நீள்கவிதைகளின் மீது எப்போதும் எனக்கு ஒரு முரண் இருந்தே வந்திருக்கிறது. கடைசி மூன்று வரிகளை நோக்கிச் செல்லும் வரிகள் அதற்கான நியாயமென வளவள வரிகளைத் தாங்கிக்கொண்டிருப்பது ஒருவித ஒவ்வாமையே. சில கவிதைகள் மட்டுமே தனக்கான நீள்வரிகளைக் கோருபவை. அவற்றைத் தவிர மற்ற அனைத்தும் வெற்று வார்த்தைக் கோர்வைகளாகவே தெரிகின்றன. காந்தியைக் கொன்றது தவறுதான் முழுக்க முழுக்க நீள்கவிதைகளாலானது. ஆனாலும் முழுக்க தர்க்க நியாயங்களுடன், முன்னொட்டு வரிகளற்று அனுபவத்தை அத்தனை வரிகளில்லாமல் காட்சிப்படுத்தமுடியாதெனுமாறு.,
அப்படியே இந்த தலைப்புக் கவிதைகளும், பெரும்பாலும் தலைப்புக் கவிதைகள் அதிர்ச்சி மதிப்பிற்காகவோ முதல் பார்வையில் ஈர்ப்பைக் கொண்டு வருபவையாகவோ அமைக்கப்பட்டு, தலைப்புக்கவிதை திராபையாகவும் இருக்கும். காந்தியைக் கொன்றது தவறுதான் எனும் தலைப்பில், தொகுப்பில் சுமார் 10 கவிதைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் தரும் வாசிப்பனுபவம் வார்த்தைகளில் விவரிக்கமுடியாதது.
உலகில் எந்தப் புரட்சியாளனும்
காந்தியைப்போல
பரிதாபகரமான தோல்வியைச் சந்தித்ததில்லைதானாகவே சாகவிருந்த அக்
கிழவனைச் சுட்டேன்
அதன் மூலம் கிழவன்
வெற்றிபெறுவார் எனும் எண்ணத்தில்அவர் ஒரு புரட்சியாளர் அல்லர்
சராசரி இந்திய ஆன்மீகவாதி
சுடப்பட்டதால் புரட்சியாளர் ஆகிவிட்டார்
எனது தவறினால்சுட்டதற்கான பலனை நான் அனுபவித்துவிட்டேன்
சுட்டதற்கான கூலியை அவர்
இன்னும் எனக்குத் தரவில்லை
ஆம், ஒரு கொலைகாரன்
புரட்சிக்காரனையும்
மகாத்மாவையும் உருவாக்குகிறான்
பின்னட்டையில் சொல்லப் பட்டிருப்பதைப்போன்ற ‘ஏமாற்றும் எளிமை’ கொண்டவை பெரும்பாலான கவிதைகள். குறிப்பாக இந்தக் கவிதை. எத்தனை எளிமைஎன் புன்னகைத்துக் கடந்து போனபின் எப்போதாவது இதே பக்கத்த்தைப் புரட்டும்போது திடுக்கிட்டுப்போகிறோம்,.
வரலாற்றின் எத்தனை வீரர்கள் எத்தனை தியாகிகள் எத்தனை புரட்சிக்காரர்கள் எத்தனை மகாத்மாக்கள்? எல்லாம் நமக்குத் தெரிந்த அவர்கள் பொது வாழ்க்கைவைத்துதானே? காந்தி சுடப்பட்டார், சுதந்திரத்திற்கு உண்ணாவிரதம் இருந்தார் என திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மகாத்மாவாக்கப்பட்டு எத்தனை மாதங்களாகிறது? எப்ப்போதாவது வரலாற்றில் கலந்திருக்க வாய்ப்பிருக்கும் பொய்களைப்பற்றி யோசித்திருக்கிறோமா?
என்னைப் பொறுத்தவரை கவிதை என்பது ஒரு துண்டு வாழ்க்கை. எழுதுபனின் வாழ்க்கையாகவோ அவனுக்குத் தெரிந்தவனின் தெரிந்தவளின் வாழ்க்கையாகவோ கேள்விப்பட்ட கதைகளின் வாழ்க்கையாகவோ இருக்கலாம். உயர் கவித்துவமோ, மொண்ணையாகவோ எளிமையாகவோ பிறழ்வுடனோ இருக்கலாம். எல்லாமே துண்டு வாழ்க்கை. எல்லா வாழ்க்கையும் ஒரு போதும் ஒன்றுபோல் இருக்காதில்லையா?
இயற்கை காதல் என ஒரே வட்டத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் ஆரம்ப நிலை கவிதைகளில் நிலைபெற்று, அடுத்த தளத்திற்கு போக விரும்பும் புதியவர்களுக்கு தைரியமாக இந்தத் தொகுப்பை சிபாரிசு செய்யலாம்.
கடைசி ஆசை
என்னவென்று கேட்டார்கள்
ஒரு முகம்பார்க்கும் கண்ணாடி
வேண்டும் என்றேன்
கொடுத்தார்கள்
பார்த்தேன்
அதில் என் முகம் இல்லைதூக்கிலிடும் போது
என் மூடப்பட்ட முகத்தில்
தெரிந்தது
உன் கொலைப்பட்ட முகம்
காந்தியைக் கொன்றது தவறுதான் – ரமேஷ் பிரேதன்
காலச்சுவடு பதிப்பகம் – ரூ.100
பிப் 24, 2011 @ 07:00:24
உங்கள் எழுத்து படிப்பதற்கான ஆர்வத்தை அதிகமாக்குகிறது..அருமை.