கெளரி,
சத்தமிட்டுச் சிரிக்கும் பெண்களை எனக்குப் பிடிக்காது. அதில் ஒரு பொய் இருக்கிறது. தன் சிரிப்பின் மூலம் திரும்பிப்பார்க்கவைக்கும் ஒரு காரியம் இருக்கிறது. அந்த நாடகம் எல்லா ப்வெறுப்பிற்குரியதாய் இருக்கிறது. உண்மையில் சிரிப்பதே ஆண்களே எனினும் பிடிக்காமல் போய் பல வருடங்கள் ஆகிறது. ஒரு வேளை, நான் சிரிப்பை இஅந்த காலத்தில்ரிஉந்து நான் சிரிப்பை வெறுக்கத் தொடங்கியிருக்கக்கூடும்.
எந்தச் சிரிப்பும் வாதையை நினைவூட்டுகிற்து. என் வலிகளைத் தந்து சென்ற மனிதர்களை அவர்களின் சிரிப்பின் அடையாளத்திலேதான் உள்ளே பதிந்து வைத்திருக்கிறேன். சிரிக்கும்போது கன்னங்களும் கண்களும் இணையும் புள்ளியை வைத்தே இவர் எந்தக்காலத்தின் என் வாழ்வில் வந்து சென்றவர் என்பதை என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. சத்தமிட்டு சிரிப்பவர்களின் இன்னல்களற்ற வாழ்வு சாவின் கணங்களை எதிர்பார்த்திருந்த என் வாழ்வினை மூர்க்கமாக கேலி செய்வதாக உணர்கிறேன். ஆகவே எனக்கு சிரிப்பு பிடிக்கவில்லை. பிறர் சிரிப்பது. பெண்கள் சிரிப்பது. பிறகு அவர்கள் தங்கள் நாடக முகங்களுடன் சத்தமிட்டுச் சிரிப்பது.
பெண்களின் சிரிப்பில் குழந்தைகளின் சிரிப்பை நீ குழப்பிக்கொள்ளக்கூடாது. ஓட்டைப்பல் பெண்குழந்தைகள் மீது எனக்கு தனிப்பட்ட அன்பு உண்டு. அதற்கான காரணங்களைப் பற்றி ஒருவேளை அடுத்த நாவலில் எழுதுகிறேன். பெண்குழந்தைகளின் சிரிப்பில் கபடம் இல்லை. ஆண்குழந்தையென்றாலும். தேவதைகளுக்குப் பால் ஏது. குழந்தைகளின் சிரிப்பை விரும்பும் அளவிற்கு அவர்களின் அழுகையை வெறுக்கிறேன்.
பெரியவர்களின் சிரிப்பும் சிறியவர்களின் அழுகையும் என் வாழ்வின் மறக்க விரும்பும் காலங்களுக்கு என்னைக் கொண்டு சென்று என்னை துன்புறுத்துகிறது. உன் சிரிப்பு அப்படியல்ல. சத்தமில்லாத மெல்லிய புன்னகை மட்டும் கொண்டது. பெரும்பாலும். கண்களை மட்டும் இறுக்கி மிகச் சிறிய அளவில் உதடுகளைத் திறந்து உன் சிரிப்புகள் இன்னும் பொத்திவைத்திருக்கிறேன். ஒவ்வொரு காலத்திலும். முதற் சந்திப்பில். கடைசி சந்திப்பில். எதிர்பாராத சந்திப்புகள். எல்லாக் காலங்களிலும் உன்னிடம் சிரிப்பிருந்தது.
உடனிருந்த காலங்களின் சிரிப்பிற்கும் பிரிந்த காலங்களின் சிரிப்பிற்கும் இடையில் மெல்லிய இடைவெளிதான். உடனிருந்த காலங்கள் கண்கள் என்னைப்பார்க்கையிலும் பிரிந்த காலங்களில் என் முகத்தினை நீங்கிய பிறகும் உனக்கு சிரிப்பு கொண்டிருந்தது. Not that i am complainining. It was really fantastic. எந்த காரணமுமற்று யாராகவும் இல்லாமல் தொலைவிலிருந்து சிரிப்பைப்பார்த்துக்கொண்டிருப்பதை என்னால் இன்றும் செய்யமுடியும்.
என்னைச் சந்திக்க விரும்பாத உன் கோபம் அழகானது. என்னைப்பார்த்ததும் முகஞ்சுருக்கி வேறுபுறம் திரும்பி பின் பழைய சிரிப்பைத் தொடரும் உன் கர்வமும் அழகாகவே இருக்கிறது. அழகு என்ற சொல் ஆபாசமாகிவிட்டதா. சொல் எப்படி ஆபாசமாகமுடியும். உன்னைப் பற்றி பேசும்போது எந்தச் சொல் ஆபாசம் என அறியப்படும். என்ன பேசிக்கொண்டிருந்தேன் என்பதையே மறந்துவிடுகிறேன். சிரிப்பு. கணம் கணமாக நீ புன்னகைகளாக மட்டுமே என்னுள் நிறைந்திருக்கிறாய். முதற் சந்திப்பில், உனக்கு நியாபகம் இல்லாத நம் முதற்சந்திப்பில். அந்தப்பெரும் அறையில் உன் முதல் புன்னகை எனக்கானதில்லை. ஆனாலும் அது அழகாக இருந்தது. அந்தக்கணத்திலிருந்தே அந்தப்புன்னகை என்னுடன் எல்லாக்காலங்களிலும் இருக்கவேண்டும் என விரும்பினேன்
அன்று தொடங்கியதை பிறகு நீ வந்து என்னுடன் இணைந்து கொண்ட சிறுகாலங்களும், விலகி பின் வெறுத்து சொல்லற்று, சொல்ல விரும்பாமல் காணாமல் போன இந்த நாட்கள் வரை அந்தப்புன்னகையை நான் மறக்காமல் உள்ளேயே பொத்திவைத்திருக்கிறேன். சிறு கண்களுக்கு அசையும் சிரிப்பிற்குப் பிறகு எல்லா சிரிப்பின் ஒலிகளும் என்னை குழப்புகின்றன. பெரும்பாலும் உன்னை நினைவூட்டுகின்றன. உன்னிடமிருந்து விலகியோடும் ஒருவனை மீண்டும் மீண்டும் இழுத்து எல்லா சிரிப்புகளும் உன் நினைவுகளுக்குள் தள்ளுகின்றன.
என்னிடம் இருந்தது பெரும் வெற்றிடம் கெளரி. அதை முற்றிலுமாக நிரப்பிச் சென்றிருக்கிறாய். உன்னிடமிருந்து வெளியேறுவது மீண்டும் ஒரு வெற்றிடத்திற்குச் செல்வது என்பதை அறிந்திருக்கிறேன். அந்த அறிதலே என்னை உன்னையே பற்றியிருக்கச் செய்கிறது. உன் குரல் மெல்ல மறந்து காதற்றவனாக மாற நான் விரும்பவில்லை. உன் சிரிப்பிலிருந்து வெளியேறி எல்லா சிரிப்பினையும் வெறுக்கும் பழைய நாட்களுக்குத் திரும்ப எனக்குத் திராணியில்லை. கண்ணிருடனான பொழுதுகளிலிருந்து தனிமையின் மலர்களை ஏந்தி மிதக்கும் வானப்பறவையாக நீ மாற்றித்தந்த வானத்திலேயே தங்கியிருக்க விரும்புகிறேன். ஆனால் நீ எடுத்துச் சென்றுவிட்ட சிறகுகளில்லாமல் எப்படி இருப்பேன்
உன்னுடன் பேசிய சொற்கள் என் தனியறையின் சுவர்களின் மோதி ஒலிக்கின்றன. இங்கிருந்து நான் வெளியேறப்போவதில்லை. என் தனியறைகளில் யாரையும் உள்ளே விடப்போவதில்லை. உண்மையில் நான் தனியறையில் எப்போதும் இருந்தவனில்லை. விஷ்வாவையும் ஜோசப்பையும் உனக்கு இன்று அறிமுகப்படுத்துகிறேன். உனக்குத் தெரிந்தவர்கள்தான். நம் நண்பர்கள்தான், ஆனால் அவர்கள் இங்கே புதுப்பெயரில் உனக்கு மீண்டும் அறிமுகமாகிறார்கள். எனக்கு வேறு வழிகளை நீ விட்டுச் செல்லவில்லை.
உனக்குத் தெரிந்தவர்களைத்தான் உனக்கு மீண்டும் அறிமுகம் செய்யவேண்டியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் என்னை நானே உன்னிடம் அறிமுகம் செய்யவேண்டியிருக்கிறது. உன் மறதிகள் அழகானவை. என்னை அறிமுகம் செய்து கொள்வது எனக்குப்பிடிக்கும். உன்னிடம் அறிமுகம் செய்துகொள்வது கொஞ்சம் குழப்பமானது. அதில் நிறைய பொய்கள் இருக்கின்றன. அறிமுகத்திலேயே ஏராளமான பொய்கள் இருக்கின்றன. நாம் அறிமுகம் செய்துகொள்வது போல ஒருபோதும் நாம் இருப்பதில்லை. உன்னிடம் நான் அறிமுகம் செய்துகொண்டது போல் இன்று நான் இல்லை. என்னிடம் அறிமுகம் செய்துகொண்ட அந்தச் சிறுபெண்ணை எப்பொழுதும் நினைவில் வைத்திருக்கிறேன். ஆனால் நீ இன்று அவள் இல்லை.
வேறெந்த பெண்ணிலும் நான் தேடுவதும் அதே புன்னகையாகவே இருக்கிறது. நெருங்கிவரும் எந்தப்பெண்னும் ஒரு சொல்லில் ஒரு புன்னகையில் உன்னை நினைவூட்டுகிறார்கள். குற்ற உணர்ச்சியில் தள்ளுகிறார்கள். விலகச் செய்கிறார்கள். அவர்களுக்கு என் விலகலின் காரணங்கள் புரியாமல் இருக்கலாம். அவர்கள் உன்னை அறிந்திருக்கிறார்கள். பேசும் இடங்களிலெல்லாம் உன்னைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன். உண்மையில் உன்னைத்தவிர என்னிடம் பேசுவதற்கு வேறு விசயங்கள் இல்லை. என் போதை கணங்களெல்லாம் உன் நினைவுகளை மீட்டெடுத்து நண்பர்களை விலக்குகிறேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தனியே குடிக்க பழகிக்கொண்டேன். கண்ணீர் என்னுடனேயே போகட்டும். யாருடனும் எந்த சொல்லும் இல்லை. உன்னையன்றி வேறு கனவுகள் இல்லை. என் வெற்றிடங்களில் உன்னைத்தவிர மறைக்க வேறு கூரைகள் இல்லை.
முதற்சந்திப்பில் யாருக்கோ அளித்த சிரிப்பு. முதல் முறை உன்னிடம் பேசும் பதட்டத்தில் நீ அளித்த அந்த இலகுவாக்கும் புன்னகை. நீண்ட நாளுக்குப் பின் சந்திக்க நேர்கையில் அந்த இடைவெளியை நொடிப்பொழுதில் விரட்டும் அந்தக் கண்களுக்குள் பூத்த சிரிப்பு. சிறு சண்டைக்குப் பின் மீண்டும் சந்திக்கையில் ஒரு புன்னகை. பேச்சற்றப்போன நாட்களில் தற்செயலாய் சந்திக்க நேர்கையில் வரவா வேண்டாமா என தயங்கும் அந்த தயக்கப்புன்னகை. வெறுப்பின் நாட்களில் முறைத்து பின் மறுபுறம் திரும்பு உன் தோழியிடம் உனது புன்னகை. அத்தனையும் இருக்கிறது கெளரி. அத்தனையும் தடம் மாறாமல், நிறம் மாறாமல், அந்த ஒலி மாறாமல் இந்தத் தனியறையிலும் எதிரொலிக்கிறது. இந்த எதிரொலிகளில் குறுக்கே வரும் மனிதர்களை நான் வெறுக்கிறேன்.
எனக்குள்ளாக நானே நான்காக ஐந்தாகப் பிரிந்து சண்டையிடுகிறேன். உன்னை இழந்துவிட்டதற்காக. உன்னை இழந்துவிட்டதற்காக என்னை நானே சமாதானம் செய்கிறேன். என் புன்னகைகளை எனக்கு நானே நினைவுபடுத்துகிறேன். எனது வெற்றிடத்திற்கு திரும்பி வந்ததை எனக்கு நானே நினைவூட்டுகிறேன். மீண்டும் எழும் கனவுகளில் மீண்டும் ஒரு இரவில் ஆழத்திலிருந்து நீ மேலெழுந்து அமர்ந்து புன்னகைப்பதற்காக, உனக்கென தனியறையொன்றை ஒதுக்கியிருக்கிறேன். அங்கே ஒரு நாற்காலி யாரும் அமராமல் காத்திருக்கிறது.
அந்த அறையில் என் இசைக்கருவிகளை வைத்திருக்கிறேன். அந்த நாற்காலியில் ஒரு மஞ்சள் மலரை வைத்திருக்கிறென். அந்த அறையெங்கும் உன் புன்னகை எதிரொலிக்கட்டும். என் இசையினை நீ எங்கிருந்தோ ஆசிகளை வழங்குவதாக இருக்கட்டும். உனக்கு செய்யப்பட்ட என் சொல்வன்மைகளுக்கு அது ஒரு பரிகாரமாக அமையட்டும். என் இசைகள் நாளை உன் பெயர் சொல்லி வெளிவரக்கூடும். என் எழுத்துக்கள் உன் பெயரில் கதையெழுதியவனின் சொற்களாகவே அறியப்படட்டும்
ஒரு புன்னகை. அந்தப்புன்னகைக்காகத்தான் இவ்வளவுவ்மா. உன்னைத்தவிர வேறு பெண்ணில்லையா என்பவர்களிடமெல்லாம் இதுவரை எப்பொழுதும் ஒரே பதிலைத்தான் சொல்லிவந்திருக்கிறேன். உண்மையில் கேள்வி கேட்கும் எல்லாரும் பதில்பெற வேண்டியவர்கள் இல்லை. பதிலக்ளுக்குத் தகுதியானவர்களுக்கு என் பதில்களை எப்பொழுதும்போலவே மாறாமல் சொல்லிவருகிறேன். உன்னைத்தவிர வேறு பெண்கள் என்பது ஒரு சொல் விளையாட்டு. உண்மையில் அப்படி யாரும் இல்லை என்பதுதான் தொந்தரவு,
எல்லா பெண்களிலும் நீயே இருக்கிறாய். எல்லா பெண்ணாகவும் நீயே இருக்கிறாய். ஒரு புன்னகை. மீண்டும் அதே புன்னகை. அல்லது ஒரு கோபம் மீண்டும் அதே கோபம். அல்லது சிறிது அன்பு. மீண்டும் அதே அன்பு. அல்லது சிறுது விலக்கம். மீண்டும் அதே விலக்கம். கொஞ்சம் கண்ணீர். மீண்டும் அதே கண்ணீர். யார் தோளிலோ கைவைத்து ஆதுரமாய் சாய்ந்து உறங்கிக்கொண்டிருக்கும் அந்த உறவு நமது. யார் குழந்தையையோ பார்த்து விளையாட்டுக்காட்டி இனிப்புகளைக் கொடுக்கும் கரங்கள் உனது. வழியறியாமல் தவறி நிற்கும் சிறு நாய்க்குட்டியை உரியவர் வந்து அழைத்துச் செல்லும் வரை அங்கேயே நின்று பார்த்துக்கொண்டிருக்கும் சாய்ந்த முகமும் உனது.
எல்லாம் உனது. எல்லாம் நீயே. நான் உட்பட. இந்த பதிலை இதுவரை பதிலுக்கு தகுதியான எல்லாரிடமும் சொல்லிவிட்டேன். சிலரிடம் போதையில். சிலரிடம் தெளிவில். ஆனால் இருவகையினருக்கும் எனக்கு மன நிலை தவறிவிட்டது என்பதாக அறிந்திருந்தார்கள். அல்லது அப்படிச் சொன்னார்கள். என்னால் உன்னுடன் பேச முடிகிறது. உனக்கு கேட்காத போதும். என்னால் பிறருடன் பேச முடியவில்லை. அவர்களுக்கு கேட்கிற போதும். நான் யாருடன் இருக்கவேண்டியவன் கெளரி?
உன் சொற்களை மீண்டும் மீண்டும் மீட்டெடுக்கிறேன். எனக்குள்ளாகவே சொல்லிப்பார்க்கிறேன். இடைவெளி மெளனங்களை அதன் அத்தனை சாத்தியங்களையும் வைத்து பின்னிப்பின்னி உருவாக்குகிறேன். சொற்கள் பிரவாகமென ஆட்கொள்கின்றன. காணாமல் போன இடைவெளிகள் தானாக வந்து துலங்குகின்றன. மெளனத்தினை மொழிபெயர்க்க பெருந்தனிமை துணையாக இருக்கிறது. தனிமையில் உருவாகும் கனவுகள் புதிய சொற்களை இடைவெளிகளில் இட்டு நிரப்புகிறது.
எல்லா சொற்களையும் அடித்துகரைபுரண்டு ஓடிவரும் நதி ஒரு கடற்பாறையில் மோதியபின் செயலற்றுப்போகிறது. உண்மையில் அது பெருஞ்சொற்களின் கடலில் கலந்து காணமலாகிறது. அல்லது கடலாகவே மாறிப்போகிறது. பிறகு அதற்கு தனித்த அடையாளங்கள் இல்லை. அதற்கென்று தனித்த பெயர்கள் இல்லை. என் சொற்கள் என் மெளனங்கள் எல்லாம் உன்னில் மோதி உடைந்து சிதறி உறைந்து கலைந்து நீயாக மாறி நிற்கின்றன. இனி தனித்த சொற்கள் இல்லை. எல்லா கவிதைகளுக்குள்ளும் நீ எப்படியோ வந்துவிடுகிறாய். ஒரு பெரு நாவலின் அத்தனை பக்கங்களிலும் உன் பெயரின் எழுத்துக்களை மட்டும் வட்டமிட்டு வைத்திருக்கிறேன். உனக்கு அதைப் பரிசளிக்கவேண்டும். அல்லது உன்னையே திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருக்கும் இந்தச் சொற்களை பொருளற்ற குவையானாலும் உன்னிடம் ஒப்படைக்கவேண்டும்
அல்லது நீ இவற்றை ஒரு போதும் காணக்கூடாது. அதுதானே உன் தேவையாக இருந்தது. உன்னைப்பற்றி பேசாமல் இருப்பது. உன்னைப்பற்றி எழுதாதமல் இருப்பது. உன் பயணத்தில் ஒரு சுமையாக கால்சங்கிலியில் பிணைக்கப்பட்ட இரும்புக்குண்டாக என் சொற்கள் வந்து அமர்ந்துவிடக்கூடாதென்றும் நினைத்துக்கொள்கிறேன். ஒருவேளை முன்பாகவே இதையெல்லாம் ஒரு முறை ஒரே முறை சொல்லி ஒரு புன்னகையை நான் அடைந்திருக்கவேண்டும். எந்த நதியும் கடந்து போனபிறகுதான் அதன் மரத்தக்கைகள் நினைவுக்கு வருகிறது. தத்தளிப்பின் கணத்தில் பற்றிக்கொள்ள கிடைக்கும் மதகுகளை நாம் பெரும்பாலும் பற்றிக்கொள்வதில்லையா. அல்லது மதகுகளை வெறும் தக்கைகளென்று, நம் எடை தாங்கக்கூடியவை அல்ல என்று விலக்கி வைக்கிறோமா. எடையற்ற தக்கையென, அத்தக்கையை நம் சுமை கொண்டு நிரப்பக்கூடாதென விலகியிருத்தல் அத்தனை தவறான செயலா. நினைவிருக்கிறது. என் கனவொன்றில் இந்தக் காட்சி வந்தது. அல்லது நான் நிஜமாகவே மிதந்து கொண்டிருந்தேனா. அல்லது போதையிலிருந்திருக்கக்கூடும். எண்ணற்ற சாத்தியங்கள். ஆனால் நிகழ்வு அதன் உணர்வு நிஜம்.
நான் பெரும் அலைப்பெருக்கான நதியில் த்தத்தளித்துக்கொண்டிருந்தேன். எனக்கென்று பற்றிக்கொள்ள எந்த ஒரு கொழுகொம்புகள் அற்று, மிதப்பதற்கான வழிகளை அதுவரை வாசித்திருந்த வழிகளை நீர் நடுவிலிருந்து நினைவுக்குக் கொண்டுவர முயற்சி செய்துகொண்டிருந்தேன். ஒரு தக்கை வந்தது. என் பார்வையில் அது அத்தனை எடையுள்ளதாக நான் அறியவில்லை. அது என் சுமையைத்தாங்காது என்பதை எப்படியோ அறிந்திருந்தேன். அதைப்பற்றிக்கொள்ள விரும்பவில்லை.
உண்மையில் நான் தத்தளிப்பதற்கு முன்னதாக வழக்கமாக எல்லாரும் மிதந்துசெல்லும் அந்தப்படகில்தான் இருந்தேன். பெரும்பாலானோர் எந்தக்குழப்பமும் இன்றி ஒரு இறகைப்போல சுமந்து மிதந்து செல்லும் அதே படகு. ஆனால் என்னுடையது உடைந்தது. எப்படி உடைந்தது யார் உடைத்ததென்பதை இப்பொழுது எனக்கு நியாபகம் இல்லை. ஆனால் படகு உடைந்திருந்தது. அதன் நீர் வெளியேற்றும் பொறுமை என்னிடம் இல்லை. அதனை விட்டுவிலகிவிடவே நான் விரும்பியிருந்தேன். ஆனாலும் எல்லாருக்கும் போலவே எனக்கும் படகு தன்னுடன் பிணைத்திருந்தது. நான் மெல்ல உடைத்துக்கொண்டு வெளியேறினேன். படகிலிருந்து. விடுபட்ட்டேன். அதன் சுழலிருந்து. உண்மையில் ஆசுவாசமாக உணர்ந்தேன். மிகச் சில நேரத்திற்கு. மிகக்குறைந்த நொடிகளிலேயே நான் நீரில் தனித்திருப்பதை உணர்ந்து அச்சம் கொண்டேன். இருபது வருடங்கள் ஆகியிருந்தது.
எத்தனை காலங்கள் படகிலிருந்தேன் எத்தனைக்காலம் தத்தளித்தேன் என்பதை அறியேன். ஆனால் தத்தளிப்பதை அறிந்தபோது இருபது வருடங்கள் ஆகியிருந்தது. எப்பொழுதாவது கவனித்திருக்கிறாயா கெளரி, நீச்சல் அறியாதவர்கள் நீரில் தள்ளப்படும்போது, அவர்கள் பயம் கொள்ளத்தொடங்கும் காலம் வரை அவர்களை நீர் விழுங்குவதில்லை.அவர்களை மிதக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறது. அவர்கள் பயங்கொள்ளத்தொடங்கும் அந்த முதல் நொடியிலிருந்து அவர்கள் மூழ்கத்தொடங்குகிறார்கள்(இன்று எனக்கு நீச்சல் தெரியும். தனியாக ஆண்டாட்டுகளாக அடித்து பழகி, இப்பொழுது படகைவிட நீச்சலே வசதியாக இருக்கிறது.இந்தக்கதைக்கு பிறகு வருகிறேன். முதலில் கனவைச் சொல்லிமுடித்துவிடுகிறேன்). ஆம். நான் தனித்து தத்தளித்துக்கொண்டிருக்கையில்தான் அந்தத் தக்கையைக் கண்டறிந்தேன்.
மிகப்பூஞ்சையான, அழகான சிறிய மரத்துண்டு. அதைப்பற்றிக்கொள்வதையும் விட்டுவிலகுவதையும் பற்றி எனக்கு இரண்டு வித குழப்பங்கள் இருந்ததை இன்று சொல்லமுடியும். என் தனிப்பட்ட பயத்திற்கு ஒரு மருந்தாக அதைப்பற்றிக்கொள்ளமுடியும். முன்பே கணித்ததுபோல, என் சுமையைத்தாங்குமளவு அதன் திராணி குறித்து எனக்கு சந்தேகங்கள் இருந்தன. இந்தச் சந்தேகத்தின் பொருட்டு அத்தக்கையை விட்டு விலகியே இருந்தேன். அது நீர் ச்சுழலில் மீண்டும் மீண்டும் என் மீது மோதிக்கொண்டிருந்தது. நான் மீண்டும் மீண்டும் அதை நதிப்போக்கில் தள்ளிவிட்டுக்கொண்டிருந்தேன். இப்போது நான் எங்கிருக்கிறேன் எனக்குழப்பமாக இருக்கிறது. நிச்சயம் தக்கை என்னுடன் இல்லை. நான் மூழ்கவும் இல்லை. நீச்சல் அறிந்திருக்கிறேன். நதிச்சுழல் குறித்த பயங்கள் அந்தத்தக்கை தொட்டு விலகிய முதல் நொடியிலேயே அழிந்துவிட்டன. அந்த்தக்கையைப்பற்றி எப்பொழுதாவது எங்காவது பேசவேண்டும் கெளரி. ஆனால் நம்புவார்களா. நான் தனித்து மிதப்பது குறித்த கேள்விகள் முதலில் வரும். கடந்து செல்லும் படகுகளுக்கு கையசைத்தபடி மிதந்து கொண்டிருக்கும் ஒருவன், நீச்சல் தெரியாமல் தவறி விழுந்தவன் என்றால் நம்புவார்களா. நானே நம்பமுடியாது. நான் தவறி விழுந்தவனா தள்ளிவிடப்பட்டவனா என்ற குழப்பமே இன்னும் தீரவில்லை. ஒவ்வொன்றாய் ஒவ்வொரு கடிதமாய் உன்னிடம் எழுதிச் சொல்வதில் எதோ ஒரு ஆசுவாசம் எழுகிறது கெளரி. பார். வெறும் கனவு. இத்தனை வார்த்தைகளை விரயம் செய்து சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனாலும் கெளரி, கேட்காத தூரத்திலிருக்கும் உன்னிடம் சொல்வதற்கு சொல்லமுடியாத தூரத்திலிருக்கும் எனக்கு ஏராளமான சொற்கள் இருக்கின்றன.
உன் அசைவுகளை சில நேரம் சந்திக்கிறேன். விரித்த விரல்களின் நகங்களுக்குள் அலைபாயும் மோதிரத்தை தன்னிச்சையாகச் சுழற்றும் சுண்டுவிரல் அசைவு நினைவிலிருக்கிறது. ஆட்காட்டி விரல் கொண்டு நீ ஒதுக்கிவிடும் முடிக்கற்றைகளின் அலையசைவுகளை சிலர் செய்திருக்கிறார்கள். ஆட்காட்டி கொண்டு நீ சரி செய்யும் நெற்றிப்பொட்டு எல்லா திசைகளிலிருந்தும் வருகிறது. முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒரு ஸ்டிக்கர் பொட்டை மறக்காமல் வாங்கி ஒட்டிவிடுகிறேன். ஒருபோதும் உனதில்லை எனினும் உனக்காக காத்திருக்கும் அந்தச் சிவப்பு மாறாமல் இருக்கிறது. கண்விழிக்கும் திசையில் சுவரில் ஒட்டப்பட்டும் மஞ்சள் மலர்கள் உன்னை நினைவுறுத்துவதாற்காகவே அங்கே வைக்கப்பட்டிருக்கின்றன.
உன் விருப்ப நிறம் நினைவிலில்லை கெளரி. எனக்கு விருப்பமான உன் நிறமாக எப்படியோ மஞ்சள் மனதில் பதிந்திருக்கிறது. விளையாடுவதுபோல சீண்டுவதுபோல வெறுப்பதுபோல மீண்டும் மீண்டும் உன் மஞ்சள் நிறத்தை உன்னிடம் பலமுறை நியாபகப்படுத்தியிருக்கிறேன். அப்பொழுது அது என் நினைவில் நீங்காமல் இருப்பதற்காகவேயென நான் அறிந்திருக்கவில்லை. அறியாமல் செய்த ஒவ்வொன்றையும் மீட்டெடுத்து எழுதுவதற்காகத்தான் எல்லாமும் நிகழ்ந்ததா கெளரி?
சுழல் மீண்டும் மீண்டும் என்னை ஆரம்பத்தில் கொண்டு விடுகிறது. முதற் சொல் பேசிய நாட்களில் அவ்வப்போது உறைந்து போகிறேன். முதல் ரகசியம் சொன்ன மாலையை ஒரு முறை நினைத்துப்பார்க்கிறேன். முதல் மறுதலிப்பின் கணத்தை மீண்டும் உருவாக்குகிறேன். எல்லாவற்றிலும் ஒரு போதாமை இருந்தது. அன்பும் புன்னகையும் அசைவுகளும் எல்லா நேரத்திலும் இல்லை இல்லை இன்னும் இன்னும் இன்னும் என்றே உள்ளே கொதித்துக்கொண்டிருந்தன.
காலம் ஊறவைத்த திராட்சையென மதுவாக நொதித்திருக்கிறது சொற்கள். சொல்லப்படாதவை. சொல்லி புரிந்துகொள்ளப்படாதவை. சொல்லிச் சொல்லித் தீராதவை. மீண்டும் மீண்டும் அந்தக்கணங்களில் வாழ்தல் வரமாக விதிக்கப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். அல்லது இது சாபமா. ஒரே கணத்தில் உறைதல் வரமா அல்லது திரும்பத்திரும்பே அங்கே நிகழ்வது வரமா. முடிவற்று பெருஞ்சுழல் போல மீண்டும் மீண்டும் அதே தொடக்கத்தில் கொண்டுவந்து விடும் விளையாட்டின் மீது எந்தக்கணத்தில் வேட்கை கொண்டேன். என்ன காரணம் கொண்டு நீதான் நீ என்று அறியாமலையே சொற்களால் உன்னுடன் போரிட்டேன். எந்தக்கணத்தில் விலகமுடிவெடுத்தாய். எப்படி அதை அறியாமல் ஒரு விளையாட்டைப்போல தொடர்ந்து என் அம்புகளை இழந்தேன்.
உன்னை அறிவதன் முன்னதாகவே நான் சொற்களுடன் விளையாடிக்கொண்டிருந்தவன் கெளரி. பிறகுதான் மெளனத்திற்கு வந்தடைந்தேன். இந்தத்தனிமையில் மெளனம் எத்தனை அழகானது என்பதை அறியஏண்டியிருக்கிறது. சொல்லற்று மெளனத்தில் உள்ளாக உலாவுகையில் எத்தனை கூர்மையாக சொற்கள் உருவாகின்றன என்பதை அவதனிப்பது மாபெரும் விளையாட்டாக மாறியிருக்கிறது. வெறுப்பின் சொற்களிலிருந்து அன்பின் நியாபகத்திற்குத்திரும்பும்போது நதி அதன் கடலுடன் ஆதூராமாகப் போய் அடைந்துகொள்கிறது.
மெளனம் அறிதலின் இறுதிக் கண்ணி கெளரி, சொல் அதன் முதல் காலடி. முடிவற்ற பெரும் பயணத்தில் நினைவுகளுடன் அமைதியாகப் பயணப்படுவதென்பது ஒரு பெரும் ஆடல் கெளரி. அலையடிக்கும் சொற்களை உள்ளாகவே மென்றபடி. கர்வத்தின் கணங்களை உருவாகும் முன்னதாகவே வெண்றபடி. வெடித்த இலவம்பஞ்சு விதைகளுடன் தனக்கான நிலம்தேடி பறப்பது போல. கூட்டிலிருந்து தள்ளிவிடப்பட்ட கழுகுக்குஞ்சுகள் தன் வானத்தையும் இறகையும் அறிந்துகொள்வது போல. ஆற்றொழுக்கின் நதி நீர் தேங்கும்போது உருவாகும் மீன்கள் தன் முதல் உணவைப் புசிப்பது போல.
மஞ்சள் நிறத்தின் கடைசி அடையாளமாக எஞ்சியிருப்பது உன் மஞ்சள் குடை கெளரி. பிரிதலுக்கு பிறகான மழை நாள் ஒன்றில் வேகமாய்க் கடந்து செல்லும் பெண் நீயென்பதை வெகுதொலைவில் அறைந்திருந்தேன். பிறகு கொஞ்சம் மறைந்து நின்றேன். வெறுப்பின் கண்களை விருப்பத்தின் கண்களுக்கு மறுதிலியாக பார்ப்பதில் ஒப்பில்லை. கண்களுக்குள் அதே அமைதி.உடன் சிரித்துவரும் தோழியிடம் அதே கன்னம் பூரித்த புன்னகை. உனக்குள்ளும் சொற்கள் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் அவை எனக்கானவை இல்லை. எனக்குள் ஓடிக்கொண்டிருந்த சொற்கள் உனக்கானவை. அன்று என் அருகமர்ந்தவள் என் தோழி. உன்னை அறியாதவள். எனக்குள் இருக்கும் உன்னையும் அறியாதவள். ஆனால் கெளரி என்ற பெயர் தெரியும். அதன் சூழலில் உருவாக்கிய சொற்களை அறிந்திருவள். நான் முற்றிலுமாக அவளிடமிருந்து உடைந்திருந்தேன்
சொற்கள் வெறும் ஒலியாக மாற ஆளுக்கு ஒரு நபர். மஞ்சள் குடை. அரக்கு கைப்பிடி. பிடித்திருந்த விரல் நகங்களில் தீட்டப்பட்டிருந்த கருஞ்சிவப்பு நகச்சாயம். கண்கள் மறைந்து நாசியும் உதடுகளும் மட்டும் வெளிப்படுத்தும் மஞ்சள் முகமூடியை இன்றும் என்னால் வரைய முடியும். மழைபட்டு உறைந்திருந்த கூந்தல் பின் தள்ளப்பட்டு, பனிபட்ட மல்லிகை முன்வந்திருந்தது. வெகு சுலபமாக கடந்து சென்றவள் நான் இருப்பதை அறிந்திருக்கப்போவதில்லை.
ஒருவேளை அறிந்திருக்கலாம். உன் கண்களின் வேகம் அறிந்ததுதான். அது பெண்களின் கண்வேகம். அசைவுகளுக்குள் அத்தனை நபர்களையும் எடைபோட்டு பின் தன் பாதைக்குத் திரும்பிக்கொள்ளும் கொலைகாரனின் வேகம். நீரருந்தவரும் மானுக்காக நீருக்குள் கண்மூடிக்காத்திருக்கும் முதலையின் கண்கள். ஆழ் நீரில் உணவைக்கண்ட பருந்தின் அனிச்சை அசைவுகள். அவற்றை அறிந்திருந்தேன். வெறுத்தும் இருந்தேன். உனக்கு முன்பு.
பிறகு அந்தக் கண்களை பார்க்க வாய்க்கவேயில்லை. இந்த மஞ்சள் குடை மறைத்தது போல. மறுபுறம் திரும்பிக்கொண்ட உன் அன்பைப்போல. பிரியம் ஒரு குழந்தையாக வருகிறது. கிழவனாக மறைந்துவிடுகிறது. இருத்தல் மட்டுமே மாறிலி. அதுவே சாபமும். வருதலும் போதலுமான பயணத்தில் இருக்கும் சிலைகளைப் பூசி விளக்கேற்றி ஏன் செல்லவேண்டும். காட்டுக்கொடி சுற்றிக்கிடந்த மறைந்த தெய்வங்களை ஏன் வேலியில் அடைத்து தனித்து விட்டுச் செல்லவேண்டும். உணவற்ற தெருமிருகத்திற்கு ஒருவேளை உணவளித்து விட்டுச் செல்லும் உங்களுக்குத் தெரியுமா. இறப்பினைத் தள்ளிப்போட்டு பசி நாட்களை நீட்டிக்கிறீர்கள் என்று?
புன்னகை சொல்லாகி நின்றது. சொல் மெளனமாகி நின்றது. மெளனம் அறிதலாகி நின்றது. அறிதல் இசையானது. இசை அனல் ஆனது. அனல் காடுகளை எரிக்கிறது. மெளனம் சொற்களை எரிக்கிறது. பயணம் எரிதலை அன்பென்கிறது. அன்பு எல்லாம் கனவென கடந்து செல்கிறது. எந்தப் பெரு நாடகத்தின் பாத்திரம் நீ எனக்களித்து விட்டுச்சென்றது.பெரு நாடகத்தின் இயக்கி எந்தக்கணத்தில் மேடையிலிருந்து இறங்கிச் சென்றாய்? இந்த ஒப்பனையை நான் எப்பொழுது கலைக்கவேண்டுமென யார் எனக்குச் சொல்வார்கள் கெளரி?
– நந்து