வழக்கமாகச் செய்வதுதான், மீண்டும் ஒருமுறை, வழக்கத்தை விடாமலிருக்கும் பொருட்டு. வழக்கமென தொடங்கப்பட்டவை ஒரு முறை அதன் குறித்த நாளைத் தவறினால் மீண்டும் அம்மனநிலைக்குத் திரும்பாத சோம்பேறித்தனம் வாய்த்திருக்கிறது. தினம் ஒன்றென எழுதத்தொடங்கிய இத்தளம் ஆகட்டும், அல்லது வாரம் ஒரு முறை எழுதத்தொடங்கிய இத்தொடர் ஆகட்டும், குறித்த நாளை ஒருமுறை தொடங்கியபின் மீண்டும் அங்கே திரும்ப முடிவதில்லை. அத்தொடர்களில் பல பதிவுகள் இன்னும் நிறையாமல் காத்திருக்கின்றன. அவ்வப்போது அந்த தளங்களை எதாவது நினைவூட்டலுக்காகத் திறக்கும்போது வருத்தமாக இருக்கிறது. எப்பொழுதாவது மீண்டும் எழுத முயற்சி செய்யும்போது இயலாமை முகத்திலறைகிறது மீண்டும் எப்பொழுதாவது வெளிவரும் என நண்பர்களுக்குச் சொல்லும்போது கழிவிரக்கம் எழுகிறது. அந்த நிலை இதற்கும் வரவேண்டாம் என்பது இவ்வருடம்வரை நிறைவேற்ற முடிந்திருக்கிறது. தொடர்ந்து பார்ப்போம்.
புதிதாக எதுவுமில்லை. முந்தைய தொகுப்பிற்குப்பிறகான அத்தனை பதிவுகளையும் ஒட்டுமொத்தமாகத் தொகுத்து நாட்குறிப்புகளைத் திரும்ப வாசிக்கும் மனநிலையன்றி இத்தொகுப்புகளுக்கு யாதொரு அர்த்தமும் இல்லை. ஒட்டுமொத்தமாக நோக்கும்போது சொல்வெளிப்பாடுகள் தொடர்ந்து மாறிவந்திருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி கொள்ள முடிகிறது. பல கவிதைகள் அந்தக்கணத்தைக் கடந்தபின் எந்த உணர்வையும் எனக்கே எழுப்பாதவையாக இருப்பதை உணர்ந்து நீக்கமுடிகிறது. ஒரு எளிய வாசகனாக, சில வரிகளை, சில வார்த்தைகளை நீக்கி செப்பனிட்டு, இனி இவை அதன் வடிவத்தை அடைந்துவிட்டன என ஆசுவாசம் கொள்ளமுடிகிறது. ஒருவேளை பிறிதொரு நாள் வாசிக்கும்போது மொத்த தொகுப்பையும் நிராரகரிக்கும் மன நிலைக்கும் வந்து சேரக்கூடும். பயணமின்றி சொல்லேது?
ஏன் மார்ச் 10 எனும் கேள்வி எப்பொழுதும் அந்தரங்கத்தைத் தொடுவது. இந்நாளில்தான் சொல்லின் கூர்மையை அறிந்துகொண்டேன் என நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஒரு சொல் எத்தனை தூரம் ஒருவரை உடைக்கும், எத்தனை ஆழமாக மன நிலைகளை மாற்றும், எத்தனை பொறுப்புடன் பொதுவில் எழுதுபவன் தன் சொற்களை தேர்ந்து உபயோகிக்கவேண்டும், எத்தனை அவமானத்துடன் நம் சொற்கள் நமக்கு திரும்பி வரக்கூடும் போன்ற சாத்தியங்களை அறிந்து கொண்ட நாள். சொற்களை பொதுவில் வைக்குமுன் எத்தனை கவனம் தேவை, சொற்களை நண்பர்களுடன் பகிரும்முன் நமக்குள் நமக்காக சொல்லிப்பார்த்துக்கொள்ளவேண்டும் உள்ளிட்ட பல பரிமாணங்களை அறிந்து கொண்ட நாள். இந்த நாளில்தான் எழுத்தாளனாக விரும்பும் நான், எத்தனை பெரிய சுமையை விரும்புகிறேன் என்பதை நானே அறிந்தேன். எனக்கே என்னை நினைவூட்டும் நாளெனவும் நீங்கள் கொள்ளலாம்.
ஏன் புத்தகமாக வெளியிடக்கூடாது எனும் கேள்விக்கு வெளியாகும் புத்தகங்களையும், அதன் முன்பின் நிகழும் ஆட்டங்களையும் மட்டுமே கை காட்டுவேன். நண்பர்களைச் சந்திக்கும்போது, நண்பர்களுடன் இருக்கும்போது ஒரு புத்தகம்வெளியிட்டவன் என சுட்டிக்காட்டப்படுவதை தயக்கமும் கூச்சமுமாக மறுக்கவே விரும்புவேன். ஆகவே, இனி நீங்கள் மசான பதியைச் சந்திக்கலாம்.
தரவிறக்க : https://drive.google.com/file/d/0ByFr3N63dPrbX3BLN0h1NnZIaWM/view?usp=sharing
வாசிக்க : https://issuu.com/lathamagan/docs/masanapathy
நீங்கா அன்புடன்
லதாமகன்
மறுமொழியொன்றை இடுங்கள்