ரிபு – 7

1 பின்னூட்டம்

நந்து அறைக்குள் நுழைந்தபோது அறை சிதறிக்கிடந்தது. காலியான புட்டிகள் உருண்டிருந்தன. செய்தித்தாள் மீது பரத்தியிருந்த கிழங்குவறுவல் துண்டுகள் காற்றில் பறந்து அலங்கோலமாக இருந்தது. இன்னும் ஒரு புட்டி மிச்சமிருந்தது. இன்பா கதை சொல்பவனைப்போல கை நீட்டி அமர்ந்திருந்தான். சந்துரு கைகளை பின்னால் ஊன்றி கதை கேட்டுக்கொண்டிருந்தான். மீதி இருவரும் புன்னகையுடன் திரும்பி நந்துவைப்பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டார்கள். இடங்கள் மாறியிருந்தன. ஒரு இடவெளியைக் கண்டறிந்து நந்து போய் அமர்ந்தான். இன்பா தலை திருப்பி நந்துவைப்பார்த்து `அவன மிதிக்கணும்ல. அதான் சொல்லிட்ருக்கேன்` என்றான். எவனை எதற்காக என்ற கேள்விகள் தேவையில்லை. சொல்லத்தொடங்கப்ப்ட்ட கதைகள் அதன் பாதைகளைத் தானே கண்டறியட்டுமென அமைதியாக இருந்தான். இன்பா பதில் வராததில் குழம்பி சந்துரு பக்கம் திரும்பி மறுபடி `அவனை மிதிக்கணும்ல` என்றான்.

`மிதிப்போம் சரி. எதுக்காம்` சந்துரு சொல்லிவிட்டு நந்துவைப்பார்த்து மறுபடி சிரித்தான். `எங்கிட்டையே லெட்டர் குடுக்க வாரான் பாத்துக்க. அவட்ட குடுக்கச் சொல்லி. உன் ஆளுக்கு. நீயாரு நாம யாருன்னு தெரியும்ல அவனுக்கு. அப்புறமும் கொழுப்பு. அவன விட்டுட்டே இருக்கியல. அதான் ஆடுதான்` சொல்லிவிட்டு இன்பா ஆசுவாசமானான். சந்துரு தன் கதையைச் சொல்கிறவனுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதவன் போல சுவற்றின் மூலையில் ஆடிக்கொண்டிருக்கும் சிலந்தியைப் பார்த்துக்கொண்டிருந்தான். சிலந்தி வலையை இன்னும் பெரிய பரப்புக்கு விரிப்பதைப்போல சுவரினை அளைந்து கொண்டிருந்தது. ஒரு நூலில் வலையிலிருந்து பழைய திரைப்பட நாயகர்களைப்போல ஆடியிறங்கி பின் மேலேறி சுவற்றில் கால்களை வைத்து உந்தி மறு முனையைத் தொட்டது. அங்கிருந்து மீண்டும் ஆடல் மறு முனை. நாங்கள் பார்த்துக்கொண்டிருக்குமே வலை தன் பரப்புகளை இழுத்து பெரிதாகிக்கொண்டேயிருந்தது. திடீரென சன்னதம் வந்தவன் போல ` அடிக்கிறது இல்ல. அடிச்சா நாலு நாளாவது கிடைல கிடக்கணும். இன்னும் காலேஜ்ல பண்ணாப்ல அவன் கிட்ட போய் பஞ்ச் பேசிட்டு வர்றது மறு நாளே அவன் வந்து திருகுத்தாளம் பண்றதுன்னு இருக்கக்கூடாது` என்றான் சந்துரு.

`லேய் பண்றதெல்லாம் செர்ரி நான் நாளைக்கு ராத்திரிக்கு ஊருக்குப்போவணும். அதுக்கு முன்னாடி பண்னுங்க. நானும் ரெண்டு போட்ருதேன். ஆபிஸ் கருமம் தத்தியாப்போவுது கை சுருசுருங்கு` என்றான் நந்து. `இங்கதான் சிஎஸ்ஸி வாரான் பய. கனராபேங்க் வாசல்ல வச்சு அடிப்போம். அல்லது ஆரெம்பி பைக்ஸ்டாண்ட்ல வச்சுப்போம்` இன்பா சிரித்தான். `பேங்கு அப்பா வந்தாலும் வருவாரு. இன்பா நீ அவன பேச்சுக்காட்டி பைக்ஸ்டாண்டு கூட்டி வா பாத்துப்போம்`என்றான் சந்துரு. `லேய் போதவாக்குல எதாவது பேசிட்டு நாளைக்கு விடிஞ்சதும் முருகான்னு மலந்துராதீங்கடே. நாளன்னிக்கு இழுத்தா நான் வரமுடியாதுபாத்துக்க` நந்து பெப்சியின் கடைசி சிப்பைக் கவிழ்த்துக்கொண்டான். இன்பா தரையைத்துடைப்பவ்ன்போல கண்ணை மூடியபடியே துளாவி சிப்ஸை எடுத்து போட்டுக்கொண்டான். `அடிச்சுட்டு ஊருக்கு ஓட்ற நாய்க்கு பேச்சப்பாத்தியா. நாங்க இங்கதாம்ல இருப்போம். அடிக்கிறொம் நாளைக்கு` என்றான். மிச்சம் இருந்த இருவரும் எல்லாவற்றுக்கும் எப்போதும் தயாராக இருக்கிறவர்கள். போதையின் கடைசி கணங்களில் இருந்தார்கள். கண்கள் சுருங்கி மின்விசிறியைப் பார்த்தபடி `இருக்கோம்ல. நாங்களும் வருவோம். நாளைக்குச் சாயங்காலம் என்ன` என்றான் ஒருவன்.

நால்வரும் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து சிரித்துக்கொண்டார்கள். பிறகு நந்துவைப்பார்த்து சிரித்தார்கள். `சரில கடைசி கட்டிங். எடு ஒரு சியர்ஸ்` என்றான் இன்பா. `முடிஞ்சிருச்சு மாப்ள இரு வர்றேன்` நந்து எழுந்தான். கதவைத் திறந்து பட்டாசலுக்கு வந்தான். குளிர்சாதனப்பெட்டி இருட்டில் பூனையைப்போல உறுமிக்கொண்டிருந்தது. இருளில் அதன் கசியும் ஒளியை நோக்கி நடந்து கதவைத்திறந்து குனிந்து சின்ன ஒரு பெப்சி கேனை எடுத்துக்கொண்டான். நிமிர்ந்த போது அங்கே அவள் நின்றிருந்தாள். கெளரி. `என்ன கொள்ளக்கூட்டத்தலைவனாட்டம் திட்டமெல்லாம் முடிஞ்சுதா` என்றாள். நந்துவிற்கு முழங்கை மயிர்கள் கூச்செறிந்தன. `ம். சும்மா பேசிட்டு இருந்தோம்` திரும்பி நடந்தான். `உங்க நம்பரென்ன` தன் அலைபேசியை கையில் பிடித்தபடி கேட்டாள். நோக்கியா. எண்களின் வெள்ளைக்கண்ணாடி இருளில் மின்னியது.

`எதுக்கு` தன் அலைபேசி வீட்டில் வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது.

` நாளைக்கு யார் கிடைல கிடக்குறாங்கன்னு கதை கேட்கணும்ல`

`ப்ரியாகிட்ட கேட்டுக்கங்க`

`ம்ம்க்கும். அவ உங்க பேச்சுல தலையிடக்கூடாதுன்னு புலம்பிகிட்டு இருந்தா. என் காதுல விழுந்தத வச்சுக்கேட்டா ஒட்டுக்கேட்டியான்னு அதுக்கு வேற மல்லுக்கு நிப்பா`

`ம்`

`என்ன ம். குடுக்க விருப்பமில்லைன்னா சொல்லுங்க. நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்கமாட்டேன்`

பள்ளியில் வாய்ப்பாடு ஒப்பிக்கும் சிறுவனைப்போல எண்களைச் சொன்னான். சொன்னபிறகு ஆங்கிலத்தில் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. `இப்ப மொபைல் இல்ல. ஒரு ஹாய் அனுப்பி விடுங்க. நாளைக்கு நம்பர சேவ் பண்ணிக்கிறேன்` என்றான். அவள் எதுவும் சொல்லாமல் திரும்பி பிரியாவின் அறைக்குச் சென்றாள். கதவருகில் `ம்` என்பதுபோல் கேட்டது. அல்லது பெருமூச்சாக இருக்கலாம். சிறிது நேரம் குழம்பி நின்றிருந்துவிட்டு சந்துருவின் அறைக்குவந்தான். மற்றவர்கள் அப்டியே படுத்திருக்க, சந்துரு மீதிக்குப்பைகளைச் சுருட்டி மூலையில் பிளாஸ்டிக் பையில் போட்டுவிட்டு படுக்கைகளைப் போட்டுக்கொண்டிருந்தான். ` நீ வரவரைக்கும் இருப்பாங்களா. முடிஞ்சுது. நீ கட்டில்ல படு. நான் இவனுக கூட படுத்துக்கிறேன்`

நந்து தரையில் படுத்திருந்தவர்களைத்தாண்டிப்போய் கட்டில் ஏறினான். மின்விசிறி சத்தமாக தலைக்குள் சுழன்றது. சந்துரு புரண்டு எதையோ முனகி அமைதியானான்.

o

வெயில் இறங்கிக்கொண்டிருந்தது. நந்து கண்ணன் கபே தகரக்கூரையின் கீழாக நின்று காபியைக் குடித்துக்கொண்டிருந்தான். கூப்பிடும் தூரத்தில் நாகர்கோயிலுக்கும் திருனெல்வேலிக்குமான பேருந்துகள் ஒன்றையொன்று எதிர்முட்டுவது போல் ஓடிவந்து பேருந்து நிலையத்திற்குள் வளைந்து திரும்பிக்கொண்டிருந்தது. கபே கனராபேங்க் மாடியிலிருக்கும் சிஎஸிக்கான வழிக்கும் பைக்ஸ்டாண்டுக்கான வழிக்கும் மிகச் சரியாக மத்தியில் இருந்தது. சுழல் படிக்கட்டுகளின் நெரிசல் தூரத்தில் தெரிந்தது . முந்தைய வகுப்பு முடிந்திருக்கவேண்டும். அடுத்த வகுப்பிற்கான நுழைகிறவர்களும் மேலிருந்து இறங்கி வருகிறாவர்களும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டும் விலகிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சென்றனர். இன்பா வந்திருக்கவில்லை. கிட்டு நிலையத்திற்கு வளையும் திருனெல்வேலி பெயரிட்ட பேருந்திலிருந்து ஓட்டத்திலிருந்து இறங்கி இருபுறமும் பார்த்துவிட்டு சாலையைக் கடந்து மறுபுறம் வந்தான். சாலையைக் கடந்தபிறகு நந்துவைப்பார்த்துவிட்டு சற்றுக்குழ்ம்பி கையசைப்பதா வேண்டாமா எனக்குழம்பினான். நந்து கிளாஸை கபே சுவற்றில் வைத்துவிட்டு கையசத்தான். கிட்டுவும் கையத்துவிட்டு அவனை நோக்கி தயங்கியபடியே வந்தான். நந்து காசைக்குடுத்துவிட்டு அவனை நோக்கிச் சென்றான்.

`என்னல இங்க நிக்க. உன் பசங்க இல்லாம, மெட்ராஸ்லதான இருக்க` என்றான் கிட்டு. `ஆமா லிவுக்கு வந்தேன். ஏர்வாடி போணும் அதான் நிக்கேன் . நீ எப்படில்ல இருக்க. என்ன பண்ற` நந்து சிந்தனையில்லாமல் வாயில் வந்ததைச் சொன்னான். இன்பா வரும்வரை பேச்சுக்குடுக்கவேண்டும். `ம். மாமா திருவனந்தபுரத்துல கூப்ட்றேன்னு சொல்லிருக்காரு. சும்மா இருக்கோம்னு அப்டியே கம்யூட்டர் கிளாஸ் போய்ட்டு இருக்கேன்` என்றான். நந்து அலுவலகக் கதைகளைச் சொல்லியய்படியே பைக்ஸ்டாண்ட் நோக்கி நடந்தான். கிட்டு பேசிக்கொண்டே கூடவந்தான்.`கிளாஸ் போய்க்கலாம் இப்ப என்ன. சும்மா சர்டிபிகேட்டுக்காக பண்றதுதான இதெல்லாம்`. நந்து பைக்ஸ்டாண்டில் மறைவான வெளியேறும் வழியில் ஒதுங்கி நின்று சுவற்றில் ஒற்றைக்கால் மடித்து நின்றான். கிட்டு எதிரில் கையாட்டி பேசிக்கொண்டிருந்தான். சராசாரிக்கு சற்று அதிகமான உயரம். அண்னாந்து பார்த்து பேசிக்கொண்டிருந்ததில் நந்துவிற்ர்கு கழுத்து இழுத்தது. நெளித்து கழுத்திற்குச் சொடக்கெடுத்து திரும்பும்போது இன்பாவும் சந்துருவும் பைக்கை ஸ்டாண்டிற்குள் நுழைத்தார்கள். விரல்களில் சொடக்கெடுத்து நந்து தயாரானான். பின்வாசல் வழியாக வெளியேறி எதற்கும் சம்பந்தமில்லாதவர்கள் போல இன்பாவும் சந்துருவும் வந்தார்கள். `இந்தா வந்துட்டாங்க்கல்ல பாண்டவனுகளுல்ல ரெண்டு பேரு. மிச்ச ரெண்டு பேரும் வரானுகளாமா` கிட்டு சொல்லிவிட்டு சுற்றிலும் பார்த்தான்.

பதட்டம் தெரிந்தது. நந்து எதுவும் அறியாதவன் போல கால்மாற்றி நின்றான். கைகாட்டினான். `என்னல மூத்துரசந்துல என்ன பண்ணுதிய` என்றான் இன்பா. `சார் வருவீங்கன்னு வெயிட் பண்றோம், மிச்ச ரெண்ட எங்க` என்றான் கிட்டு. `சார் பெரிய சூரரு இவருக்கு படையத்தான் கூட்டிவரணும். நான் ஒருத்தன் போதாதா` இன்பா சீண்டினான். கிட்டு மையமாப் புன்னகைத்தான். `என்ன இப்ப` என்றான். `ஒண்ணுமில்ல. சந்துரு ஆளு பின்னாடி சுத்துறத நிறுத்திக்க என்கிட்ட அவளுக்கு லெட்டர் குடுக்கிற சீன விட்ரு. அவ்ளொதான்` இன்பா கோணலாகச் சிரித்தான். கிட்டு ஒன்றும் சொல்லவில்லை. முத்துவும் மணியும் மறுபுறத்திலிருந்து வந்தார்கள். `என்னல சும்மா பேசிட்ருக்கிய` வந்த வேகத்தில் மணி துள்ளி கிட்டுவை அடித்தான். காதுக்கு சற்று மேல் அடிவிழுந்து கிட்டு நின்ற இடத்தில் தடுமாறினான். இன்பா இருவரின் தோளில் கைவைத்து எக்கி வயிற்றில் மிதித்தான். கிட்டு வயிற்றைப்பிடித்துக்கொண்டு மடங்கி அமர்ந்தான். ஐவரும் சுற்றிலிருந்து கை நீட்டி கன்னத்தில் மாற்றி மாற்றி அறைந்தார்க்ள். கிட்டு ஓடமுடியாமல் திமிறி சில அடிகளை விலக்கிவிட்டு பல அடிகளை தலையிலும் மறைத்திருந்த கைகளிலுமாக வாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். சந்துரு கண்ணைக்காட்ட இன்பா பேண்ட்பாக்கெட்டிலிருந்து அதை எடுத்தான். சைக்கிள் பல்சக்கரத்தை இரண்டாகவகுந்து கூர்முனைகளை மழுங்கடிட்த்து தேய்க்கப்பட்டிருந்த இரும்பு வளையம். இடைவெளியில் கைவிட்டு இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு ஓங்கி குத்தினான். முதல் குத்து ம்ணிக்கெட்டில் விழுந்தது. கிட்டு பதறி கையை உதற அடுத்த குத்து ஆளமாக கன்னத்தில் விழுந்தது. வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. ரத்தைத்தைக் காறித் துப்பும்போது இரண்டு பல்துண்டுகள் விழுந்தன. சந்துரு அதை வாங்கி தானும் ஒரு குத்து குத்தினான். காதில் மண்டையெலும்பில் ஆழமாக அடிவிழுந்த சப்தம் நங்கென்று கேட்டது. கிட்டு மல்லாந்து விழுந்தான். கண்காட்டிவிட்டு மணியும் முத்துவும் நடந்துசென்று திருனெல்வேலி செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டனர். சந்துரு ஓடிப்போய் பைக்கை எடுத்துவந்தான். இன்பாவும் நந்துவும் ஏறிக்கொண்டனர். பைக்கைக் கிளப்பி சந்துரு சாலையில் கலந்தான். வளைவெடுத்து பாதையைக் கடக்கும்போது நந்து திரும்பிப்பார்த்தான். கிட்டு அதே இடத்தில் மல்லாந்து கிடந்தான்.

`லே என்னல இப்படி அடிச்சுப்புட்டிய. செத்துகித்து போய்ருக்கப்போறான்ல. ` நந்து குரல் நடுங்கிக்கொண்டிருந்தது. ` நீ வாயவைக்காத. பல்லு ரெண்டு விழுந்துருக்கும். இனி மொளைக்காது. எங்ககிட்ட வச்சுக்கிட மாட்டான். நீ ஊருக்குப் போறவன் ஏங்கிடந்து சலம்புத`. சந்துரு நந்துவை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு வாரம்ல என்று கைகாட்டிவிட்டுச் சென்றான். நந்து உள்ளே போய் சட்டையைக் கழற்றி ரத்தம் இருக்கிறதா என சுற்றிப்பார்த்துவிட்டு இல்லையென்றதும் திருப்தியாகி வெளுப்புத்துணி மூட்டை மீது எறிந்துவிட்டு சாரம் மாற்றி வந்து மறு நாள் கிளம்புவதற்காக துணிகளை மடித்து வைத்தான்.

அலைபேசியை எட்டிப்பார்த்தான் அது சிணுங்கும் விளக்குகளின்றி உயிரற்றுக்கிடந்தது. ஒரு பகல் முடியப்போகிறது. இன்னும் அவளிடமிருந்து எந்த குறுஞ்செய்தியும் வந்திருக்கவில்லை. கையில் வைத்திருந்தால் அவள் எண்ணை வாங்கியிருக்கலாம். அவளாக அனுப்பும் வரை அவள் எண் தெரியாது. எதோ ஒரு தயக்கம் பிரியாவிடம் அவள் எண் கேட்பதிலிருந்து தடுத்தது. ஒரு இரவில் அறைகுறையாகப் பார்த்த பெண்ணைப்பற்றி ஏன் இவ்வளவு குழம்புகிறோம் என்று தோன்றியது. இது நிகழ்வது எதிர்பார்த்திருந்தோம் என்ற எண்ணம் வந்து பழைய எண்ணத்தில் மீது மோதியது. தலையை உலுக்கிக்கொண்டான். அடுக்களை சென்று வீட்டுத்தீவனங்கள் சிலவற்றை கவரில் கட்டி வந்து பெட்டியில் வைத்தான். மீண்டும் ஒருமுறை சுற்றிவந்து கொடியில் காய்ந்துகொண்டிருந்த துணிகளை மடித்து வைத்தான். வந்து படுத்து எப்போது உறங்கினோம் என்றறியாமல் உறங்கிப்போனான்.

o
நந்து எழுந்தபோது நன்றாக இருட்டியிருந்தது. பதறி மணி பார்த்தான். ஏழரை ஆகியிருந்தது. குருவாயூர் எக்ஸ்பிரஸுக்கு இன்னும் நேரமிருந்தது. ஆசுவாசமானான். போய் முகங்கழுவி அடுப்படிக்குப் போனான். கடுங்காப்பி இருந்தது. சுற்றிலும் பார்த்தான் பால் இல்லை. சுடவைத்துக் குடித்தான். ` நாந்தான் வரும்லால. நீயென்ன அடுப்புல நிக்கது. ஆம்பள அடுப்படில நிக்காதன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்` டிவியிலிருந்து அம்மா எழுந்துவந்தார். `பால் இல்ல பாத்துக்க. சரி வரட்டும் போடுவோம்னு இருந்தேன் நீபாட்டு வந்துட்ட` என்றார். ` சென்னைக்குப்ப்போய் தான் தான் போடவேண்டும் என்றாலும், கடையில்தான் குடிப்பேன் என்றாலும் என்ன சொன்னாலும் அவருக்கு குரல் உடைந்துவிடும். சமாதனப்படுத்துவது பெரும்பாடாகிவிடும். ஒண்ணும் சொல்லாமல் காபியை எடுத்துக்கொண்டு அடுக்களையைவிட்டு வெளியே வந்தான். குடித்துவிட்டு டம்ப்ளரை உணவுமேசையில் பாத்திரங்களுடன் வைத்துவிட்டு துண்டை எடுத்துக்கொண்டு குளிக்கப்போனான். வெந்நீர் சூடு இறங்கியிருந்தது. கன்னத்தில் ஓங்கி அடித்ததில் முழங்கைக்கு அருகே இருந்த உளைச்சலுக்கு இதமாக இருந்தது. குளித்துவிட்டு வெளியே வந்தான். `போன் கத்திட்டே இருந்துது போய் என்னானு பாரு` என்றார்.

வழக்கமான குறுஞ்செய்திகள். மாலை வணக்கங்கள். பல எண்களுக்கு நடுவே அவள் குறுஞ்செய்திகள் வரிசையாக இருந்தன. `ஹாய்` . `என்ன சில்லுண்டித்தனமெல்லாம் முடிஞ்சுதா` ` நாளைக்கு யார அடிக்கிறதா இருக்கீங்க` `பிசியா“ நான் கெளரி தெரியலையா“ஹலோ` . பதினைந்து நிமிடத்தில் வரிசையாக அனுப்பியிருந்தாள். `ஹாய். கிளம்பிகிட்டு இருக்கேன். ஊருக்கு` ஒரே குறுசெய்தியாக அனுப்பிவிட்டு கிளம்பினான். ஜீன்ஸுக்கு மாறினான். போட்டோவாகத் தொங்குகிறவர்கள். அருகிலிருக்கும் அம்மன் கோயில் குங்குமம். வரிசையாக ஆசீர்வாதங்கள். முடித்துவிட்டு மீண்டும் அலைபேசியையும் பேக்கையும் எடுத்துக்கொண்டான். அம்மாவிற்கு ஒரு வணக்கம். `வரேன்`. `ம். பாத்துப்போ`. தெருவில் இறங்கி நடந்தான். இருள் கவிந்திருந்தது. வழக்காமன நாய்கள் காலடி கேட்டு குரைத்தபடி வந்து முகம் பார்த்து ` நீயா. யாரோன்னு நினைச்சேன். போய்ட்டுவா போய்ட்டு லெட்டர் போடு` வகை முகக்குறிகளுடன் தலையாட்டிவிட்டு வீட்டுக்குள் போயின. சிரித்துக்கொண்டான். இருபது சொச்ச வருடங்களில் திருடர்க்ளையே பார்த்திராத குறு நகரத்திலேயே ஒதுக்குப்புறமான வீட்டுத்தொகைகளில் யாரைத்தேடி அலைகின்றன இந்த நாய்கள் என்று தோன்றியது. மீண்டும் அலைபேசியை எடுத்துப் பார்த்தான் ` அடேங்கப்பா. அதுக்குள்ள சென்னை ஊராவும், ஊர் வேறயாவும் மாறிடுச்சா` அவள்தான். அவளின் சீண்டல்கள் இரண்டே இரவுகளில் பழகி புன்னகைக்க வைத்தன. `அப்டியே சொல்லிப்பழகிட்டேன்` `ம். எப்படி போறீங்க பஸ்ஸா?` என்றாள் `இல்ல ட்ரெயின் . ஒம்பதரை குருவாயூர்` என்றான்.

`சரி கேட்டதுக்கு பதில் வர்லியே` `என்ன கேட்டீங்க? எதுக்கு பதில்வரல` `உங்க ரவுடித்தனம் பத்தி` `ம்ம். அதெல்லாம் முடிஞ்சுது. பல்லு பேந்துருக்கும். இனி எங்க வழில வரமாட்டான்` ` உங்க வழின்னா. ஊருக்குப்போற வழியா` `இல்ல. சந்துரு வழிக்கு` அனுப்பியபிறகு அவளுக்குத் தெரியுமா என்ற சந்தேகம் வந்தது ` எங்க அஞ்சு பேர் வழிக்கும்தான் அதுக்குத்தான அடிச்சது` இன்னொரு குறுஞ்செய்தியை அனுப்பினான். `ஹா ஹா. சந்துரு லவ் மேட்டர்தான. இதுகூடயாத் தெரியாம இருக்காங்க` என் குழப்பங்களை எங்கோ அமர்ந்து புரிந்துகொள்கிறாள் என்பது மேலும் குழப்பமாக இருந்தது ` பிரியா சொல்லிருக்கா. உங்க பாண்டவ பிரண்ட்சிப். லெட்டர் எழுதுறதுக்கு நீங்க குடுக்கிறதுக்கு அவர் இன்பா. லவ் பண்றதுக்கு மட்டும் சந்துரு. நல்லாருக்கு உங்க கதை.` என அதற்கும் பதில் வந்தது. ` நாளைக்கு எனக்கு ஒரு பிரச்சினைன்னா அவன் வருவான். இதெல்லாம் இருக்கிறதுதான` என்றான் நந்து. பதில் வரவில்லை. பார்க்கவில்லை எனத் தோன்றியது. முக்கியமான வேறு வேலையில் அவள் இருப்பாள். அல்லது அவள் அலைபேசியை வைத்து பேசிக்கொண்டிருப்பதைப் பிடிக்காத யாராவது அறைக்கு வந்திருக்கவேண்டும். அவளுக்கான காரணங்களை தான் ஏன் உருவாக்கிக்கொள்கிறோம் என்ற எண்ணம் வந்து புன்னகைத்தான்.

ரயில் நிலையத்தில் முன்பதிவற்ற பெட்டிக்கு ஒரு சீட்டு வாங்கிக்கொண்டு திறந்து கிடந்த பாதை வழியாகப்போய் ரயில் நிலையப்பெஞ்சில் அமர்ந்து கொண்டான். தூரத்தில் பாண்டவ கூடுகை ஆலமரம் கிளைபரப்பி ஹோவென நின்றிருந்தது. வனாந்தரத்தில் வேட்டையாடிவிட்டு இளைப்பாறும் மிருகமொன்றின் சித்திரம் அந்த மரத்தை எப்போது தூரத்திலிருந்து பார்த்தாலும் நினைவுக்கு வரும். சிறுவயதில் பள்ளி விட்டு வந்து ஊஞ்சலாடிக்கிடந்த காலத்திலிருந்து கல்லூரி மாலைகளில் கூடியமர்ந்து கதையளந்த காலங்கள் வரை ஆலமரம் அவர்கள் ஐவருக்கும் முக்கியமான இடமாக இருந்தது. சிறுவயதில் அவர்கள் அந்த ஆலமரத்தில் மரக்குரங்கு விளையாடுவார்கள். இறங்கினால் கீழே நின்று விரட்டுகிறவன் தொட்டுவிட்டால் தோல்வி. ஆலமர விழுதுகள் மண் தொடாமல் மரத்திலேயே இருந்தபடி கால் இறங்க வசதியானவை. பழுத்த மரங்களின் கிளைகள் தரைதொலைவிற்கே இணையாக வந்து திடிரென மேல் நோக்கி வளைகிறவை. வளைந்த மரங்களின் விழுதுகள் தரையைத் தொடுவதற்காக ஆடிக்கொண்டு கீழிறங்குபவை. விளையாட்டு மரங்கள் தொடர்ந்து மனிதக் கைபட்டு தரைதொடாத விழுதுகளை தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருப்பவை. சுண்டு விரல் பருமன் முதல் தொடை பருமன் வரை விதவிதமான விழுதுகள். இளமைக்கு அவர்கள் வந்தபோது மரவிளையாட்டுகள் முற்றிலுமாக ஊரிலேயே குறைந்திருந்தது. புதிய சிறுவர்கள் அந்த மரத்தை பாரம்பரியத்தின் படி தத்தெடுத்துக்கொள்ளவில்லை. அவர்களே மரத்தை தங்கள் மாலை சந்திப்புக்கள்மாக்கிக் கொண்டார்கள். சிறுவயதில் ஏறி விழுந்து கை உடைத்துக்கொண்ட மர நிழலில் இளமையில் சாய்ந்திருந்து உடல் மாற்றங்களைப் பற்றி பேசிக்கொண்டார்கள். சந்துரு தன் காதலைப் பற்றி நண்பர்களுக்கு அந்த மரத்தடியில் வைத்துதான் அறிவித்தான். பிற நண்பர்களும் தங்கள் வாழ்விலும் காதலென்று ஒன்று வந்தால் அந்த மரத்தடியில்தான் நண்பர்களுக்கு அறிவிப்போம் எனச் சொன்னார்கள். சாதாரண மரம் திடீரென வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக அன்றிலிருந்து மாறிப்போயிருந்தது.

`ட்ரெயின் எப்போ` குறுஞ்செய்தி ஒளிர்தது. `இன்னும் அர மணி நேரம் இருக்கு. வெறும் ஸ்டேசன்ல தேவுடு காத்துட்டு இருக்கேன்` என்றான். `எங்க`. `வேற எங்க பெஞ்சுலதான். ` `அந்த மஞ்சப்பூ மரம் இருக்குமே அந்த பெஞ்சா` அவள் குறுஞ்செய்திக்குப்பிறகுதான் அதைக் கவனித்தான். அந்த சிறு சிமெண்ட் மேடைக்கு அருகிலேயே சரக்கொன்றை மரமொன்று நின்றிருந்தது. மரமென்றும் சொல்லமுடியாமல் செடியென்றும் சொல்லமுடியாத உயரம். நிலையத்தின் குழல்விளக்கில் பொன்னென ஒளிரும் மலர்கள். பாதி உதிர்த்த கிளைகள். தனி இரவில் பெஞ்சில் அம்ர்ந்து பேசிக்கொண்டிருந்தால் அருகமர்ந்து தலையாட்டும் பாவனையில் அது கேட்டுக்கொண்டிருக்கூடும் என்று தோன்றியது. `அதேதான். சரக்கொன்றை. அரபுல இது பேர் கியார்சாம்பார் தெரியுமா` என்று சொன்னான். `மஞ்ச கலர்னா சாம்பார்ன்றதா… இதெல்லாம் ஏன் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க` என்று பதில் வந்தது. ` யாரோ எப்பவோ சொன்னது. ` `அரபுல சொல்லுறாங்கன்னா முஸ்லீமா?` என்றாள். `ஆமா. பேரு ஆயிஷா. வேண்டியவங்கதான்` என்றான். அனுப்பியபிறகு சொல்லியிருக்கக்கூடாதோ என்று தோன்றியது. அவள் அமைதியாகும் நேரங்களிலெல்லாம் அவன் அமைதியிழந்தான். அமைதியிழப்பதை உடல் நடுங்கத்தொடங்குவதை தொண்டை அடைப்பதை அவனே ஆச்சர்யமாக கவனித்தான். அவள் அங்கே வேறு வேலைகளில் பிசியாகியிருக்கக் கூடும். அல்லது எதையாவது அனுப்புவதற்காக எழுதி எழுதி அழித்துக்கொண்டிருக்கவேண்டும். ரயில் தண்டவாளங்கள் இரவில் தொடமுடியாத தூரத்திலிருந்து கிளம்பி காலடி நழுவி தொடமுடியாத தூரங்களுக்கு நீண்டு போய்க்கொண்டிருக்கிறது. ஆலமரங்கள் பகலெல்லாம் வெயிலாடிய தலையை காற்றில் அலைந்து உளைச்சலெடுத்த விழுதுகளை இளைப்பாறச் செய்கின்றன. சரக்கொன்றை மரத்தின் சீனப்பெயரில் ஒரு திருனெல்வேலி அண்ணாச்சியின் குரல் இருக்கிறது. சம்பந்தா சம்பந்தமில்லாத சொற்றொடர்கள் உள்ளே ஓடின. `லவ்வரா` ஒரே வார்த்தை அவளிடமிருந்து வந்தது. `இல்ல. ஸ்கூல் பிரண்டு. இப்ப எங்க இருக்காங்கன்னு கூட தெரியாது. இந்தவயசுக்கு அவங்கள்ள கல்யாணமே பண்ணி வச்சிருப்பாங்க` நீளமாக விளக்கவேண்டிய அவசியம் எழுந்தது கண்டு குழம்பி தலையை உலுக்கிக்கொண்டான். `ம். ரொம்பத்தான். குட் நைட்` இரவின் கடைசிக் குறுஞ்செய்தி என்ற அறிவிப்பு இது. ரயில் வருவதற்கு இன்னும் நேரமிருந்தது. அல்லது வந்து சென்றிருக்கலாம். அல்லது வராமலே ரத்தாகி வீட்டுக்குத் திருப்பிச் செல்லவேண்டியிருந்தால், அல்லது சந்துருவீட்டிற்கு செல்லவேண்டியிருந்தால், அங்கு கெளரிவரவேண்டியிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. குட் நைட் அனுப்பி இந்த இரவை இப்படியே முடித்து வைக்கலாமா அல்லது எதாவது கேள்விகளை அனுப்பி பேச்சைத்தொடரலாமா எனக் குழம்பினான். பெண்கள் எப்பொழுதும் இருபுறமும் கூரான கத்திகளைத்தான் நம் கையில் கொடுக்கிறார்கள் எனத்தோன்றி சிரித்துக்கொண்டான். எறிந்தே ஆகவேண்டும். எந்தப்பாதி அவளைக் காயப்படுத்தும் எனச் சொல்லமுடியாது. பேச்சைத் தொடர்வதையும் பேச்சைத்தொடராதையும் இரண்டையுமே நாளைய குற்றச்சாட்டாக வைத்துக்கொள்ள முடியும். குட் நைட் என மீண்டும் மீண்டும் எழுதி எழுதி அனுப்பாமல் அழித்தான். `ட்ரெயின் ஏறிட்டீங்களா` மீண்டும் அவளிடமிருந்தே குறுஞ்செய்தி வந்தது. அவர்கள் எறியும் போது கைப்பிடி மட்டுமே இருக்கிறது. அதை நாம் பிடிக்கும்போதுதான் இருபுறமும் கத்திகளை வெளிப்படுத்துகிறது. ஏறியிருந்தாலும் அதனால்தான் பதில் சொல்லவில்லை என்றாகிவிடும். ஏறாவிடில் ஏன் பதில் இல்லை என்ற குற்றச் சாட்டு வரலாம். மீண்டும் கத்திகள். ` இன்னும் இல்ல. உங்க மரத்துக்கிட்ட பேசிக்கிட்ருக்கேன்` என்றான். `ம். எனக்கும் பேசப்பிடிக்கும். ஆனா நான் ட்ரெயின்ல போறதே அபூர்வம். அதுவும் எதிர்திசைல போகணும். எதிர்பகுதில பாத்தீங்களா பெஞ்சு தனியா மரம்தனியா பிரிச்சு பிரிச்சு நட்டு வச்சிருக்காங்க. மெட்ராஸ் போறதுலதான் மரமும் பெஞ்சும் ஒண்ணாக்கிடக்கு` என்றாள்.

அவள் சொன்னது சரிதான். இருபுறமும் மரம் நட்டவர்கள் வேறு வேறு ஆட்களாக இருக்கவேண்டும் எனத் தோன்றியது. மூன்று ஆதிகாலத்து பெஞ்சுகள் மூன்று மரங்கள். எதிர்புறத்தில் இரண்டு பெஞ்சுகளுக்கு நடுவில் ஒரு மரம் கணக்கில் நட்டிருந்தார்கள். இந்தபுறம் ஒரு பெஞ்சுக்கு அருகில் ஒரு மரம் என்ற கணக்கு. சிறு செடியாக வைக்கும்போதே பெஞ்சில் அமரப்போகிறவனை எண்ணுவதற்கு தனி மனம் வேண்டும். அது குழந்தையின் மனமாக இருக்கலாம். அல்லது பருவத்திலிருக்கும் பெண்ணின் மனம். பெண்ணின் மனம் மட்டும்தான் இப்படி காலாதீதங்களைக் கடந்து கண்னக்குகளை உருவாக்கும். காலாதீதங்களுக்கு கணக்குகளை நியாபகம் வைத்திருக்கிறவர்கள். அந்த் இருவர் கணவன் மனைவியாக இருக்கலாம். கணவன் எதிர்புறம் இடைவெளிகளில் மரம் வைக்க அவள் இந்தப்புறம் பெஞ்சுக்கொன்றாக மரங்களை நட்டிருக்கவேண்டும். அவர்களுக்கொரு குழந்தையிருந்தால் அது நடுவில் தண்டவாளத்தில் அமர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்ற பதறினான். இல்லை. அந்தக்குழந்தை இந்தப்பெஞ்சுகளில் எதாவது ஒன்றில் அமர்ந்திருக்கக்கூடும். பெரும்பாலும் அம்மாவின் புறத்தில். அவள் கணக்குகள் இல்லாதவள் ஆயினும் பெஞ்சில் அமர்ந்திருக்கும் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக இடைவெளி விடாமல் சரக்கொன்றைச் செடியை பெஞ்சுக்கு அருகிலேயே நட்டிருக்கவேண்டும். அவன் இதுவரை சரக்கொன்றை மரமாக மஞ்சள் நிறத்தில்தான் பாத்திருக்கிறான் செடியாகப் பார்த்திருக்கவில்லை என்பது நியாபகம் வந்தது. கெளரியை முதல் முறைப் பார்த்தபோது அவளும் மஞ்சள் சுடிதாரில் இருந்தாள். பூத்துக்குலுங்கும் மரமாக. அவள் செடியாக இருந்த சிறுவயதுகள் எங்காவது புகைப்படத்தொகுப்பில் உறங்கிக்கொண்டிருக்கக்கூடும். `ம்ம்` என்றொரு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தான். . `ட்ரெயின்ல தூங்கிருவீங்களா` ` பொதுவா தூக்கம் வராது. சீட்ல எங்கியாவது உக்காந்து அரத்தூக்கம் தூங்குவேன். முழிச்சிருந்தாலும் மெசேஜ் அனுப்ப முடியாது. டவர் விட்டுவிட்டு கிடைக்கும். மொபைல் சார்ஜ் போய்டும்னு ஆப் பண்ணிடுவேன்` என்றான். ` நீளமா பேசுறீங்க. மெசேஸ்க்கு கேட்கல. சும்மா கேட்டேன்` என்றாள். அமைதியாக இருந்தாள். அவளிடமிருந்தே மறுபடி `சரி இதுக்குமேலையும் மொபைல நோண்டுனா ஹாஸ்டல்ல கூட இருக்கதுக மேல விழுந்து பிறாண்டும். நானும் தூங்குறேன் இப்ப நெஜமாவே குட் நைட்` என்றாள். ` குட் நைட்` என்றான். அலைபேசியை அணைத்து மடித்து பெட்டியைத் திறந்து மடித்த துணிகளுக்கு நடுவில் பாதுகாப்பாக வைத்தான். சரக்கொன்றை மரத்தைத் திரும்பிப்பார்த்தான். இருளில் அது இன்னும் தலையாட்டிக்கொண்டிருந்தது. புன்னகத்தது போல் இருந்தது. அவனும் புன்னகைத்து தலையசைத்தான். காற்றில் ஒரு மலர் உதிர்ந்து அவன் தோள் பட்டையில் விழுந்தது.

ரிபு-4

பின்னூட்டமொன்றை இடுக

பெயருக்கும் அடுத்த வார்த்தைக்கும் இடைப்பட்ட கணத்தில் நந்து மஞ்சள் வண்ணத்தில் தொடங்கி அதன் ஒளிவிடும் அறிவியல் காரணங்கள் வரை நீண்ட தூரம் சென்றிருந்தான். அடுத்த வார்த்தை நாக்கில் சிக்கி புரண்டிருந்தது.

“ஏன் உங்கூர்ல பொண்ணுங்களையே பாத்ததில்லையா ஏன் அப்டி பாக்குறீங்க எல்லாரும்” மிகச் சுலபமாக மெளனத்தை உடைத்தாள். பதில் சொல்வதற்கு யோசிக்க வேண்டும். யோசிப்பதற்கு அவகாசாம் வேண்டும். பெரிய நகைச்சுவை கேட்டவன் போல் சத்தமாகச் சிரித்தான். இடைவெளி கிடைத்தது. கொஞ்சம் சிரித்தபோதே பதில் கிடைத்திருந்தது. “ஊரு பொண்ணெல்லாம் ஒண்ணுதான். எப்பவும் புதுசு மேல ஒரு ஆச்சர்யம் இருக்கும்ல. அதான் அப்டி பாக்குறாங்களா இருக்கும். எங்கூர் கட்டம் போட்ட கரும்பச்சை சுடிதாருக்கும் உங்க மஞ்சள் ப்ளைன் சுடிதாருக்கும் உங்களுக்கு வேணா வித்தியாசம் தெரியாம இருக்கலாம். ஆனா எங்களுக்குத் தெரியும். எங்களுக்குத் தெரியும்ன்றதே இந்த ப்ளைன் சுடிதார பாக்கும்போதுதான் தோணும்னா பாத்துக்கங்களேன்.”

” நல்லா பேசுறீங்க” பதிலில் குத்தல் இருந்ததுபோல் நந்துவிற்குத் தோன்றியது. பெரிய விளையாட்டு போலவும். பிடித்த பெண்கள் பாராட்டினாலும் முகம் சுளித்தாலும் ஒரே மாதிரியான குழப்பம்தான் முதுகுத்தண்டில் ஊர்கிறது. “அட நிஜமாங்க. இப்ப நீங்க கேட்குறவரைக்கும் உங்கள வெறிச்சுப் பாத்ததுக்குக் காரணம் அந்த மஞ்சள்தான்னு எனக்கு சத்தியமா தெரியாது, இவ்வளவு ஏன், நான் வெறிச்சுப்பாத்தானான்னு கூட தெரியாது”

“அப்ப நான் பொய் சொல்றேன்றீங்களா?” கெளரியின் கேள்வியில் ஒரு கொஞ்சல்கோபம் இருந்தது.அமைதியாக இருந்தான். போட்டியை நீட்டாமல் வேறு இடத்திற்கு செல்லத் தோன்றியது. “எந்தூர் நீங்க… எங்காலேஜ்ல எப்படி புதுசா… அதுவும் ப்ரியா கூட” இத்தனை நேரம் உடனிருந்தவளை ஒருவார்த்தை கேட்காமல் வாயடித்துக்கொண்டிருந்ததை உணர்ந்து துணுக்குற்றான். திரும்பி ப்ரியாவைப் பார்த்தான். அவள் உதட்டோர குறும்புச் சிரிப்புடன் இருவரையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்தாள்

“ஆராம்ளி. மெப்கோலதான் படிச்சுட்டு இருந்தேன். ரொம்ப தூரமா இருக்குன்னு இந்தவருசம்தான் மாத்திட்டாங்க. இப்பவும் போகவர கஷ்டம்னு ஹாஸ்டல்லதான் இருக்கேன். இங்க பலதடவ வந்திருக்கேன். உங்களத்தான் பாத்ததில்லை. இதுதான் முதல்தடவ. அதுவும் ஒரே ஆளா அஞ்சாறு பாட்டிலோட”

“அதென்ன ஆராமுளி ஏழாமுளி. ஆரல்வாய்மொழின்னு முழுசாவே சொல்லலாம்ல.” அவள் பார்வையிலிருந்து மறுபடியும் சீண்டிவிட்டதாகத் தோன்றியது. இந்த மாட்டுத்தடியன்கள் திரும்பி வந்து தொலையலாம். “எவ்வளவு அழகான பேர் இல்ல நெருப்பு வாய் மொழி. ஒளிவடிவம். நெருப்புகூட மஞ்சள்தான். உங்கள மாதிரி..” நாக்கைக் கடித்துக்கொண்டான். ப்ரியா அதிர்ந்து இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.

“என்னல வம்பளத்துட்டு இருக்கியோ. ஏய் நீங்க போய் படிங்கட்டி. நாங்க எங்க வேலையப்பாக்கோம்” சந்துரு சரியான இடைவெளியில் உள்ளே நுழைந்தான். நிஜாம் பாக்கு வாசம் அவன் சட்டையெல்லாம் வீசியது. அது பணக்கார வாசமும் கூட. அரசியலின் வாசனை. எங்கொ தொலைதூர நகரத்தின் மூலவர் பெற்றிருக்கும் அதிகாரம் குட்டைகள் ஆறுகள் வாய்க்கால்களைக் கடந்து பாயும் கடைசி வரப்புகளுக்குப் பாயும்போது செழித்துவளரும் சிறு நகரத்து வரப்போர செடிகளின் மினுமினுப்பு. கொஞ்ச நாள் இப்படியே எதாவது கோர்ஸ் அது இது என சுற்றிவிட்டு எந்தத் தருணத்திலும் ஒரு சண்டையில், பஞ்சாயத்தில் இறங்கி யாரையாவது அடித்தோ வெட்டியொ ஒரு கேஸ் கிடைத்துவிட்டால் திரும்பி வரும்போது அப்பாவை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு மிகச் சுலபமாய் உள்ளுர் அரசியல் கணக்குகளை குத்தகைக்கு எடுத்துக்கொள்ளலாம். எதிர்காலம் இதுதான். இதுவும் சிறப்புதான் எனத் தெளிவாகத் தெரிந்தபின் முகத்தில் எழும் பூரிப்பு, பணம் கொடுக்கும் நிம்மதியான உணவில் வரும் ஊட்டம்.

ப்ரியா கண்காட்ட கெளரியும் அவளும் அறையை விட்டு கிளம்பினார்கள். கெளரி திரும்பி பார்த்தாள். கண்களில் கோபமும் உதட்டில் சிரிப்பும் இருந்தது.

o

வேலையைப்பத்தி சொல்லம்ல கேப்போம்

சந்துரு வந்து லாவகமாக சரக்குபாட்டிலை, சோடாபாட்டிலைத் திறந்தபடியே கேட்டான். நந்துவுக்கு நிச்சயம் தெரியும் எதைச்சொன்னாலும் கிண்டல் செய்யப்போகிறார்கள் என்று. குடிக்கிறவர்கள் எப்பொழுதும் குடிக்காமல் உடன் இருப்பவர்கள் தங்கள் பொழுதுபோக்கு என நினைத்துதான் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் உண்மையில் இரண்டாவது மூன்றாவது கிளாஸ் உள்ளே நுழையும்போதே அது தலைகீழாக மாறிவிடுகிறது. மறு நாள் எழுந்தபின்னர் அவர்களுக்கு பெரும்பாலும் மூன்றாவது கிளாஸின் கதை நியாபகத்தில் இருப்பதில்லை. முதல் இரண்டு கிளாஸ்களையே நகைச்சுவையாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

“அதுக்கென்ன மாப்ள. போகுது. இப்பதான உள்ளபோய்ருக்கேன் தலையும் புரியல வாலும்புரியல. ஆனா பெரிய கம்பெனி பாத்துக்க. மூச்சப்புடிச்சு ரெண்டுவருசம் இருந்தா அப்புறம் எப்படியும் சுத்தி சுத்தி இதே மாதிரி கம்பெனிகதான். வாய்ப்பு கிடைச்சா அமேரிக்க பறந்துருவேன் பாத்துக்க.”

” வாய்ல சுட்டா நல்லாத்தாம்லே இருக்கும். இந்தா நம்ப கோம்பை வெளி நாடு போறேன்னு ஆடுமாட வித்துப்போனான். ஆறே மாசத்துல முதுகு பழுத்து திரும்பி வந்தாம்ல. நாம நினைக்கது இருக்கட்டும். நடக்கது என்னன்னு ஒண்ணு இருக்கு பாத்துக்க” சோடா பாட்டிலை விட்டு முகத்தைத் திருப்பாமல் சொன்னான் மணி. இன்பா எதுவும் பேசவில்லை. கையில் கிளாஸை வைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். ” நீ தப்பிட்ட பாத்துக்க. நானும் எங்கியாவது போய்டணும்ல. குறைஞ்சது மதுரை திரூந்தபுரம்னாவது. வீட்ல இருந்தா வெளங்காது.”

முதல் கிளாஸை ஒருவருக்கருவர் மோதிக்கொண்டனர். நந்துவும் தனது பெப்சி பெட் பாட்டிலை அதனுடன் மெல்ல உரசிக்கொண்டான். சத்தமாய் ஒரு ச்சியர்ஸ். உண்மையில் இது அடுத்த அறையில் இருக்கும் பெண்களுக்கான அறிவிப்பும் கூட. ஆரம்பித்துவிட்டோம் இனி விடியும் வரை வரக்கூடாது என்றொரு அறிவிப்பு. எப்பொழுதும் பிரியா இந்தத் தருணத்திற்காக காத்திருப்பாள் என்பது தெரியும். அவள் அறையிலிருந்து எழுந்துவந்து பட்டாசல் விளக்கை அணைத்துவிட்டு போய் அறையில் அமர்ந்து கொள்வாள். எப்பொழும் நந்து இவர்களுடன் இருக்கும் நாட்களில் தெருவாசல் விளக்கு போடப்படும். இவர்கள் மூன்று ரவுண்டு தாண்டி நான்காவது ரவுண்டில் சொன்னதையே சொல்லும் கணம் வந்ததும் நந்து போய் வெளியில் நின்றிருப்பான். மிகச் சிறிய நேரம். அந்த நள்ளிரவில் மஞ்சள் விளக்கொளியில் பறந்தடங்கிய மண் புழுதியைப் பார்த்துக்கொண்டு நிற்பதுவும் ஒரு வகை போதை என்றறிந்திருந்தான். எதிர்பார்த்ததே இம்மி பிசகாமல் நிகழ்ந்தது.

வழக்கமான கச்சேரி கதைகள். சந்துருவின் அரசியல் முகம் பூசிய கதைகள். வட்டிவசூலில் சந்தித்த மனிதர்களின் கதைகள். அவர்களின் கதறல்கள். நந்து சுவாரசியமின்றி பெப்சி பாட்டிலை பார்த்துக்கொண்டே கெளரியைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தான். இத்தனை காலங்களில் ஏற்படாத ஒரு உணர்வு. வாலிபத்தின் முதற்காலடிகளில் நண்பர்கள் ஆளுக்கொரு பெண் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கையில் எந்தப்பெண் மீதும் எழாத ஒரு உணர்வு.

உண்மையில் பிறரை விட நந்துவிற்கு பெண் நண்பர்கள் அதிகம். அவர்கள் நண்பர்களாகவே கடைசி வரை இருந்ததுதான் காரணம். சிலர் காதல் கடிதங்களுக்காக எழுதிக்கொடுக்கும்படி கேட்டு அணுகியவர்கள். சில நேரங்களில் ஒரு இணையின் இரு கடிதங்களையுமே நந்துவே எழுதியிருக்கிறான். இருவருக்குமே அது தெரியாது. அல்லது தெரிந்தும் காட்டிக்கொள்வதில்லை. அவர்களுக்கு உணர்வு இருக்கிற்து. நந்துவிடம் சொற்கள் இருக்கிறது. சொற்கள் மட்டும். எழுதி எழுதியும் தீராத காதல் இருந்தாலும், கடைசி வரை, அதாவது இந்த குறிப்பிட்ட நாள் வரை அந்தக் காதலை தனக்காக எழுதிக்கொள்ளும் தேவை ஏற்படவே இல்லை.

“என்னல கனவு கண்டுட்டு இருக்க”, சந்துரு வண்ணங்களுடன் பறந்துகொண்டிருந்த சோப்புக்குமிழியை உடைத்தான்.

அதொண்ணுமில்லை. சும்மாதான் ஏதோ யோசிச்சுட்டு இருந்தேன்.

அதான் நீ யோசிக்க லெச்சணம் மூஞ்சில எழுதி ஒட்டிருந்துச்சே அந்த புதுபுள்ளைட்ட பேசிட்டு இருந்தப்பவே.

ச்ச. அதெல்லாம் ஒண்ணுமில்ல

மொசப்புடிக்க நாய மூஞ்சப்பாத்தா தெரியாதா. எத்தன பாத்துட்டோம். ஏன் நீயேஎத்தனதடவ இவன் வந்து எங்கிட்ட லட்டர் எழுதச் சொல்லி கேட்பன்னு எத்தனபேரப்பாத்துச் சொல்லிருக்க. நடந்துச்சா இல்லியா.

அதில்ல… மூஞ்சில தெரியும்தான்.

அதேதான். நீயும் அப்டித்தான் மூஞ்ச வச்சுட்டு இருக்க அவளப்பாத்ததுல இருந்து. ஆனா ஒண்ணு சொல்லுதன் மாப்ள. நீ சிக்கி சீரழிஞ்சு போகப்போற உன் முழியெல்லாம் ஒண்ணும் வெளங்குதாப்ல இல்ல பாத்துக்க.

பாட்டில் பாதிக்கு மேல் காலியாகிருந்தது. இன்பாவும் மணியும் காரசாரமாக அடிதடி நிலமைக்கு நெருங்கியவாறு எதையோ உரக்க பேசிக்கொண்டிருந்தார்கள். மிகச்சுலபத்தில் போதை ஏறிவிடக்கூடியவர்கள். சந்துரு மெதுவாகத்தான் சுருதிக்கு வருவான். அவனுக்கும் சுருதி ஏறியபின் நிச்சயம் அமரமுடியாது. உண்மையில் சண்டையிடும் அந்த இருவரைவிட சமாதானம் செய்யும் சந்துருவின் சத்தம் கொடுமையாக ஒலிக்கும். அவர்கள் நிறுத்தியபிறகும் கூட சில நாள் தொடர்ந்து உரத்த குரலில் சமாதானம் செய்து கொண்டிருப்பான்.

அடச்சே. எங்கியோ பாத்தமாதிரி இருக்கு மாப்ள அவள. அதான் யோசிச்சுட்டு இருக்கேன் எங்கன்னு. சரியாத்தெரியல.

கிழிச்ச. ஆராம்ப்ளிக்கும் போனதில்ல. மெப்கோல எங்க போய்ருப்ப. என்ன போய்ருக்கியா..

ஆராம்ளிக்கு போனதில்ல.ஆனா ஒரு தடவ ஸ்கூல்ல டிஸ்ட்ரிக் லெவல் காம்பெடிசன்ன்னு மெப்கோ போய்ருக்கேன் மாப்ள. அங்க இருக்கலாம்ல.

மிதிவாங்கப்போறபாத்துக்க. நீ ஸ்கூல் போய் நாலுவருசம் இருக்குமா. அவ அந்தக்காலேஜ்ல ரெண்டு வருசந்தான். சும்மா பேசணும்னு பேசாத என்ன.

ஆனாலும், சொல்லிவிட்ட பிறகு அந்த நினைப்பு உருண்டுகொண்டே இருந்தது. எங்கோ பார்த்திருக்கிறோம். எங்கே. நான்கு வருடத்திற்கு முன் அவள் அந்தக்கல்லூரிக்கு வந்திருக்க வாய்ப்பிருக்கிறதா. ஆனாலும், பெண்கள் நிச்சயம் நான்கு வருடங்களாக ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை. நிச்சயம் பதின்மத்தில் வாய்ப்பே இல்லை. மிகச் சிறிய இடைவெளியில் மிகப்பெரிய வித்தியாசங்களை அடைந்து ஆளே மாறியிருப்பார்கள். ஆனாலும் இந்தச் சிந்தனை உழன்றுகொண்டே இருந்தது. பெப்சி முடிந்திருந்தது. “மாப்ள இன்னொரு பெப்சி எடுத்துட்டு வரேன் என்ன. ” சந்துருவும் பிறருக்கும் தனக்கான பொதுப் பஞ்சாயத்தைத் தொடங்கியிருந்தார்கள். நந்து மெல்ல எழுந்து அறைக்கதவைத் திறந்து பட்டாசலுக்கு வந்தான். குளிர்சாதனப்பெட்டி அருகில் மீண்டும் அவள். கெளரி.இருட்டில்.விளக்கைப்போடாமல். குளிர்சாதனப்பெட்டியின் மெல்லிய வெளிச்சம் அவள் மீது விழுந்திருந்தது. பிரதிபலிப்பதைப்போல. நந்து விளக்கருக்கே போய்விட்டு அதைப்போடாமல் நின்று பார்த்துக்கொண்டிருந்தான். அந்த முகத்தின் தனியாக விழும் ஒளி. நிச்சயம் எங்கோ பார்த்திருக்கிறோம் என்று உறுதியாகத் தெரிந்தது. எதோ ஒரு கணத்தில் தடுமாறி சுவிட்சை அழுத்திவிட்டான். கெளரின் கையிலிருந்த தண்ணீர்பாட்டில் சற்று குலுங்கியது. திடீர்வெளிச்சத்தில் பயந்திருக்கக்கூடும். திரும்பி ” நீங்களா ” என்றாள். “பயந்துட்டேன்” அந்த ஆசுவாசம் பிடித்திருந்தது. அழகாக இருந்தது.

“ம். உள்ள போரடிச்சுது. அதான் கிளம்பி வெளிய வந்தேன். வாசல்ல கொஞ்ச நேரம் நிக்கலாம்னு” பதில் நினைத்ததற்கும் சொன்னதும் வேறாக இருந்தது. மெல்ல குளிர்சாதனப்பெட்டிலிருந்து அடுத்த பெப்சியை எடுத்துக்கொண்டான். கொஞ்சம் தயங்கி நின்றான். என்ன எதிர்பார்த்தான் என அவனுக்கே தெரியவில்லை. “எனக்கும் அதே. வெளிய இன்னேரத்துல நிக்கலாமா. யாரும் தப்பா நினைக்கமாட்டாங்களே” என்றாள். இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று திடீரென விளங்கியது. இந்நேரத்துல யாரும் வரப்போறதில்ல. நான் எப்பவும் நிக்கிறதுதான். வாங்க”

“வாங்கவா… என்ன கொழுப்பா. போரடிச்சுதுன்னு சொன்னேன். நீங்க நின்னா தப்பா நினைக்கமாட்டாங்களான்னு கேட்டேன். என்னையும் வந்து நிக்கச் சொல்றீங்களா. அதுவும் இன்னேரத்துல”

“ஏன் பயமா. இருட்டா நாயா”

“எனக்கென்ன பயம். வாங்க நிப்போம்”

என்ன நிகழ்ந்ததென்று குழப்பமாக இருந்தது. வருகிறேன் என்றாளா வரமாட்டேன் என்றாளா. வந்து நிற்பது வெறும் வீம்புதானா. இல்லை சீண்டல் விளையாட்டா. ஏன் எளிய விஷயங்கள் விருப்பமானதாய் ஆனபிறகு இத்தனை சிக்கலான கேள்விகளை உருவாக்குகின்றன. பெப்சி மூடியைத் திருகித் திறந்தான். ஒலியுடன் திறந்துகொண்டது. எந்த சலனமும் இன்றி வாசல்கதவைத் திறந்து திண்ணையில் அமர்ந்துகொண்டாள். அவள் எதிரே அவளது சைக்கிள் நின்றிருந்தது.சில நொடிகள் திண்ணையில் அமர்வதா அருகில் நிற்பதா என்ற குழப்பத்திற்குப் பிறகு முடிவெடுத்து அவள் சைக்கிளின் பின் இருக்கையில் இருபுறம் கால் போட்டு அமர்ந்துகொண்டான். எதிரில் சைக்கிள் கைப்பிடி இடைவெளியில் அவள் முகம் இருந்தது. இடதுபுறம் தூரத்தில் எங்கோ எதையோ தேடிக்கொண்டிருப்பவள் போல திரும்பியிருந்தாள். எதிரிலிருந்த தெருவிளக்கிலிருந்து மஞ்சள் ஒளி ஒரு பக்க முகத்தில் மட்டும் விழுந்திருந்தது. கழுத்தின் தங்கச்சங்கிலியில் மெல்லிய மினுமினுப்பு. ஒளிவிழுவதால் கண்ணில் தெரியும் கண்ணீரின் பிரதிபலிப்பு. இந்தப்பிரதிபலிப்புக்குள் தானும் ஓரக்கண்ணில் பார்க்கப்படுகிறோம் என்ற உணர்வு எழுந்து மயிர்க்கால்கள் குறுகுறுத்தன.

“ஆமா அதென்ன அரளிப்பூ”

“ம்ம் செவ்வரளி. சின்னவயசுல இருந்தே செவ்வரளி புடிக்கும். அதான்.”

“ நீங்களே வரைஞ்சதா”

“இதுக்கு ஆள்வச்சா வரைவாங்க. அதுவும் யார்கிட்டையாவது சைக்கிள்ள அரளிப்பூ வரைஞ்சு தாங்கன்னா சிரிக்கமாட்டாங்க”

சிறிதாக புன்னகைத்தான்.

“பாருங்க நீங்களே சிரிக்கிறீங்க. ஆமா எப்ப பாத்தீங்க அரளிய”

“ நானா சின்னவயசுல. எங்கூர் கோயில் நந்தவனத்துல. அரளி நந்தியாவெட்டையெல்லாம்.”

“என்ன நக்கலா. என் சைக்கிள்ள இருக்கத எப்ப பாத்தீங்கன்னு கேட்டேன்.”

“ம். வந்ததுமே உங்க தரிசனத்துக்கு முன்னாடியே அரளி தரிசனம்தான்”

முறைத்தாள். பதில் சொல்லாமல் திரும்பிக்கொண்டாள். கண்களில் மெல்லிய சிரிப்பு தெரிந்ததைப்போல் இருந்தது.

”ஏன் எதும் தப்பா சொல்லிட்டனா” நந்துவுக்கு பேச்சை வளர்க்கத் தோன்றியது. இடைவெளிகள் ஒவ்வொன்றிலும் எங்கோ தூர விலகிப்போகும் சாயல். ஒவ்வொரு சொல்லும் உரிமை எடுத்துக்கொண்டு சீண்டும் விளையாட்டு. சீண்டும்போது மேலதிகமாக எழும் இதயத்துடிப்பின் ஓசை. அவளுக்கும் இப்படித்தான் இருக்குமா. இல்லை ஆண்களுக்கு மட்டுமா. சந்தித்த சில மணி நேரங்களில் இதெல்லாம் நிகழ்வது சாத்தியம்தானா. சாத்தியம் என்றாலும் சரிதானா. இடைவெளிகளில் சிந்தனைகள் வேகமாகச் சென்று எங்கோ ஒரு சுவற்றில் மோதி உடைந்தது. உடைதலைத் தவிர்ப்பதற்காகவாது எதையாவது பேசிக்கொண்டிருக்கவேண்டும்.

தப்பு சரின்னு சொல்லல. ஆனா கொஞ்சம் ஓவரா பேசறீங்க.

வாய் இல்லைன்னா நாய் தூக்கிட்டுப்போய்டும்னு எங்க அப்பத்தா கூட சொல்லும்

ஆமா தூக்கிட்டுப்போற எலும்புத்துண்டு மாதிரிதான் இருக்கீங்க.

நந்துவுக்கு உள்ளே எதோ உடைந்தது.

“சாரி… விளையாட்டுக்குத்தான் சொன்னேன். மறுபடியும் சாரி”

“அய்யோ அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. எல்லாரும் சொல்றதுதான. பழகிடுச்சு.”

அவள் முகம் சுருங்கியிருந்தது. பெண்கள் எத்தனை துல்லியமாக உணர்வுகளை முகத்தில் மறைப்பார்கள் என்பதை அறிந்திருந்தான். இவள் புதிதாக இருந்தாள். எல்லாவகையிலும். பல நாட்களாக அதே நடைபாதையில் இருக்கும் மலர் மழை நாளில் புதிய முகம் அடைவதைப்போல அத்தனை நாட்கள் பழகிய பெண்களிலிருந்து முற்றிலும் புதிதாக இருந்தாள். இருகைகளிலும் செயினைப்பிடித்துக் கடிக்கும் பெண்களிலிருந்து புலிப்பல்லின் நுனியில் செயினை கடித்துக்கொண்டு கைகளைப் பின் சாய்த்து நிறுத்தி உடல் தாங்கி தொலைவின் குரல்களை கூர்மையான கண்களால் கற்றுக்கொள்ள எத்தனிக்கும் அந்த அமர்வு புதிதாக இருந்தது. எல்லா நேரத்திலும் சொந்த சகோதரன் முன் கால்களை இறுக்கிக்கொண்டு சங்கடத்துடன் அமர்ந்திருக்கும் பெண்களிலிருந்து சகஜமாக கால்மேல் காலிட்டு அமர்ந்திருக்கும் அந்த உடல்மொழி புதிதாக இருந்தது.

” நான் வரும்போது எதோ பாடிட்டு இருந்தீங்களே என்ன பாட்டு.” மிகச்சுலபமாக குற்ற உணர்ச்சிகளைத் தாண்டிச்செல்கிறாள். அல்லது அதற்கு முயற்சி செய்கிறாள்.

“ம்ம். மன்றம் வந்த தென்றலுக்கு. நேத்து எங்கையோ மறுபடி கேட்டேன். அப்பமேருந்து முணுமுணுத்துட்டே இருக்கேன். மேடையைப்போல வாழ்க்கையல்ல என்ன மாதிரி வரி.. அந்த சிச்சுவேசன் கூட. எவ்வளவு கனவோட உறவுக்குள்ள வந்திருப்பான் அந்த புருஷன். வேசத்தைக் கலைச்சு மாறமுடியாத உறவுக்குள்ள பழசையே நினைச்சுட்டு இருந்தா எப்படி..”

“ரேவதி இடத்துல இருந்து யோசிச்சுப்பாருங்க. எத்தன வருச கனவு. பாத்தவுடனேல்லாம் ஒருத்தர வாழ்க்கைல ஏத்துக்கமுடியுமா. மோகனுக்கு மனைவின்றது ஒரு கொடுக்க்கப்பட்டது. அந்த இடத்துல யார் இருந்திருந்தாலும் அவர் அதே உணர்வோடதான் இருந்திருப்பாரு. ஆனா அவளுக்கு அப்டியா. இன்னொருத்தர அந்த இடத்துல வச்சுப்பாத்துட்டு திடீர்னு மாத்திக்கணும்ன்றது எவ்வளவு பெரிய சுமை தெரியுமா. அதெல்லாம் பொண்ணா இருந்து பாத்தாதான் புரியும். உண்மை என்ன தெரியுமா காதலோட பாக்குற மோகன் மறுபடி மறுபடி கார்த்திக்க நியாபகப் படுத்துறதுதான் பெரிய வேதனையே. மத்தவங்க கிட்ட சிரிச்சு பேசுற அவளால அவன்கிட்ட பேசமுடியாதுன்னா அதுவும்தான். கூட உரிமை உள்ளவன், உரிமை எடுத்துக்குவான்னு பயம் கூட இருக்கும்ல.”

“அதுக்குன்னு கம்பளிப்பூச்சி ஊர்றமாதிரி இருக்காமா. மீறி கைவைக்க உரிமை உள்ளவந்தான. பண்ணல. அதும்போக இந்தக்காலத்துல அப்டி யாராவது முட்டாளா இருப்பாங்களா என்ன”

“ஓ. மறுத்தாலும் கேட்காம பாஞ்சிருவீங்க அதான உங்க ஆம்பள புத்தி”

“பாய்வோம் மாட்டோம்ன்றது ரெண்டாவது. மறுக்கிறது நியாயமான்னு கேக்கேன்”

“இதுல என்ன நியாயம் அனியாயம் இருக்கு. அவங்கவங்க வாழ்க்கை அவங்களுக்கு. யார் வாழ்க்கைலையும் யாரும் மூக்க நுழைக்கக்கூடாது. அது யாரா இருந்தாலும் ஹஸ்பண்டா இருந்தாலும் லவ்வரா இருந்தாலும். தனிப்பட்ட ஸ்பேஸ் ஒண்ணு இருக்கணும். அப்டி இல்லைன்னா என்ன வாழ்ந்து என்னத்த”

நந்து மிரண்டு போய் நின்றான். அவள் குரல் நேரத்துக்கு நேரம் உயர்ந்துகொண்டே வருவதுபோல் இருந்தது. தன்னுடன் பேசும் சாக்கில் தனக்குள்ளாகவே எழும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறாளாயிருக்கலாம். ஆனாலும் நாணிக்கோணாமல் மென்மையான இதயம் போன்ற பூச்சுகள் இல்லாமல் எகிறிப் பேசியது பிடித்திருந்த்து.

“இப்ப என்னதான் பண்ணலாம்ன்றீங்க” நந்து உண்மையில் மிரட்டலாக குரல் உயர்த்தி கோபத்தைக் காட்ட நினைத்தான். கடைசி வார்த்தையில் தொண்டை திடீரென வறண்டு கீச்சிட்டது. அவள் சிரித்துவிட்டாள்.

உள்ள போலாம்ன்றேன். எதோ குடும்பச்சண்டைய ராக்கருக்கல்ல ரோட்ல போட்றாப்ல இருக்கு

ஏன் படிக்கப்போறீங்களா உள்ளே போனால் அவன் குடிகும்பலோடும் அவள் வேறு அறையிலும் இருக்கவேண்டும் என்பது இடறியது. இந்தச் சண்டையாவது இப்படியே இடைவெளியில்லாமல் நீண்டு பின் உறங்கினால் இந்த இரவுக்கு அர்த்தமிருக்கக்கூடும்.இந்தப்பெண்ணுக்கு மட்டும் இதுவரை தான் கண்டிராத புன்னகையொன்று கண்களுக்குள் பயணம் செய்வதை உணர்ந்தான். ஒற்றை இமைதூக்கிமுக்கால்பாக உதடுகள் மட்டும் நெளிய மறுபாகம் அதே மென்கோபத்துடன் இறுகியே இருக்கிறது. அர்த்த நாரி புகைப்படத்தில் இடப்பாகம் மட்டும் சிரித்துக்கொண்டிருக்கும் அம்பிகை போல.

குடும்பச்சண்டை என்ற வார்த்தை அழகாக உள்ளே நுழைந்து உறைந்தது. “எல்லா குடும்பமும் சண்டை போட்றதுதான். ஏன் குடும்பத்துக்கூடத்தான உரிமையா சண்டை போடத்தோணும். உரிமையில்லாதவங்கள நாம சண்டைபோட்றதில்லைல.”

“ஏன் இப்ப நாம சண்டை போடல. இதுல எங்க இருந்து வந்து உரிமை.சண்டையெல்லாம் எப்பவும் யார்கூடவேணா போடலாம். சும்மா அளக்காதீங்க”.

“சண்டை இல்ல உரிமை. திரும்ப வர்றதுல இருக்கு. தெரியாதவங்க கிட்ட போட்ற சண்டையும் தெரிஞ்சவங்க கிட்ட போட்ற சண்டையும் குடும்பத்துல நடக்குற சண்டையும் ஒண்ணில்ல. நடுவில பெரிய இடைவெளி இருக்குல்ல. அங்கதான் எல்லா விஷயமும் இருக்கு”

“கவிஞருக்கு பேச சொல்லியா குடுக்கணும்”

சில நொடிகள் உறைந்து மீண்டான். ” நான் கவிதை எழுதுவேன்னு யார் சொன்னா”
“அதுவா உள்ள தற்செயலா பேச்சு வந்துது உங்களப்பத்தி அப்ப ப்ரியாதான் சொன்னா. கவிதையெல்லாம் எழுதுவீங்களாம். டைரி டைரியா வச்சுருக்கீங்களாம். யார்கிட்டையும் காட்டமாட்டீங்களாம்.”

“ஹா ஹா. தற்செயலா என்னப்பத்தி பேச்செல்லாம் வருதா… நல்லவிஷயந்தான்”

இமை உயர்த்தி ஒரு நொடி முறைத்துவீட்டு மறுபுறம் திரும்பிக்கொண்டாள். சிரிக்கும்போதெல்லாம் மறுபுறம் திரும்பிக்கொள்ளும் அவள் தன்னுணர்வில் ஒரு அழகு இருந்தது. ஆண்பார்க்கையில் மாரப்பைச் சரிசெய்யும் பதட்டமின்றி எதிர் வருகிறவன் வழிவிடத்தூண்டும்படி கூந்தலைத் தூக்கி கழுத்தோரமாக பின்னால் எறியும் கர்வம். உன்னைக் கவனிக்கிறேன். நீ பொருட்டில்லை. நீ என் பிரியத்துக்குரியவன் இல்லை என முகத்திலறையும் கர்வம்.

“ஆமா கவிதையெல்லாம் ஏன் எழுதுறீங்க”

“எதூ.”

கவிதை. கவிதை ஏன் எழுதுறீங்கன்னு கேட்டேன்.

“இதுவரைக்கும் எப்படி எழுதுறீங்கன்னு கேட்டவங்கதான் இருக்காங்க. ஏன் எழுதுறீங்கன்னு யாருமே கேட்டதில்ல.”

“ஓ. சாரி. இல்ல. யாருக்கும் காட்டாம எழுதி எழுதி ஒளிச்சு வைக்கிறதுல என்ன ஆர்வம்னு தெரிஞ்சுக்கத்தான். தப்பா இருந்தா மறுபடி சாரி”

தப்பெல்லாம் ஒண்ணும் இல்ல. ஆனா கொஞ்சம் புதுசு அவ்ளோதான்.

ம்ம். அப்ப சொல்லமாட்டீங்க அப்டித்தான

அப்டி சொல்லல… ஆனா இதுல சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல. அது சின்ன வயசு பழக்கம். எதோ ஒரு காரணத்துக்காக எழுத ஆரம்பிச்சி, இப்ப சும்மா எடுத்து வைச்சிருக்கேன். காரணங்கள் முடிஞ்சுபோனதால இப்ப எங்கியும் பகிர்ந்துக்கிற்தில்லை. ஒரு தடவ காலேஜ் பேக்ல இருந்துது. பசங்க பாத்துட்டாங்க. மத்தபடி கவிஞனா நான் சொல்லிக்கிறதோ காட்டிக்கிறதோ இல்ல

ம்ம். என்ன காரணம். சொல்லலாமா

முதல் நாவல் அனேகமா எழுதுவேன். எழுதுனதும் முதல்ல உங்ககிட்டையே காட்டுறேன் சரிதான

அதுவரைக்கும் காண்டக்ட்ல இருந்தா பாப்போம்

முதல் நாளே இப்படி சொல்றீங்க. உங்கள நம்பி காரணம்வேற சொல்லணும்ன்றீங்க. சரியவா இருக்கு

அதுவும் சரிதான்

மெளனம் மெல்ல வந்து உள்ளே விழுந்தது. முதல் சந்திப்பிலேயே நியாபகத்திற்கு கொண்டுவர விரும்பாத காலங்களைப்பற்றி ஏன் பேசினோம் என்பது குழப்பமாக இருந்தது. எந்த நம்பிக்கையில் பேசுகிறோம். என்ன உரிமையில் பால்யத்தைப் பேசுகிறோம். அல்லது எந்த உரிமையில் பால்யத்தின் கதைகளை தயக்கமின்றி இவளால் கேட்க முடிகிறது.

”உள்ள போலாம்” படக்கென எழுந்து கொண்டாள். சொல்வதற்கு இதற்கு மேல் எதுவும் இல்லை என்பதைப்போன்ற ஒரு வேகம். பேசியது அத்தனையும் சரிதானா என்ன எண்ணிப்பார்த்துக்கொள் என வாய்ப்புக்கொடுக்கும் ஒரு அசைவு. திரும்பிப்பார்க்காமல் மிதிவண்டியிலிருந்து எழுந்தானா என்பதைக் கூட கவனிக்காத ஒரு அலட்சியம். இந்தப்பெண் எப்படி இத்தனை சிறு நிமிடங்களில் இத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்திப்போகிறாள். ஏன் அவள் கோபம் இத்தனை சுடுகிறது. ஏன் சிறிய முகச்சுளிப்பு இப்படி சுடு நீரில் அமிழ்த்துகிறது. யாரையும் எதற்கும் ஏற்காமல் தள்ளி வைத்துப்பார்க்கும் மனது இவளை மட்டும் ஏன் இப்படி கட்டி பின் தொடர்கிறது. மறுபேச்சின்றி தன் பாதையில் போகும் ஒரு பெண்ணை எது இழுத்து பதறி ஓடிப் பின் தொடரவைக்கிறது. கேள்விகள் வந்துகொண்டேயிருந்தன, உண்மையில் கேள்விகள் அப்பொழுதுதான் தொடங்குகின்றன என்பது அவனுக்கு எங்கோ ஒரு ஆழத்தில் தெரிந்திருந்தது,

அழிமுகம்

பின்னூட்டமொன்றை இடுக

’ஹிரோஷிமானி இக்கோ தெசுகா?’ கொஞ்சல் ஜப்பானிய மொழில் அந்தப்பெண் புன்னகைத்துக்கேட்டபோது,புரியவில்லை.

’மன்னிக்கவும், ஜப்பானிய மொழி தெரியாது’ என்றேன். ’ஹிரோஷிமா போறீங்களா?’ நல்லதொரு நுனி நாக்கு ஆங்கிலம். சிகரெட் சாம்பலை அதற்காக வைக்கப்பட்டிருந்த நீண்ட தொட்டியில் முடிந்தவரை நளினமாக தட்டிவிட்டு ‘ஆம்’ என்றேன். ‘தனியாகவா’ ஜப்பானியப்பெண்கள் எல்லாவற்றிலும் ஆச்சர்யம் கொண்ட கீச்சுக்குரலை நுழைத்துவிடுகிறார்கள் என்று தோன்றியது. மீண்டும் ‘ஆம்’ .

‘ஏன் ஹிரோஷிமா?’

இந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றும்பாதைகளெல்லாம் இந்தக்கேள்வியைச் சந்தித்திருக்கிறேன். பெரும்பாலும் ஒரு விருந்தினன். வேடிக்கை பார்க்க வந்தவன்.ஊர் சுற்ற வந்தவன். நம்மூரில் எது இவனை ஈர்த்துக்கொண்டுவந்திருக்கும் என்றொரு ஆர்வம் அவர்களின் கேள்விகளில் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு ஆச்சர்யமுகபாவனை. பெரும்பாலனவர்கள் நான் இங்கே வேலை செய்கிறேன் என்பதை அறிந்தபின் அடங்கிவிடுவார்கள். வேலைசெய்கிறவன் இடைவெளிகளில் எங்குவேண்டுமானலும் போகலாம். நாடுவிட்டு நாடுகடந்து சுற்றுகிறவன் மீதுதான் கரிசனம், இதுவரை என்னாட்டில் நான் காணாத எதைத்தேடி வந்திருக்கிறான் என்னும் ஆச்சர்யம்.

” ஜப்பான் பயணம் என்று முடிவான கணத்தில் தோன்றிய உணர்வு. அங்கே ஒரு நாள் அமர்ந்திருக்கவேண்டுமென்று’

“எங்கே?”

“அணுகுண்டு விழுந்த இடத்தில். உடலெல்லாம் எரிய பல ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் உடல் எரிய இறந்து போன இடத்தில்” என்றேன். கொஞ்சம் அதிகமாகச் சென்றுவிட்டோம் என்று தோன்றியது. அவளிடம் அப்போதும் அதே புன்னகை.

“ஏன்?”

“மரணம் என்னை வசீகரிக்கிறது”

“கொலைகள். இல்லையா?

நேரடியான கேள்வி. உண்மையானதும் கூட. அதை மறைக்க முயற்சிசெய்தேன். நடுங்கி விழவிருந்த சிகரெட்டை லாவகமாக மறைப்பவன் போல தொட்டியில் அமிழ்த்தி அடுத்த சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக்கொண்டேன்.

” இருக்கலாம். உள்ளூர் சுடுகாட்டில், காசியில், எரியும் பிணங்களைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திந்திருக்கிறேன். மரணம் வசீகீரமானதுதானே?” மெல்ல பந்தை அவள் பக்கம் உருட்டிவிட்டேன். புன்னகை மாறாமல் பார்த்துக்கொண்டிருந்தவள், இழுத்து மூச்சு விட்டாள்.

“இல்லை. மரணம், வெறும் சோம்பலான நாய். (Death is just a lame dog), கொலை, ஒரு வேட்டை நாய். சோம்பலில் எந்த வேடிக்கையும் இல்லை. வேட்டையில்தான் வேடிக்கை இருக்கிறது. வேட்டை நாய் சோம்பலாக இருக்கும்போது பார்த்திருக்கிறாய். அது அழகுதான். ஆனால் உண்மையில்லை”

பேச்சை மாற்றலாம் என்று தோன்றியது. நடுமுதுகில் பூச்சி ஊரும் எண்ணம். தலையசைத்து அதைக் கலைத்தேன். ” நீங்கள் தனியாகச் செல்கிறீர்களா?” என்றேன். “ஆம். ஆனால் அங்கே எனது நண்பர் இணைந்து கொள்வார். எனது பிறப்பிடம் அதன் அருகேதான். அங்கிருந்து வருவார்” என்றாள். ” உங்களுக்கு பிரச்சினை இல்லை எனில், எங்களுடன் இணைந்து கொள்ளலாம்” எளிமையான வார்த்தைதான். ஆனாலும் எதோ ஒன்று இயல்பான வெளியூர் பயம் உள்ளே உருட்டியது. ” இல்லை. அங்கே தனியே அமரவேண்டுமென விரும்புகிறேன். அந்த இடத்தில்.” சொல்லிவிட்டு அவள் முகத்தில் ஏமாற்றம் தெரிகிறதா என்று பார்த்தேன். எந்தச் சலனமும் இல்லை. “சரி. பரவாயில்லை. இந்த ட்ரெயினிலும் அடுத்த நான்குமணி நேரம் தனியாகச் செல்வதாக எந்த வேண்டுதலும் இல்லாவிட்டால் என்னுடன் இணைந்து கொள்ளலாம். பயப்படாதீர்கள், தின்றுவிடமாட்டேன். ஜப்பானியர்களில் உங்கள் ஊரின் பிஸ்கட் கொள்ளையர்கள் இருக்க சாத்தியம் குறைவுதான்” என்றாள். இந்தியாவைப்பற்றி எங்கோ படித்திருக்கிறாள். குறிப்பாக ரயில்பயணத்தின் பிஸ்கட் கொள்ளையர்களைப் பற்றி. இவளிடம் எ ந் நாட்டுப்பெருமையை எதைச் சொல்லி உருவாக்குவேன் என்ற எண்ணம் ஓடியது. இரண்டாவது சிகரெட்டை அணைத்தேன். புகையறை விட்டு கதவைத் தள்ளி அவளுக்கு வழிவிட்டேன். புன்னகைத்தபடியே வெளியேறினாள். தொடர்ந்து பின்னாலே வந்தேன். சிறுபிள்ளை போன்ற உடல். அதிகமும் பதினஞ்சு வயதைத் தாண்டாதென மதிக்கலாம். ஆனால் இந்த ஊரில் குமரிகள் முதல் கிழவிகள் வரை இதே உருவம் என்பதால் சற்று இடறியது. . என் இருக்கையைத் தாண்டி நடந்தாள்.

“என் இருக்கை இங்கே இருக்கிறது.” குரல் பலவீனமாக ஒலித்தது. “பையை எடுத்துக்கொண்டு இங்கே வாருங்கள். ஜன்னலை ஒட்டி இடம் தருகிறேன் என்றாள். நாங்கள் இருந்த பெட்டி, முன்பதிவு செய்யத்தேவையில்லாதது. யாரும் எங்கும் அமர்ந்துகொள்ளும்படியிலானது. பையை எடுத்துக்கொண்டு நாய்க்குட்டி போல அவள் இருக்கையின் அருகில் சென்று அமந்தேன். திடீரென நியாபகம் வந்தது. ” உங்கள் பெயர் சொல்லவில்லையே என்றேன்”

“ஷினு. ஷினுகாமி. உங்களுக்கு?” என்று கை நீட்டினாள். “நந்து” என்றேன். கைகொடுக்குமுன்னதாக சட்டையில் துடைக்கும் உணர்வெழுந்ததை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன். அதற்கும் இந்தியாவை அவள் இழுக்கக்கூடும் என்று தோன்றியது.

” கிட்டத்தட்ட உங்கள் பெயரைப்போலவே எங்கள் ஊரில் ஒரு கடவுள் பெயர் உண்டு. சிவகாமி”

” ஓ”

“தெரிந்திருக்கும் என நினைத்தேன். எங்கள் ஊர் ரயில் திருட்டையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்”

பெரிதாகச் சிரித்தாள். ” மனதைப்புண்படுத்தி விட்டேனா. மன்னிக்கவும். நிஜமாகவே சிவகாமி தெரியாது. ஆனால் இந்தியாவில் ஒரு பயணியாக சுற்றித்திரியவேண்டும் என நினைத்திருக்கிறேன். அதைப்பற்றி படிக்கும்போதுதான் ரயில் தீருட்டு பற்றியும் படித்தேன். புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்”

“புண்பட்டாலும் அது உண்மைதானே.” சங்கடத்தை மறைத்து புன்னகைத்தேன்.

“மரணம் போல”

“என்ன?”

“மரணத்தைப்போல. எல்லாரையும் புண்படுத்தும். எல்லாருக்கும் வரும். சாஸ்வதாமன உண்மை. சரிதானே”

“சரிதான்.”

சாய்ந்து அமர்ந்து கொண்டேன். ஊர்கள் ஜன்னலில் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன. அதிவேகதொடர்வண்டிகள் மீது ஆரம்ப நாட்களில் இருந்த ஆச்சர்யம் குறைந்து மற்றுமொரு பயணம் என்ற அளவில் மாறியிருந்தது. ஆனாலும் மரங்களுக்குப் பதிலாக ஊர்களே வருவதும் மறைவதுமாக இருப்பது இன்னும் ஆச்சர்யமூட்டுவதாகவே இருந்தது. “உறங்கப்போகிறீர்களா” அருகிலிருந்தவள் கேட்டாள். திரும்பி அமர்ந்தேன். “அப்படியெல்லாம் இல்லை. சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நீங்கள் ஏன் ஹிரோஷிமா போகிறீர்கள்?” நானும் பேசத்தயார் என்பதைப்போல மெல்ல சொற்களை நீட்டினேன்.

“புத்தாண்டு கொண்டாட்டம். ஒவ்வொரு புத்தாண்டும் ஊருக்குப்போய் ஊர் நண்பர்களுடன் கொண்டாடுவது வழக்கம். இப்போது அங்கே யாருமில்லை. எல்லாரும் டோக்கியோ வந்துவிட்டார்கள். அல்லது வெகு தொலைவில் எதாவது வேலையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஒருவன் மட்டும் அங்கே இருக்கிறான். அவனை வரச்சொல்லியிருக்கிறேன். புத்தாண்டு நள்ளிரவுக்காக. இரவெல்லாம் ஆட்டம் போட்டுவிட்டு, புத்தாண்டு பகல் முழுவதும் உறங்குவோம். மீண்டும், எழுந்து டோக்கியோவிற்கு திரும்பி வரவேண்டும். ”

சென்னையிலிருந்து திருச்சிக்கு வாராவாரம் துவைக்கவேண்டிய துணிகளுடன் போய்வந்துகொண்டிருந்த பழைய அறை நண்பன் நியாபகம் வந்தது. அவளுக்கு பெட்டியில் அவளது ஆடைகள் ஒருவார அழுக்குடன் சுருட்டி வைக்கப்பட்டிருப்பதாக தோன்றியது. சிரிப்பு வந்தது.

“ஏன் சீரிக்கிறீர்கள். ”

“இல்லை எங்கள் நாட்டிலும் இப்படித்தான். வாராவாரம் பொட்டிகட்டி ஊருக்குப்போகும் பழக்கம் உண்டு. ஊரில் குளத்தில் துவைப்பதற்காக ஆடைகள் சுருட்டி கொண்டுபோவோம். அது நியாபகம் வந்ததது”

”நிச்சயமாக என் பெட்டியில் அழுக்குத்துணியில்லை. ஒரு நாய்க்குட்டி மட்டும் வைத்திருக்கிறேன். நேற்று இறந்தது”

தூக்கிவாரிப்போட்டது. இறந்த நாய்க்குட்டியை பெட்டியில் வைத்துக்கொண்டு சிரித்தபடி வரும் ஒரு பெண்.

அவள் வெடித்துச் சிரித்தாள். ”பதறாதீர்கள். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. பெண்களின் வழக்கமான ஆடைகள்தான்”. அவள் கண்ணடித்தாள். சிறிய கோடுபோன்ற கண்கள். தூண்சிற்பங்களில் இருக்கும் மூடிய கண்களைப்போல. டைல்ஸில் குறுக்கே ஓடும் கறுப்பு நாய்க்குட்டி போன்ற கருவிழிகள். மஞ்சள்துணி போட்டு மூடிய, துணியை விடுவிப்பதற்காக பதறி ஓடும் கறுப்பு நாய்க்குட்டிகள்.

”ஆனால் உண்மையில் எனது குடியிருப்பில் மாடியில் ஒரு நாய்க்குட்டி இறந்துவிட்டது. அந்தப்பெண் இரவெல்லாம் அழுதுகொண்டேயிருந்தார். விளக்கு எரிந்துகொண்டேயிருந்தது இரவெல்லாம். அவள் கணவர் சமாதனம் செய்ய முயற்சி செய்துகொண்டேயிருந்தார். என்னவோ திடீரென நினைவு வந்தது. அதைச் சொன்னேன். சிறிது நிமிடத்தில் முகமெல்லாம் வெளிறிவிட்டது பார்”

உண்மையிலேயே உள்ளூர நடுங்கிக்கொண்டிருந்தேன். இன்னும் அதிவேக ரயிலிலில் ஆள்குறைவாக இருக்கும் பெட்டியில் கைப்பையில் இறந்த நாயை வைத்திருக்கும் பெண் என்பதாகவே அவள் சித்திரம் உள்ளே மின்னிக்கொண்டிருந்தது. அவளது ஒவ்வொரு தலையசைவுக்கும் ஒளி விடுபட்டு பார்த்தேன். பிறகு மீண்டும் மின்னலெனவெட்டும் அந்த சித்திரம். இடையே அந்த டைல்ஸில் ஓடும் நாய்க்குட்டிகள். ஈரம்பொதிந்த திசுத்தாள்களைப் பையிலிருந்து எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்தேன். டைல்ஸில் ஓடும் நாய்க்குட்டிகளை. பெட்டியில் இருக்கும் நாய்க்குட்டிகளை. இதுவரை பார்த்த அத்தனை நாய்க்குட்டிகளையும். அழுந்தத்துடைத்து எடுத்தேன். அவள் எந்தச் சலனமும் இன்றி எதிர்ப்புற ஜன்னல்களுக்கு வெளியே ஓடும் மரங்களைப் பார்த்துக்கொண்டேவந்தாள். இடைவளி புகைவண்டி நிலையம் எதோ ஒன்று வேகமாக கடந்துசென்றது. நடைமேடையிலிருந்து ஒரு நாய்க்குட்டி ஓடிவந்து ஓடும் ரயிலின் கண்ணாடியில் பளீரென அறைந்தது போல இருந்தது. முகத்தை மீண்டும் அழுந்தத் துடைத்தேன். அவள் இயல்பாகத் திரும்பினாள்.

“என்ன செய்யப்போகிறாய் குடித்தபின்?”

“என்ன?”

”இல்லை. அந்த இடத்தில் அமர்ந்து இரவில் குடிக்கவேண்டும். பிறகு என்ன செய்வதாக உத்தேசம்?”

“எதுவும் இல்லை. அவர்களில் யாராவது ஆவியாகவந்து காட்சி தந்தால் கொஞ்சம் பேசிக்கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்”

அதே சிறிய விலக்கமான புன்னகை. வெடித்துச்சிரிப்பாள் என்று எதிர்பார்த்தேன். அல்லது சீண்டப்பட்டிருக்கவேண்டுமென்று. எதோ கதை கேட்பவள் பாவனையில் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டாள். என்னை நோக்கி சாய்ந்து அமர்ந்தாள்.

“என்ன பேசப்போகிறாய்? அவர்களிடம் எதாவது கேட்கவேண்டுமா?”

“ஆம். மனிதர்களைப்பற்றி. அவர்களைக் கொல்வதாக முடிவெடுத்தவர்கள் பற்றி. அரசியல் காரணங்களுக்காக எங்கோ அமர்ந்து ஒரு பொத்தானை அழுத்தி அத்தனை பேரைக் கொன்ற ஒரு விரலைப்பற்றி. ”

“ஒரு வேளை நீ அங்கு இறந்திருந்தால், உன்னிடம் யாரவது வந்து இதே கேள்வியைக் கேட்டால், உன் பதில் என்ன?”

உண்மையில் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவளைச் சீண்டுவதற்காக, தூண்டி வாயைப்பிடுங்குவதற்காக எண்ணி எடுத்த ஒவ்வொரு சொல்லையும் அவள் எளிதாக கடந்து சென்றாள். அதைவிட கூரிய ஆயுதங்களை என்னை நோக்கி எறிந்துவிட்டு.

”தெரியவில்லை. பெரும்பாலும் ஏற்கனவே எதோ ஒரு விதத்தில் பழிவாங்கிவிட்டேன் அல்லது இறந்தபிறகு இது ஒரு விஷயமாகத் தெரியவில்லை இரண்டில் ஒன்றுதான் பதிலாக இருந்திருக்கும். உன் பதில் என்ன?”

“என்னிடம் பதில் இல்லை” வெடுக்கென சொன்னாள். கையில் வைத்து அழகுபார்த்த அழகியபூந்தொட்டி விழுந்து நொறுங்கியதைப்போல என்னில் திடுக்கிடல் எழுந்தது. “என்னை மன்னித்துவிடு” என்றேன். அவள் என் கண்களை ஊடுருவிப்பார்த்தாள். பதில் சொல்லாமல் மறுபுறம் முகந்திருப்பி மீண்டும் ஓடும் மரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

இலகுத்தன்மை எதோ ஒன்று உடைந்ததுபோல் இருந்தது. இழுத்துபெருமூச்சு விட்டு ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு வந்தேன். மரங்கள். சூரியமின்சாரத்திற்கென புறம்போக்கு நிலங்களில் அரசாங்கத்தால் பதிக்கப்பட்ட தகடுகள். பழைய ஜப்பானிய பாணியிலான ஓட்டுவீடுகள். கடந்து செல்லும் ரயில் நிலையங்கள். அங்கே அந்த நிறுத்ததில் நிற்கப்போகும் புகைவண்டிகளுக்காக காத்திருப்பவர்கள். தள்ளுவண்டிகளில் அமரவைக்கப்பட்டு உறங்கிவிட்டிருந்த குழந்தைகள். அவள் உறங்கியிருக்கக்கூடும் என்று தோன்றியது. பின்கழுத்தில் உறுத்த திரும்பினேன்.கூர்மையாகப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

” பெரியவர்கள் இறந்ததைவிட குழந்தைகள்தான் அதில் அதிகம். பேசமுடியாத குழந்தைகள். உடல் எரிய. நாவறண்டு. தண்ணீர் என வாய்திறந்து கேட்கத்தெரியாத குழந்தைகள். அவர்களிடம் பதில் கிடையாது. கேள்விகள் இருந்திருக்கலாம். யாருக்கும் தெரியாது. ஆனாலும் இறந்தார்கள். சிறிய பொத்தான். எங்கோ யாரோ அழுத்திய ஒரு பொத்தான். யாரோ யாரிடமோ சொல்லிய ஒரு வார்த்தை. மெல்ல ஊர்ந்து எழுந்து பறக்கிறவர்களிடம் வந்து சேர்ந்து, அவர்கள் திறந்த சிறிய கதவு. அங்கிருந்து விழுந்த ஒரு உலோகத்துண்டு. மொத்த பேரையும் நாதிறக்கவிடாமல் சாகடித்துவிட்டது. அத்தனை பேரையும் கொல்லவேண்டும். அதற்குக்காரணமான அத்தனை பேரையும் ஒருத்தர்விடாமல்.” அவள் ஜப்பானிய வாசம் வீசும் ஒரு ஆங்கில உச்சரிப்பில் தடதடவென பொரிந்தாள். குரல்தழுதழுத்தது போல் இருந்தது. ஆனால் கண்களில் கோபம் இருந்தது. எச்சில்விழுங்கி எதுவும் சொல்லமுடியாமல் விழித்தேன். ”இன்னொரு சிகரெட்?” அவளது பதிலுக்கு காத்திராமல் இருக்கையிலிருந்து எழுந்தேன். அவளைக் கடந்து போகவேண்டும். அவளை மீறிப்போகமுடியாது. அவளும் அமர்ந்திருந்தாள். சில நொடிகளுக்கு பிறகு பெருமூச்சு விட்டு கைப்பையிலிருந்து சிகரெட்பொபொட்டியையும் நெருப்புக்குச்சியையும் எடுத்துக்கொண்டு எழுந்து வெளியே வந்து வழிவிட்டாள். நான் முன்னால் நடந்தேன். பின்கழுத்தில் அவள் பார்வை குறுகுறுத்து.

பெட்டியோடு இணைந்திருந்த புகையறைக்குள் நுழைந்தேன். ஒதுங்கி அவளுக்கு வழிவிட்டேன். நுழைந்து கதவை அடைத்தாள். “ மன்னித்துவிடு. உன்னைக்காயப்படுத்தும் நோக்கமில்லை. தோன்றியது சொன்னேன்” என்றாள்.

இலகுவானேன். சிகரெட்டைப்பற்றவைத்து அவளிடம் நீட்டினேன். பழைய உதட்டோரபுன்னகையுடன் அதைவாங்கி தன் சிகரெட்டைப்பற்றவைத்து என்னிடம் தந்தாள். நான் கொடுத்த சிகரெட்டை வாயில் பொருத்திக்கொண்டாள்.

“பிணங்கள் எரியும் ஊர் ஒன்று சொன்னாயே. காஜி.அதுவும் இப்படித்தானா? படித்ததில்லையே ”

“ஆ. இல்லை. இப்படியில்லை. அது மதம் சார்ந்த ஒரு நம்பிக்கை. அங்கே இறந்தால் இறந்தவர்களை எரித்தால். கடவுளை அடைவதாக ஒரு நம்பிக்கை”

“அதற்காக எரிப்பார்களா உயிரோடா” அவள் கண்களில் பதட்டத்துடன் கூடிய ஆச்சர்யம்.

“அய்யோ அப்படி இல்லை. இறந்தர்களை. பிணங்களை. சிலர் வயதான காலத்தில் இறப்பதற்காக அங்கே போய் தங்கி காத்திருப்பார்கள். இறந்தபிறகு யாராவது எரித்தால் நல்லது என்று. சில சமயங்களில் பாதி எரிந்த பிணங்களை அந்த ஆற்றில் இழுத்துவிட்டுவிடுவார்கள். அதைப்பற்றி நிறைய காணொளி இணையத்தில் கிடைக்கும். “

“ஆக எதுவுமே அரசியலோ கொலையோ இல்லை”

“இல்லை.”

“ நீ பார்த்த மற்ற சுடுகாடுகள்.?”

“எதுவுமே கொலையல்ல. எல்லாமே மரணங்கள். ”

“ நீ உயிர்களுக்காக அலையவில்லை. வெறும் நெருப்பிற்காக அலைகிறாய் இல்லையா”

“ஆம்.” காற்று நீக்கிய பலூன் போல உள்ளுக்குள் சுருங்கினேன். தலையைக்குனிந்துகொண்டேன். ஏனென்று தெரியாத ஒரு சங்கடம் அடிவயிற்றில் குமிழென எழுந்தது.

”அதான் கையிலேயே வைத்திருக்கிறாயே.” மிகச் சாதாரணமாகக் கேட்டாள். திடுக்கிட்டேன். சிகரெட்டைச் சுண்டினேன். மிகச்சரியாக அதற்கான தொட்டியில் போய் விழுந்தது.

“ நெருப்பு எல்லாபுறமும் இருப்பதுதான். அதைத்தேடும் உனது வேட்கையைப்போல. ஆனால் மரணம் என்று நீ சொல்லிக்கொள்வதில் ஒரு நெருப்பு கிடைக்கிறது. அதைப் பற்றிக்கொண்டிருக்கிறாய். உன் தனிமைப்பயத்தைப் போக்க என்னுடன் இணைந்து கொண்டது போல இல்லையா” சீண்டுவதற்கான வார்த்தைகளைப் பொறுக்கி அளிக்கிறாளா அல்லது அவள் சாதாரணமாக பேசுவதே சீண்டுகிறதா என்ற குழப்பம் வந்தது.

“மன்னிக்கவும். நீதான் என்னுடன் இணைந்துகொண்டாய் என நினைத்தேன். “ முதலில் அவள்தான் வந்து பேசினாள் என்பதை சுட்டிக்காட்டவிரும்பினேன். “ ஹா ஹா. நான் சிகரெட்டுக்காக வரும்போது நீ தனியே அமர்ந்திருந்ததைக் கவனித்தேன். பதட்டமாக இருந்தாய். நாங்கள் ஆறுவயதிலிருந்து தனியே நகரத்து ரயில்களில் குறுக்கும் நெடுக்குமாக போய் பழகியவர்கள். சந்திக்கும் முகத்தில் அவர்கள் தனியாக வந்தவரா, குடிபோதையில் இருக்கிறாரா பதட்டத்தில் இருக்கிறாரா என்பதை எங்களால் உணரமுடியும். நான் ஹிரோஷிமாவின் தெருக்களில் வளர்ந்தவள். சுற்றுலாப்பயணிகளின் முகக்குறிப்புகள் எனக்கு தலைப்பாடம்” என்றாள்.

“ நான் சுற்றுலாபயணியல்ல.”

“வேலை செய்கிறாயா?”

“ஆம் டோக்கியோவில். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக”

“ஆனால் ஹிரோஷிமா இதுதான் முதல்முறை”

“ஆம் ஆனால்..”

“இதுவரை ஏன் வரவில்லை”

“ நேரம் வாய்க்கவில்லை” என் குரல் உள்ளடங்கியதுபோல் எனக்கே ஒலித்தது “ என் வேலை அப்படி”

”ஆனால் மற்ற இடங்களெல்லாம் சுற்றியிருக்கிறாய்”

“கொஞ்சம். பெரும்பாலும் டோக்கியோ. சில நேரங்களில் அருகிருக்கும் சிறப்புத்தீவுகள்”

“ஆனால் ஹிரோஷிமா இல்லை”

“ஆம். ஆனால் …”

“ நான் சொல்கிறேன். உனக்கு பயம். ஹிரோஷிமா மீது பயம். மரணத்தின் மீது பயம். இன்னும் சொல்லப்போனால் உன் ஊர் மீது பயம். அதற்கான சாக்கு ஜப்பான். ஹிரோஷிமா கொலைகள் மீது பயம் அதற்கு சாக்கு வேலை. தனியாக போக முடிவெடுத்தாலும் இடம் நெருங்க நெருங்க அங்கே இறந்தவர்கள் நினைவுக்கு வந்து மீண்டும் பயம். அதற்கு சாக்கு என்ன மரணம் வசீகரிக்கிறது. போய் அமர்ந்து குடிக்கப்போகிறாயா”

ஆழத்தைப்பிளந்து பிளந்து நுழைந்துகொண்டேயிருந்தாள். தொண்டை கமறியது. இருமினால் அல்லது அசைத்தால் அழப்போகிறேன் என்று முடிவெடுத்துவிடக்கூடும்.

“ஊரில் என்ன பிரச்சினை? ஏன் காசிக்குப்போனாய்?”

திடுமென அந்தப்புள்ளியையும் தொட்டாள். “சும்மாதான். அந்த நதிக்கரையில் கோயில் இருக்கிறது. அங்கே பெளர்ணமி அழகாக இருக்குமென்றால் பார்க்கப்போனேன்”

“பார்த்தாயா? பார்த்திருக்கமாட்டாயே?”

“ஆம். நதியில் ஒரு பிணத்தைப்பார்த்தேன். ஒரு குழந்தை. திறந்திருந்த கண்கள். நீர்ப்பரப்பின் மீது. ஈயாடிக்கொண்டிருந்தது. அதற்கு மேல் அந்த ஊரில் இருக்க்க முடியவில்லை. திரும்பிவிட்டேன் வந்தவேகத்திலேயே”

“சரி. உண்மையைச் சொல். எதற்காக ஹிரோஷிமா போகிறாய்?”

“தற்கொலை செய்துகொள்ள” என்றேன். ஏன் அவளிடம் இதைத் திறந்தேன் என தயக்கம் எழுந்தது. ஒருவேளை அதுவும் தெரியும் என்று சொல்லிவிடுவாள் என்று பயந்தேன்.

“ஏன். ஏன் ஓடுகிறாய்” என்றாள்.

“ஒரு பெண்”

”ஆண்கள். “ முணுமுணுத்தாள். மறுபுறம் திரும்பிக்கொண்டாள். “ விலக விரும்பியவளை திரும்பிப்பார்க்கவைக்கவேண்டும். குற்ற உணர்ச்சியைத் தூண்டவேண்டும். அவ்வளவுதானே? அதற்காகத்தானே இந்த நாடகம்?”

“அப்படியில்லை ஒருவேளை இது அவளுக்குத் தெரியாமலே கூட போகலாம் இல்லையா. இதில் என்ன குற்ற உணர்ச்சி. இது எனக்கு ஒரு தப்பித்தல் அதற்காக”

”என் இனிய நண்பா..” அவள்வார்த்தையை இழுத்த வேகத்தில் கிண்டல்தொனியிருந்தது. “ நீ எங்கும் இறக்கப்போவதில்லை. இறக்கவிரும்புகிறவனுக்கு நாடு ஊர் வித்தியாசங்கள் தேவையில்லை. நீ அதைச் சொல்லிச்சொல்லி ஊதிப்பெருக்கி பிறகு காற்றுப்போன பலூனைப்போல தென்றலில் அசைந்தாடி இறங்கப்போகிறாய். எதுவும் நிகழப்போவதில்லை. ஏன் உன்னையே ஏமாற்றிக்கொள்கிறாய்.”

“ நான்..வந்து…” எனக்கு வார்த்தைகள் குழறியது. அவள் சொல்வது உண்மைதான் என்று தோன்றியது.

“அங்கே அருகருகே அருமையான ஜப்பானிய பாணி கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று உங்களூர் பெண் தெய்வம் சாயல் என்றும் இந்திய கலாச்சார பாணியென்றும் சொல்கிறார்கள். சுற்றிப்பார். சில புகைப்படங்கள் எடுத்துக்கொள். திரும்பிப்போ. வேலையைக் கவனி. எண்ணம் வரும்போதெல்லாம் ஒரு முறை இந்த நாளை நினைத்துக்கொள். புரிகிறதா” என்றாள். அவள் குரலில் உத்தரவிடும் தோரணைக்கு எந்தக்கணத்தில் மாறினாள் என்று ஆச்சர்யமாக இருந்தது. எந்தத் தருணத்தில் நான் அவளிடம் அடங்கியவனாக மாறினேன் என்றும்.

ரயில் நிலையத்தில் நாங்கள் இறங்கியபோது அதிக கூட்டமில்லை. மெல்ல குதிகால்களை உயர்த்தி விரல்களில் நின்றபடி நெற்றியில் முத்தமிட்டாள். பெட்டியைத் தள்ளிக்கொண்டு விறுவிறுவென இறங்கிப்போனாள். சக்கரங்கள்பொறுத்தப்பட்ட அந்தப்பெட்டி சிவப்பு நிற நாய்க்குட்டி அவள் பின்னால் துள்ளி ஓடுவது போல் தோன்றியது.

o

உண்மையில் இந்தக் கதை நடந்து ஒன்றரை வருடங்கள் இருக்கும். வெகுசமீபத்தில் ஜப்பானிய மொழி கற்பதற்காக சிறப்புவகுப்பில் இணைந்திருக்கிறேன். எழுத்துக்களைத்தாண்டி வார்த்தைகள் வரை வந்திருக்கிறேன். ஷினு என்ற வார்த்தைக்கு அவர்கள் மரணம் என்று அர்த்தம் சொன்னபோதுதான் இந்த நிகழ்வும் மொத்தமாக நினைவுக்கு வந்தது. வீட்டிற்குவந்து காமி என்பதற்கான அர்த்தங்களைத்தேடினேன். கமி,காமி, பல எழுத்துவகைகள், மாற்றி மாற்றி தேடி இறுதியாக தேடியதை அடைந்தேன்.காமி என்றால் கடவுள். ஷினு காமி. மரணத்தின் கடவுள்.

o

[[ஷுனுகாமி என்ற பெயரில் 26-July-2017 தேதியிட்ட ஆனந்தவிகடன் இதழில் வெளியானது ]]

என்னைப் பெருங்கனவு என அழைப்பார்கள்

1 பின்னூட்டம்

” தற்கொலைன்றது கண நேர மயக்கம்னு சொல்றத கேட்ருக்கீங்களா சார்? தெரியாதவன் அப்டித்தான் சொல்லிட்டு திரியுறான். ஆனா எனக்கு அப்டித்தோணல. இதெல்லாம் ஆழமா விழுந்து மெல்ல முளைக்கிற செடி மாதிரி கொஞ்சம் கொஞ்சமா பரந்து விரிஞ்சு, இதுக்கு மேல வளர இடம் இல்லைன்னு தெரியும்போதுதான் நீங்க பார்க்குற எக்ஸ்ட்ரா விழுது”

“ஹ்ம். கேள்விப்பட்டிருக்கேன். தூக்கம் சரியா இருக்கா? ஒரு நாளைக்கு எவ்ளோ நேரம் தூங்குறீங்க?”

”விஷயம் புரிபடமா உளறிட்டு இருக்கேன்னு நினைக்கிறீங்க. இன்சோம்னியாவா இருக்கும். டிரக்ட் அடிக்ட். அல்லது பிராடு பார்ட்டின்னு நினைக்கிறீங்க, கரெக்டா டாக்டர்?”

“அப்டியெல்லாம் நான் எதும் நினைக்கல ஷிவா. உங்களுக்கு என்ன விதமான டிஸ்கம்பர்ட்ஸ் இருக்குன்னு தெரிஞ்சா ஒரு வேளை அதுக்கான சரியான கவுன்சலிங்க் என்னால குடுக்க முடியும்னு நினைக்கிறேன்”

“டிஸ்கம்பர்ட்? எல்லாமே டிஸ்கம்பர்ட்தான் டாக்டர். எதுவும் பிடிக்கல. எல்லாத்து மேலையும் கோவம் வருது. லிப்ட்வாசல்ல யாரையும் போகவிடாம நடுல நின்னுகிட்டு கதையடிச்சுட்டு இருக்கிறவனப் பாத்தா இழுத்துப்போட்டு சாத்தணும்போல இருக்கு. காபி எடுக்கிறதுக்காக பின்னாடி 4 பேர் நின்னுட்டு இருக்கும்போது மெஷின் பக்கத்துல நின்னு ஆற அமர கலை நயத்தோட டீ ஆத்துறவங்களப்பாத்தா கோபம் வருது. திடீர்னு ரோட்ல செல்போன்ல பேசிட்டு எதிர்பக்கத்த பாத்துட்டு நடந்துவர்றவன் வண்டிய ஏத்தி கொல்லணும்னு தோணுது. தப்பில்லையா டாக்டர்??”

“தப்புன்னு தோணுதுல்ல.. யூ ஆர் நார்மல்னுதான் நினைக்கிறேன். எதுக்கும் கொஞ்சம் மாத்திரை எழுதித் தரவா? ”

“எதுக்கு மாத்திரை? என்னோட பிரச்சினை வெறும் பிரமை. சும்மா சப்கான்ஷியஸ் மைண்ட அமைதிப்படுத்தி அனுப்பலாம்னு பாக்குறீங்களா?”

“எதுவும் நான் சொல்லலீங்க.”

”எது சொன்னாலும் அதுக்கு பின்னாடி சில காரணம் எப்பவும் இருக்குமில்லையா?”

“அப்டில்லாம் எதும் இருக்கத் தேவையில்லையே? தவிரவும், என்னோட உள் நோக்கத்த நீங்க சரியாத்தான் புரிஞ்சுகிட்டீங்கன்னு எப்படி நம்புறீங்க?”

“பாத்துருக்கேன் டாக்டர். நிறைய மனுஷங்களப் பாத்திருக்கேன். ஒவ்வொரு மனுசனையும் ஒரு ஆய்வுக்கூட எலி மாதிரி இன்னிக்கும் பாத்த்துட்டு இருக்கேன். சைக்காலஜின்றதே சக மனுசனப் பத்தின புரிதல்னா, சக மனுசனப் புரிஞ்சுக்கத் தெரிஞ்சவன் ஒரு சைக்காலஜிஸ்ட்டா இருக்க வாய்ப்பில்லையா?

“இருக்கலாம்”

”ஒவ்வொருத்தரோட உள் நோக்கத்தையும் என்னால படிக்க முடியுது டாக்டர். பார்வை, ஒரு வார்த்தைன்னு ரொம்ப சுலபமா என்ன நினைக்கிறான், என்ன சொல்லவர்றான்னு முன்கூட்டியே சுலபமா கண்டுபிடிக்க முடியுது”

” நல்ல விஷயம்தானே? இதையேன் பிரச்சினைன்னு நினைக்கிறீங்க? மனுஷங்களோட பழகுறதுதான் பிரச்சினை எல்லாருக்கும்? அது சுலபமா வருதுன்னா நல்லதுதானே?”

“அப்டி இல்ல டாக்டர். எடுத்துக்காட்டுக்குச் சொல்லணும்னா, உங்களோட இந்த பதில நான் எதிர்பார்த்தேன். நீங்க இப்படித்தான் சொல்லுவீங்கன்னு தெரியும். இதுக்கு என்ன சொல்லுவீங்கன்னும் தெரியும்னா, இதுக்கு மேல உங்க கிட்ட என்ன பேசுறதுன்னு சொல்லுங்க. கிட்டத்தட்ட என் பதில், அதற்கான உங்க பதில், அதற்கான என்னோட பதில்னு மொத்த கான்வெர்ஷேனுமே முன்னாடியே ஒரு சினிமா மாதிரி எனக்குள்ள ஓடுனா, நாம பேசுறதுக்கு என்ன இருக்கு? கிட்டத்தட்ட நானே என்கிட்ட பேசிக்கிற மாதிரி ஆகாதா?”

“உங்ககிட்டையே எப்பவாது பேசியிருக்கீங்களா?”

“யூ மீன் தனியா பேசிட்டு இருக்கிறது? அப்டி குறிப்பிட்டுச் சொல்ற மாதிரி எதுவும் இல்ல. ஆனா நான் யார் கூட பேசினாலும், அது என்கூட நானே பேசிக்கிற மாதிரிதான். ஒரு கட்டத்துல யார் யாரைக்கூப்ட்றாங்கிறது கூட தெரியுறதில்ல. கொஞ்ச நேரம் நம்மளோட ப்யூச்சர் கான்வெர்ஷேன எனக்குள்ள ஓட்டிப்பாத்தா, என் பேர் சொல்லிக் கூப்டாக்கூட என் மூளை வேலை செய்யுறதில்ல. நான் டாக்டராவும் எதிர்ல இருக்கிற நீங்க, கவுன்சலிங்குக்கு வந்த நானாவும் மாறிட்றோம்.”

“இதனால எதும் குழப்பம் வந்திருக்கா?”

“ஹா ஹா. இந்தக் கேள்விய எதிர்பார்த்தேன். ஒரு வேளை கிளம்பும்போது உங்ககிட்ட நான் பீஸ் கேட்டா என்ன பண்ணுவீங்க டாக்டர்?”

“ஹா ஹா. ரெண்டு பேரும் இடம் மாறிட்டோம்னு உங்களுக்குப் புரியவைக்க முடியுமில்லையா? அதுக்காக பீஸ் கேட்றாதீங்க”

”அப்டி இல்ல டாக்டர். பொதுவா பேசும் போது கான்சியஸ் மைண்ட் பதில் சொல்லும், சப்கான்ஷியஸ் மைண்ட் கேட்டு உள்வாங்கிக்கும். எனக்கு ரெண்டும் இடம் மாறிடுது. கான்சியஸ் மைண்ட் எல்லாத்தையும் உள்வாங்கி சப்கான்சியஸ் மைண்ட் ரெண்டா பிரிஞ்சு பேசிட்டு இருக்கு. பேசி முடிக்கும்போது எங்க இருக்கேன் யார்ன்றதுலையெல்லாம் பெரிய குழப்பமே வந்துடுது “

“அப்ப உங்க பிரச்சினை உங்களுக்கே தெளிவா தெரியும்னு சொல்றீங்களா? மருந்தும் தெரியுமா?”

“இல்ல, இதெயெல்லாம் என்னோட சிம்டம்ஸ் வச்சு நெட்டுல மேஞ்சது. மருந்துன்னு எதுவும் சொல்லப்படல.”

“உங்க சப்கான்சியஸ் மைண்ட் என்ன சொல்லுது?”

”தற்கொலை பண்ணிக்கச் சொல்லுது டாக்டர்”

“காதுல குரல் கேட்குதா?”

“பாத்தீங்களா மறுபடி சாதாரண அப்ஸஸிவ் டிசார்டர் அல்லது பைபோலார் டிஸார்டர் வச்சே பேசிட்டு இருக்கீங்க. என் பிரச்சினை அது இல்லை. அயம் கிளியர் அண்ட் பெர்பெக்ட். ஆக்சுவலி பிக்சல் பெர்பெக்ட் அண்ட் கிரிஸ்டல் கிளியர் அதான் கொஞ்சம் பிரச்சினை”

“அப்ப தற்கொலை?”

“அதான் சொன்னனே.. ப்யூச்சர் கான்வெர்ஷேசன்ஸ். பேச்ச முடிச்சு கிளம்பினப்புறம் கூட எதிராளி கூட தொடர்ந்து பேசிட்டே இருக்கிறேன். எல்லா கான்வெர்ஷேசன்லையும் தற்கொலைதான் தீர்வுன்னு சொல்றாங்க எல்லா பிரண்ட்ஸும்”

“பிரண்ட்ஸ் உங்க கிட்ட சொன்னாங்களா?”

“கான்வெர்ஷேசன்ல இல்ல. என்னோட சப்கான்சியஸ்குள்ள ஓட்ற ப்யூச்சர் கான்வெர்ஷசன்ல தற்கொலைல முடியுது கான்வெர்ஷேசன்”

”அப்ப நம்ம கான்வெர்ஷேசனும் அப்டித்தான் முடியுமா? நான் வேற வார்த்தைகள்ல, பேச்சுவார்த்தையைத் தொடராத இடத்துல முடிச்சா?”

“அதையும் நண்பர்கள் கூட முயற்சி பண்ணிப்பாத்துட்டேன். ஒருத்தன் கூட வாண்டடா சண்டை போட்டு இன்னியோட பிரிஞ்சுரலாம், ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கவேண்டாம்னு முடிச்சேன்”

”அப்ப ப்யூச்சர் கான்வெர்ஷன் எதுவும் இருக்க வாய்ப்பில்லையே?”

“அங்கதான் பிரச்சினை. ப்யூச்சர் கான்வெர்ஷேசன்ல, என்னோட தப்ப உணர்ந்து அவன்கிட்ட மன்னிப்பு கேட்டு, அவனும் மன்னிச்சு ஏன் சண்டைபோட்டோம்னு பேச ஆரம்பிச்சு தற்கொலை பண்ணிக்கலாம்னுதான் அதுவும் முடிஞ்சுது”

”என்ன விதமான தீர்வு சரியாவரும்னு நீங்க நினைக்கிறீங்க?”

“செடடிவ் ஹிப்னோதெரபி. மயக்கத்துக்கு கொண்டு போய் ஆழ்மனசோட எண்ணங்கள மாத்துறது”

“அது சரியா வருமா? எப்படி நம்புறீங்க”

“ நான் முழுச்சிருக்கிற வரைக்கும், என்ன எந்த கேள்வியாலையும் உங்களாலல மடக்க முடியாது. சப்கான்சியஸ் பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நீங்க எனக்கு செடடிவ் தரணும்”

“ஆனா ஹிப்னோ தெரபினா உங்க சப்கான்சியஸ் கிட்டத்தான நான் பேச வேண்டியிருக்கும். அதுல எதும் குழப்பம் வராதா?”

”வராது. கான்சியஸ் அண்ட் டூ வெர்சன்ஸ் ஆஃப் சப்கான்சியஸ் மொத்தம் மூணு பேரா பிரிஞ்சு பேசுறதுதான் என்னோட பிராப்ளம். செடடிவ் எடுத்துட்டா, கான்சியஸ் மைண்ட் இல்லாம போய்டும், சப்கான்சியஸ் கூட மட்டும்தான நீங்க பேசப்போறீங்க?”

“மொதல்ல ரெண்டு பேரா பேசுறோம்னு சொன்னீங்க. இப்ப மூணு பேர்ன்றீங்க?”

”அதான் சொன்னனே ஏற்கனவே இன்னும் உங்ககிட்ட பேசிட்டே இருந்தா இது இன்னும் விரியும், மூணு நாலுன்னு”

”செடடிவ் கண்டிப்பா என்கிட்ட இருந்து எதிர்பாக்குறீங்களா?”

“இல்ல டாக்டர், வரும்போதே ட்ரையஸோலம் எடுத்துட்டுதான் வந்தேன்.”

“வாட்? இதெல்லாம் யாரக்கேட்டு பண்ணீங்க? எங்க கிடைச்சது?”

“உங்களுக்குத் தெரியாதா டாக்டர். மூணு மடங்கு காசு குடுத்தா எதை வேணா வாங்கலாம்”

“வந்து பெட்ல படுங்க”

”தற்கொலைங்கிறது கண நேரத்து முடிவுன்னு நினைக்கிறீங்களா டாக்டர்?”

“என்ன உளர்றீங்க ஷிவா? இந்த பெட்ல வந்து படுங்க”

“ நான் இப்ப இந்த ஜன்னல் வழியா குதிச்சா என் எல்லா பிரச்சினையும் முடிஞ்சுரும் இல்லையா டாக்டர்?”

“ நான்சென்ஸ். பெட்ல படுங்க”

“இப்ப உங்க பிபி ஏறுதா டாக்டர்? கண்விழி விரியுறது இங்க தெரியுது. ”

“உங்களால என்ன இழுக்க முடியாது டாக்டர்”

..

“பெட்ல இல்ல. அங்க தெரியுற தரையில போய் படுக்கப்போறேன்”

மூன்றாவது மாடியிலிருந்து ஷிவா கீழே குதித்து மண்டை சிதறியதை ஊரே பார்த்தது. ”டாக்டர் கதவடைச்சுட்டு தனக்குத்தானே பேசிட்டு இருந்தாராம் அப்புறம் ஜன்னல் வழியா குதிச்சிட்டாராம்” என யாரோ போனில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

காதெலென்னும் தூங்கும் மிருகம் – 2

பின்னூட்டமொன்றை இடுக

காதல் இருக்கே… அதை மாதிரி உலகத்துலையே காமெடியான விஷயம் எதுவுமே கிடையாது சார்.  சும்மா சொல்லல. நீங்க வேணும்னா காதலர்க்ள் இருக்கிற ஒரு ஹோட்டலையே கடையிலையோ கடற்கரையிலயோ போய் நின்னு பாருங்க. பக்கத்து பக்கத்துல உக்காந்திருப்பாங்க. ஒருத்தர் மூஞ்ச ஒருத்தர் ரொம்ப நேரமா பாத்துகிட்டு இருப்பாங்க. ஆர்டர் எடுக்கிற பையனையும் விரட்டிவிட்ருவாஙக. எதோ முதமுறையா அப்பதான் ஒருத்தர ஒருத்தர் பாக்குற மாதிரி பே ன்னு பாத்துட்டு இருப்பாங்க. எதாவது பேசுவாங்களான்னு பாத்தா அதுவும் கிடையாது. இவரு என்னடா பண்றதுன்னு தெரியாம சுத்திமுத்தி பாப்பாரு, அந்தப்பொண்ணு இவன் எங்கபாக்குறான்னு பின்னாடியே கண்ண உடும். எங்கயாவது அவன் பார்வை பட்ற எடத்துல ஒரு பொண்ணு கிராஸ் ஆச்சு… பையன் தொலைஞ்சான்னு அர்த்தம்

‘சரி அப்ப நான் கிளம்புறேன்’
‘ஏன் மா? ‘
‘அதான் உனக்கு நிறைய பொண்ணுங்க இருக்கிறாங்களே பாக்குறதுக்கு’
‘அப்டி இல்லைமா, சும்மா.. தற்செயலா.. ஆக்சுவலி…’
‘ நான் அவள மாதிரி இல்லைல?, தெரியுண்டா… கொஞ்சம் வெயிட் போட்டுட்டேன்.. அதுக்கு நான் இருக்கும்போதே இன்னொருத்திய பாப்பியா நீ?’
‘அய்யோ… அப்டியில்லாம் இல்ல செல்லம்..’
‘ஆமா வெல்லம்.. இந்த கொஞ்சலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. ஆனா சும்மா சைட்டடிச்சுட்டே இருப்ப.. அத நாங்க பாத்துட்டு இருக்கணும்?”
‘ஏண்டி இப்ப இப்படில்லாம் பேசுற?’
‘ஆமாடா.. நீ என் பின்னாடி அலைஞ்சல்ல.. உடனே ஒத்துக்கிட்டேண்பாரு என்னைச் சொல்லணும்…’

எப்பவாது பொண்ணு அமைதியாகும்னு நினைக்கிறீங்க? ஹீம்ஹும்! அது போன வருஷம் அப்பா நகை செஞ்சதுல இருந்து .. முந்தின நாள் பொண்ணுபாத்துட்டு போனவன் வரைக்கும் எல்லாக்கதையையும் சொல்லிட்டு டபால்னு எந்திருச்சு ஆட்டோ புடுச்சு போய்டும், நம்மாளு ஓடுவான். சர்வர் புடுச்சிப்பான். (பில்லக் குடுத்துட்டு போ சார்) இவன் பில் செட்டில்பண்ணிட்டு வரதுக்குள்ள ஆட்டோ போய்டும்.  வெளிய வந்து எதாவது ஒரு டீகடையில டீ அடிச்சு தம் போட்டாதான் ( மால்ல அப்பதான் ரெட்புல் 80+80 பில் பே பண்ணியிருப்பான்) நம்ம பயலுக்கு கண்ணே தெரியும், சரி அவளுக்கு கால் பண்ணலாம்னு போன் எடுத்தா ‘ ஹனி 8 மிஸ்டு கால்ஸ்’. அப்டியே ஷாக் ஆகி, திருப்பி கூப்ட முயற்சி பண்ணா ‘ யுவர் பேலன்ஸ் இஸ் லோ ந்னு ஒரு பொண்ணு ( ஆணின் காத்லுக்கு இன்னொரு பெண் தான் எதிரி) சொல்லும். மறுபடியும் நம்மாளு ஓடுவான், ரீசார்ஜ் செண்டர் எதுவும் கண்ணுல படாது, மூச்சு வாங்க ஓடி ரீசார்ஜ் பண்ணிட்டு இருக்கும் போது மெசேஜ் மேல மெசேஜ் வரும் ‘பை!’ ‘ கெட் லாஸ்ட்’ டோண்ட் ஸ்பீக் டூ மீ’ ‘ஒரு ரிப்ளை பண்ணக்கூட டைம் இல்லாம சைட் அடிச்சுட்டு இருக்கீங்களாசார்?’ ’எங்க சார் இருக்கீங்க?’ ’வேர் ஆர் யூ டா’ ‘ ஆர் யூ ஓக்கே’

கடைசி மெசேஜ் பாத்ததும் கெத்தாயிடுவான் நம்மாளு, ஆகா பொண்ணு கூல் ஆயுடுச்சுடா சாமின்னு, மறுபடியும் ஒரு டீ, ஒரு தம்மு. முடிச்சிட்டு வெளிய வந்து (ரோட்டோர பிளாட்பாரத்துல நின்னுகிட்டு)

‘ஹல்லோவ்!’
‘என்ன சார் ரொம்ப குஷியா இருக்கீங்க போல இருக்கு?’
‘இல்லப்பா.. எங்க இருக்க?’
‘இப்பதான் வீடு வந்து சேர்ந்தேன். எண்டரிங். ’ (பொண்ணு அதுக்குள்ள பால் சாப்டுட்டு டீவி போட்டுட்டு ரூம்ல செட்டில் ஆகியிருக்கும்)
‘ஹேய் ஏண்டி அப்டி திடுதிப்னு போய்ட்ட.. “
‘ஆமால்ல.. நான் மறந்தே போய்ட்டேன்… ஏண்டா அப்டி பண்ணே?”
(நம்மாளுக்கு குழப்பம் ஸ்டார்ட்டட்.  ஆமா நாம என்ன பண்ணோம்?)
‘இல்லமா, நான் தப்பா எதுவும் இல்ல.. சும்மாதான் பராக்கு பாத்தேன்.. அந்த பொண்ணு தற்செயலா கிராஸ் ஆச்சு’
‘எந்த பொண்ணு?’ (அடுத்த ட்டிராப்)
’அதாண்டி அந்த கிரீன் சுடி.. நீ கூட கோவப்பட்டு கிளம்பிட்டியே’
‘அவ கிரீன்சுடின்ற அளவுக்கு நியாபகம் இருக்கா உனக்கு?’
‘அய்யோ தெய்வமே மறுபடியும் முருங்கமரம் ஏறாத.. தயவு செஞ்சு…’
‘வேதாளம்ன்றியா என்ன? முன்னாடில்லாம், தேவதை தேவதைன்னு எத்த்தனை கவிதை எழுதுன.. இப்ப நான் ஒத்துகிட்டதும், வேதாளம் ஆகிட்டேன்ல?’
‘அய்யோ! அந்த அர்த்த்துல சொல்லல.. இப்ப சொல்லு, ஒரு நோட்டு புல்லா தேவதை கவிதை எழுதி கொண்டுவந்து தரேன்…’
’ஹாம்.. ஒன்னும் தேவையில்ல.. நாங்க கேட்டு நீங்க எழுதிக் கொடுக்கிறது’
’உன்கிட்ட எப்படி சொல்லி புரியவைக்கிறது?’
‘மரமண்டைன்றியா? ..”
‘…..”
’என்னடா சத்தத்தையே காணும்?.. மறுபடியும் கிரீன் சுடியா’

இது ஒரு வட்டம்ங்க.. ஒண்ணும் பண்ண முடியாது. ஒரு பொண்ணப் பார்த்து, பிடிச்சுப்போய், பின்னால சுத்தி அவள ஒத்துக்கவைக்கிற காலம் இருக்கே நரக வாசல். தூங்கவிடாம, படிக்கவிடாம எழுதவிடாம,வேலைசெய்யவிடாம எங்கயோ இருந்துகிட்டு நம்ம மண்டைக்குள்ள பிராண்டிகிட்டே இருப்பா… அவ ஒத்துக்கலைனு வைஙக, மண்டையவே கழட்டிப்போனமாதிரி ஆகிடும், என்ன பண்றோம், என்ன பண்ணனும் ஒரு மண்ணாங்கட்டியும் புரியாது. பைத்தியம் புடிச்ச மாதிரி ஆகிடும். ஒத்துகிட்டான்னு வைங்க,, நரக வாசல்னு சொன்னனே அங்க இருந்து கதவு திறந்து உள்ள போன மாதிரிதான். முத்து டையலாக் மாதிரி.. ‘வந்தாலும் ஏன்னு கேட்கமுடியாது.. போனாலும் போகாதன்னு சொல்லமுடியாது.. இச்சச்ச்ச இச்சச்ச கச்சச்ச கச்சச்ச்ச சா’ அப்புறம் நீங்க ஒரு டம்மி பீஸ். வேற வழியே இல்ல.. ஐஸ்கிரீம் ஸ்கூப்ப காபில்ல போட்டு குடிச்சா சூப்பாரா இருக்கும்னு கிண்டலுக்கு அவ சொன்னாக்கூட நீங்க குடிச்சே ஆகணும்.

இதுக்கு முக்கியமான காரணம், சினிமாக்காரங்க. படங்களப்பாருங்க.. படத்துல இருக்கிற காதலப்பாருங்க.. காதல் பட கிளைமாக்ஸையே பாருங்களேன்.. மூணு வருஷத்துல பரத் பைத்தியம், சந்தியாக்கு இரண்டு குழந்தைக. விண்ணைத்தாண்டி வருவாயா? ஜெஸ்ஸி எங்கயோ ல்ண்டன்ல செட்டில் ஆகிடும் ( பிளடி வெளி நாட்டு மாப்பிள்ளை) , கார்த்திக் ஜெஸ்ஸியோட பழைய வீட்டுல சுத்திக்கிட்டு, நொந்து நூலாகி, அந்து அவலாகி, ஒரு படம் எடுத்து தன்னோட படத்துல ஹீரோ ஹீரோயின் சேர்ற மாதிரி வச்சு ஜெஸ்ஸினு பேர்வைப்பான். பொண்ணு வந்து படம் பார்த்த்து, நல்லா இருக்கு ராசா உன் ஒர்க்கு.. இப்படியே மெயிண்டைன் பண்ணுனு வடிவேலு காமடி டையலாக்க சீரியஸ் மூஞ்சி வச்சு சொல்லி, பய்ல பீல் பண்ண உட்டுட்டு கார்ல ஏறி போய்டும் கார்த்திக் நடு ரோட்டுல நிப்பான் (இது அல்லவா குறியீடு பின்னாவின்னத்துவம்)

இவ்வளவு காமெடி தெரிஞ்சும் ஏண்டா மாமா லவ்ன்னு கேட்டா என்னோட ஒரே பதில்.. லவ் சார்… காதல் சார்… லவ் பண்ணுங்க சார் லைப் நல்லா இருக்கும்… ஹி ஹி!

காதெலென்னும் தூங்கும் மிருகம் : 1

%d bloggers like this: