ஆற்றுப்பாலத்தின் மலர்கள்

பின்னூட்டமொன்றை இடுக

இதோ
காலுக்கு அருகிலிருக்கும்
இந்த ஆழங்களிலிருந்துதான் மேலேறி
வந்தேன்

இதோ
கைக்கெட்டும் தொலைவிலிருக்கும்
நீரின் ஓட்டத்திலிருந்துதான்
கைப்பிடித்து  வந்தேன்

சுழற்பாதைகளில்
கீழிறங்கும் மனிதர்கள்
மேலேறும் மனிதர்களுடன் சேர்ந்துதான்
கட்டிடமே சுற்றி வரும்
மயக்கத்தை உருவாக்கினார்கள்

ஆழங்கள் அழகானவை
மேலிருந்து பார்க்கும்போது.
மேலேயே இருக்கும்போது.

O

ஒருமுறை முயற்சி செய்யச் சொல்லித்தாம்
அந்த மலரைக் கொடுத்தார்

ஒரே ஒரு முறை
ஒரு நாளைக்கு ஒரு முறை
ஒவ்வொரு தேவைக்கும்
ஒரு முறை.

மலர் விதை இடுகிறது
விதை மரம் இடுகிறது
மரம் மீண்டும் மலர் இடுகிறது

இன்றைய காட்டில் மலர்கள்
மூட
நினைத்துக்கொள்கிறேன்

கழிவோடையின் கரையில்
வைத்து
என்னிடம் அளிக்கப்பட்ட முதல் மலரை.

O

உண்மையில்
அடுத்தவருக்கு ஆறுதல்சொல்வதென்பது திரும்பி வர
முடியாத ஒரு புதிர்பாதை.

ஆற்றுப்பாலத்தின் மேல் நின்று
படகுக்கு வழிசொல்லும்
தற்கொலைக்காரனின் குரல்

அத்தனை தொலைவிலும்
அத்தனை அருகிலும் நிற்கும்
அதே ஆறு

படகுகள் கடந்து சொல்லும்
குரல் நின்றுவிடும்
ஆறு அங்கையே இருக்கும்.
ஆற்றுப்பாலமும்.

பிறகு யாரோ ஒருவர்
அங்கே நின்று மலர்களை வீசி
மெளனம் செலுத்துவார்.

முன்பொருமுறை பெய்த மழை

பின்னூட்டமொன்றை இடுக

இப்படித்தான் ஒருமுறை
வெற்று நெற்றியாக இருந்தது
யாரோ திருநீறு வைத்தார்கள்

இப்படித்தான் முன்பொருமுறை
பனிக்கால ஜன்னலருகில்
தனித்திருந்தேன்
யாரோ புன்னகைத்தார்கள்

இப்படித்தான் ஒருமுறை
யார்கையையோ பிடித்து
தார்ச்சாலை ஓரத்தில் அமரவேண்டியிருந்தது
யாரோ தண்ணீர் கொடுத்தார்கள்

இதுவரை நடந்தவை
எல்லாமே ஏற்கனவே நடந்தவை

கொஞ்ச நாள் காத்திருக்கலாம் தவறில்லை
எப்போதும் நடக்காத
ஒன்றிற்காக

O

பொறிகள் மழையெனப்பொழியும்
காலத்திலிருந்து
நீண்ட உறக்கத்திற்கான பனிக்காலத்திற்கு
கரடிகள் மெல்ல
அசைந்தாடி வருகின்றன

மகரந்தங்களின் பரந்த நிலத்தில்
பனிமூடியிருக்கிறது.
ஒரு நாள் வெயில் வரும்
எப்பொழுதாவது மலர் வரும்
கண்டிப்பாக மழை வரும்

வாசலுக்கு வெளியே
மரணச்செய்திகளின் தபால்காரன்
காத்திருக்கிறான்

O

திடீரெனப் பெய்யும் மழையில்
குழந்தைகள் இந்த நிலத்தில்
வந்து இறங்கக்கூடும்

பாணன் தன் ஆயுதங்களைத் துடைத்து
பைத்தியக்காரனிடம்
அளித்துவிட்டு திரும்பி நடக்கிறான்

செய்திகள் அற்ற நிலம்
அங்கே இருக்கிறது
எங்கோ தொலைவில்.

அடுத்த தப்படியில் அடைந்துவிடும் தொலைவில்.

குமரித்துறைவி : மழையீரம் பூக்கும் மலர்

2 பின்னூட்டங்கள்

சேர்ந்தார்போல் நூறுவார்த்தைகள் எழுதி சில மாதங்களாவது இருக்கும். புத்தகத்தைப்பற்றி எழுதி பல வருடங்கள் ஆகியிருக்கும் என நினைக்கிறேன். எதோ ஒரு அலைக்கழிப்பு அல்லது விலக்கம் அல்லது மொழியின் மீது கூர்மையின்மை.

சில நீண்ட வருடங்களாக தடைபட்ட பயணமும் கையருகில் வந்து தட்டிப்போக டிசம்பரில் ஒரு நிலையற்ற கொந்தளிப்பில் இருந்தேன். தொழிலுக்குச் சம்பந்தமே  இல்லாத புதிய நிரல்மொழியொன்றைக் கற்று எழுதி அழித்துக்கொண்டிருந்தேன். வழக்கம்போல கரிபீயன் கடற்கொள்ளை திரைப்பட வரிசையை முழுவதுமாக பார்த்து வைத்தேன்.  ஜாக்கிசான் திரைப்படங்கள், Buddycop வகையறா நகைச்சுவைத் திரைப்படங்கள், கடைசியாக காலவரிசைப்படி முழுவதுமாக ஜாக்கிசான் திரைப்படங்கள்.  ஆனாலும் எதோ ஒரு வெற்றிடம் மிச்சமிருந்தது. செவிகளில் இடைவிடாது வந்துவிழும் இல்லாத கடலின் பேரிரைச்சல்.

எதோ ஒரு புள்ளியில் ஜெயமோகன் வலைத்தளத்தை நீண்ட நாட்களாக வாசிக்கவில்லை என நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட ஆண்டுகளாக. கடைசியாக புனைவுக்களியாட்டு சிறுகதை வெளியாகும் காலத்தில் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருந்தேன். வெண்முரசின் கண்ணி எங்கோ தொலைவில் அறுந்திருந்தது. நினைவு சரியானால், நீலம் தொடங்கப்பட்டதும்.  இடைவெளிக்கு பிறகு வெய்யோன், பன்னிருபடைக்களம் இரண்டும் தொடர்ச்சியாக வாசித்தது. அதன்பிறகு முழுக்க அறுந்த கண்ணி, புனைவுக்களியாட்டு வரிசையை மட்டும் முழுதும் வாசிக்க அமைந்தது.அதற்குப்பிறகு பூரண மவுனம்.  அவ்வப்போது தோன்றுவதுண்டு. முதற்கனலில் தொடங்கி முழுக்க வாசிக்கவேண்டும், அதைக்குறித்த விரிவான அல்லது கைக்கெட்டும் குறிப்புகளை எழுதிப்பார்ப்பதென்றும். நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமில்லை கதையே.

ஆக, மீண்டும் டிசம்பர் மத்திய வாரங்களில் ஜெயமோகன் வலைத்தளம். நவம்பர்-31ல் தொடங்கி பின்னோக்கி வாசித்துக்கொண்டிருந்தேன். கதைகள், கட்டுரைகள், கடிதங்கள். எண்ணவேகத்தில் எழுதமுடியாது, எழுதும் வேகத்தில் பேசமுடியாது எனும் பிரபல சொல் ஜெயமோகன் வலைத்தளத்தை வாசிக்கும்போதெல்லாம் நினைத்து புன்னகைக்க வைப்பது. எண்ண வேகத்தில் எழுத வாய்க்கப்பெற்ற ஒரு இயற்கை வரம்.

ஏப்ரல்-22, அவரது பிறந்த நாளன்று வெளியிட்டிருக்கிறார். பின்குறிப்பில் கொந்தளிப்பான மனநிலை குறித்தும், முன்னரே எழுதப்பட்ட குறு நாவல் அந்த நாளுடன் தொடர்புபடுத்திக் காரணமின்றி கொள்வதைப்பற்றியும் குறிப்புகள் வருகின்றன.  கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு, மறு ஆண்டின் ஜனவரி 25ல் அதைக் கையில் வைத்திருக்கிறேன். கிட்டத்தட்ட ஒப்புநோக்கும் ஒருவித மனநிலையில்.  இறுதி பகுதில் வரும் 
“களவாணிச்சிறுக்கி நம்மகிட்டே விளையாடியிருக்காடா… குறும்பியா இருந்தாலும் கனிவுள்ளவளாக்கும்டே” வரிகளுக்கு செண்பகராமன் போல நிலமறைந்து சிரிக்கும் மன நிலை எழுந்தது.

திருநெல்வேலி, மதுரை , நாகர்கோயில் எனக்கு பால்யத்துடன் தொடர்புகொண்ட நிலங்கள். திரும்பும் திசையெல்லாம் பெண்தெய்வங்கள். இசக்கி, பேச்சி, உச்சினிமாகாளி, மாரி, முப்புடாதி. இவர்களை முழுங்கிச்சிரிக்கும் நெகிழித்தாளில் திடீரென கடந்த இருபதாண்டுகளில்  முளைத்திருக்கும், அல்லது புதிய பெயர் சூட்டப்பட்டிருக்கும் ஸ்ரீலஸ்ரீ அருள்மிகு அம்பாள்கள். டவுசர்களை இழுத்துக்கொண்டு ஆள்காட்டி விரல் பிடித்து நடந்த காலம் முதல் மடித்துக்கட்டிய வேட்டியை தழைய விட்டு ஏசிக்காற்று முகத்திலறைய உள் நுழையும் , நோய்தொற்றுக்கு முந்தைய வருடாந்திர விடுமுறை நாட்கள் வரை அதே வண்ணத்தில் நிறைந்திருப்பவை, திருச்செந்தூர் முருகனும், குமரி அம்மனும் எனத்தோன்றுகிறது. இவர்களிடம் பக்தி குறித்த எதிர்பார்ப்பில்லை என்பது போன்ற ஒரு சகஜ நிலையில் இன்றும் இருக்க முடிகிறது.

முன்னெப்போதோ பாவாடைச்சட்டை அலங்காரத்தில் கன்னியாக்குமரி கோயிலில் மூக்குத்தி ஒளியில் குமரியன்னையைப் பார்த்து பள்ளிசெல்லும் சக சிறுமி என்றெண்ணிக்கொண்ட அதே பாவனைகள் இன்றும் அங்கே கிடைக்கின்றன.

பின்னட்டைக்குறிப்புகளை, பாராட்டுக்குறிப்புகளக் முதலில் வாசித்துவிட்டு புத்தகங்களைப் படிப்பது ஒரு அழகிய விளையாட்டு. நூறு சதவீத நகைச்சுவைக்கு சாத்தியமுள்ள விளையாட்டு.  குமரித்துறைவியின் பின்னொட்டுக்குறிப்பு, இது முழுக்க மங்கலம், மங்கலமன்றி வேறில்லை என்கிறது. சரி. முழு நகைச்சுவையாகத்தாகத்தான் இருந்தாகவேண்டும் இல்லையா?  சிறு பிழையின்றி, சிறு அமங்கலமின்றி, எதிர்சொல் ஒன்று எங்கும் அமையால் ஒரு படைப்பு நிறைவுருமா என்பது போன்ற கேள்விகள்.  குறைக்காகக் காத்திருக்கும் அல்லது அதைத் தேடி உள்நுழையும் ராயசத்தின், திவானின் நிலை எனத்தோன்றுகிறது.

கடிதமொன்றில் ஜெயமோகனே சொல்லியிருப்பது போல, “கதைகள் வாசிப்பவனுக்கு எதையும் சொல்வதில்லை, அவனது அகத்தில் ஏற்கனவே இருக்கும் அனுபவப்புள்ளிகளைத் தீண்டுகின்றன” என்பது எத்தனை மெய்.  எங்கெங்கோ தீண்டிச்செல்லும் நினைவுகள். முதல் பாகத்தில் செண்பகராமனின் குடிவழிக்குறிப்புகளில் தாண்டித்தாண்டி சென்று கொண்டிருந்தேன்.  பழைய ஏற்பாட்டு ஆதியாகமகத்தில் வரும் அவன் இவனுக்குப்பிறந்தான் எழு நூறு வருடம் வாழ்ந்து இவனைப்பெற்றான் வரிசை சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்தது.  நிகழ்வுக்கு முந்தைய போர்களைப் பற்றிய வரலாற்று மயக்கு புனைவு பகுதியும் அவ்வாறே. ஆனாலும் இருகாந்தங்களின் ஒரே துருவம் போல ஈர்த்தலும் விலக்கமும் ஒருங்கே நிகழும் ஒரு மாயம்.

அம்மை ஆரல்வாய்மொழிக்கு வந்துசேரும் கதையை செண்பகராமன் சொல்லத்தொடங்கியதுமே முழுக்க கதைக்குள் வந்துவிட்டேன் எனத்தோன்றுகிறது. கொண்டையத்தேவன் பல்லக்குத்திரைக்குப் பின்னால் கண்ட கிளி கொண்ட கரிச்சிறுமி இடத்தில் முதல் துணுக்குறல். சிறுமி பாதம் பணியும் தருணத்திலிருந்து அலையென முட்டிமோதி அதே இரவில் முடித்து, என்னையே கொஞ்சம் தொகுத்துக்கொண்டபோது, இதைப்பற்றி எழுதினால் மட்டுமே வெளியேற முடியும் எனத்தோன்றியது.

ஈர்க்கப்பட்ட புனைகதைகளுக்குள் நாம் என்னவாக நம்மை அடையாளம் கண்டுக்கொள்கிறோம் என்பதில் மிகப்பெரிய கூட்டு நனவிலி வேலை செய்கிறது என நம்புகிறேன். குமரித்துறைவி முழுவதும் பல பாத்திரங்களாக பொருத்திக்கொண்டேன் எனத்தோன்றுகிறது.  நம்பூதிரி “மகளாக வந்தவள் மங்கலமாக வீட்டைவிட்டுப்போகும் ஒரே  நாள்” எனச் சொல் எடுக்கும்போது செண்பகராமன் உணரும் திடுக்கிடல் ஒரு மூத்த தமையனுடையது. நினைகாலமெல்லாம் தெரிந்திருந்தாலும் அருகில் வரும்போது அர்த்தமற்ற பதட்டம் கொள்ளும் பொறுப்பான தமையன். முன்னதாக உள்ளீடற்ற காரணங்களைச் சொல்லி தமக்கையைப் பிரிதலை தள்ளிப்போடும் முதிரா இளைஞன். எல்லாம் துலங்கும்போதும், அடிவயிற்றில் சுரக்கும் பெயரற்ற அமிலம்.

“பித்தன் பேய்ச்சியை மணந்த ஊர், அரண்வாய்மொழி” எனும் வரியில் துணுக்குற்று நிறுத்திவிட்டு என்னைத் தொகுத்துக்கொள்ளவேண்டியிருந்தது. எழுதத்தொடங்கி அந்தரந்தில் நிற்கும் ரிபு நாவலில் கெளரிக்கு அளிக்கப்பட்ட ஊர் இது. கிட்டத்தட்ட இந்த வரியை  நான் பல ஆண்டுகளா விரித்தெடுக்க விரும்பும், முயற்சி செய்யும்  நாவலின் கதைச் சுருக்கம் எனலாம். கூடவே கொன்றை மரங்கள். சரக்கொன்றை மலர் தூவ ரயில் நிலைய இருக்கைகளில் பேசிக்கொண்டிருக்கும் சித்திரமொன்று இருக்கிறது. மகளாக, தங்கையாக, தோழியாக, அன்னையாக குமரியை பாத்திரங்கள் காணும்போதெல்லாம் நானும் உடன் காண்கிறேன். திருக்கல்யாண நிகழ்வுகளில் வல்லப கணபதி குறும்புகளில் குறும்புச் சிறுவனை மட்டுமே காணமுடிகிறது. சுந்தரேசரை பல்லாக்கில் ஆராட்டி மண்டபத்துள் கொண்டுவருகையில் ஒரே நேரத்தில், அதை அங்கே  சுமப்பவனாகவும்,  பால்யத்தில்  திருவிழா பார்க்கும் சிறுவனாகவும் , இதே ஆராட்டின் தற்கால நிகழ்வில், கூரிய எதிர் கருத்துக்கள் நண்பர்களுடன் பகிர்ந்த முதிர்ந்த இளைஞனாகவும் பல புள்ளிகளை தொட்டுத்தொட்டுச் செல்கிறேன்.

தொடக்கம் முதலே பூரண மங்கலம். அத்தனை அமங்கல வாய்ப்புகளிலும் , மழைக்கால வெக்கையின் குளிர்க்காற்றென பூத்து வரும் ஒரு சொற்றொடர். மதுரையிலிருந்து வரும் திருமுகத்தில், பேரரசனின் சீண்டும் சொல்லை நோக்கிச் சென்று, பூத்து மலரும் அரசியின் அன்பான வேண்டுகோள். பொய் சொல்ல வாய்ப்பிருக்கும் அரசனிடம் ஒரு மறுப்புச் சொல்.  திரித்துச் சொல்ல வாய்ப்பிருக்கும் கணியனுக்கு ஒரு எதிர்ச்சொல்.  

நம்பூதிரியிடம் தமக்கு வசதியான ஒரு சொல்லைப்பெற செண்பகராமன் செல்லும்போது,
“அஸ்வத்தாம ஹத: குஞ்சரக” வின் வெண்முரசுச் சொல் “இறந்தான் அஸ்வத்தாமன் எனும் யானை” நினைவுக்கு வந்தது. ஆனால் மனம் நிறைந்தவன் கைபிடித்துச் செல்லும் மகள் கொடுக்கும் மங்களம் எனப்பொருள்படும் உரையாடலில், உடல் சிலிர்ந்து நெஞ்சம் நிறைந்து விம்மக்கூடியது.  ஒவ்வொரு எதிர்ச்சொல்லுக்கும் ஒரு எதிர்ச்சொல் விழுந்து நேராக்கிக்கொண்டே செல்கிறது.

கடைசிவரையிலும் ஒரு எதிர் நிகழ்வை ஆளுள்ளம் எதிர்ப்பார்த்துக்கொண்டே இருந்தது எனத்தோன்றுகிறது. கள்ளழகர் திருவிழாவில் நிகழ்வது போல, ஒரு பானை காணாமலாவது. அல்லது புனைவின் சாத்தியங்களில் ஒரு யானை மதம் கொண்டு பாகனை உடல்முறிப்பது. அல்லது ஒரு இடறல்.  செண்பகாரமன் சங்கறுக்கும் சூளுரைக்கும்போது உண்மையிலேயே அதைவிரும்பினேன் என நினைக்கிறேன். மங்கல பலி.  முழுமங்கல நிகழ்வின் ஒரு குருதித்துளி. அரசன் காணாமல் ஆகும்போது ஒரு வயோதிக மரணம். வடக்குவாசல் செல்வியம்மன் கோயில் பலிபீடத்தில்  வெறுமை பீடித்த ஒரு தலை.

இல்லை இல்லையென மறுத்து பூத்துச் செல்கிறது நிறைவுகளின் மலர். இறுதியாக நிகழ்கிறது ஒரு தடுக்கல். பிழை. திவான் வந்து நகையாடவேண்டும், தளவாய் இழித்துரைக்கவேண்டும் என வேண்டுகிறது ஆழுள்ளம்.  மன்னிப்புக்கோருகிறார் திவான். பின்கதையொன்று வெட்டி வருகிறது. கணக்கை நேர்செய்கிறது. மழையீரத்தின் மலர் பூத்து மலர்கிறது மீண்டும்.

பூத்து பூத்து நெஞ்சு நிறைந்து மகிழ்வில் கண்ணில் நீர் கோர்த்து நாளாயிற்று எனத்தோன்கிறது. அல்லது வருடங்கள். அத்தனை கொந்தளிப்பும் அலைக்கழிப்பும் வெறுமையும் நீங்கி குளிர்க்காற்றில் தூரத்து மலைமுகடுகளை அதிகாலையில் பார்த்து நிற்கும் மனநிலை.  தரைதட்டிப்போன குறிப்புகளைத் தூசுதட்டலாம், ரிபுவை எழுதத்தொடரலாம், எதுவும் அமையாவிடில் வெண்முரசையாவது வாசித்து முடிக்கலாம்

சவப்பெட்டியின் ஆயிரம் திரைச்சீலைகள்

பின்னூட்டமொன்றை இடுக

உங்கள் துயரங்கள்
கோப்பையின்
நீர் போல
ஆழத்திற்குச் செல்வதாயிருக்க
உங்கள்
கோப்பைகளின் அளவுகள்
விரிவடைய வேண்டியிருக்கிறது

சிறிய கூண்டின்
சிறிய கம்பிகள்
வழியாக வெளியேற
முகமூடிகளை உரிதல்
நம்மைக் கொஞ்சம் எடையிழக்கச் செய்யக்கூடும்

பறப்பதற்கு பெரிய சிறகுகளை
விட
முக்கியம்
உங்களிடம் இருக்கும் சிறிய
இறகுகள்தான் என்பதை
நம்புவதில் என்ன கடினம்?

o

அலையும் ஆத்மாக்களின் மரணம்
குரூர நிம்மதியைத்
தருகிறது என்பதை
மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுவேன்

அம்புகள் குறிபார்க்கும்
வானத்தில்
அலைந்து திரியும்
பறவைகள்
நமது
வசதியான இருக்கைகளிலிருந்து
பார்க்கும்போது
அழகாகத்தான் இருக்கும்

பாதங்களை
நகர்த்தினால் 
தட்டுப்படக்கூடும்
மங்கலான குருதியில் நிற்பவர்களின்

கைதட்டலுக்காக
எவ்வளவுதான் சொடுக்குவான்
தெருக்கலைஞன்
தன் சாட்டையை?

o

இதுவரை ஏற்றுக்கொள்ளமுடியாத
அறிவுரைகளை
யாருமே சொன்னதில்லை

மூளையின் அடியாழத்திலிருந்து
பூத்து வரும்
பனியில்
நனைந்த மலரின் பரிசுத்தம்

கழுவப்பட்ட சிசுவின் செம்பாதத்தின்
வாசனை

தொடுவதற்கு மிருதுவான பட்டுத்துணியின் திரைச்சீலை

ஒரே ஒரு பிரச்சினை

வீடெங்கும் திரைச்சீலைகள்
அறையெங்கும் திரைச்சீலைகள்
சவப்பெட்டிகளில்
மரியாதை நிமித்தம்
மடித்து வைக்க
ஆயிரம் ஆயிரம் திரைச்சீலைகள்

ஒருபோதும் உடையாத குமிழிகள்

பின்னூட்டமொன்றை இடுக

திரும்பும்பாதையில்
எதிர்ப்படும் மரங்களைக்

கொத்திச்செல்லும் பறவை

அல்லது

புத்துணர்ச்சி முகாமிலிருந்து
திரும்பி வந்த
யானையின்
துதிக்கை நுனி
துழாவும் தார்ச்சாலை

அல்லது

மூச்சடக்கப்பட்டதுபோல்
நின்றுபோகும்
மேல்வீட்டுக்காரியின் அழுகுரல்

அல்லது

எல்லாம் சுகம். 
இனியொன்றுமில்லை எனும் சொற்களுக்கிடையேயான
இடைவெளி.

O

பழையகணக்குகளின் தீ சுடர்விடும்
கண்களை
மரணப்படுக்கைக்கு அருகிலமர்ந்து
பார்த்துக்கொண்டிருக்கும் 
மாலைகளில் 
மழை சத்தமில்லாமல் பெய்கிறது.

வருகிறவர்களின் எல்லாருக்கும் கொடுப்பதற்கு
எதையாவது தயார் செய்யச்சொல்லி
அவள்
என்னைப்பணித்துக்கொண்டேயிருக்கிறாள்

திடீரென இருள் கவிகிறது
ஏகப்பட்ட பெருமூச்சுகள்

சிலர்மட்டும்
நினைத்து நினைத்து தேம்ப விதிக்கப்பட்டவர்களாக
பணிக்குத்திரும்புகிறார்கள்.

O

சோப்புக்குமிழிகள் காற்றெங்கும்
பறக்கும் 
ஒரு பின்மதியத்தில்

நீரில்
இறங்கும்
குமிழி மட்டும் 
உடையாமல் நீண்ட நேரத்திற்கு ஆடிக்கொண்டிருக்கிறது

உடையாமல் காத்திருக்கும் குமிழிகளின் பதட்டம் 

நீயும் அறிவாய்தானே?

O

ரிங்மாஸ்டர்களின் யானை

பின்னூட்டமொன்றை இடுக

இன்றே இப்படம் கடைசி
போஸ்டர் ஒட்டப்படாத
சுழல்களுக்குள்
மீண்டும் மீண்டும் போய் நிற்கும்
நமது
தவ்ளூண்டு மனசை
எரி கொள்க

நீ எனக்கு பொருட்டே
இல்லை
என
மீண்டும் மீண்டும் சொல்லப்படும்
காலடிகளில் தாள் பணியும்
நமது
தவ்ளூண்டு கரங்களை
எரி கொள்க

ஒற்றைக்கால் யானைகளின்
வால் நுனியினும் சிறிய
ரிங் மாஸ்டர்களின்
தவ்ளூண்டு சாட்டைகளை
யானைகளே கொள்க.

O

முன்னூறு முறை மறுதலிக்கப்பட்டபின்
முதல்முறையாக
உங்களை விரும்புவதாக
சொல்லும்
குரல் அளிப்பது
காதலை
அல்ல
புதிய பதட்டத்தை

காத்திருக்கிறோம்
முன்னூற்றி ஓராவது முறையாக
மறுதலிக்கப்படுவதற்கு

இவர்கள்
ஒருபோதும் ஏமாற்றுவதேயில்லை.

O

ரகசிய யானைகளை இவர்கள்
பழக்கிக்கொண்டிருக்கிறார்கள்
படுக்கைக்குக் கீழே

துதிக்கைகள் மீது
தலையணைகள்
அடுக்கப்பட்டிருக்கின்றன
வாலின் மீது சிறுபோர்வை
முதுகில் அம்பாரியென
ஒரு
காபிக்கோப்பை

கண்திறக்க அஞ்சும் ஆனைகள்
ஒரு நாள்
பிளிறியபிறகு

அவை அறிவது
அம்பாரிகளின்
வெற்றிடத்தை

இனி துதிக்கைகளும்
வால் நுனிகளும்
அம்பாரி இறங்காது

என்பதை
ரிங் மாஸ்டர்கள் அறியப்போவதேயில்லை

நூற்றாண்டுகளுக்கும் பெய்யும் மழை

பின்னூட்டமொன்றை இடுக

ஒரு யானையை
நீங்கள் புகைபோட்டு பிடித்துவிடமுடியும்
என்பது
நீங்கள் நம்ப முடியாத  ஒரு ரகசியம்

அன்புக்கு தாழ் பணியும்
ஓநாய்களுக்கு
கொஞ்சம் சதை

மலை மீது ஆடும் சிறுமலருக்கு
ஒரு துளி நீர்

அல்லது

எல்லாருக்கும் அன்பளிப்பாக
ஒரு
கடைசி நம்பிக்கை

O

கடைசியாக ஒருமுறை
மழை பொழிகிறது
நீண்ட வருடங்களுக்குப்பிறகு

சில முத்தங்கள்
சில புகைப்படங்கள்
சில பழைய டைரிக்குறிப்புகள்

அனந்தா
உன்னை நான் முத்தமிடத்தான் விரும்பினேன்

ஆனால் இன்று
நீ இறக்கலாம் தவறில்லை

மழை நின்றுவிட்டது.
அனந்தன் நின்று கொண்டிருக்கிறான்
மழை விட்டபிறகு
சொட்டச்சொட்ட நனைந்தபடி

காயும் வரைக்கும்.
பலகோடி நூற்றாண்டுகளாய்
காயாத ஆடைகளுடன்

O

அறிபுனைகளின் பின்னால்
ஓடுகிறவர்களின் கதை
ஒன்று

ஒரு நாள் அவர்கள் கற்றுக்கொண்டார்கள்
எல்லா காலங்களையும்
மாற்றி எழுதமுடியுமென

எல்லா கண்ணீரும் மீண்டும் கண்களுக்குள்
புகுந்து கொள்ளும்
அவர்கள் திரும்பிப்போகமுடியும்
திருத்தி எழுதமுடியும்
மீண்டும் இழந்த
நாட்களை வாழமுடியும்
ஒருமுறை

இதுவரை நடந்ததெல்லாம்
அத்தனைபேரின் நினைவிலிருந்தும்
அழிந்துபோகும்.

ஒரு
பெருத்த நியாயம்

பயணத்தில் இருந்தவர்கள்
அத்தனை
நேரக்கோடுகளையும் நினைவில் வைத்திருக்கவேண்டும்

இந்த நியாயம்தான் அத்தனை
நேரக்கோடுகளையும்
பற்றவைக்கிறது

இல்லையா?

அலறும் குரல்களின் கதை

பின்னூட்டமொன்றை இடுக

ஒரு முத்தத்தைக் கடத்துவதற்கு
எவ்வளவு பிரயாசைப்படவேண்டியிருக்கிறது

உடல் எத்தனை
வெறுப்புடன் உன்னை நோக்கி
எறியப்படுகிறது

இந்த முகம்தான்
உன்னை
பழக்கப்பட்ட இடங்களிலிருந்து
விரட்டியது

இந்த முத்தம்தான் உன்னை
பழக்கமில்லாத இடங்களில்
அமர்ந்து
அழச் செய்தது

இந்தக்கரம்தான் உன்னை மறுதலித்து புன்னகைத்தது

திரும்பிச்செல்லும் பாதைகளில்தான்
எத்தனை பழைய முற்கள் காத்திருக்கின்றன
அறிவாயா தோழி?

O

அதே வேலையிலிருந்துதான் அவன்
தெறித்து ஓடியிருக்கிறான்

அதே காதலைத்தான் அவள்
கண்ணீருடன் நினைவு கூர்கிறாள்

அதே காட்டிற்குள்தான்
அவன் இன்னும்
நடந்துகொண்டிருக்கிறான்

ஒரு கோப்பை தேனீரில்
எல்லாம் மாறும்
சினிமாக்கள்
இப்பொழுதுதெல்லாம் திரைக்குக்கூட
வருவதில்லை தோழி

O

சிறுபிள்ளையின்
விளையாட்டில்
புண்பட்டு
மாரில் அடித்துக்கொண்டு கதறும்
இன்னொரு சிறுமி

தோத்துட்டே இருக்கேன்மா என சின்னவிசயத்தில்
புண்பட்ட சிறுவனின் குரல்

மறுபடியும் தோத்துட்டேன் எனும்
ஒரு பெண்மணியின்
குரல்

கதறல்களின் இரைச்சல் தாங்கமுடியாததாக
இருக்கிறது

குறிப்பாக சுவற்றில் பட்டு அறையெங்கும்
எதிரொலிக்கும்போது

குறிப்பாக சுவற்றிற்கு அந்தபக்கமும் இன்னொருவன் குரலற்று அமர்ந்திருக்கும்போது.

ரிபு – 6

பின்னூட்டமொன்றை இடுக

பறையன் காட்டில் முதற்காலடி வைக்கும்போது இருள் தொடங்கியிருந்தது. நெல்லரியில் எறியப்பட்ட சரல்களேன காடு கூடடையும் பறவைகளில் அதிர்ந்து கொண்டிருந்தது. இல்லாத பறையை காற்றில் அறைந்து கொண்டிருந்தன விரல்கள். ஒவ்வொரு அதிர்வுக்கும் காடு நகர்ந்து மீண்டெழுந்தது. காட்டின் அதிர்வினை இறுக்கும் கயிற்றினைத் தேடி பறையன் கண்கள் அலைபாய்ந்தன. காடே பெரும் இசையக்கருவியென ஆடிக்கொண்டிருந்தது. சிறு செடிகள் அசைந்துஅருகமைந்த பெருமரங்களை அறைந்தன. பெருமரங்கள் அசைந்து இருளை அறைந்தது. இருள் பறவைகளை அறைந்து கூடுகளுக்குத் திருப்பியது. ஒலியின் வழியாகவே கூட்டினை அறியும் பறவைகள் தன் குஞ்சுகளை சொற்களால் தேடி அடைந்தன.

சருகுகள் உரசும் ஒலியும் இலைகள் உரசும் ஒலியும் ஒத்திசைவுடன் பேரிசையை உருவாக்குவதாக தனக்குள் நிறைந்தான். பழுத்த இலைகளை பாதம் கூசி ஒலி நிரப்பினான். மழைவண்டுகள் ரீங்காரம் அதிர்வுகளின் பெருங்கடலில் ஒற்றைக் கம்பிகொண்டு கட்டுவதான சித்திரம் தோன்றியது. கனவில் எழுந்த அதிர்வென இசைக்குறிப்புகள் உள்ளெ எழுந்து உடனே மறைந்தன.

நிகழ்தலின் கணத்திலும் நினைவின் கணத்திலும் ஒருங்கே நின்றிருந்தான். கால்கள் முன்பின்னாக ஆடலை நிகழ்த்தியபடியிருந்தன. இடக்கை காற்றின் பறையை ஏந்தியிருந்தது. வலக்கை நிறைந்த காற்றில் அறைந்தபடி இருந்தது. அதிர்வுகளை உடலே பழக்கத்தினால் அறிந்து அதிர்ந்துகொண்டிருந்தது. அடுத்து அடுத்து என விரல்கள் முன்சென்றன. பாதங்களில் தாளம் எழுந்தது. ஒற்றை ஒலிகளால் ஆன பெரும் இசை நிகழ்வென காடு அசைந்து கொண்டிருப்பதைக் கண்டான்.

சுவடுகளின் இடைவெளிகள் இசையின் ஒருங்கு கொண்டிருந்தன. வீசும் கைகளில் சிக்கும் இலைகளில் வெளிப்பறையின் தாளம் கண்டு அறைந்தபடி முன்சென்றான். பாதையெங்கும் சென்ற தடங்கள் முறிந்த கிளைகளாலும் உதிர்ந்த இலைகளாலும் விரிந்தது. உடலதிர்வு நடையைச் சோர்வுகொள்ளும் f தருணமெங்கும் காய்ந்து உடைந்து உளுத்து வீழ்ந்திருந்த தண்டுகளை அறைந்து பொடிசெய்தபடி நின்றிருந்தான். விலங்குத்தோலில் அறைந்து வறண்டிருந்த உள்ளங்கைகள் உழுத்த மரங்களின் தும்பு நிறம் கொண்டன. மரங்களை அறைவதற்கும் தும்புகளை கையிலிருந்து தட்டுவதற்கும் சீரான இடைவெளி இருந்தது. இடைவெளிகளில் தடாரி இசை கொண்டது. கைகள் சலிக்கும்போது பாதங்களாலும் பாதங்கள் சலிக்கும்போது கைகளாலும் அளந்தபடி காட்டின் உள்ளே உள்ளெ என்றறிந்தபடி சென்றுகொண்டிருந்தான். உதிர்மலர்கள் அறைந்த நீர்ப்பாதைகளின் இசைவில் குரவையிருந்தது.

இசையற்ற இசைவளிகளில் பாடல்களை பறையண் கண்டான். அதிரும் பறையில் எழுந்துவரும் பாடலை உடல் வருடும் அனலென உள்ளுக்குள் கேட்டான். நாப்பழக்கமற்ற காப்பியங்கள் சொற்களால எழாமல் இசையாகவே எழுந்தது. இல்லாத பறையறையும் ஒலிகளை நாவில் எழுப்பியபடியே முன்னகர்ந்தான். இடைவெளி விழும் கணங்களில் காடு அவன் காப்பியங்களை பறவைச்சிறகடிப்பில் மூங்கிலுரசும் மரகுகைகளில் கரைமோதும் நதியலைகளில் நீட்டிச்சென்றது. பாதம் இடறும் புள் கடித்த பழங்களை மரங்களை நோக்கி எறிந்தான். மரங்கள் பிற மரங்களை இலையுரசி இலையுரசி செய்தியனுப்ப வழிகாத்திருந்த மரங்கள் மறுசொல்லென மலர்களை அவன் மீது எறிந்தன. நகரும் விதையென காட்டினுள் அலைந்தபடி இருந்தவனை பாதங்களின் ஆடல் தரையொட்டி இணைத்திருந்தது.

சுழித்தோடும் சிற்றோடைகளில் கால் வீசி நடனம் கொண்டான். எதிர்த்தோடும் சுழிப்புகள் பதிலுக்கு நீரறைந்து வாழ்த்தின. சிறு சீண்டல்களில் வலித்து முகம் சுழித்து பின் மீண்டு புன்னகைக்கும் மகவென காடு இருந்தது. மகவின் ஒலியில் இசையறியும் அன்னையென இணைந்துகொண்டான். நண்பகல் மழை சகதியென காயாமல் கலந்து பாதங்களில் படிந்தது. உதறலில் கணமெங்கும் இசையைக் கண்டறிந்தான். உடல் சலித்து மரங்களில் அமர்ந்தபோதும் காடு அவனை ஒலியெழுப்பி அழைத்தது. சோர்வுற்ற மனத்தினை மலரெறிந்து உரசியது. கனிந்த பழங்கள் தலைவிழுந்து உடையாமல் நிலம் அடைந்தன. கனிகளை உறிஞ்சிச் சுவைத்தபின் விதைகளை சிற்றோடைகளில் எறிந்தான்.

தூரத்து பேரருவியின் இசை எல்லா திசைகளிலிருந்தும் எதிரொலிப்பதை உணர்ந்தான். உள நோக்கு குரல் தேறி தேடி அலைந்தும் பேரருவி தன் கண்மறை ஆட்டத்தை ஆடுவதாக இருந்தது. தொடுவான மயக்கென நீரோசை எங்கோ தூரத்தில் எழுந்தது. பாதை தேர்ந்து இசையெழுப்பி சலிப்புற நடந்தபின் அதே அருவி எதிர்திசையிலிருந்து ஒலியெழுப்பியது. கனவுக்குள் அலைபவனென மீண்டும் மீண்டும் வந்த இடத்திற்கே திரும்பத்திரும்ப வருவதாக உணர்ந்தான். ஆனாலும் சிறு மலர்கள், புதிய மரங்கள், தளிர் இலைகள் இல்லை நாங்கள் அன்னியர்கள் என்றன. ஏற்கனவே வந்த பாதையில் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டேயிருந்தான். பேரருவி அல்லது அழிமுக சுழல் அல்லது விசைகொண்டோடும் ஒரு நதியை அடைந்தால் அதன் ஊற்றுக்கண் தேறி அடையலாம் என அலைந்து உடல்மனம் சலித்தான்.

இருள் காட்டினை முழுதாக மூடும்முன்னதாக காடு கண்களுக்கு பழகியிருந்தது. பழகிய காடு வளர்ப்புப்பிராணியென நெகிழ்ந்து வழிவிட்டு குழைந்து முகம் பார்த்தது. நகரும் முன்னாத அடுத்த காலடியில் அருகணையும் சருகுகளை பசுந்தளிரென உடலில் அறிந்தான். பேரிசையின் அடுத்த அடிக்கென காத்திருக்கும் தண்டங்களை உளுத்த மரங்களை விரல் அறிந்திருந்தது. பாதவிரல் தொடும் கனிகள் இன்னதென அகம் உணர்ந்தது.அதிர்வின் இடைவெளிகளில் இசையின் பரிமாணங்கள் உருவாகிவருகின்றன. தூரத்து நதி ஒரு கனவில் எழுந்த ஒலியென எண் திசைகளிலும் எதிரொலிக்கிறது. பெருவீழ்வின் அருவி, பேராற்றலின் நதியை உருவாக்குகிறது. பாறைகளால் வழிகாட்டப்பட்ட நதி வழித்துணைக்கு அப்பாறையினையே இசையெழ உருட்டிச் செல்கிறது. பறையன் தன் காலடி சிறு கற்களை அப்படியே உருட்டியபடி இருந்தான். கூழாங்கற்கள் நதியின் பாதையை அறிந்தவை. நதியிலிருந்து பெருங்காட்டின் நடுப்பாதைக்கு வழிதவறி வந்துவிட்டவை. இவற்றை அதிரச் செய்வதன் மூலம் எங்கிருந்தோ இணையென நதி இசையெழுப்புவதை அறியக்கூடும். இவற்றை எறிதலின் மூலம் நதியின் பாதையில் காற்று இச்சிறுகற்களை கொண்டு செல்லக்கூடும். கனவிலிருந்து எழும் இசை மறு கனவில் தொடர்வதைப்போல.

வெறுங்கை அளையும் காற்று பறையின்மையின் சுமைகொண்டு கைஇணைப்புகளில் உளைச்சல் தந்தது. இன்மையின் வலி இருத்தலில் பெரிதாக வளர்ந்துகொண்டே செல்வதை பறையன் கண்டான். உளுத்தமரங்களின் உட்பாகங்களை உரித்தெடுத்து இலைகளால் கட்டி மெல்ல விரல்தட்டி ஓசை எழுப்பினான். அதிர்வற்று நீர் அளையும் கல்லென ஓசை கொண்டு மயங்கியது. பின் இலைகள் பொதிந்து உள்மடிந்தன. பருத்த தண்டங்களைக் குடைந்து பேரரச இலைகள் தைத்துக் கட்டினான். தோலறையும் பறையன்றி இலையறையும் பறை ஓசையின்றி உள்ளே அடங்கியபடி இருந்தது.

ஒரு கணு விட்டு மூன்றாம் கணுவில் மூங்கில் தண்டமொன்றை உடைத்தான். இருபுறம் துளையிட்டு சக்கைகளை ஊதி வெளியேற்றினான். பறவையின் இறகுகளை உள்ளடைத்துப் பொதிந்தான். நாகத் தோல் போர்த்தி துளைகளைக் கற்றதிரக் கட்டினான். ஆனாலும் விரல்களுக்குப் போதவில்லை. பேரதிர்வின் கரங்கள் உள்ளங்களை கொண்டு அறைய அச்சிறுகுழல் போதுமானதாய் இல்லை. இருளில் கண் தெரியாத தொலைவிற்கு அந்தக்குழலை எறிந்தான். எங்கோ சிறுவேர்களில் மோதி அந்தக்குழல் வீழ்ந்தது.

கைகள் அறிவதென்னபதை அறிந்திருந்தான். பெருவட்டத்தை விரும்பும் கரங்களுக்கு சிறு உறிகள் போதாதென்பது தெளிந்தது. இருள் மேலும் மேலும் என மூடி எழுந்தது. மேலும் மேலும் என கண்களைச் சுருக்கி தன் பறையை தேடித் திரிந்தான். தூரத்து கனவின் அருவியோசை எழுந்தபடியே இருந்தது. இசை அதிர்கிறது நதி அதிர்கிறது. இலை அதிர்கிறது. ஒத்திசைவின் கணங்களின் வழியே இங்கே எங்கோ எனது நதி ஒளிந்திருக்கிறது என்றொரு எண்ணம் எழுந்தது.

மழையொளிக்கீற்றென பெருநிலவு அடரிலைகளில் கரைந்து வழிந்திருந்தது. வழியும் நிலவொளி பட்டு எதிரொளிக்கும் இரு கண்களை தூரத்து மரத்தின் மறைவினில் கண்டான். மெல்ல மரங்களைச் சுற்றி நெருங்கிய போதும் அசையாமல் இருந்தது. அருகிருந்த நீண்ட மரக்கிளையை ஒடித்து அவற்றின் கண்ணருகே அசைத்தான். அசைவின்றி இருந்தது. நெற்றிப்பொட்டில் வைத்து அழுத்தியபோது கிளை மெல்ல நெகிழ்ந்து உடல் நுழைந்தது. எருது சற்று மரம் சாய்ந்தபடி இறந்திருந்தது.

முன்கழுத்தின் மறைவுப்பகுதியில் ஆழமாகப் பற்கள் பதிந்திருந்தன. வேங்கைகளின் கடிதப்பிய எருது ஓடிச் சலித்து மரமணுகி சாய்ந்து பின்னர் இறந்திருக்கக்கூடும் எனக் கணித்தான். மெல்ல விரல்தொட்டு நீவி கண்மூடி கையெடுத்தான். ஊன். உண்பவர்களிடமிருந்து தப்பி உண்பவர்களுக்காகக் காத்திருக்கும் பெரும் ஊன் என்றொரு சொல் உள்ளே எழுந்து துணுக்குற்றான். உயிருள்ள ஆவினை வாஞ்சையுடன் நீவும் கரங்களுடன் மெல்ல உடலெங்கும் உள்ளங்கைகளால் நீவினான். சிறு ஊணுயிர்கள் வாய்கொள்ளுமளவு ஊனினை கடித்துப்பிய்த்து பின் மழை கொண்டபின் விட்டுச் சென்றிருந்த தடங்கள் உடலெங்கும் இருந்தன.

மீண்டும் காலை அவை திரும்பிவரக்கூடும். அல்லது நீர்மை வடிந்து குளிர்மட்டும் எஞ்சும் நள்ளிரவில் அவை திரும்பி வரக்கூடும். எண்ணங்கள் அதிர்ந்து நினைவில் அலைந்து நிகழ்வினுக்கு திரும்பிவரும்போது விரல்கள் இறந்த எருதின் திமிலில் தாளமிடுவது கண்டு துணுக்குற்று பின் நகர்ந்தான். ஆம், இதுவே எனக்கான பறைக்காக காத்திருக்கும் எருது. ஆம் இதுவே பசியற்ற என் ஆணவம் இளைப்பாறுவதற்கான இசை. ஆம் அதற்காகத்தான் எங்கோ பல்பட்டு இங்கே வந்து என் பாதை மறித்து விழிதிறந்து காத்திருக்கிறது இவ்வெருது என தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்.

கணு உடைந்த மூங்கில்களிலிருந்து இளம் நுனிகள் சில ஒடித்துவந்தான். பிறகு கால் இடறிய சிறு கற்களில் கூர் கொண்டிருந்த சில பொருக்கி கூரற்ற பிறகற்களில் உரசி இன்னும் கூர்மை கொண்டான். கூர்மையின்மை சிறுகூர்மைகளை இன்னும் கூர்செய்கிறது. வளைவற்ற பெருமரத்து வேர்களை நீர் நனைத்து உலராமல் பாறைகளின் அறைந்து திரித்தான். கூர்கற்கள் கொண்டு முன்னோர்களை ஆதிதெய்வங்களை வணங்கி எருதினைக் தோல்கிழித்தான்.

கைகள் அறையும் தொலைவினையும் கட்டும் தொலைவினையும் கணக்கிட்டு தோல்கிழித்து மண்ணிலிட்டு புரட்டினான். எருது இன்னும் கண்மூடி அமர்ந்திருந்தது. சிற்றோடை ஒன்றில் குருதி நீங்க தோலினை கழுவினான். மண்ணிலுட்டு மெல்லப்புரட்டி கரைந்த மணல் ஓடும் ஆழ நீர் குழைத்து சகதிகொண்டு தோலினைப்பூசினான். பின் இளம்மூங்கில்களை வளைத்து சகதிபூசிய எருதுத்தோல் சுற்றி நனைந்த வேர்களைக் கொண்டு கட்டினான். அரையில் நிறுத்தி கைவீசி அளந்தான். மனம் குவிந்து மீண்டும் சகதி பூசி சகதிகுழைத்து சகதிபூசினான். கூரற்ற இரு முனைமழுங்கிக் கூழாங்கற்களை உரசி எரியெழுப்பினான். மழையூறிய கிளைகள் நீர்பற்றி காற்றில் புகை எழுப்பின.

பெரு நடைக்குப்பிறகான சலிப்பு மூச்சுக்காற்றினை முற்றிலுமாக ஈரம் உலர்த்தியிருந்தது. இதழ்குவித்து எரிக்காக ஊதும் தோறும் வளி தடை பட்டு நெஞ்சடைத்தது. மீண்டும் பரல்களைப் பற்றி நீரூறிய இலைகளைக் கிளறி காய்ந்த சருகுகளைக் கண்டடைந்து கொண்ர்ந்து குவித்தான். எரி தீட்டும் கற்களை மரவுரியில் மேலும் மேலும் என சூடேற தோய்த்து பின் உரசினான். பொறி எழுந்தது. எழும்பொறி சருகுகளைப் பற்றும்முன் வெளியின் ஈரம் குடித்து சருகுகள் உள்மடிந்தன. மெல்ல மெல்ல எரியெழும் பசி உடலென சருகுகள் ஒன்றையொன்று இருகப்பற்றி எரியினைப் பற்றிக்கொண்டன. இரட்டைச் சருகுகள் மெல்லப்பற்றியபின் குவி சடசடவென நரம்புகளை ஒடித்துக்கொண்டு பரவத்த்தொடங்கியது. உடல்பதறி குவியினை பிறசருகுகள் அருகாவண்ணம் சுற்றிவட்டமிட்டான். வெறுங்கைகளால் ஈரம்குழப்பிய சகதிகொண்டு அணையிட்டான்.

தாளத்திரும்பாத எரி வானம் ஏறிப்பரந்தது. காலிணைப்பு உயரம் எழுந்தபின் மெல்ல அடங்கக்காத்திருந்தான். ஒடித்த மரத்தண்டங்களை சருகுகளின் மீது அடுக்கினான். சகதிபூசிய எருதின் தோலை மெல்லத்தீட்டி எரியில் வாட்டினான். ஈரமறிந்த சகதியினை எரி முதலில் ஈரத்தை முழுக்க உறிஞ்சி விண்ணெழுந்தது. பின் ஈரமற்ற தோலின் மீது கரிபடிந்தது. துடைத்து அடித்து நெகிழ்வித்து பின் வாட்டினான். இறுக்கிக் கட்டி விரல்சுழற்றி ஈரம் அற சகதி காய்ந்து உதிர்ந்து இடைவெளிகளை நிரப்பும்வரை ஆட்டி அசைத்து ஆடி அதிரவைத்து ஈரமிழக்கினான். ஈரம் அழிந்தபின் சதைக்கொழுப்புகள் உருகிய பின் குருதியும் காய்ந்தபின் தோல் பறையென அதிரத்தொடங்கியது. மழை நிறைந்த காட்டில் முளைத்துவரும் சிறு மகவென இசையெழுந்துவந்தது. அடித்து அதிரச்செய்தான். காயாத சிறு குருதி நினைவுகள் எரியுருகி நெருப்பில் சொட்டின. மீண்டும் எரி பெரும் பனையென மேலெழுந்து அமர்ந்தது. உப்புக்காற்று ஊறிய கரங்களை மண் துடைத்து எரியில் காட்டி மீண்டும் இறுகிய தோலறைந்தான். பறை தன் முதல் அதிர்வை அடைந்தது.

எரியும் தண்டங்களை விலக்கி எல்லை வளையத்தின் வெளியில் சகதி நனைத்து அணைத்து தூரத்து மரங்களுக்கு எறிந்தான். தனக்குள்ளான தணலடங்கும் சருகுகளுக்கான பறைகளை நாடியில் பொருத்தி காத்திருந்தான். விரல்கள் காற்றின் பறைகளுக்காக அலைந்து தோலில் மோதி அதிர்ந்து குதித்தன. சருகுகள் அடங்கிய பின்னரும் கனல் இருந்தது. குதிங்கால் கொண்டு சருகுகளைப் பரத்தி சகதிகளில் மிதித்தான். கனல் அடங்கியபிறகு தன் பாதைகள் தேறி மீண்டும் காட்டினுள் நடக்கத்தொடங்கினான்.

ஒத்திசைவின் அதிர்வுகளுக்கு ஊடாக இடைவெளிகளை எளிதாக கணிக்கமுடிந்தது. நனவிலியின் ஆழத்திலிருந்து இசைஞனின் உள்ளுணர்விலிருந்து திசைகள் துலங்கத்தொடங்கின. தூரத்து அருவியின் எதிரொலிப்புகளுக்கு ஈடாக தன் பறையை இடக்கையில் அறையும்போது நீரொலியெலுப்பி இங்கிருக்கிறேன் என்றது. பாதைகள் மாறி எதிர்திசை கண்டு சிம்பு அறைதலுக்கு எதிராக நதி அங்கில்லை இளையோளே என்றழைத்தது. மனமயக்கி செடிகளுக்குள் நடக்கும்போது சிற்றோடைகள் விலகச்சொல்லி எச்சரித்தன.

ரீங்காரங்களின் இசைவுகளுக்கு நடுவில் பாதையிருந்தது. தூரத்து மரங்கள் உரசும் இசைகளின் வழியாக சாரல் நுழைந்து வெளியேறி முகம்தொட்டு உரசி புன்னகைத்தது. கூடடையும் பறவைகள் திரும்பிவரும் பாதைகண்டு எதிர்வழியில் சென்றான். உளுத்த மரங்களை தயங்கிக்கடந்த பாதங்கள் மிதித்து பறையனை விண்ணுக்கழைத்தன. ஒடித்த சிறுசெடிகளின் பாதைகளின் வழியாக அதிர்வின் கணங்களைக் குடித்தபடி தொடர்ந்தான். பாதைகளற்ற அடர்மரங்களை அறுத்து நுழையும் வெறியாட்டு சாக்காட்டுப்பறையின் இசையில் எழுந்தது. பாதை தெளியும் தோறும் பாதங்கள் கொண்டாட்டம் கொண்டு தேங்குவதாக உணர்ந்தான்.

உள்ளங்கைக்கு மிக அருகில் அடையும் பொருள் இருக்கையில் கொண்டாடும் உடற்சோம்பல் பாதங்களை பின்னிழுக்கிறது. கணித்த திசைகள் துலங்கி அடைவின் பொற்கரங்கள் நீளும்போது பாதையின் அழகுகளை விழிகடக்காமல் உள்வாங்கி நிறைப்பதை அறிந்து அதிர்ந்து பின் புன்னகைத்தான். விரல்கள் தன் பாதையைத் தானே தேரும் குழவி மீன்களென இசைகளுக்குள் நீந்தியபடியிருந்தன. சிம்பு தன் ஆடலை பறையின் நெகிழ்வுகளுக்குள் தொலைத்து மீண்டு நுழைந்து வெளியேறியது.

அதிர்வுகள் அதிர்வில் இணைந்து இசையென்றாயின. ஒலிகள் மேலும் மேலுமென ஒலிகளை தனக்குள் இணைத்து ஒத்திசைவின் கணங்களுக்கு இழுத்துச் சென்றது. தூரத்து நீரோசையும் மிதிபடும் சருகோசையும் அசையும் இலையோசையும் அதிரும் தோலோசையும் வெளிவிடும் மூச்சும் ஒத்திசையும் கணத்திலிருந்து இசை உருவாகிவந்ததது. ஒத்திசைவின் கணங்களை அடைந்தபின்னர் நீரோசையினை கண்டறிவது எளிதாக இருந்தது. பாதைகள் துலங்கி வந்தன. பாதை மாறி திசை திரும்பும்போது ஒத்திசைவின் கணங்கள் தடுமாறி இசை நின்றது. பின் பறையன் தன் பறையினைத் திருப்பி ஒத்து எழும் திசை நோக்கி பாதைகளை அமைத்தான்.

அதிர்வுகள் கொண்டாடும் கணம்தோறும் நீரோசை எழுந்தபடியே இருந்தது. இன்னும் இன்னும் என முன் சென்றான். வேகம் வேகமென பறை எழுந்தது. சருகுகளின் அசைவுகளின் வழியாக ஆடல் நீண்டது. இருள் கவியும் நிலமெங்கும் பாதைகள் கால்கள் மட்டும் அறிந்த பேரொளியின் திசையென நீண்டன. தாள்மரக்கிளைகளை மிதித்து விண்ணெழுந்து இறங்கினான். உயர்மரங்களின் சிறுகாய்களை உதைத்து மரமேகினான். கவிந்த மரக்கிளைகளுக்கு ஊடாக வெண்ணிலவு வழிந்து எங்கோ தான் இருப்பதை அறிவித்திருந்தது.

விழிமயக்கென கண்கள் சுழல, இசையின் அதிர்வுமட்டுமே கைத்துணையென முன்னகர்ந்தான். எங்கொ சிவமூலிகையின் மணம் எழுந்தது. பிறகு இன்னெதென பிறித்தரியமுடியாத பல ஆயிரம் மலர்களின் மணம். பின்னர் மட்கிக்குவையும் இலைகளின் வீச்சம். சிற்றுயிர்கள் பதறி ஓடிஒளியும் புதர்களை ஓசைகளால் அறிந்தான். பேருயிர்கள் வழிவிட்டு ஒதுங்கி நின்று எரியும் அகலென விழிகளை நிறுத்தி வழியனுப்பின. அருகே மேலும் அருகேயென நீரோசை நெருங்கிக்கொண்டிருந்ததது. மண்குவைகளை கரைத்த அழிமுகப்பின் மணம். மெல்ல காற்றிலாடும் இலைகளின் பேரிரைச்சல். நீரில் ஆடும் வேர்களின் நிழலென ஓசை முன்வந்தது. மீன்கள் நீந்தும் அசைவின் ஒலி அதிரும் பறைகளின் இடைச்செவியென நிறைந்தது. இசை உருவாக்கும் மொழியெனவும் மொழி செவிகொண்டு உறைந்து நிற்கும் குழவியெனவும் மனம் கொண்டான்.

அதிர்ந்த மரங்கள் வழிவிட்டு நிலவொளி துலங்கும் திசையைக் தொலைவில் கண்டான். அருவியிறங்கும் மலையின் முதல் ஆற்றொழுக்கென மனம் உணர்ந்தது. அதிரும் பறையிலிருந்து கையெடுத்தான். இறுகப்பற்றுவதற்காக சுற்றியிருந்த நாரினை சுழல் இழுத்து தொங்கும் இலையென இடையின் ஓரத்தில் கட்டினான். கால்கொண்டு வேகம் கொண்டு நடக்கும்போது மரத்திலாடும் குரங்கென பறை இடையில் ஆடியது. காலெடுத்து ஓடி அருவி ஆறென முகம் மாற்றி ஓடித்திரியும் முதல் நதியின் கரை நின்றான். மனம் நிறைந்து ததும்பி ஒளியென்றாகிறது. நிலவொளி ஆடிப்பிம்பனெ அதிரும் பறையென நீரில் விழுந்து எழுந்த்து இரட்டைக்குளவியென முன் நின்றது. பெருந்தாலத்தில் எறியப்படும் பறவை உணவென ஓசையுடன் அருவி வீழ்ந்து நதியாகிக்கொண்டிருந்தது.

ஓடும் நதியின் தெளிவில் அசையாமல் நின்றிருக்கும் ஆடியென தன் முகத்தினை பறையன் கண்டான். பெரு நடையின் சோர்வும் உதிர்சருகுகளின் ஈரமும் ஒட்டியிருந்தது. ஓடும் நதியினை ஒரு குவை கையள்ளி பார்த்து நின்றிருந்தான். ஒற்றை சிறு துண்டு நிலவு. பேராடியின் ஒரு சிறு களவு. கைதுடைத்து மீண்டும் நதியில் விட்டான். முகத்தின் ஒரு பகுதி உருகி எங்கோ அலைந்து சென்றது. நிலவு பின் செல்வதாக நினைத்திருத்தல் துலக்கமாக இருந்தது. பின் கைகுவித்து சிறிது நீரள்ளி முத்தமிட்டான். வாய்குவித்து கொப்பளித்தான். மெல்ல விரல்களால் உள்ளங்கைகளால் ஓடும் நீரினை அறைந்தான். பெரும் பறை. இயற்கையின் நில்லாத அசைவிலாத தொடர்ந்து நகரும் பறை. ஒற்றை பெரும் நடன ஆடல்வல்லான் ஒரு கையை மட்டும் அருவியென நீட்டியறையும் பெரும்பறை.

இரு காலடி பின் வைத்து மணல் நீர்குடித்து உறைந்திருந்த தொலைவிற்கு வந்தான். சிறுபாத இடைவெளிகளுக்கு அப்பால் நில்லாமல் பெரும்பாறைகளை உருட்டும் ஒரு நதி. கொஞ்சம் பின்னடங்கி பெரு நதிகளைக் குடிக்கும் மணற்பாறைகள். அரையிலிருந்து அவிழ்த்து புலித்தோல் பறையை இரு கைகளின் ஏந்தினான். இறைவன் முன் இறைஞ்சி நிற்கும் புரவலரின் கைத்தாலம். கால்களால் சிறிது மண்குவித்து ஒருபக்கமாக சாய்த்து நிறுத்தினான். இதுவரை நிரவப்பட்ட அத்தனை மலைகளின் ஆடிபிம்பம். நதிக்கரையில் அமர்ந்து வீழருவியைப் பார்த்து அமர்ந்திருக்கும் பெருமுதியவனின் ஒற்றைத் தலை. ஒரு முறை தலைகுவித்து தன் பறையை வணங்கினான். பின்னர் ஓடிச்சென்று ஓடும் நீரில் பாய்ந்தான்.

இடப்புறமிருந்து வலப்புறம் பாயும் நதியில் குறுக்காக நீந்தியபடி இருந்தான். நீர்விசை அசைத்து அவனைப் புரட்டியது. நதியோட்டத்தின் முறிந்த கிளைகள், பேரருவியின் உயரத்திலிருந்து உடல்தொட விதிக்கப்பட்ட சிறுவெள்ளை மலர்கள் மோதிக்குலைத்தன. தொடர்ந்து நீந்தியபடியிருந்தான். ஓடும் நதியின் திசை நோக்கி பாயத்தொடங்கும் சிறுமீன்களென கண்கள் தனித்திருந்தன. நீண்ட கிளையொன்று மோதும்படி வர மூழ்கி சுழன்று மீண்டான். நதியோட்டத்தின் தப்பிய சிறு எறும்பென மிதந்து கிடந்தான். வேகத்தின் முகம் போர்வையெனத் தழுவி மூதாதையென வாழ்த்தி சிறுவனென விளையாடி தொடர்ந்தது. கன்னியைக் குலாவும் இளமைந்தனென நதிப்போக்கில் மிதந்து முத்தமிட்டான். ஊடலில் முகம்திருப்பும் இளைஞனென விசையெதிர்த்து கால்களிட்டான். அருகமர்ந்து கண்பார்த்துச் சிரிக்கும் வாழ்வோனென குறுக்கே கிடந்து கடந்து மீண்டுவந்தான். ஊழ்கத்திலமர்ந்து மரணம் காத்திருக்கும் முதியவனென மிதந்துகிடந்தான்.

இரவு குளிர்ந்து நீரென கிடந்ததன. வீழருவியின் விசை ஒன்றோடொன்று உரசி வெப்பம் கொண்டிருந்தது. நிலவொளியில் மறைந்திருக்கும் சூரியென குளிர்போர்வையின் உள்ளாக வெப்பம் ஓடிக்கொண்டிருந்தது. விரல்நுனிகள் நீர் ஊறி குருதி நிறம் கொள்ளும் வரை நதியாடிக்கிடந்தான். பின் மெல்லச் சலித்து மீண்டும் ஒரு நீள் மூச்சு கொண்டு நதியாழத்தின் வேர்வரை சென்று ஒற்றைக் கூழாங்கல் கண்டெடுத்து மீண்டான். நதியோட்டத்திலிருந்து விலகி கரையேறிறான். மூதாதையின் புன்னகையுடன் பறை காத்திருந்தது. கனிகளை இறைசாட்டும் பூசகனென பணிவுடன் கொண்டுவந்த கூழாங்கல்லை பறை முன் வைத்தான். எதற்காக இந்த நாடகத்தை நடிக்கிறோம் என்றொரு கேள்வி எழுந்தது. எங்கோ கிளம்பி எங்கோ அலைந்து இந்த நதிக்கரையின் தன்னை கொண்டுவந்து சேர்த்திருக்கும் விசையெதுவென அறியாமல் உளம் குமைந்தான். முதியவன் அருகமரும் இளையோனின் தயக்கத்துடன் மணல் ஆடையொட்ட பறையின் அருகமர்ந்தான். தூரத்து அருவி சென்று சேரும் மலை முகட்டில் அவள் நின்றிருந்தாள்.

எண்ணைப்பசையொட்டிய அன்னையின் கற்சிலையென அவள் உடல் ஒளிகொண்டிருந்தது. மஞ்சள் மலரால் கோர்த்த ஆடை அணிந்திருகக்கூடும் என கணித்தான். நிலவொளி முகம்துலங்காமல் உடல்பட்டு எதிரொளிப்பதாக இருந்தது. அவள் அங்கிருந்து சற்று கூர்ந்து நோக்கினால் தன்னை அறிந்துகொள்ளமுடியும் என்பதை உணர்ந்தான். ஆனால் அவள் உடலசைவுகளில் அதற்கான நோக்கு இல்லை.மொத்தக்காட்டினையும் தன் ஒருத்திக்க்கென உள்ளாக்கிக்கொண்ட நிமிர்வு இருந்தது. காட்டில் தனித்திருக்கும் பேரன்னைகள் சிற்றுயிர்கள் பேருயிர்கள் எல்லாம் கடந்து காடே தானாகிறார்கள் எனும் காவிய வரி நினைவுக்கு வந்து உடல் சிலிர்த்தான். தானும் ஒரு குளவியென மடியொட்டி கிடக்கும் கனவு எழுந்து வந்தது. முலையுறிஞ்சும் வேட்கை. அன்னையெனவும் துணைவியெனவும் எழும் உளமயக்கு. அருவியென வீழ்வது நதியென எழுவது போன்றதொரு வேட்கை. மயிர்க்கால்கள் கூச்செரிந்தன. உயிர்களற்ற வனாந்தரமென எழுந்த கனவு ஒற்றைப்பெண் அத்தனை வெற்றிடத்தையும் நிரப்பும் விந்தையென வியந்தான்.

ஒற்றைச்சொல் காப்பியங்களை உருவாக்கிவிடுகிறது. ஒற்றை அதிர்வு பறையினை காட்டிக்கொடுக்கிறது. ஒற்றைச் செடி காட்டினை தொடங்கிவைக்கிறது. வெற்றிடங்களை தானாகவே நிரப்புதல் கன்னிகளுக்கு வரமென அளிக்கப்பட்டிருக்கிறது. மண்குழைத்துப்பூசி காய்ந்த சுவர்களுக்குள் ஒரு பெண் முதற்காலடி எடுத்துவைத்து ஒற்றை அகலை நிரப்பும்போது இல்லமென சூல்கொள்கிறது. பெரும்போரில் தோற்று ஓடிய குலங்கள் ஒற்றைப்பெண் விதையிலிருந்து மீண்டுவந்து கருவறுத்திருக்கின்றன. அலைஅலையென சொற்கள் எழுந்தபடி இருந்தன. கையில் பறையில்லாபோது சொல்லற்று அலைந்ததை நினைத்துக்கொண்டான். இந்த ஊற்று காப்பியங்களை எழுதும் விரல்களை தரக்கூடும். ஓவியங்களின் மறைந்திருக்கும் பெருஞ்சொற்றொடர்கள், பெருங்காட்டினை எரிக்கும் சிற்றகலினை இந்த சொற்போக்கு கொண்டு வந்து தரக்கூடும்.

அவள் மலராடை அவிழ்த்து கால்வழியும் சிற்றொடையில் விட்டாள். எங்கென்று அறியாத வேகத்துடன் அது அருவியென்றாகி விழுந்தது. பின்னர் மலைமுகட்டின் உச்சியிலிருந்து கால்தூக்கி நீரில் பாய்ட்ந்தான். ஒரு கணம் விண்ணில் எழுந்து பின் ஆழத்தின் இரைச்சலுக்குள் நீர்கொத்திப்பறவையெனப் பாய்ந்தாள். உளம் அதிர்ந்து உடல் நடுங்கி கால் குழைந்து தரை அமர்ந்தான். பேரணங்கே என் அன்னையே என சொல் எழுந்தது.

ரிபு – 5

பின்னூட்டமொன்றை இடுக

கெளரி,

சத்தமிட்டுச் சிரிக்கும் பெண்களை எனக்குப் பிடிக்காது. அதில் ஒரு பொய் இருக்கிறது. தன் சிரிப்பின் மூலம் திரும்பிப்பார்க்கவைக்கும் ஒரு காரியம் இருக்கிறது. அந்த நாடகம் எல்லா ப்வெறுப்பிற்குரியதாய் இருக்கிறது. உண்மையில் சிரிப்பதே ஆண்களே எனினும் பிடிக்காமல் போய் பல வருடங்கள் ஆகிறது. ஒரு வேளை, நான் சிரிப்பை இஅந்த காலத்தில்ரிஉந்து நான் சிரிப்பை வெறுக்கத் தொடங்கியிருக்கக்கூடும்.

எந்தச் சிரிப்பும் வாதையை நினைவூட்டுகிற்து. என் வலிகளைத் தந்து சென்ற மனிதர்களை அவர்களின் சிரிப்பின் அடையாளத்திலேதான் உள்ளே பதிந்து வைத்திருக்கிறேன். சிரிக்கும்போது கன்னங்களும் கண்களும் இணையும் புள்ளியை வைத்தே இவர் எந்தக்காலத்தின் என் வாழ்வில் வந்து சென்றவர் என்பதை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. சத்தமிட்டு சிரிப்பவர்களின் இன்னல்களற்ற வாழ்வு சாவின் கணங்களை எதிர்பார்த்திருந்த என் வாழ்வினை மூர்க்கமாக கேலி செய்வதாக உணர்கிறேன். ஆகவே எனக்கு சிரிப்பு பிடிக்கவில்லை. பிறர் சிரிப்பது. பெண்கள் சிரிப்பது. பிறகு அவர்கள் தங்கள் நாடக முகங்களுடன் சத்தமிட்டுச் சிரிப்பது.

பெண்களின் சிரிப்பில் குழந்தைகளின் சிரிப்பை நீ குழப்பிக்கொள்ளக்கூடாது. ஓட்டைப்பல் பெண்குழந்தைகள் மீது எனக்கு தனிப்பட்ட அன்பு உண்டு. அதற்கான காரணங்களைப் பற்றி ஒருவேளை அடுத்த நாவலில் எழுதுகிறேன். பெண்குழந்தைகளின் சிரிப்பில் கபடம் இல்லை. ஆண்குழந்தையென்றாலும். தேவதைகளுக்குப் பால் ஏது. குழந்தைகளின் சிரிப்பை விரும்பும் அளவிற்கு அவர்களின் அழுகையை வெறுக்கிறேன்.

பெரியவர்களின் சிரிப்பும் சிறியவர்களின் அழுகையும் என் வாழ்வின் மறக்க விரும்பும் காலங்களுக்கு என்னைக் கொண்டு சென்று என்னை துன்புறுத்துகிறது. உன் சிரிப்பு அப்படியல்ல. சத்தமில்லாத மெல்லிய புன்னகை மட்டும் கொண்டது. பெரும்பாலும். கண்களை மட்டும் இறுக்கி மிகச் சிறிய அளவில் உதடுகளைத் திறந்து உன் சிரிப்புகள் இன்னும் பொத்திவைத்திருக்கிறேன். ஒவ்வொரு காலத்திலும். முதற் சந்திப்பில். கடைசி சந்திப்பில். எதிர்பாராத சந்திப்புகள். எல்லாக் காலங்களிலும் உன்னிடம் சிரிப்பிருந்தது.

உடனிருந்த காலங்களின் சிரிப்பிற்கும் பிரிந்த காலங்களின் சிரிப்பிற்கும் இடையில் மெல்லிய இடைவெளிதான். உடனிருந்த காலங்கள் கண்கள் என்னைப்பார்க்கையிலும் பிரிந்த காலங்களில் என் முகத்தினை நீங்கிய பிறகும் உனக்கு சிரிப்பு கொண்டிருந்தது. Not that i am complainining. It was really fantastic. எந்த காரணமுமற்று யாராகவும் இல்லாமல் தொலைவிலிருந்து சிரிப்பைப்பார்த்துக்கொண்டிருப்பதை என்னால் இன்றும் செய்யமுடியும்.

என்னைச் சந்திக்க விரும்பாத உன் கோபம் அழகானது. என்னைப்பார்த்ததும் முகஞ்சுருக்கி வேறுபுறம் திரும்பி பின் பழைய சிரிப்பைத் தொடரும் உன் கர்வமும் அழகாகவே இருக்கிறது. அழகு என்ற சொல் ஆபாசமாகிவிட்டதா. சொல் எப்படி ஆபாசமாகமுடியும். உன்னைப் பற்றி பேசும்போது எந்தச் சொல் ஆபாசம் என அறியப்படும். என்ன பேசிக்கொண்டிருந்தேன் என்பதையே மறந்துவிடுகிறேன். சிரிப்பு. கணம் கணமாக நீ புன்னகைகளாக மட்டுமே என்னுள் நிறைந்திருக்கிறாய். முதற் சந்திப்பில், உனக்கு நியாபகம் இல்லாத நம் முதற்சந்திப்பில். அந்தப்பெரும் அறையில் உன் முதல் புன்னகை எனக்கானதில்லை. ஆனாலும் அது அழகாக இருந்தது. அந்தக்கணத்திலிருந்தே அந்தப்புன்னகை என்னுடன் எல்லாக்காலங்களிலும் இருக்கவேண்டும் என விரும்பினேன்

அன்று தொடங்கியதை பிறகு நீ வந்து என்னுடன் இணைந்து கொண்ட சிறுகாலங்களும், விலகி பின் வெறுத்து சொல்லற்று, சொல்ல விரும்பாமல் காணாமல் போன இந்த நாட்கள் வரை அந்தப்புன்னகையை நான் மறக்காமல் உள்ளேயே பொத்திவைத்திருக்கிறேன். சிறு கண்களுக்கு அசையும் சிரிப்பிற்குப் பிறகு எல்லா சிரிப்பின் ஒலிகளும் என்னை குழப்புகின்றன. பெரும்பாலும் உன்னை நினைவூட்டுகின்றன. உன்னிடமிருந்து விலகியோடும் ஒருவனை மீண்டும் மீண்டும் இழுத்து எல்லா சிரிப்புகளும் உன் நினைவுகளுக்குள் தள்ளுகின்றன.

என்னிடம் இருந்தது பெரும் வெற்றிடம் கெளரி. அதை முற்றிலுமாக நிரப்பிச் சென்றிருக்கிறாய். உன்னிடமிருந்து வெளியேறுவது மீண்டும் ஒரு வெற்றிடத்திற்குச் செல்வது என்பதை அறிந்திருக்கிறேன். அந்த அறிதலே என்னை உன்னையே பற்றியிருக்கச் செய்கிறது. உன் குரல் மெல்ல மறந்து காதற்றவனாக மாற நான் விரும்பவில்லை. உன் சிரிப்பிலிருந்து வெளியேறி எல்லா சிரிப்பினையும் வெறுக்கும் பழைய நாட்களுக்குத் திரும்ப எனக்குத் திராணியில்லை. கண்ணிருடனான பொழுதுகளிலிருந்து தனிமையின் மலர்களை ஏந்தி மிதக்கும் வானப்பறவையாக நீ மாற்றித்தந்த வானத்திலேயே தங்கியிருக்க விரும்புகிறேன். ஆனால் நீ எடுத்துச் சென்றுவிட்ட சிறகுகளில்லாமல் எப்படி இருப்பேன்

உன்னுடன் பேசிய சொற்கள் என் தனியறையின் சுவர்களின் மோதி ஒலிக்கின்றன. இங்கிருந்து நான் வெளியேறப்போவதில்லை. என் தனியறைகளில் யாரையும் உள்ளே விடப்போவதில்லை. உண்மையில் நான் தனியறையில் எப்போதும் இருந்தவனில்லை. விஷ்வாவையும் ஜோசப்பையும் உனக்கு இன்று அறிமுகப்படுத்துகிறேன். உனக்குத் தெரிந்தவர்கள்தான். நம் நண்பர்கள்தான், ஆனால் அவர்கள் இங்கே புதுப்பெயரில் உனக்கு மீண்டும் அறிமுகமாகிறார்கள். எனக்கு வேறு வழிகளை நீ விட்டுச் செல்லவில்லை.

உனக்குத் தெரிந்தவர்களைத்தான் உனக்கு மீண்டும் அறிமுகம் செய்யவேண்டியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் என்னை நானே உன்னிடம் அறிமுகம் செய்யவேண்டியிருக்கிறது. உன் மறதிகள் அழகானவை. என்னை அறிமுகம் செய்து கொள்வது எனக்குப்பிடிக்கும். உன்னிடம் அறிமுகம் செய்துகொள்வது கொஞ்சம் குழப்பமானது. அதில் நிறைய பொய்கள் இருக்கின்றன. அறிமுகத்திலேயே ஏராளமான பொய்கள் இருக்கின்றன. நாம் அறிமுகம் செய்துகொள்வது போல ஒருபோதும் நாம் இருப்பதில்லை. உன்னிடம் நான் அறிமுகம் செய்துகொண்டது போல் இன்று நான் இல்லை. என்னிடம் அறிமுகம் செய்துகொண்ட அந்தச் சிறுபெண்ணை எப்பொழுதும் நினைவில் வைத்திருக்கிறேன். ஆனால் நீ இன்று அவள் இல்லை.

வேறெந்த பெண்ணிலும் நான் தேடுவதும் அதே புன்னகையாகவே இருக்கிறது. நெருங்கிவரும் எந்தப்பெண்னும் ஒரு சொல்லில் ஒரு புன்னகையில் உன்னை நினைவூட்டுகிறார்கள். குற்ற உணர்ச்சியில் தள்ளுகிறார்கள். விலகச் செய்கிறார்கள். அவர்களுக்கு என் விலகலின் காரணங்கள் புரியாமல் இருக்கலாம். அவர்கள் உன்னை அறிந்திருக்கிறார்கள். பேசும் இடங்களிலெல்லாம் உன்னைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன். உண்மையில் உன்னைத்தவிர என்னிடம் பேசுவதற்கு வேறு விசயங்கள் இல்லை. என் போதை கணங்களெல்லாம் உன் நினைவுகளை மீட்டெடுத்து நண்பர்களை விலக்குகிறேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனியே குடிக்க பழகிக்கொண்டேன். கண்ணீர் என்னுடனேயே போகட்டும். யாருடனும் எந்த சொல்லும் இல்லை. உன்னையன்றி வேறு கனவுகள் இல்லை. என் வெற்றிடங்களில் உன்னைத்தவிர மறைக்க வேறு கூரைகள் இல்லை.

முதற்சந்திப்பில் யாருக்கோ அளித்த சிரிப்பு. முதல் முறை உன்னிடம் பேசும் பதட்டத்தில் நீ அளித்த அந்த இலகுவாக்கும் புன்னகை. நீண்ட நாளுக்குப் பின் சந்திக்க நேர்கையில் அந்த இடைவெளியை நொடிப்பொழுதில் விரட்டும் அந்தக் கண்களுக்குள் பூத்த சிரிப்பு. சிறு சண்டைக்குப் பின் மீண்டும் சந்திக்கையில் ஒரு புன்னகை. பேச்சற்றப்போன நாட்களில் தற்செயலாய் சந்திக்க நேர்கையில் வரவா வேண்டாமா என தயங்கும் அந்த தயக்கப்புன்னகை. வெறுப்பின் நாட்களில் முறைத்து பின் மறுபுறம் திரும்பு உன் தோழியிடம் உனது புன்னகை. அத்தனையும் இருக்கிறது கெளரி. அத்தனையும் தடம் மாறாமல், நிறம் மாறாமல், அந்த ஒலி மாறாமல் இந்தத் தனியறையிலும் எதிரொலிக்கிறது. இந்த எதிரொலிகளில் குறுக்கே வரும் மனிதர்களை நான் வெறுக்கிறேன்.

எனக்குள்ளாக நானே நான்காக ஐந்தாகப் பிரிந்து சண்டையிடுகிறேன். உன்னை இழந்துவிட்டதற்காக. உன்னை இழந்துவிட்டதற்காக என்னை நானே சமாதானம் செய்கிறேன். என் புன்னகைகளை எனக்கு நானே நினைவுபடுத்துகிறேன். எனது வெற்றிடத்திற்கு திரும்பி வந்ததை எனக்கு நானே நினைவூட்டுகிறேன். மீண்டும் எழும் கனவுகளில் மீண்டும் ஒரு இரவில் ஆழத்திலிருந்து நீ மேலெழுந்து அமர்ந்து புன்னகைப்பதற்காக, உனக்கென தனியறையொன்றை ஒதுக்கியிருக்கிறேன். அங்கே ஒரு நாற்காலி யாரும் அமராமல் காத்திருக்கிறது.

அந்த அறையில் என் இசைக்கருவிகளை வைத்திருக்கிறேன். அந்த நாற்காலியில் ஒரு மஞ்சள் மலரை வைத்திருக்கிறென். அந்த அறையெங்கும் உன் புன்னகை எதிரொலிக்கட்டும். என் இசையினை நீ எங்கிருந்தோ ஆசிகளை வழங்குவதாக இருக்கட்டும். உனக்கு செய்யப்பட்ட என் சொல்வன்மைகளுக்கு அது ஒரு பரிகாரமாக அமையட்டும். என் இசைகள் நாளை உன் பெயர் சொல்லி வெளிவரக்கூடும். என் எழுத்துக்கள் உன் பெயரில் கதையெழுதியவனின் சொற்களாகவே அறியப்படட்டும்

ஒரு புன்னகை. அந்தப்புன்னகைக்காகத்தான் இவ்வளவுவ்மா. உன்னைத்தவிர வேறு பெண்ணில்லையா என்பவர்களிடமெல்லாம் இதுவரை எப்பொழுதும் ஒரே பதிலைத்தான் சொல்லிவந்திருக்கிறேன். உண்மையில் கேள்வி கேட்கும் எல்லாரும் பதில்பெற வேண்டியவர்கள் இல்லை. பதிலக்ளுக்குத் தகுதியானவர்களுக்கு என் பதில்களை எப்பொழுதும்போலவே மாறாமல் சொல்லிவருகிறேன். உன்னைத்தவிர வேறு பெண்கள் என்பது ஒரு சொல் விளையாட்டு. உண்மையில் அப்படி யாரும் இல்லை என்பதுதான் தொந்தரவு,

எல்லா பெண்களிலும் நீயே இருக்கிறாய். எல்லா பெண்ணாகவும் நீயே இருக்கிறாய். ஒரு புன்னகை. மீண்டும் அதே புன்னகை. அல்லது ஒரு கோபம் மீண்டும் அதே கோபம். அல்லது சிறிது அன்பு. மீண்டும் அதே அன்பு. அல்லது சிறுது விலக்கம். மீண்டும் அதே விலக்கம். கொஞ்சம் கண்ணீர். மீண்டும் அதே கண்ணீர். யார் தோளிலோ கைவைத்து ஆதுரமாய் சாய்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் அந்த உறவு நமது. யார் குழந்தையையோ பார்த்து விளையாட்டுக்காட்டி இனிப்புகளைக் கொடுக்கும் கரங்கள் உனது. வழியறியாமல் தவறி நிற்கும் சிறு நாய்க்குட்டியை உரியவர் வந்து அழைத்துச் செல்லும் வரை அங்கேயே நின்று பார்த்துக்கொண்டிருக்கும் சாய்ந்த முகமும் உனது.

எல்லாம் உனது. எல்லாம் நீயே. நான் உட்பட. இந்த பதிலை இதுவரை பதிலுக்கு தகுதியான எல்லாரிடமும் சொல்லிவிட்டேன். சிலரிடம் போதையில். சிலரிடம் தெளிவில். ஆனால் இருவகையினருக்கும் எனக்கு மன நிலை தவறிவிட்டது என்பதாக அறிந்திருந்தார்கள். அல்லது அப்படிச் சொன்னார்கள். என்னால் உன்னுடன் பேச முடிகிறது. உனக்கு கேட்காத போதும். என்னால் பிறருடன் பேச முடியவில்லை. அவர்களுக்கு கேட்கிற போதும். நான் யாருடன் இருக்கவேண்டியவன் கெளரி?

உன் சொற்களை மீண்டும் மீண்டும் மீட்டெடுக்கிறேன். எனக்குள்ளாகவே சொல்லிப்பார்க்கிறேன். இடைவெளி மெளனங்களை அதன் அத்தனை சாத்தியங்களையும் வைத்து பின்னிப்பின்னி உருவாக்குகிறேன். சொற்கள் பிரவாகமென ஆட்கொள்கின்றன. காணாமல் போன இடைவெளிகள் தானாக வந்து துலங்குகின்றன. மெளனத்தினை மொழிபெயர்க்க பெருந்தனிமை துணையாக இருக்கிறது. தனிமையில் உருவாகும் கனவுகள் புதிய சொற்களை இடைவெளிகளில் இட்டு நிரப்புகிறது.

எல்லா சொற்களையும் அடித்துகரைபுரண்டு ஓடிவரும் நதி ஒரு கடற்பாறையில் மோதியபின் செயலற்றுப்போகிறது. உண்மையில் அது பெருஞ்சொற்களின் கடலில் கலந்து காணமலாகிறது. அல்லது கடலாகவே மாறிப்போகிறது. பிறகு அதற்கு தனித்த அடையாளங்கள் இல்லை. அதற்கென்று தனித்த பெயர்கள் இல்லை. என் சொற்கள் என் மெளனங்கள் எல்லாம் உன்னில் மோதி உடைந்து சிதறி உறைந்து கலைந்து நீயாக மாறி நிற்கின்றன. இனி தனித்த சொற்கள் இல்லை. எல்லா கவிதைகளுக்குள்ளும் நீ எப்படியோ வந்துவிடுகிறாய். ஒரு பெரு நாவலின் அத்தனை பக்கங்களிலும் உன் பெயரின் எழுத்துக்களை மட்டும் வட்டமிட்டு வைத்திருக்கிறேன். உனக்கு அதைப் பரிசளிக்கவேண்டும். அல்லது உன்னையே திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருக்கும் இந்தச் சொற்களை பொருளற்ற குவையானாலும் உன்னிடம் ஒப்படைக்கவேண்டும்

அல்லது நீ இவற்றை ஒரு போதும் காணக்கூடாது. அதுதானே உன் தேவையாக இருந்தது. உன்னைப்பற்றி பேசாமல் இருப்பது. உன்னைப்பற்றி எழுதாதமல் இருப்பது. உன் பயணத்தில் ஒரு சுமையாக கால்சங்கிலியில் பிணைக்கப்பட்ட இரும்புக்குண்டாக என் சொற்கள் வந்து அமர்ந்துவிடக்கூடாதென்றும் நினைத்துக்கொள்கிறேன். ஒருவேளை முன்பாகவே இதையெல்லாம் ஒரு முறை ஒரே முறை சொல்லி ஒரு புன்னகையை நான் அடைந்திருக்கவேண்டும். எந்த நதியும் கடந்து போனபிறகுதான் அதன் மரத்தக்கைகள் நினைவுக்கு வருகிறது. தத்தளிப்பின் கணத்தில் பற்றிக்கொள்ள கிடைக்கும் மதகுகளை நாம் பெரும்பாலும் பற்றிக்கொள்வதில்லையா. அல்லது மதகுகளை வெறும் தக்கைகளென்று, நம் எடை தாங்கக்கூடியவை அல்ல என்று விலக்கி வைக்கிறோமா. எடையற்ற தக்கையென, அத்தக்கையை நம் சுமை கொண்டு நிரப்பக்கூடாதென விலகியிருத்தல் அத்தனை தவறான செயலா. நினைவிருக்கிறது. என் கனவொன்றில் இந்தக் காட்சி வந்தது. அல்லது நான் நிஜமாகவே மிதந்து கொண்டிருந்தேனா. அல்லது போதையிலிருந்திருக்கக்கூடும். எண்ணற்ற சாத்தியங்கள். ஆனால் நிகழ்வு அதன் உணர்வு நிஜம்.

நான் பெரும் அலைப்பெருக்கான நதியில் த்தத்தளித்துக்கொண்டிருந்தேன். எனக்கென்று பற்றிக்கொள்ள எந்த ஒரு கொழுகொம்புகள் அற்று, மிதப்பதற்கான வழிகளை அதுவரை வாசித்திருந்த வழிகளை நீர் நடுவிலிருந்து நினைவுக்குக் கொண்டுவர முயற்சி செய்துகொண்டிருந்தேன். ஒரு தக்கை வந்தது. என் பார்வையில் அது அத்தனை எடையுள்ளதாக நான் அறியவில்லை. அது என் சுமையைத்தாங்காது என்பதை எப்படியோ அறிந்திருந்தேன். அதைப்பற்றிக்கொள்ள விரும்பவில்லை.

உண்மையில் நான் தத்தளிப்பதற்கு முன்னதாக வழக்கமாக எல்லாரும் மிதந்துசெல்லும் அந்தப்படகில்தான் இருந்தேன். பெரும்பாலானோர் எந்தக்குழப்பமும் இன்றி ஒரு இறகைப்போல சுமந்து மிதந்து செல்லும் அதே படகு. ஆனால் என்னுடையது உடைந்தது. எப்படி உடைந்தது யார் உடைத்ததென்பதை இப்பொழுது எனக்கு நியாபகம் இல்லை. ஆனால் படகு உடைந்திருந்தது. அதன் நீர் வெளியேற்றும் பொறுமை என்னிடம் இல்லை. அதனை விட்டுவிலகிவிடவே நான் விரும்பியிருந்தேன். ஆனாலும் எல்லாருக்கும் போலவே எனக்கும் படகு தன்னுடன் பிணைத்திருந்தது. நான் மெல்ல உடைத்துக்கொண்டு வெளியேறினேன். படகிலிருந்து. விடுபட்ட்டேன். அதன் சுழலிருந்து. உண்மையில் ஆசுவாசமாக உணர்ந்தேன். மிகச் சில நேரத்திற்கு. மிகக்குறைந்த நொடிகளிலேயே நான் நீரில் தனித்திருப்பதை உணர்ந்து அச்சம் கொண்டேன். இருபது வருடங்கள் ஆகியிருந்தது.

எத்தனை காலங்கள் படகிலிருந்தேன் எத்தனைக்காலம் தத்தளித்தேன் என்பதை அறியேன். ஆனால் தத்தளிப்பதை அறிந்தபோது இருபது வருடங்கள் ஆகியிருந்தது. எப்பொழுதாவது கவனித்திருக்கிறாயா கெளரி, நீச்சல் அறியாதவர்கள் நீரில் தள்ளப்படும்போது, அவர்கள் பயம் கொள்ளத்தொடங்கும் காலம் வரை அவர்களை நீர் விழுங்குவதில்லை.அவர்களை மிதக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறது. அவர்கள் பயங்கொள்ளத்தொடங்கும் அந்த முதல் நொடியிலிருந்து அவர்கள் மூழ்கத்தொடங்குகிறார்கள்(இன்று எனக்கு நீச்சல் தெரியும். தனியாக ஆண்டாட்டுகளாக அடித்து பழகி, இப்பொழுது படகைவிட நீச்சலே வசதியாக இருக்கிறது.இந்தக்கதைக்கு பிறகு வருகிறேன். முதலில் கனவைச் சொல்லிமுடித்துவிடுகிறேன்). ஆம். நான் தனித்து தத்தளித்துக்கொண்டிருக்கையில்தான் அந்தத் தக்கையைக் கண்டறிந்தேன்.

மிகப்பூஞ்சையான, அழகான சிறிய மரத்துண்டு. அதைப்பற்றிக்கொள்வதையும் விட்டுவிலகுவதையும் பற்றி எனக்கு இரண்டு வித குழப்பங்கள் இருந்ததை இன்று சொல்லமுடியும். என் தனிப்பட்ட பயத்திற்கு ஒரு மருந்தாக அதைப்பற்றிக்கொள்ளமுடியும். முன்பே கணித்ததுபோல, என் சுமையைத்தாங்குமளவு அதன் திராணி குறித்து எனக்கு சந்தேகங்கள் இருந்தன. இந்தச் சந்தேகத்தின் பொருட்டு அத்தக்கையை விட்டு விலகியே இருந்தேன். அது நீர் ச்சுழலில் மீண்டும் மீண்டும் என் மீது மோதிக்கொண்டிருந்தது. நான் மீண்டும் மீண்டும் அதை நதிப்போக்கில் தள்ளிவிட்டுக்கொண்டிருந்தேன். இப்போது நான் எங்கிருக்கிறேன் எனக்குழப்பமாக இருக்கிறது. நிச்சயம் தக்கை என்னுடன் இல்லை. நான் மூழ்கவும் இல்லை. நீச்சல் அறிந்திருக்கிறேன். நதிச்சுழல் குறித்த பயங்கள் அந்தத்தக்கை தொட்டு விலகிய முதல் நொடியிலேயே அழிந்துவிட்டன. அந்த்தக்கையைப்பற்றி எப்பொழுதாவது எங்காவது பேசவேண்டும் கெளரி. ஆனால் நம்புவார்களா. நான் தனித்து மிதப்பது குறித்த கேள்விகள் முதலில் வரும். கடந்து செல்லும் படகுகளுக்கு கையசைத்தபடி மிதந்து கொண்டிருக்கும் ஒருவன், நீச்சல் தெரியாமல் தவறி விழுந்தவன் என்றால் நம்புவார்களா. நானே நம்பமுடியாது. நான் தவறி விழுந்தவனா தள்ளிவிடப்பட்டவனா என்ற குழப்பமே இன்னும் தீரவில்லை. ஒவ்வொன்றாய் ஒவ்வொரு கடிதமாய் உன்னிடம் எழுதிச் சொல்வதில் எதோ ஒரு ஆசுவாசம் எழுகிறது கெளரி. பார். வெறும் கனவு. இத்தனை வார்த்தைகளை விரயம் செய்து சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனாலும் கெளரி, கேட்காத தூரத்திலிருக்கும் உன்னிடம் சொல்வதற்கு சொல்லமுடியாத தூரத்திலிருக்கும் எனக்கு ஏராளமான சொற்கள் இருக்கின்றன.

உன் அசைவுகளை சில நேரம் சந்திக்கிறேன். விரித்த விரல்களின் நகங்களுக்குள் அலைபாயும் மோதிரத்தை தன்னிச்சையாகச் சுழற்றும் சுண்டுவிரல் அசைவு நினைவிலிருக்கிறது. ஆட்காட்டி விரல் கொண்டு நீ ஒதுக்கிவிடும் முடிக்கற்றைகளின் அலையசைவுகளை சிலர் செய்திருக்கிறார்கள். ஆட்காட்டி கொண்டு நீ சரி செய்யும் நெற்றிப்பொட்டு எல்லா திசைகளிலிருந்தும் வருகிறது. முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒரு ஸ்டிக்கர் பொட்டை மறக்காமல் வாங்கி ஒட்டிவிடுகிறேன். ஒருபோதும் உனதில்லை எனினும் உனக்காக காத்திருக்கும் அந்தச் சிவப்பு மாறாமல் இருக்கிறது. கண்விழிக்கும் திசையில் சுவரில் ஒட்டப்பட்டும் மஞ்சள் மலர்கள் உன்னை நினைவுறுத்துவதாற்காகவே அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன.

உன் விருப்ப நிறம் நினைவிலில்லை கெளரி. எனக்கு விருப்பமான உன் நிறமாக எப்படியோ மஞ்சள் மனதில் பதிந்திருக்கிறது. விளையாடுவதுபோல சீண்டுவதுபோல வெறுப்பதுபோல மீண்டும் மீண்டும் உன் மஞ்சள் நிறத்தை உன்னிடம் பலமுறை நியாபகப்படுத்தியிருக்கிறேன். அப்பொழுது அது என் நினைவில் நீங்காமல் இருப்பதற்காகவேயென நான் அறிந்திருக்கவில்லை. அறியாமல் செய்த ஒவ்வொன்றையும் மீட்டெடுத்து எழுதுவதற்காகத்தான் எல்லாமும் நிகழ்ந்ததா கெளரி?

சுழல் மீண்டும் மீண்டும் என்னை ஆரம்பத்தில் கொண்டு விடுகிறது. முதற் சொல் பேசிய நாட்களில் அவ்வப்போது உறைந்து போகிறேன். முதல் ரகசியம் சொன்ன மாலையை ஒரு முறை நினைத்துப்பார்க்கிறேன். முதல் மறுதலிப்பின் கணத்தை மீண்டும் உருவாக்குகிறேன். எல்லாவற்றிலும் ஒரு போதாமை இருந்தது. அன்பும் புன்னகையும் அசைவுகளும் எல்லா நேரத்திலும் இல்லை இல்லை இன்னும் இன்னும் இன்னும் என்றே உள்ளே கொதித்துக்கொண்டிருந்தன.

காலம் ஊறவைத்த திராட்சையென மதுவாக நொதித்திருக்கிறது சொற்கள். சொல்லப்படாதவை. சொல்லி புரிந்துகொள்ளப்படாதவை. சொல்லிச் சொல்லித் தீராதவை. மீண்டும் மீண்டும் அந்தக்கணங்களில் வாழ்தல் வரமாக விதிக்கப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். அல்லது இது சாபமா. ஒரே கணத்தில் உறைதல் வரமா அல்லது திரும்பத்திரும்பே அங்கே நிகழ்வது வரமா. முடிவற்று பெருஞ்சுழல் போல மீண்டும் மீண்டும் அதே தொடக்கத்தில் கொண்டுவந்து விடும் விளையாட்டின் மீது எந்தக்கணத்தில் வேட்கை கொண்டேன். என்ன காரணம் கொண்டு நீதான் நீ என்று அறியாமலையே சொற்களால் உன்னுடன் போரிட்டேன். எந்தக்கணத்தில் விலகமுடிவெடுத்தாய். எப்படி அதை அறியாமல் ஒரு விளையாட்டைப்போல தொடர்ந்து என் அம்புகளை இழந்தேன்.

உன்னை அறிவதன் முன்னதாகவே நான் சொற்களுடன் விளையாடிக்கொண்டிருந்தவன் கெளரி. பிறகுதான் மெளனத்திற்கு வந்தடைந்தேன். இந்தத்தனிமையில் மெளனம் எத்தனை அழகானது என்பதை அறியஏண்டியிருக்கிறது. சொல்லற்று மெளனத்தில் உள்ளாக உலாவுகையில் எத்தனை கூர்மையாக சொற்கள் உருவாகின்றன என்பதை அவதனிப்பது மாபெரும் விளையாட்டாக மாறியிருக்கிறது. வெறுப்பின் சொற்களிலிருந்து அன்பின் நியாபகத்திற்குத்திரும்பும்போது நதி அதன் கடலுடன் ஆதூராமாகப் போய் அடைந்துகொள்கிறது.

மெளனம் அறிதலின் இறுதிக் கண்ணி கெளரி, சொல் அதன் முதல் காலடி. முடிவற்ற பெரும் பயணத்தில் நினைவுகளுடன் அமைதியாகப் பயணப்படுவதென்பது ஒரு பெரும் ஆடல் கெளரி. அலையடிக்கும் சொற்களை உள்ளாகவே மென்றபடி. கர்வத்தின் கணங்களை உருவாகும் முன்னதாகவே வெண்றபடி. வெடித்த இலவம்பஞ்சு விதைகளுடன் தனக்கான நிலம்தேடி பறப்பது போல. கூட்டிலிருந்து தள்ளிவிடப்பட்ட கழுகுக்குஞ்சுகள் தன் வானத்தையும் இறகையும் அறிந்துகொள்வது போல. ஆற்றொழுக்கின் நதி நீர் தேங்கும்போது உருவாகும் மீன்கள் தன் முதல் உணவைப் புசிப்பது போல.

மஞ்சள் நிறத்தின் கடைசி அடையாளமாக எஞ்சியிருப்பது உன் மஞ்சள் குடை கெளரி. பிரிதலுக்கு பிறகான மழை நாள் ஒன்றில் வேகமாய்க் கடந்து செல்லும் பெண் நீயென்பதை வெகுதொலைவில் அறைந்திருந்தேன். பிறகு கொஞ்சம் மறைந்து நின்றேன். வெறுப்பின் கண்களை விருப்பத்தின் கண்களுக்கு மறுதிலியாக பார்ப்பதில் ஒப்பில்லை. கண்களுக்குள் அதே அமைதி.உடன் சிரித்துவரும் தோழியிடம் அதே கன்னம் பூரித்த புன்னகை. உனக்குள்ளும் சொற்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் அவை எனக்கானவை இல்லை. எனக்குள் ஓடிக்கொண்டிருந்த சொற்கள் உனக்கானவை. அன்று என் அருகமர்ந்தவள் என் தோழி. உன்னை அறியாதவள். எனக்குள் இருக்கும் உன்னையும் அறியாதவள். ஆனால் கெளரி என்ற பெயர் தெரியும். அதன் சூழலில் உருவாக்கிய சொற்களை அறிந்திருவள். நான் முற்றிலுமாக அவளிடமிருந்து உடைந்திருந்தேன்

சொற்கள் வெறும் ஒலியாக மாற ஆளுக்கு ஒரு நபர். மஞ்சள் குடை. அரக்கு கைப்பிடி. பிடித்திருந்த விரல் நகங்களில் தீட்டப்பட்டிருந்த கருஞ்சிவப்பு நகச்சாயம். கண்கள் மறைந்து நாசியும் உதடுகளும் மட்டும் வெளிப்படுத்தும் மஞ்சள் முகமூடியை இன்றும் என்னால் வரைய முடியும். மழைபட்டு உறைந்திருந்த கூந்தல் பின் தள்ளப்பட்டு, பனிபட்ட மல்லிகை முன்வந்திருந்தது. வெகு சுலபமாக கடந்து சென்றவள் நான் இருப்பதை அறிந்திருக்கப்போவதில்லை.

ஒருவேளை அறிந்திருக்கலாம். உன் கண்களின் வேகம் அறிந்ததுதான். அது பெண்களின் கண்வேகம். அசைவுகளுக்குள் அத்தனை நபர்களையும் எடைபோட்டு பின் தன் பாதைக்குத் திரும்பிக்கொள்ளும் கொலைகாரனின் வேகம். நீரருந்தவரும் மானுக்காக நீருக்குள் கண்மூடிக்காத்திருக்கும் முதலையின் கண்கள். ஆழ் நீரில் உணவைக்கண்ட பருந்தின் அனிச்சை அசைவுகள். அவற்றை அறிந்திருந்தேன். வெறுத்தும் இருந்தேன். உனக்கு முன்பு.

பிறகு அந்தக் கண்களை பார்க்க வாய்க்கவேயில்லை. இந்த மஞ்சள் குடை மறைத்தது போல. மறுபுறம் திரும்பிக்கொண்ட உன் அன்பைப்போல. பிரியம் ஒரு குழந்தையாக வருகிறது. கிழவனாக மறைந்துவிடுகிறது. இருத்தல் மட்டுமே மாறிலி. அதுவே சாபமும். வருதலும் போதலுமான பயணத்தில் இருக்கும் சிலைகளைப் பூசி விளக்கேற்றி ஏன் செல்லவேண்டும். காட்டுக்கொடி சுற்றிக்கிடந்த மறைந்த தெய்வங்களை ஏன் வேலியில் அடைத்து தனித்து விட்டுச் செல்லவேண்டும். உணவற்ற தெருமிருகத்திற்கு ஒருவேளை உணவளித்து விட்டுச் செல்லும் உங்களுக்குத் தெரியுமா. இறப்பினைத் தள்ளிப்போட்டு பசி நாட்களை நீட்டிக்கிறீர்கள் என்று?

புன்னகை சொல்லாகி நின்றது. சொல் மெளனமாகி நின்றது. மெளனம் அறிதலாகி நின்றது. அறிதல் இசையானது. இசை அனல் ஆனது. அனல் காடுகளை எரிக்கிறது. மெளனம் சொற்களை எரிக்கிறது. பயணம் எரிதலை அன்பென்கிறது. அன்பு எல்லாம் கனவென கடந்து செல்கிறது. எந்தப் பெரு நாடகத்தின் பாத்திரம் நீ எனக்களித்து விட்டுச்சென்றது.பெரு நாடகத்தின் இயக்கி எந்தக்கணத்தில் மேடையிலிருந்து இறங்கிச் சென்றாய்? இந்த ஒப்பனையை நான் எப்பொழுது கலைக்கவேண்டுமென யார் எனக்குச் சொல்வார்கள் கெளரி?

– நந்து

Older Entries

%d bloggers like this: