பெருங்குரலெடுத்து சாமியாடும்
சுடலை கொண்டாடி
மீதான பயம்
கடந்தவாரம்
நாகரீக உடையிலிருந்த
என்னைப் பார்த்து
“பொடிமட்டைக்கு ரெண்டு ரூபா சார்”
கேட்கும் வரை மிச்சமிருந்தது.
o
திருவிழா நாளொன்றின்
கரும்பு கணுவில் கடித்த பல்வலி
கண்ணாடிக் குவளையின்
சுகர்கேன் ஜூஸ் குடிக்கையில்
ஏனோ நியாபகம்
வந்து தொலைகிறது
o
கொல்லைப்புறத்தில்
அச்சுவெல்லம் அளவிற்க்கு
நிற்க்கும் நிலை மாடன்
தெருமுனையில் ஆலமரத்துச் சுடலை
ஊரோரத்தில் அரிவாளுடன் அய்யனார்
புன்னகைத்தபடி அழைத்துப்போவார் அப்பா.
அத்தைவீட்டிலிருக்கும்
தாத்தாவைப் பார்க்கப் போகும்போது
மட்டும் அப்பாவின் முகம்
சுடலை மாடன் போலவே இருக்கும்
o
சிவனைக் காலில் போட்டு
மிதிப்பதாய் சொல்லப்படும்
காளியை
அம்மாவிற்க்கு பிடிக்கும்
64 இடங்களில்
பார்வதியைப் பிய்த்துப்போட்ட
ருத்ரனை
அப்பாவிற்க்கு பிடிக்கும்.
எனக்கு இருவரையும் பிடிக்காது.