எவளோ ஒருத்தி எழுதிக் கொண்டிருந்த
கவிதையின் கடைசி வரி
நல்லவனுக்கு காதலிக்கத் தெரியாதென முடிந்தது
வார்த்தைகளால் தூண்டி
காதலென பொய் சொல்வதாய்
சில வரிகள் சொல்லிக் கொண்டிருந்தது
நட்பினை காதலென தவறாய் புரிந்துகொள்வதாய்
சிரித்துப் பேசுவதெல்லாம் காதலல்ல என்பதோடு
அங்கங்கு
சில திட்டும் வார்த்தைகளை சேர்த்திருந்தாள்
எவனோ எவனோ
அப்ளிகேஷன் போடும்
தபால் பெட்டியா நான்
எனும் கோவமான வரியில் கொஞ்சம்
புன்னகைத்தேன்.
கவிதைக்கு முற்றுப்புள்ளி வைத்தவள் தான்
கவிஞனுக்கும் முற்றுப்புள்ளி வைத்தவள்.
O
நீண்ட நாள்களுக்குப்பின்னர்
அவளின்
பார்வை தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கிறேன்
அவள் பார்த்துவிடக் கூடாதென்றும்
அவளைப் பார்க்கவேண்டுமென்றும்
இரண்டு திசைகளில் இழுக்கிறது
திருட்டுப் பூனைகள்
மீசையின் மயிர்கள் மறைக்க
பார்த்தவளை பார்க்காதது போல்
கடந்து செல்கிறான்
இரவு தீக்குளிக்கப் போகிறவன்
O
மதுக்கோப்பைகளில்
மினுமினுப்பாய் எதிரொலிக்கிறது
காதல் கவிதைகளை தொலைத்த
பூனையின் கண்கள்
யாருமற்ற மனமெங்கும் நிறைகிறது
எரிந்த கொள்ளியின்
புகைப்படலம்
காமத்தின் கூடாரங்களிலிருந்து
தலை தெறிக்க
ஓடிக் கொண்டிருக்கிறான்
தேவதையின் நிழல் பார்த்தவன்
முதலும் கடைசியுமாய்
தற்கொலை செய்தவன்
மேல் காறி உமிழுங்கள்
காதல் புரியாதவர்
O
மழையில் நனைபவனும்
குடையில் ஒளிபவளும்
ஒரே தெருவில்
சந்திக்க நேர்வது
காதலின் தவறல்ல.
O
மயிரிழைகள் அறுத்து
முன்னேறிச் செல்கிறது
காமத்தின் துருப்புகள்
தப்பியோட வழியின்றி
செத்து விழுகிறது
காதல் குழந்தைகள்
மகரந்த பனிமழை
காளான்களை நனைக்கையில்
காதல் புனிதமென்பீர் நீர்.
காமமும் புனிதமென்பேன் நான்.