்தன புள்ளிவிபரங்கள். அரைகுறை ஆடைகள் என்றார்கள். பள்ளிச் சீருடை அரைகுறை ஆடையில் வராது இல்லையா?

அரசிற்கு எல்லாமே ஓட்டுத் தந்திரம் மட்டுமே. நிருப்யா இறந்தவுடன், இனியொரு வன்முறை நிகழ்வைத் தவிர்க்க தடுக்க தண்டிக்க சட்டம் இயற்றுமுன்னர், முதல் வேலையாக கட்சி வாரியாக சில பல லட்சங்களைப் பெட்டியில் போட்டுக்கொண்டு மருத்துவமனை முன்பு நின்றதைப்பார்த்தீர்களா? இனியொரு பெண்ணுக்கு இந்தக் கொடுமை நடக்காமல் தடுக்கவேண்டுமெனத்தானே நிருப்யா வேண்டியிருந்தாள்?

தூக்குத் தண்டனை, ரசாயன ஆண்மை நீக்கம் முதல், கருட புராணத்தின் படி மர்ம உறுப்பில் எலிகளை விட்டு கடிக்க வைக்கும் வரை எத்தனை தண்டனைகள் முன்மொழியபட்டன? மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன். எங்கள் ஆணாதிக்கம் (நானும் ஒரு அடையாளம்தானே?) கால்களுக்கு நடுவில் இல்லை. மூளைக்குள் இருக்கிறது.

எதுவரை நிருப்யா பற்றி பேசிக்கொண்டிருந்தோம் நினைவிருக்கிறதா? வினோதினி ஊடகப் பார்வைக்கு வரும்வரை. பிறகு வித்யா என இன்னொரு மாணவி. இன்னும் ஊடகங்களும், அரச யந்திரமும், மற்ற ஆசிட் வழக்குகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன. அடுத்த விதத்தில், அடுத்த வன்முறை நிகழும் வரை, ஆசிட் மட்டுமே நினைவிலிருக்கும். சூர்யநெல்லி பெண் பற்றி படித்தீர்களா? 1996ல் மூணாறில் காணாமல் போன ஒரு தபால்காரர் மகள். 40 நாள்களுக்கு, போதையூட்டப்பட்டு ஆள் மாற்றி ஆள் அவளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி , கடைசியில் கையில் கொஞ்சம் பணம் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். மக்கள் எழுச்சியைக் கொண்டு, தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு முக்கிய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு வருடங்களில் தண்டனையும் விதிக்கப்பட்டது. பிறகு உச்ச நீதிமன்றம், இது பாலியல் வன்முறை இல்லையென்றும், பணத்துக்காக நடந்த பாலியல் வியாபாரம் என்றும் தீர்ப்பை மாற்றி, விடுதலையும், தண்டக்குறைப்பும் செய்து, குற்றவாளிகளை விடுதலை செய்தது. அதில் ஒருவர் எம்.பி. இன்னொருவர் சமீபத்தில், கேரள வணிக வரித்துறையில் அதிகாரியாகவும் வளர்ந்திருக்கிறார்கள். வினோதினி, வித்யா, சூர்யா நெல்லிப் பெண்ணெல்லாம் கூட்டு மனசாட்சியின் கண்களுக்கு கொண்டுவரப்படவில்லை இல்லையா?

மறுபடியும் சொல்கிறேன். எங்க‌ள் வ‌ன்முறை எங்க‌ள் கால்க‌ளுக்கு ந‌டுவில் இல்லை. மூளையில் இருக்கிற‌து. எல்லா குழந்தைகளுக்கான க‌ளிம‌ண் மூளைகளைப் பாண்ட‌மாக்கும் பெற்றோர், எங்க‌ளுக்கு ஆதிக்க‌த்தையும், உங்க‌ளுக்கு அடிமைத்த‌ன‌த்தையும் க‌ற்றுக்கொடுத்திருக்கிறார்க‌ள். எங்க‌ளைவிட‌ அதிக‌ம் ச‌ம்பாதிக்கும் பெண்ணை , எங்க‌ளைவிட‌ அதிக‌ம் புத்திசாலியான‌ பெண்ணை, எங்க‌ளைவிட‌ வ‌ய‌தில் அதிக‌மான‌ பெண்ணைக்கூட‌ எங்க‌ளால் ஏற்றுக்கொள்ள‌முடியாது. தாய்வ‌ழிச் ச‌மூக‌த்தில் ஆண்களின் நிலை ஒரு ஜீனாக‌ த‌லைமுறை த‌லைமுறையாக‌க் க‌டத்த‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஒரு நடையில் எங்களைக் கடந்து செல்லும் பெண்கூட எங்கள் அகங்காரத்தை அசைத்துப் பார்த்துவிடுகிறாள். எங்களைப்போலவே விரும்பிய‌தை அணியும் பெண்க‌ள், எங்க‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ பின்னிர‌வுக‌ளில் க‌ண்ணில் ப‌டும் பெண்க‌ள், எங்க‌ள் வ‌ன்முறைக்கு இல‌க்காக‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் என்ற‌ எண்ண‌ம் விதைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. அர‌சாங்க‌ம் உங்க‌ளுக்கு உத‌விசெய்யாது. ந‌ட‌க்கும்வ‌ரை வேடிக்கை பார்த்து பின் , ப‌ண‌ம் கொடுத்து ஊரிலுள்ள‌ ம‌ற்றவ‌ர்க‌ளின் ஓட்டு வாங்க‌ முய‌லும். ஊட‌க‌ங்க‌ள் உதவி செய்யாது. டி.ஆர்.பி ரேட்டிங்க் கூட்டும் தார‌க‌ ம‌ந்திர‌மில்லையா? உங்க‌ளுக்கு ம‌ர‌ண‌மே நேர்ந்தாலும் சீரிய‌ விள‌ம்ப‌ர‌ இடைவேளைக‌ளில்தான் செய்திக‌ளே வ‌ரும்.

த‌ப்பிப் பிற‌ந்த‌, இன்றுவ‌ரை பெண்க‌ளை அடிமைப்ப‌டுத்தியதைக் குறித்த‌ குற்ற‌வுண‌ர்ச்சி கொண்ட‌ ஒரு சிறு குழு ஆண்க‌ளுக்குள்ளுள் உண்டு. ஆனால் அதுவும் உத‌வாது. ஒரே வ‌ழி இந்த‌ த‌லைமுறையிட‌ம் ஜாக்கிர‌தையாக‌ இருங்க‌ள். த‌ப்பிப் பிற‌ந்த‌ ஆண்க‌ளை க‌ண்ட‌றிய‌ க‌ற்றுக்கொள்ளுங்க‌ள். கணவன், சகோதரன், அப்பா, அண்ணனின் வார்த்தைக‌ளிலும் செய‌லிலும், நேர‌டியாக‌ ம‌றைமுக‌மாக‌ இருக்கும் விஷ‌ முட்க‌ளை அவ‌ர்க‌ள் முன்னால் எடுத்துச் சொல்லுங்க‌ள். உங்க‌ளிட‌ம் ம‌ட்டும‌ல்லாம‌ல், பிற‌ பெண்க‌ளைப்ப‌ற்றிய‌ அவ‌ர்க‌ள் க‌ருத்துக்க‌ளையும் க‌வ‌னியுங்க‌ள். 6 ம‌ணிக்குள் வீட்டு வ‌ந்துருமா என‌ குடும்ப‌த்தின‌ர் சொன்னால், “அட‌டா இது அக்க‌றை” என நீங்கள் ஏற்றுக்கொண்டால், த‌ன் குடும்ப‌த்தின‌ரால் ஏற்றுக்கொள்ள‌ப்பட்ட‌ ஒரு க‌ட்டுப்பாட்டை மீறும் பொதுவெளிப்பெண்ணுக்கு “அவ‌ நைட்டு வெளிய‌ சுத்துனா இப்ப‌டித்தான் ந‌ட‌க்கும், எங்க‌க்காவும் இருக்கா.. ஆறு ம‌ணிக்கு வீட்டு வ‌ ந்துருவா.. அவ‌ளுக்கு இதுவ‌ரை எந்த‌ப்பிர‌ச்சினையும் வ‌ர‌லியே” என‌ ஒரு வ‌ட்டார‌த்தையே அடுத்த‌ த‌லைமுறை குற்ற‌வாளிக‌ளாய் உருவாக்க‌ ஆண்க‌ள் த‌ய‌ங்க‌ப்போவ‌தில்லை.

ஒரே விஷ‌ய‌ம். உங்க‌ள் ஆண் குழ‌ந்தைக‌ளை எங்க‌ளைப்போல் வ‌ள‌ர்க்காதீர்க‌ள். உங்க‌ள் பெண் குழ‌ந்தைக‌ளை உங்க‌ளைப்போல் வ‌ள‌ர்க்காதீர்க‌ள்.

இதுவ‌ரை ஒரு சொல்லில், ஒரு பார்வையில், ஒரு நிக‌ழ்வில், என்னை மாற்றிய‌ ஒவ்வொரு பெண்ணுக்கும் ந‌ன்றி க‌ல‌ந்த‌ பெண்க‌ள் தின‌ வாழ்த்துக‌ள்‌

ஆயிஷா

3 பின்னூட்டங்கள்

ஆயிஷா. எத்தனை கோடி முறை உச்சரித்த பேர் உனது. என் பாதுகாப்பு வட்டத்தின் வெளியிலிருந்து புன்னகைத்த முதல் ஜீவன் நீ. உரிமை கொண்டாடாத, உன்னை எனக்கானவள், என்னுடையவளென்ற எந்த அகங்காரமும் அற்ற முதல் குழந்தைத் தனமான அன்பு உன் மீது இருந்தது. என்னுடன் யாருமற்ற கல்விச்சாலையில் முதல் புன்னகையை, முதல் கைகுலுக்கலை பரிசளித்தவள் நீ. உனக்கும் எனக்குமான நாற்காலிகளின் இடைவெளியை இரு கை நீட்டி இல்லாமலாக்கும் வித்தையை எனக்குக் கற்றுக்கொடுத்தவள் நீ. நமக்குள் பரிமாறிக்கொண்டிருந்த சிட்டைகளை இல்லாமலாக்குவதற்கு புதுப்புது வழிகளை அதே சிட்டைகளில் எழுதி எனக்கு அனுப்பிக்கொண்டே இருந்தாய். என் பாடங்கள் உன்னிடமிருந்தே தொடங்கின.

என் வாழ்வின் பெண்கள் உன் கண்களின் மூலமே அடையாளம் காணப்படுகிறார்கள். முக்காடிட்ட நெற்றிக்குக்கீழிருந்து அசையும் உன் புருவத்தின் ஓர வளைவுகள் வரை எத்தனை புகைப்படங்கள் என்னுள் நிறைந்திருக்கின்றன தெரியுமா? சில மைல் மிதிவண்டிப்பயணம் முடிந்து நீண்ட வெயிலுக்கான சிறு தென்றலுக்காக எனை நோக்கிப் புன்னகைத்தவள் நீ. பாடம் சொல்லிக்கொடுப்பதாக அருகிலமர்ந்து எதையோ பேசிக்கொண்டிருப்பாய். நொடியின் நூற்ற்றில் ஒரு பங்கு நேரத்தில் உன் விரல் என்னை உரசிப்போகும். மிருதுவான உன் புறங்கையின் தண்மை இன்னும் என் விரல்களில் உண்டு. உன் குட்டுகளில் ஒரு தலை கோதுதல் ஒளிந்திருந்தது. உன் புன்னகையின், உன் ஸ்பரிசங்களின், உன் பார்வைகளின் சங்கேதங்களை இத்தனை வருடம் கழித்து காதல் என அர்த்தப்படுத்திக்கொள்ளவா ஆயிஷா?

லேடிபேர்டும், ஹெர்குலிஸும் சாய்ந்திருக்கும் வேப்பமரம் இன்று இல்லை ஆயிஷா. புத்தகங்கள் சிதறிக்கிடக்க ஒருவரை ஒருவர் இமைக்காமல் பார்த்திருந்த தருணங்களும் இன்று இல்லை. அதற்கான மன நிலையைக் கடந்து வெகுதூரம் தார்ச்சாலையில் கடந்து வந்துவிட்டேன். இளகிய தார்ச்சூட்டினை வெற்றுக்காலில் பெற்றுக்கொண்டு, என் மடியில் கால் நீட்டி அழுத அந்தக் கணங்களுக்கு எந்த வழியே போவேன் நான்? ஒட்டியிருந்த தார் காய்ந்து மெல்ல உரித்தெடுத்து ஒத்தடமிட்ட என் அன்பு இன்னும் உன் நினைவில் உண்டா? என் தோள் பிடித்து மெல்ல நடந்துவந்த அந்த நம்பிக்கையை பத்திரமாகத்தானே வைத்திருக்கிறாய். எனக்குத் தெரியும் ஆயிஷா, உன் வெயில் கணங்களை உன் கண்ணீரை வீட்டில் உகுத்திருந்தால், பள்ளியைவிட்டு உன்னை நிறுத்தியிருப்பார்கள். இளவரசியைப்போல் கால் நீட்டி வானொலிப்பெட்டிகளுடன் உன் நாட்களைக் கடத்தியிருக்கலாம். உனக்கான மாமன்கள் காத்திருப்பார்கள். ஆனாலும் நீ கல்வியைத் தேர்ந்தெடுத்திருந்தாய் அதன் அத்தனை வலிகளையும் பொறுத்துக்கொண்டு என உன் மீது எல்லாருக்கும் மரியாதை உண்டு. நீ தேர்ந்தெடுத்தது கல்வியை அல்ல என்னை எனக் கிசுகிசுத்து உன் மீதான என் மரியாதையைக் காதலாக மாற்றிக்கொண்டவள் நீ.

அரளி உனக்குப் பிடிக்கும். சிவப்பு அரளி. பூவைத் தலையில் வைத்துக்கொள்ளமாட்டாய் நீ. ஆனாலும் கையில் வைத்திருக்கப் பிடிக்கும். கசப்பு மணம் வீசும் அரளியைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் உன் பிம்பம் ஆயுட்கால வரம். எல்லா பாறைகளையும் நினைவுகளை ஊன்றிக்கொண்டுதானே நடக்கவேண்டியிருக்கிறது. சிவப்பு அரளி பூவைப் போலத்தானே நான் உனக்கும். எதையும் உரிமை கொண்டாடாத, எதையும் எதிர்பாக்காத, எதையும் விரும்பாத அந்த நொடிக்கான உறவாகத்தானே நாம் இருந்தோம். எல்லா நாள்களும் கடைசி சந்திப்பைப் போலத்தானே நாம் வார்த்தைச் சிட்டைகளைப் பகிர்ந்து கொண்டோம்? புன்னகைகளை? ஸ்பரிசத்தை? நம்பிக்கைகளை?

என் மத அடையாளங்களை விரும்பித் துறந்தவன் நான். உன் மத அடையாளங்களைத் துறக்க விரும்பியவள் நீ. ஜோதிடம் குறித்து எத்தனை கேள்விகளைக் கேட்டாய். பின்னணி உள்ள எல்லாருக்கும் எல்லாமும் தெரிந்திருக்கும் என எந்த மடையன் சொன்னது? ஆனாலும் கற்றுக்கொண்டேன் ஆயிஷா. உனக்காக. எல்லா ஆச்சர்யக் கண்களையும், கண்டிப்பு மரக்குச்சிகளையும், அவமான நிமிடங்களையும் தாண்டி ஜோதிடத்தை மற்ற பாடங்களிலும் மேலானதாக வைத்து கற்றுக்கொண்டேன். உன் கேள்விகளுக்கு பதில் சொல்ல மட்டும். அல்லது கேள்விகேட்க விடாமல் அந்த கனவு கணக்குகளைக் குறித்த சொந்தக் கதைகளை உன்னிடம் விடாமல் பேசிக்கொண்டிருக்கவாவது. உன்னைப்பிரியும் நாள் குறித்த கணக்குகளை ஒரு நாளும் போட்டுப்பார்த்ததில்லை. தெரியும் எனக்கு. பிரிந்துவிடுவாய். அதற்கான நாள் புது நாட்காட்டியில் சமீபத்திருக்கும் என்றெல்லாம் தெரிந்ததுதான். இதில் கணக்கு போட்டு வேறு கண்ணீரை சேர்த்துக்கொள்ள வேண்டுமா?

உன் ஆடையிலிருந்து விழுந்த நூல் கொத்தை எப்போதாவது எடுத்து பார்த்துக்கொள்வேன் ஆயிஷா.ஹீரோ பேனா மை பிழிந்து நான் இதயம் வரைந்து குடுத்த உன் கைக்குட்டை எங்கிருக்கிறது இப்போது? என் பெயர் கூட்டி வாழப்பிறந்தவள் என இருவர் பெயரிணைத்து நான் கையெழுத்திட்ட உன் நோட்டு? அரளிப்பூ காய வைத்து நான் ஒட்டிக்குடுத்த புத்தகப் பக்கங்கள்? நீ அமர்ந்த என் மிதிவண்டி கம்பிகள். உன் மிதிவண்டியில் நான் தகவல் சிட்டைகளை ஒளித்து வைக்கும் மறைவிடங்கள்? எதையாவது தொலைத்துக்கொண்டேயிருக்கும் மறதிக்காரெனென எப்பொழுதும் என்னைப் பரிகசிக்கும் ஆயிஷாவே.

உன்னைத் தொலைத்துவிட்டேன். ஆனாலும் நான் மறதிக்காரன் இல்லை.

என் பெயர் ஜிப்சி – ஹெர்பேரியத்திலிருந்து பூக்கும் மலர்.

பின்னூட்டமொன்றை இடுக

அ.
கவிதைகளை வைத்து அரசியல் செய்வதை விட கவிதைகளுக்குள் அரசியல் எளிதானதாக இருக்கலாம் போலிருக்கிறது. பிரச்சார நெடிகளைக் கடந்து ஒரு சிறு அனுபவத்தை அதன் சாரத்தோடு முண்டு சுற்றி அதற்குள் அரசியலைக் கோர்ப்பதென்பது சாதகப் பட்சியிடம் மிஞ்சும் மழையின் காலம்.

ஆ.
துப்பாக்கி ரவைகளை மூங்கிலுக்குள் இட்டு புல்லாங்குழலென வாசிக்கச் சொல்வதென்பது ஒரு வரலாற்றுத் துயரம். எதோ ஒரு கணத்தில் எல்லோருடைய கைக்கும் மாற்றப்பட்டிருக்கும் மூங்கில்குழல் நக்கீரனுக்கு மட்டும் கவிதையாய்ச் சமைகிறது.

இ.
தன் கருவி மீட்டி இசை கசிந்துருகச்செய்யும் பெண் பெரிய மண்டபத்தில் தன் சுருதி அகழும் நாயனக்காரனாகிறாள். ஹெர்பேரியத்திற்கான தயாரிப்பு குழந்தை வளர்ப்பாகிறது. மூவாயிரத்துத் தொண்ணூறாவது முறையாக வெள்ளரிப்பிஞ்சு விற்கும் சிறுமி சாம் மாமாவுடன் போட்டியிட்டாலும், எலுமிச்சை நிற மெய் நீர் அரசியலின் மீது பெய்கிறது.

ஈ.
நண்பர்கள் சுயத்தை தன் குருதியில் பிறர் படிக்க பொதுவில் வைக்கிறார்கள். பிறர் குருதிகளின் மீது தன் பார்வைகளைக் குவிப்பதே இல்லை. சுயவிமர்சனம் என்றுகூட இதைச் சொல்லலாம். வாசிக்கக்கிடைக்கும் பெரும்பாலான கவிதைகள் கண்ணாடியுடனான உரையாடல்களாயிருந்தன. தன்னைத் தவிரபிறர் நிறங்களை மழுப்பிக்காட்டும் சுயக்கண்ணாடிகள். நக்கீரனுக்கு மூக்குக் கண்ணாடி வாய்த்திருக்கிறது. முன்னால் விரிந்திருக்கும் உலகம் தெரிகிறது. அதே கண்ணாடியின் பிம்பங்கள் வாசிப்பவனுக்கும் அதே சாயலில் கடத்தப்படுகின்றன. ஒருவேளை எங்கள் கண்ணாடிகளில் முகம் பார்க்கும் பகுதியில் ரசம் பூசும் கையாக நக்கீரன் கைகளைப் பற்றிக்கொள்வேன்.


கல்பாலிகைகளை நீருக்குள் மறைத்த சமணமுனி திகம்பரனாய்த் திரும்பி வரும்போது காவலாளிகளின் இருத்தல் குழப்புகிறது. நான் வெட்டிய குளத்திற்கு எவனோ காவலாளியாகி என்னையே துரத்தும் வலி. விடலைகளில் கைகளில் அடைபடும் கல்முலைகளில் கசிந்துருகுகிறது தாய் நிலத்தில் விரட்டப்பட்ட மனிதர்களின் கண்ணீர்.

தமிழ்கவிஞர்களில் போலிச்சமநிலை மீதான சிறுகல் விழுகிறது ஒரு இடத்தில் . எத்தனைச் சம நிலையுடன் எதன் மீது விழுந்தாலும் சிறு நகர்வும் ஒரு முனைக்கு கடத்திவிடுகிறது கவிஞனை (எழுத்தாளன் என்ன இன்னும் கூட்டம் சேர்க்கவா?) கிழக்கு மேற்கு இசங்கள் தோலில் வரிக்குதிரைத் தடங்களை விட்டு சுய அடையளமுமில்லாமல் மாறுவேடமும் இல்லாமல் கோமாளிக்கோலத்தில் கொண்டு நிறுத்திவிடக்கூடும். கொடுமைகளின் உச்சம் சொந்த நிலத்தில் சகதிகளுக்குள் புதைந்து சவப்பரிசோதனைக்கு தன்னை ஆளாக்கிக் கொள்வது. சொந்த நிலத்தில் விழுந்த நிழல் ஜிப்சியென்றால், இதுவும் அதுவே.

இசைக்கலைஞன் கவிஞனைப்போல நினைவிலிருந்த கானகம் ஒன்றினை மேடையில் மீளூருவாக்கம் செய்கிறான். கூட்டிசைகளை இரைச்சல் என்றும் சொல்லலாம். புத்தகங்களை அதன் நுணுக்கங்களுக்காகப் படிப்பவன் ரசிக்குமளவு ஆதி வேரினை, பியானோ குடுத்த மரத்தினை மரத்திலிருந்த இருவாச்சிகளை நினைவில் வைத்துக்கொண்டு வாசிப்பவன், இசையொத்த கவிதைகளை நுணுக்கங்களுக்காக அன்றி, வரலாற்றுப்புரிதலுடன் படிப்பவன் தன் வெட்டுக்க்காயங்கள் மீதான கவனம் கொண்ட நோயாளியென வாதையினைத் தான் பெற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது இல்லையா?

ஓவியர்கள் வன்முறையாளர்களாகவும் இருக்கிறார்கள். பறக்கும் கிளிகளைவிட கூண்டிலிருக்கும் கிளிகளைத்தான் ஓவியர்களுக்குப் பிடித்திருக்கிறது. வண்ணங்களையும் அதன் நுணுக்கங்களையும் மட்டும் அறியாத சிறுகுழந்தைக்கு மட்டுமே கூண்டு உறுத்துகிறது. கரு மையினால் கூண்டை அழித்துவிட்டு கிளி பறந்து விட்டதாக கற்பனை செய்து கொள்வதுதான் எவ்வளவு எளிது?

படைப்பு குறித்த ஒரு பார்வையினை இன்னொருவருக்குக் கடத்தும்போது அதன் ரகசியங்களை உடைக்காமலிப்பது உத்தமம்தான் இருந்தாலும், ரகசியங்கள் மட்டுமே ஒருவரை படைப்பினை நோக்கி இழுக்க வாய்ப்பிருக்கிறது எனும் பட்சத்தில், ரகசியங்களை விட அதன் நோக்கிய ஈர்ப்பே பிரதானமாக எனக்குத் தோன்றுகிறது. மேலே சொன்ன சில நிகழ்வுகளை அதன் பின்னணிகளோடு மொழி அலைகளோடு நக்கீரனின் விளையாட்டை என் பெயர் ஜிப்சியில் பார்க்கலாம். அல்லது பெரிதாய் ஈர்க்கப்பட்ட சில ரகசியங்களை தெரியாதவர்களிடம் பகிர்ந்து கொள்வது குறித்த மனக் கொந்தளிப்பாகவும் இதை எடுத்துக்கொள்ளலாம்.. அல்லது…

சுருள் சுருளாய் விரிகிறது நக்கீரனின் அரசியல் . பென்சிலுக்குள் ஒளிந்திருக்கும் சுருள் அடுக்குகளைப்போல ஒரு கவிதையை எடுத்துக்கொண்டு உள் நோக்கி அல்லது வெளி நோக்கி விரிந்து கொண்டே போக முடிகிறது. இந்தக் கவிதைகளில் நக்கீரன் இல்லை. அவரின் தனிமை, அவரின் அடுக்குமாடிக்குடியிருப்பின் தூரத்தில் தனித்த கடலின் சோகம் இல்லை. தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து ரசிக்கும் யுவதியின் கிளர்ச்சியில்லை. சண்டைப்படம் முடிந்து வாகனத்தின் பஞ்சு மெத்தைகளில் முஷ்டி மடக்கிக் குத்திப்பார்க்கும் போலிவீரம், நீ அவனில்லை. நாந்தான் அவன் என்ற செருக்கு இல்லை.

ஒரு கோப்பைத் தேநீருடன் சோபா ஒன்றில் சாய்ந்தமர்ந்து எல்லா நிகழ்வுகளையும் அடுக்கப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டிகளில் பார்க்கும் அறிபுனைவுக் கதையின் கடவுளாக அமர்ந்திருக்கிறார் கவிஞர். சில அபத்தக் காட்சிகளின் ஒளித்துண்டை நம் முன்னால் தூக்கிப்போட்டு புன்னகைக்கிறார். அந்தக் காட்சியுடன் ஒன்றலாம், அல்லது அதன் பின்னணிக்குள் சுருள் படிகளுக்குள் இறங்கலாம் அல்லது சுருள் சுருளாக…
ஒள
முன்னுரையில் நக்கீரன் சொல்வது போல கவிஞர்களின் துப்பாக்கி காலியாக இல்லை. நக்கீரன் துப்பாக்கி மொழியால் நிரப்பப்பட்டிருக்கிறது. பொதுமைப்படுத்தப்படவேண்டுமெனில் மீன்களின் நிர்வாணமென்னும் அபத்தத்தைப்போலவே அரசியலற்ற கவிதைகள் என்பதுவும் அபத்தம்தான் என்றாலும் புதையுண்டிருந்த மொகஞ்சதாரோ மனுஷியின் நாவாகவும் இருக்கிறது என் பெயர் ஜிப்சி.

என் பெயர் ஜிப்சி – நக்கீரன்
கொம்பு வெளியீட்டகம் – ரூ.50.

ஆன்லைனில் வாங்க 

பழைய பதிவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 2,399 other followers

%d bloggers like this: