அவள்

ஒருமுறை தன் கரங்களை விரித்துச்
சொன்னாள்
நந்தனா உன் சுதந்திரம்
என் கையில்
இல்லை என்று

இவள்
ஒருமுறை மடியிலிட்டுச் சொன்னாள்
நந்தனா
உன் மரணம் எனக்குப்பிறகுதான்
என்று

அவள்
மரணித்தாலும் உன்னைத் திரும்பிப்பார்க்க
என்னால் கூடாது
என்றாள்

இவள்
நந்தனா என்
மரணத்திற்கு முன்பாக அவளுடன்
நீ என்னிடம் வந்து ஆசிகள்
பெற வேண்டும் என்றாள்.

அவள் முதலில் இறந்தாள்
நான் தனியனானேன்

இவள் பிறகு இறந்தாள்
நான் அனாதையானேன்.

O

இரு பெண்கள்
அவர்கள் ஆசைப்பட்டபடி
அவர்கள் விரும்பிய கணத்திலேயே
அவர்கள் விரும்பிய
கனவுகளுக்கு நடுவிலேயே
அவர்கள் விரும்பிய படியே

மெல்ல தன் மூச்சை நிறுத்திக்கொள்கிறார்கள்.

ஒரு ஆண்
அங்கே காத்திருக்கிறான்
அவனுக்கு அடுத்த நிகழ்வு பற்றிய எண்ணமில்லை

அவனுக்கு கனவுகள் கலைந்துவிட்டன
அவன் குழப்பத்தில் இருக்கிறான்
அவன் கொல்வதற்கு தயாராக இருக்கிறான்

அவன் கவிஞனாகவும் இருக்கிறான்.

O

அவள் தானளிக்கும் சுதந்திரம்
உடலைக் கெடும்
போதைகளுக்குள் சென்று சேரக்கூடாது என்றாள்.

இவள் தானளிக்கும் சுதந்திரத்தில்
பிற பெண்களின்
உடலைத் தொடுவதிலிருந்து விலக்களித்தாள்

முதலில்
அவள் தன் தளைகளை அறுத்துவிட்டு
போய்சேர்ந்தாள்

அவன் தன் போதைகளைக்
கண்டறிந்தான்

பிறகு இவள்
தன் தளைகளை அறுத்துவிட்டு
போதக்காலமொன்றில் அவனை முத்தமிட்டாள்

பிறகு
அவன் தன் உடல்களைக் கண்டறிந்தான்.

கதை
இன்னும் முடியவில்ல்லை.