சதுப்பு நிலங்களின் வேனல்

பின்னூட்டமொன்றை இடுக

பாலையின் கள்ளிச்சொட்டுகளில்
கலக்கும் ஒரு துளி மழை
வந்து போன காலங்கள்
வேர்களில் தங்கியிருக்கிறாதா
நந்தனா

சல்லிவேர்கள் நீர் உறிஞ்ச
வாய்க்காத
சகதியென உன் நிலத்தை
மாற்றிப்போய்விட்டதா அம்மழை
நந்தனா

பழையபாடல்களை மீண்டும்
ஒலிக்கவிட்டு
வேனல்காலங்களில்
மீள்வாழ்வு கொண்டிருக்கியா
நந்தனா

ப்ரிய நந்தனா நான் உனக்குச் சொல்வேன்

நீ கிழித்து வந்தாலும்
உனக்கிழித்து எடுத்தாலும்
நீரற்ற உன் நுரையீரல்களை
காற்று நிரப்ப கற்றுக்கொடு
நந்தனா

o

நந்தனா

நந்தி மறைப்பதாய் நீ நினைத்துக்கொண்டிருக்கும்
சிவம்

சுவர்களுக்குள் ஊழ்கத்திலிருந்ததாய்
நம்பியிருக்கும்
சிவம்

எழுந்து வந்து முகம்காட்ட
வேண்டியிருந்த
சிவம்

கர்ப்பங்களில்
கால்மடக்கி அமர வக்கற்று
என்றோ எழுந்து சென்றுவிட்ட
சிவம்

பெருவான் மேகங்களில்
மின்னிட்டு மறைந்துபோகும்
விரியாத ஒரு சொட்டு
சிவம்

எந்த சிவம்
உந்தன் சிவம்
நந்தானா.

o

கூட்டுப்புழுக்கள் உரிந்தால்தான் வண்ணம்
நாகம் சட்டை உரித்தாலும் நாகமே
நந்தனா

எறும்புகளுக்கு சிறகு முளைக்கும்
சிறு மழைக்காலம்
நந்தனா
அன்பு கொண்டு பறந்து
அன்றே சாகும் மாலைக்காலம்
நந்தனா

பூச்சிகளைத் தின்னும் தாவரம் நந்தனா
தாவரம் தின்னும் பூச்சிகளும்
நந்தனா

நாகம் துப்புகிறது புற்றை
நந்தனா
புற்று தின்னுகிறது நாகத்தை
நந்தனா

O

கண்ணாடியில் தெரியாதவர்கள்

பின்னூட்டமொன்றை இடுக

ஒரு விதை இருளின் ஆழத்திலிருந்து
வெளிச்சம் நோக்கிப் பயணப்படுகிறது

புத்தகத்தின் அடையாளமான
மஞ்சள் மலர்
எடுத்து வெளியில் வைக்கும்போது
எழுத்துக்களை
எடுத்துவருகிறது இதழ்

ஓநாய்கள் அந்த
வனத்தில் கூட்டமாகவும்
முன்னெப்போதோ அலைந்திருக்கின்றன

கண்ணாடிகளை வீடெங்கும் வாங்கி
மாட்டிய அதே பைத்தியம்தான்
அவற்றை உடைத்து
வீடெங்கும் சிதறடிக்கிறது

அத்தனை கண்ணாடிகள்
எத்தனை சிதறல்கள்

அந்தோ
ஒரே முகம்

O

தன் கழுத்துக்கயிறை தானே
பிடித்துச் செல்லும்
வெளிநாட்டு நாய்

தனது பாயிண்டிலேயே
செருகப்பட்டிருக்கும்
எலக்ரிக் பிளக்

ஒரு பிளாஸ்டிக் குழாயைச்
சுழற்றி தனக்கே
ஐ லவ் யூ சொல்லிக்கொள்ளும் ஒருவன்

வேறென்ன இருக்கிறது
நீங்கள் சிரிப்பதற்கு

மரஉச்சியில் பனிக்குள்
தன் சிறகுகளுக்குள்ளேயே
தலைமறைத்து
தன்னையே கோதிக்கொள்ளும்
பறவை?

தன் பாதைகளை தட்டித்தட்டி
பலர் மீது மோதி
சுவர் ஒட்டி கடந்து செல்லும் ஒருவன்?

பரபரப்பான சாலையில்
அடுத்த அடி எடுத்து வைக்கச் சிரமப்பட்டாலும்
சூழலுக்குச் சம்பந்தமில்லாமல்
மெதுவாகச் செல்லும் வயசாளி?

நல்லது.
நீங்கள் கூட்டமாக சிரிக்கிறீர்கள்
அவர்கள் தனியாக இருக்கிறார்கள்
என்பதை அறிந்திருக்கிறீர்கள்தானே?

O

அனாதைகள் கனவிலும்
அனாதையாக
இருக்கிறார்கள்

பெரிய அறைகளை எடுத்திருக்கிறார்கள்
இசைக்கருவிகள்
தனியறையில் அடுக்கப்பட்டிருக்கின்றன

தனி ஒருவருக்காக புதிய உணவுகளை
நிறைய பதார்த்தங்களை
சமைத்து அடுக்குகிறார்கள்

தனியர்களின் கதைகள்
கொண்ட புத்தகங்கள்
இசைக்கருவிகளின் அறையில்
விரிந்து சிதறிக்கிடக்கிறது.

அனாதைகள்
கனவிலிருந்து விழிக்கும்போதும்
அனாதைகளாகவே
விழித்தெழுகிறார்கள்.

பார்வையற்றவனின் கனவில்
இருள்தான் வருமென
கண்ணாடியைப் பார்த்துச் சொல்லிக்கொள்கிறார்கள்.

மலர்கள் எரியும் சிதை

பின்னூட்டமொன்றை இடுக

அநாதைகளை எப்பொழுதும் மொழிதான்
தத்தெடுத்துக்கொள்கிறது

பிதாக்களைக் கொல்ல
விரும்பவிரும்புகிறவர்கள்
மொழியில்
வந்து ஒளிந்துகொள்கிறார்கள்

அன்னைகள்
தன் மார்பினை சுவற்றில்
பீய்ச்சி அடிக்கிறார்கள்

குழந்தை
தன் விரலை தான் சப்பிக்கொள்கிறது
தன் விரலை
பிற அனாதைகளுக்குச்
சப்பக்கொடுக்கிறது

தன் கொலையை
மொழியாக மாற்றி காற்றில் பரவவிடுகிறது

o

கால் மாற்றி ஆடும் நடராஜன்
தன் ஆடலை
பெயரெனச் சொல்கிறான்

நியாபகமற்ற
மடங்கள் அனாதைகளைக்
கடவுளாக்கி திருப்பி அனுப்புகிறது

கடவுள்கள் தன் பாதைகளை
மறந்துவிட்டு
தன் காலங்களை மறந்துவிட்டு
தன் இரவுகளை மறந்துவிட்டு
தன் கயிறுகளை மறந்துவிட்டு

ஒருமுறை
அமர்ந்திருக்கிறார்கள்
அந்த மாபெரும் தாமரைத்தண்டின் முன்பாக

புன்னகைகள் எரிந்து
புகைகிளம்பும் பெரும் சிதையின்
முன்பாக

o

தங்கைகள் தங்கள் குழந்தைகளைக்
கொண்டுவந்து
கிடத்தும் மடி

சகோதரர்கள்
தன் காதலை முதல்முறை
அறிவிக்கும்
செவி

அன்னைகள் தங்கள் கடைசிக்
குரலை
எழுதி கொடுக்கும்
கடைசிக் கரங்கள்

பிதாக்கள் தங்கள் அன்பினை
மெளனமாகப் பகிர்ந்துகொள்ளும்
விழிகள்

அவர்கள் காத்திருக்கிறார்கள்.
அவர்கள் காத்திருக்கிறார்கள்.
அவர்கள் காத்திருக்கிறார்கள்.

அம்மா இல்லாத தீபாவளிகள்

3 பின்னூட்டங்கள்

காலை எழுந்தபோது ஐந்து அல்லது ஆறு தவறிய அழைப்புகள். பேசுவதற்கு முன்பே என்ன தகவல் என்பதை என் ஆழுள்ளம் அறிந்திருந்தது. அதை அறிந்திருந்தேன் என்பதே உடல் நடுக்கத்தைக் கொடுத்தது. நடுக்கத்தோடே எடுத்தேன். நான் ஏற்கனவே உணர்ந்திருந்த அதே தகவல். . அழைத்தது தம்பிக்கு. அவன் மறுபுறத்தில் பதட்டத்தில் இருந்திருக்கவேண்டும் என்று இன்றும் வேண்டிக்கொள்கிறேன். “வரமுடியுமா” என்றொரு கேள்வி.

ஆண்களுக்கே உண்டான அன்பு செலுத்துவதன் தயக்கங்கள். கல்விவிடுதிகளில் தன் பால்யத்தைக் கடந்தவன் என்ற முறையில் குடும்பம் என்ற அமைப்பிற்குள் என்றும் ஆழ்ந்த ஈடுபாடு இருந்ததில்லை. ஆனாலும் வரமுடியுமா என்ற கேள்வி எதோ ஒரு ஆழத்தைச் சீண்டியது. வரமுடியாது என வழக்கமாச் சொல்வதின் பயன்கள். இப்படி ஒரு நேரத்தின் இவன் வரமுடியாது எனச் சொல்வதற்கான சாத்தியங்கள் இருக்குமென்ற எண்ணங்கள்.

எப்படியும் வந்துவிடுவேன் என்றேன். அலுவலகத்திற்கான மின்னஞ்சல்கள். உடனடியான நேர்மறை பதில்கள். உடனடியான பதிவுச்சீட்டுகள். எதை எடுப்பது என்ற குழப்பம் சிறிது நேரம். உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. வழக்கமான பயணப்பையில் கிடைத்த துணிகளைத் திணித்தேன். வீட்டிற்கு வெளியே கிடந்த பொருட்களைப் பொறுக்கி உள்ளே எறிந்தேன். கதவை அடைத்துவிட்டு ரயில் நிலையம் நோக்கி நடக்கும்போது வீட்டில் வரவேற்க அம்மா உயிருடன் இல்லை என்ற எண்ணம் முகத்திலறைந்தது.

கடந்த சிலமுறைகளாகவே அவள் வீட்டில் இல்லை. மருத்துவமனையில். அல்லது தாத்தா வீட்டில். கதவைத்தட்டும்போது திறக்கக்காத்திருக்காத கைகள். பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் அழைத்து எங்கிருக்கிறேன் என உறுதி செய்துகொள்ளாத குரல். கடைசி சில வருடங்கள். உடலின் சக்திகள் இழந்து தளர்ந்த நடைகள். மூச்சிறைக்கும் சொற்கள். அத்தனைக்கும் மேலும் ஒரு நம்பிக்கை இருந்தது. இவர் என்னைவிட்டுப்போவதற்கான சாத்தியங்கள் இல்லை என்ற நம்பிக்கை.

பெருங்குடும்பத்தின் அரவணைப்பின்றி தனியனாகத்தான் என்னை உணர்ந்திருக்கிறேன். எனக்கும் பெருங்குடும்பத்திற்குமான ஒற்றைக்கண்ணி இவர். இவன் இன்னவாக இன்ன இடத்தில் இருக்கிறான் என்பதாக பிறருக்கு தகவல்கள் அளித்துக்கொண்டேயிருந்தவர். மறுமுனையில் எனக்கும் குடும்பத்தின் இன்ன ஆள் இன்னவாக மாறியிருக்கிறார். இன்ன இடைவெளிகள் உருவாகியிருக்கின்றன. இவர் இதைச் சொன்னார் அவர் அதைச் சொன்னார். தகவல்கள். மேலும் தகவல்கள். ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் சில நிமிட அழைப்பிற்கு நடுவிலேயே வந்து சேரும் பெரும் சித்திரங்கள்.

கடைசி வருடங்களில் குரல் கம்மிவிட்டிருந்தது. மூச்சிரைப்பின் ஒலி. ஒவ்வொரு மூன்று நான்கு மாதத்திற்கு ஒருமுறையும் இந்தியாப்பயணங்கள். மொத்தமாக விட்டொழித்துவிட்டு வீடுபோய்ச்சேரும் வேட்கைகள். பின் சில நாட்கள் கூட தங்கமுடியாமல் திரும்பி ஓடும் எண்ணங்கள். வலியைச் சந்திப்பது குறித்த பயங்கள். எண்ணங்கள். மேலும் எண்ணங்கள். வலிகளை பொறுத்துக்கொண்டு சொல்லப்படும் சொற்கள் உருவாக்கும் குற்ற உணர்ச்சிகள்.

முழுமுற்றான கிராமத்து ஆள். நகரத்துக்கு நகர்ந்தவன் அங்கே ஏதோ கடும் உடல் உழைப்பில் தன்னை வருத்திக்கொள்கிறான் என்ற கிராமத்தின் வழக்கமான கற்பனைகள். ஒரு வகையில் உண்மைகள் கூட. என்கிராமத்திலிருந்து கிளம்பி நகரத்தில் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்தபடி வேலைபாக்கிறவர்கள் மிகக்குறைவு.அப்படி வேலை பாக்கிறவர்களும் சொல்வது அதன் போராட்டங்கள் குறித்த கதைகளின்றி பிற நற்கதைகள் சொன்னால் ‘கண்பட்டுவிடும்’ போன்ற மூட நம்பிக்கைகள். அவள் அறிந்ததெல்லாம் ட்ரைவர்கள். கட்டிடத்தொழிலாளிகள். பட்டறைகளில் வேலை பார்ப்பவர்கள். மும்பையின் இருள்பாதைகளில் விடுதிகளில் எடுபிடிகளாக இருப்பவர்கள். நான் அப்படி இல்லை நன்றாகவே இருக்கிறேன் என்பதை நம்பவைக்கவே பெரும் பிரயத்தனங்கள் தேவைப்பட்டிருந்தது.

பிறகு வெளிநாடு. எனக்கு அது ஒரு முன்னேற்றம். அடுத்த நிலை. குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து குளிரூட்டப்பட்டது போன்ற நகரங்களுக்கு வந்து சேரும் பாய்ச்சல். அவளுக்கு அது வெறும் தொலைவு. எட்டு மணி நேர பேருந்து பயணத்திற்கும் பதினஞ்சு மணி நேர விமானப்பயணத்திற்கும் இடையில் எனக்கு பெரிய வித்தியாசங்கள் இல்லை. அவளுக்கு அது தொலைவு. வெகுதொலைவு. மெல்ல மெல்ல மனம் மாற்றி அவளுக்குப் புரியவைப்பதற்கான முயற்சிகள் பாதிவெற்றிபெற்றன என்றளவில்தான் என்னால் எடுத்துக்கொள்ள முடிந்தது.

இடைமாற்ற விமானம் சிங்கப்பூரில் இருந்தது. அங்கே சில மணி நேர ஜாகைகள். எதோ ஒரு கடையில் காபி.யாரையாவது இழந்தபின் ஒவ்வொரு சிறு நிகழ்வும் அவர்களையே நினைவூட்டுகிறது. காபி அப்பாவிடமிருந்து தொற்றிக்கொண்ட பழக்கம். நாளைக்கு ஆறேழு முறை காபி குடிப்பவர் அவர். உடல் உழைப்பில் உணவிற்குப்பதிலாக பாலில்லாத காபியில் வெல்லம் போட்டு குடித்து வாழ்ந்த பழக்கம். ஓரளவு நாங்கள் நிலைகொண்ட பிறகும் தொடர்ந்திருந்தது. ஆறேழுமுறை காபி. பால்,சக்கரை எல்லாம் கலந்து. வெளியே செல்லும்முன் ஒரு முறை. போய்வந்தபின் ஒரு முறை. அவள் தன் வாழ்நாளெல்லாம் காபி போட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் குடித்துக்கொண்டேயிருந்தோம். தூங்குவதற்கு முன் ஒரு முறை. தூங்கி எழுந்ததும் ஒரு முறை.

புகைப்பழக்கத்தை குடிப்பழக்கத்தைப்போல எங்களுக்கு காபி ஒரு போதையாக மாறிவிட்டிருந்தது.உறவினர் வீடுகளின் காபிக்கு அவள் காபியின் சுவையில்லை. உறவினர்வீடுகளில் தங்க நேரும்போது அத்தனை காபிகள் தேவைப்படவில்லை. அவள் அந்த வீட்டிற்கு வரும்போது காபிகள் தேவைப்பட்டன. மேலும் மேலும் கேட்பதற்கான உரிமை அவள் இருக்கும் இடங்களில் எங்களுக்கு இருந்தது.

ஒவ்வொரு உறவின் இழப்பும் நம்மைப் புரட்டிப்போடுகிறது. அம்மாவின் மரணம் என்பது அத்தனையிலும் தனித்துவமானது. அது அத்தனையையிம் நம்மிடமிருந்து பிரிக்கிறது. முழு அனாதையாக நம்மை உணரச் செய்கிறது. அத்தனை கண்ணிகளிலிருந்தும் விடுவிக்கிறது. அத்தனை உறவுகளையும் நண்பர்களையும் ஒரே சமையத்தில் கலைத்துப்போடுகிறது.

சிங்கப்பூரிலேயே ஒரு உணவகத்தில் மாலை உணவு. உண்மையில் நான் அதிகம் சாப்பிடுகிறவனில்லை. ஆனாலும் அன்று பசி சுழன்றுகொண்டேயிருந்தது. தின்று செரிப்பவன் போல. அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே எனும் வரி மீண்டும் மீண்டும் எழுந்துகொண்டே இருந்தது. எதையோ அணைப்பவன்போல. எதையோ கடந்து செல்கிறவன் போல. ஒன்று மாற்றி ஒன்றென எதையோ தின்றுகொண்டிருந்தேன். மீண்டும் மீண்டும் காபி. சிங்கப்பூரிலிருந்து மதுரை. மதுரையிலிருந்து அம்மாவின் உடல் இருந்த குக்கிராமத்திற்கு ஒரு கார். அந்த ஓட்டுனர்க்கு பேசுவதற்கு நிறைய இருந்தன. எனக்கும் யாராவது பேசினால் நன்றாக இருக்குமெனத்தோன்றியது.

நான் கேட்டுக்கொண்டே வந்தேன். அவர் பேசிக்கொண்டேயிருந்தார். எதற்காக ஊருக்குப்போகிறேன் என்பதை அவரிடம் சொல்லவில்லை. எதிர்பாராத அந்த உடைவின் மெளனத்தை விரும்பவில்லை. வழக்கமான வெளினாட்டில்வேலைபார்க்கிறவர்களுக்கு சொல்வதற்கு உள்ளூர் ஓட்டுனர்களுக்கு ஏராளமான கதைகள் இருக்கின்றன. கேட்பதற்கு கேள்விகள். இறுதியாக அந்த நாட்டில் ட்ரைவராக என்ன செய்யவேண்டும் எனும் லெளகீக இடத்திற்கு வந்து சேரவேண்டியிருக்குறது. நான் உம் கொட்டிக்கொண்டேயிருந்தேன்.

அந்தப் பயணத்தில் நினைத்துக்கொண்டேன். உடனே அழைத்துப்புலம்பும் அளவிற்கு எந்த நண்பரையும் நான் மிச்சம் வைத்திருக்கவில்லை. சில குறிப்பிட்ட நம்பிக்கையான வட்டத்து நண்பர்களிடம் இன்ன காரணத்திற்காக வந்திருக்கிறேன் என்றேன். பிறருக்கு வழக்கமான விடுமுறை நாளாகவே இருக்கட்டும்.

நடந்தது நவம்பர் 14. தீபாவளி அக்டோபரில் முடிந்திருந்தது. சென்னையில் இருந்தபோதும் தீபாவளிக்கு ஊருக்குப் போகும் பரபரப்பு இருந்ததில்லை. கூட்ட நெரிசல். டிக்கெட்டுகளுக்கான அடிதடிகள். பண்டிகை நாள் குறித்த ஒவ்வாமைகள். உண்மையில் இந்த ஒவ்வாமை விடுதி நாட்களிலேயே தொடங்கியிருக்க வேண்டும். போகமுடியாமை குறித்த குற்ற உணர்ச்சிகளின் மூலம் பண்டிகை நாட்களிலிருந்து விடுவித்துக்கொண்டேன் எனத்தோன்றுகிறது. பொங்கல் அளவிற்கு தீபாவளி முக்கியம் இல்லை என்பதுவும் மறுகாரணம். ஜப்பானும் அதே நிலை. வழக்கமான மே/டிசம்பர் விடுமுறைகளுக்காக அலுவலக விடுமுறைகளைச் சேர்த்து வைத்து அதனூடாக இந்தியப்பயணம். ஆனால் இந்தமுறை எல்லா கண்ணிகளும் அறுக்கப்பட்ட எல்லா எண்ணங்களும் அறுக்கப்பட்ட ஒரு பெரும் மெளனப்பயணம்.

ஊரை அடைந்தது நள்ளிரவு. ஒரு மணி அருகில். அப்போதும் அம்மாவின் இழப்பைப் பற்றி ஓட்டுனரிடம் மறைக்கத்தோன்றியது. அவர்சொன்ன கதைகள் அவர் உருவாக்க விரும்பிய சிரிப்பின் கணங்கள் குறித்த குற்ற உணர்ச்சியை அவருக்கு அளிக்க விரும்பவில்லை. வீட்டிலிருந்து வெகுதொலைவிலேயே இறங்கிக்கொண்டேன். முதலில் பேசப்பட்டதை விட கேட்ட தொகை அதிகம். கேட்ட தொகையை விட குடுத்தது அதிகம். அவரது குழப்பங்களைப் புறக்கணித்து இருட்டினூடாக நடந்து சென்றேன்.

அந்தத்தெருவில் அதே நேரத்தில் பலமுறை சென்றிருக்கிறேன். வழக்கமாக நாய்கள் குரைத்து வரவேற்கும். வீடுகளிலிருந்து குரைத்தபடி வெளிவந்து பழகிய முகம் தெரிந்த வாசனை உணர்ந்து திரும்பிச்செல்லும். அன்றைக்கு பேரமைதி. சில வீடுகளில் நாய்கள் படுத்திருந்தன. தலைதூக்கிப்பார்த்துவிட்டு படுத்துக்கொண்டன. வரமாட்டேன் என நம்பிக்கை ஏற்படாத அந்த முகங்களுக்கு நன்றி சொல்லத்தோன்றியது. வீட்டு வாசலில் பையை வைத்து உள்ளே சென்றேன். பையை யாரோ எடுத்துச்சென்றார்கள். உள்ளே பெட்டியில் கால் நீட்டித்தூங்கும் அவள்முகம்.

தம்பியையும் அப்பாவையும் சந்தித்து சிலவார்த்தைகள் பேசிவிட்டு வந்து காலமடக்கி கால்மாட்டில் அமர்ந்துகொண்டேன். யாரோ வந்து காபி வேண்டுமா என்றார்கள். மறுத்து அமர்ந்திருந்தேன். எதையும் சொல்லத்தோன்றவில்லை.

லதாமகன். நல்லதொரு அடையாளம். இனி லதா இல்லை இந்த உலகில். உறவுகளை என்னுடன் இணைத்த இறுதிக்கண்ணியும் அறுந்திருக்கிறது. பொறுப்புகள் கூடியிருக்கிறது. எல்லாவற்றையும் கடந்து வரவேண்டும். இணையத்தின் போலிமுகங்களிருந்து இதன் மூலம் கிடைத்த நண்பர்களிலிருந்து மெல்ல துண்டித்துக்கொண்டேன். சொற்களற்று மெளனத்தில் ஆழ்ந்திருத்தல். மெல்ல என்னை மீட்டெடுக்கவேண்டியிருந்தது மீண்டும்.உடைந்த கண்ணாடித்துண்டுகள் ஒவ்வொன்றாகச் சேர்த்து என்னைக் கட்டியமைக்கவேண்டும். பதினைந்து நாட்கள். அர்த்தமில்லாத சடங்குகள். புரியாத மொழியை மீண்டும் மீண்டும் பேசி எதையோ எங்கோ மறு உலகத்திற்கு அனுப்புவது குறித்த பாவனைகள். அவருக்குப்பிறகு மகள்முறையினள், மறுமகள் முறையினள் இந்தக் குடும்பத்தை கை நீட்டிப்பெற்றுக்கொள்ளும் சடங்குகள். அவள் இங்கே இதே கூடத்தில் உறங்குபவள் போல் படுத்திருப்பவளை எங்கே அனுப்ப இந்த நாடகங்கள் எனும் உட்குரல் உள்ளேயே அமிழ்ந்தது.

உறவுக்கண்ணிகள் இதை எதிர்பார்க்கின்றன. அவர்கள் அழுது கண்துடைத்து எழுந்துசெல்ல இந்த சடங்குகள் தேவையாய் இருக்கின்றன. செய்துகொண்டேயிருந்தேன். எதிலும் ஈடுபாடற்று எல்லாவற்றையும் எடுத்து நடத்தும் நாடகங்கள். முடிந்து சில நாட்களுக்குப் பிறகு திரும்பி ஜப்பானுக்குச் செல்வதற்கான ஆயத்தங்கள். அவளைக் கொண்டுசென்று எரிக்கும்போது மீண்டும் அதே வரிகள். யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.

திரும்பிவந்து மீண்டும் சடங்குகள். அடுத்த சடங்குகள் செய்வதற்கான நாட்குறிப்புகள். திரும்பிவந்தேன். வேலைகளுக்குள் ஈடுபடுத்திக்கொண்டேன். ஆறுமாதத்தில் அடுத்த பயணம். அதே சடங்குகள். அதே நாடகங்கள்
மீண்டும் ஜப்பான். மீண்டும் கடந்த அக்டோபர் பயணம். ஓராண்டு முடிவு. மறுபடியும் சடங்குகள். மறுபடியும் நாடகங்கள். 2017 தீபாவளி முடிந்து இறந்தவருக்கான ஓராண்டு 2018 தீபாவளிக்கு முன்பே முடிந்துவிட்டது. இந்தக்கணக்குகள் யார் முடிவு செய்கிறார்கள். இதனால் என்ன நிகழப்போகிறது. அத்தனையும் நாடகம். ஆனால் அந்த நாடகங்களுக்கூட சில உணர்வுகள் எழுகின்றன. அவள் மீது கொண்ட தளைகளை அறுத்தெரியச் சொல்கின்றன. அவரிடத்தில் ஒரு தங்கையை ஒரு அத்தையைக் கொண்டுவந்து நிறுத்துகின்றன. அவர்கள் முன்னிலும் அதிகமாக நம்மை நெருங்குகிறார்கள். ஆனால் நான் எந்தக்கண்ணியில் எங்கே நிற்கிறேன் என்ற குழப்பம் என்னளவில் எஞ்சுகிறது.

கல்பற்றா நாராயணனின் கவிதை வரிகளைப்போல அவள் எங்களைத்தாங்கினாள். குறிப்பாக என்னை. என் பைத்தியக்காரத்தனங்களை. என் இலைகளை நீர் நிலையுடன் இணைக்கும் தண்டாக அவள் இருந்தாள். பெருங்குடும்பத்தின் என் மீதான சீண்டல் சொற்களை நான் எகிறி உடைத்தெரியவிடாமல் என் பக்கம் நின்று எனக்காகப் பேசினாள். இன்று இத்தனை ஆண்டுகளில் கற்றுக்கொள்ளாத ஒன்றை இந்த கடந்த ஓராண்டில் கற்றுத்தெளிந்திருக்கிறேன் என நினைக்கிறேன். அவர்களின் சீண்டல் சொற்களுக்கு புன்னகைத்தபடி பதில் சொல்லும் கலை இந்தச்சடங்குகளுக்குப் பிறகு வாய்த்திருக்கிறது.

இதைக் கற்றுக்கொடுக்க மிகப்பெரிய பயணத்தைத் தேர்த்தெடுத்திருக்கிறாள். .அவள் என்னைப் பெற்றுமுடித்தாள்.இனி அவள் உறங்கட்டும்

மலைநிலத்தின் வரையாடுகள்

பின்னூட்டமொன்றை இடுக

மலையடிவாரத்தின்
பாழடைந்த கோயில் சுவற்றில்
உறை பிரிக்கப்படாத மிட்டாய்களை
வைத்துச் சென்ற
குழந்தைக்காக

தொலைவின் மரத்தடியில்
காக்கைகளை விரட்டியபடி
அமர்ந்திருக்கிறேன்

ஒரு குழந்தை வருகிறது
உறைகளைப் பிரித்துவிட்டு
மிட்டாய்களை
அங்கேயே வைத்துச் செல்கிறது

வேறு குழந்தையாக இருக்கலாம்
என
எண்ணிக்கொள்கிறேன்
அதே குழந்தையாகவும் இருக்கலாம்

நான் ஏன் அந்த உறைகளைப்
பிரிக்காமல்
மிட்டாய்களைக் காவல்காத்து அமர்ந்திருந்தேன்?

o

வரையாடுகள் மலைவிட்டு
இறங்கிவருகின்றன

அவை வழக்கமாக இறங்கிவருவதில்லை
வந்தாலும் அவற்றின் பாதை
இந்த
மனிதக்காலடிகள் உருவாக்கிய
பாதையில்லை

அவை கடந்துசெல்கிறன
ஒரு ஆடு நிற்கிறது
நின்று திரும்பிப்பார்த்து
நான் அமர்ந்திருந்த பாறையில்
உரசிக்கொள்கிறது

நான் கால்களை அகட்டி அதன்
கொம்புகள் உரச
இடமளிக்கிறேன்
அதுவும் தலையசைத்து
ஏற்றுக்கொள்கிறது

அவை சென்றுவிட்டன
மந்தை
அது சென்றுவிட்டது
ஆடு
நான் இனி
அப்பாறையைச் சுமந்துதான் அமர்ந்திருக்க வேண்டுமா?

o

மலையுச்சியின்
கன்னிதெய்வத்திற்கு
பக்கத்திற்கு இரண்டாக
எட்டு கைகள்

மலையுச்சியின் கன்னிதெய்வத்திற்கு
மார்இடைவெளிகள்வரை
நீண்ட நாக்கு

மலையுச்சியின்
கன்னிதெய்வத்திற்கு இருபுறமும்
கோரப்பற்கள்

மலையுச்சியின் கன்னிதெய்வத்திற்கு
கூரிய முலைகள்
மலையுச்சியின் கன்னிதெய்வத்திற்கு
கருணை பொங்கும் கண்கள்

மலையுச்சியின் கன்னிதெய்வத்திற்கு
ஒரு
நவகண்ட படையல்

மலையுச்சியின் கன்னிதெய்வங்களுக்கு வந்தனம்.

பட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை

பின்னூட்டமொன்றை இடுக

அடங்கியிருந்த கயிறுடன்
அழைத்துச் செல்லப்படும்
ஆடு
தன்னை அறுக்கக்
காத்திருப்பவனை அன்புடன்
பார்த்திருக்கிறது

அறுத்துக்கொண்ட
கயிறுடன் தேட ஆளற்று
அலையும்
ஆட்டுக்குட்டி
திரும்பித் திரும்பிப்
பார்த்துச்செல்கிறது

கத்திகளைப்
பளபளக்கச் செய்கிறது
ஊடுருவிச் செல்லும் வெயில்.

o

குற்ற உணர்ச்சியைத் தூண்டுவதன்
மூலம்தான்
அவர்கள் உங்களை
அடிமையாக்குகிறார்கள்
என்றவன் சொன்னான்

முத்தங்களை மறுதலிக்கச் செய்கிறார்கள்
குறுகி அமர்ந்து
பார்க்கச் செய்கிறார்கள்
பெயர்களை ஒளித்து
புனைப்பெயர்களை
சூடிக்க்கொள்ளச் செய்கிறார்கள்
அலைபேசியெண்களை
அழைக்காமல்
கடந்துசெல்லச் செய்கிறார்கள்
படிக்கட்டுகளைத் தாண்டாமல்
வாசலில்காத்திருக்கச் செய்கிறார்கள்

தனது
கழுத்தை
தானே அறுத்து
பாவத்தின் கடவுள் முன் பலியிட்டுக்கொள்ளச் செய்கிறார்கள்.

பிறகு அவர்கள்
உங்களுக்கு பட்டயம் வழங்குவார்கள்
பளபளக்கும் தகரப்பட்டயம்

அதை உங்கள் சந்ததிகள்
பயன்படுத்தாமல் பல ஆண்டுகள்
சந்தோசமாக வைத்திருக்கலாம்.

o

ஆறுதல் சொல்லத்தெரியாதவன்
என்றவள் சொன்னாள்

அன்னையே

சொல்கிறவனை
வேடிக்கைபார்க்கிறவனாக
வெளியிலிருந்து கையாட்டுகிறவனாக
யாரோ ஒருவனாக
அவை
கீழிறக்குகின்றன

கேட்கிறவளை
காற்றில் துழாவி
கையேந்தி இறைஞ்சுகிறவளாக
இன்னும் சிலபடிகள்
கீழிறக்கி மடியேந்தச் செய்கின்றன

தேவி

நான் இறங்குவேன்
இந்த புழுத்துளையின்
ஆழங்களின் வழியாக

நீ
அங்கேயே இருத்தல் பொருட்டு

நாம்
காமம் கொள்வோம்
ஆறுதலின் காரணங்களை மழைத்தண்ணீரில்
கப்பலென எங்கோ
விட்டுவிட்டு

காயங்களை எண்ணுகிறவர்களின் கதை

பின்னூட்டமொன்றை இடுக

அலைந்த கணங்களின் வழியே
கண்ட நகரங்கள் தீப்பற்றியெரியும்
கனவிற்கு பிறகு திடுக்கிட்டு எழும் ஒருவன்
தன் நள்ளிரவு சிகரெட்டைப் பற்றவைத்து
எரியாத நகரத்தை
வெறித்துப்பார்த்தபடி சாலையோர
மரப்பெஞ்சில் அமர்ந்திருக்கிறான்.

அங்கேயும் சிலர் வருகிறார்கள்
தங்கள் கடிதங்களை
வாசித்துத் தரும்படி
தங்கள் கொலைகளை
மன்னிக்கும்படி
தங்கள் முத்தங்களை ஏற்றுக்கொள்ளும்படி

நியாயத்தீர்ப்பின் நாள்
நெருங்கிக்கொண்டிருக்கிறது
என்று சொல்லி
எல்லாரையும் திருப்பி அனுப்பியபிறகு

அவன்
தனது அடுத்த சிகரெட்டைப் பற்றவைக்கிறான்

நியாயத்தீர்ப்பின்
சிகரெட்டுகளுக்கு வந்தனம்.

o

காதல்கடிதங்கள் எழுதப்பட்ட
எண்ணிக்கையை விட

இந்த நகரத்தில்

தற்கொலை கடிதங்களின்
எண்ணிக்கைகள்
அதிகம்

முத்தங்களை விட
இறுதி கையசைப்புகள்
அதிகம

மன்னிப்புகளைவிட
கொலைகள் அதிகம்

பறவைகளைவிட வேட்டைக்காரர்கள்
கைகுலுக்கல்களைவிட குற்றச்சாட்டுகள்
சாலைகளை விட தடுப்புகள்
மேலும் மேலும் மேலும் மேலும் மேலும்

அடுத்தமுறை
எண்ணிப்பாருங்கள்

நீங்கள் அன்பைச் சொன்னவர்கள் எண்ணிக்கையை
விட
ஆறுதல் சொன்னவர்கள் எண்ணிக்கைதானே
அதிகம்?

o

முதலில் அவர்கள்
தங்கள்
மரக்கதவுகளை மெல்ல அடைப்பார்கள்
பிறகு
கண்ணாடிக்கதவுகளை அறைந்து
அடைப்பார்கள்

முதலில் அவர்கள்
புன்னகைத்தபடி திரும்பிச்சென்று
தொலைவில் தன் கண்ணீரைச்
துடைத்துக்கொள்வார்கள்
பிறகு
அறுத்தெரியும் சொற்களை முதல் கைகுலுக்கலில்
புன்னகைத்தபடி சொல்வார்கள்

முதலில் அவர்கள் தன் உடைந்த புண்ணை
வெட்கம் கொண்டு மறைத்துக்கொள்வார்கள்
பிறகு
சூழல் பற்றி கவலையின்றி
தன் காயங்களை அறுத்து
குருதி துடைத்துக் கட்டுப்போட்டுக்கொள்வார்கள்

முதலில் அவர்கள்
காயம் கொள்கிறவர்களாய் இருந்தார்கள்

பிறகு
காயப்படுத்துகிறவர்களாக.

திருவாளர் நந்து அவர்கள்..

பின்னூட்டமொன்றை இடுக

செல்வி.ஆர் நம் குழந்தைகள்
அன்பை அறிந்திருக்க வேண்டும்
நந்து என்றாள்.

செல்வி.கே-வுக்கு பணமதிப்பறிந்த
குழந்தைகள் மீது விருப்பம்.

செல்வி.யூவிற்கு எத்தனை பேர் தன்னைச் சுற்றி
வருகிறார்கள்
என்பதை உலகிற்கு அறிவிக்க
வேண்டுமாயிருந்தது.

செல்வி.ஏ, ஒவ்வொரு காதலனும்
ஒரே முறை
காமத்தை நிறைவு செய்து விலகிக்கொள்ள
விரும்பினாள்.

செல்வி ஏ முதல் இசட் வரை
கனவுகள் வைத்திருந்தார்கள்

நாளைக்கான கனவுகள்
நாற்பது வருடங்களுக்கான கனவுகள்
தலைமுறைகளுக்கான கனவுகள்.

திரு.நந்து
அறிவற்றவர்.
கனவுகள் அற்றவர்.
நாளை அற்றவர்.
இன்று காதலிக்கலாம் என்றார்.

திருமதி ஏ முதல் இசட் வரையிலானவருக்கு
திரு. நந்து அவர்கள்

இன்று
பெருநாள் தினம்

தனது சமையல் பாண்டித்தியத்தின்படி
பிரியாணி செய்வது எப்படி என்பதை
மட்டும்
முப்பத்தி இரண்டாவது முறையாக
மின்னஞ்சலில் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார்

முதலில் அடுப்பைப் பற்ற வைக்கவும்…..

o

செல்வி.ஆர்க்கு
பல வருடங்களாக
பல்லாயிரக்கணக்கான சந்தேகங்கள்.

அவர்தம் தொழில் குறித்த கேள்விகளை
திரு.நந்து அவர்கள் தீர்த்து வைத்தார்

கரகோசங்களை எழுப்புவோம்.

அவர்தம் வாழ்க்கை குறித்த சந்தேகங்களை
திரு.நந்து அவர்கள் தீர்த்துவைத்தார்

கரகோசங்களை எழுப்புவோம்

நண்பர் எக்ஸ் குறித்த சந்தேகங்களை
திரு.நந்து அவர்கள் தீர்த்து வைத்தார்

கரகோசங்களை எழுப்புவோம்

திருமதி.எக்ஸ் அவர்கள்,
மேலும் முன்னாள் செல்வி ஆர் அவர்கள்,
பொது நண்பர்
திரு. நந்து அவர்களுக்கு
சில சொற்களை சொல்ல
விரும்புகிறார்கள்

அவர்களைப் பாராட்டி சில சொற்களை…….

கரகோசங்களை எழுப்புவோம்.

o

செல்வி ஏ முதல் இசட் வரை

இன்று
(மன்னிக்க முன்னாள் செல்வி இடிசி இடிசி)
நண்பர்
திருவாளர் நந்து அவர்களை
அழைத்து

பதினாறு நாட்களுக்கும் மேலாக இணையத்திற்கு வரவில்லை
என நினைவூடடினார்கள்.

மேலும் அவர்கள் பேசும்போது
நீ நல்ல நண்பன் என்பதை பலமுறை
அடிக்கோடிட்டார்கள்
(நந்து ஏற்கனவே அறிந்திருந்தார்.
யாராவது வந்து அறிவுரை சொன்னால் குழம்பிவிடுவார்)

திருவாளர் நந்து அவர்கள்
வழக்கம்போல
எதையும் மறைக்காமல் உளறிக்கொட்டினார்.

இன்னாள் திருமதிகள் புன்னகைத்தனர்.
நண்பர் நந்து கணித்திருந்தார்

இது நிகழுமென.

நிகழ்ந்தபிறகு திருவாளர் நந்துவிற்கு
என்ன செய்வதென தெரியவில்லை.

அழத்தொடங்கினார்.

நண்பர்காள், தயவுசெய்து நம் நண்பனை
தொடாதீர்கள்.
குழப்பாதீர்கள்.
அழைக்காதீர்கள்.

ஓட்காவிற்கு எழுதின சுவிசேஷம்

பின்னூட்டமொன்றை இடுக

பிதாவானவர் திராட்சை ரசங்களை
உண்டுபண்ணி
பகிர்ந்துண்ணும்படி
உத்தரவிட்டார்

பிதாவானவர் மாமிசங்களை
தோலுடையவையாகப் படைத்து
கெட்டுப்போவதிலிருந்து
காத்தார்

பிதாவானவர் தன் குறிப்புகளை
பரப்பும்பொருட்டு
குமாரனை
அனுப்பி வைத்தார்

குமாரனைக் கொன்றவர்கள்
பிதாவினை
விற்கும் குத்தகையை எடுத்துக்கொண்டு

மாமிசங்களை திராட்சை ரசங்களை
பாவமென
உண்டுபண்ணினார்கள்

குமாரனை நம்புகிறவர்கள்
பிதாவை மறுதலிக்கத் தொடங்கினார்கள்.

o

ஓட்கா தானியங்களின் சாறு.
பியர் வெறும்
பார்லித்தண்ணி
ஒயின் இன்னும் சைவம்.
திராட்சைகளின் சாறு கடவுள்கள் பரிந்துரைத்தது.

இந்த தேசத்தில்
சோச்சுகள்
கிடைக்கின்றன.
உருளைக்கிழங்குகளின் சோச்சு
அரிசி சோச்சுவைவிட சுவையானது

குடிக்க வந்த நந்து-சானும்
பரிமாற வேண்டிய ஷிண்டோ-மாப்ளையும்
இடங்களை மாற்றிக்கொண்டு
எல்லாரையும் குழப்பிவிடுமளவு
சுவையானது

போதங்கள் மொழியற்றது
மாப்ள

மதங்கள் சுவையற்றது
நந்துசான்

குடி ஒரு தேவ ஒளி
உலகத்தீரே.

o

முப்பதாவது வயதில்
குமாரன் மீது தேவன்
ஒளியாக இறங்கினார்

எனது ஹையர் செகண்டரி ஸ்கூலில்
புதிதாக கட்டிய சேப்பலில்
(பதினைந்து வருடம் முன்பு நான்
படிக்கும்போது புதியது)
சுவரில் ஓவியமாக
பிதா குமாரன் மீது
இன்றும் இறங்கிக்கொண்டிருக்கிறார்.

பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையில்
ஒளி
புறாவாக மாறியிருக்கிறது.

இருப்பத்தி இரண்டாம் வயதில்
நந்து தன் முதல் போதத்தின்
இரவை
மலைத்தலத்தின் காட்டு பங்களாவில்
அடைந்தான்.

பிறகு குமாரன் எல்லாரிடமும் பிதாவானவரை வெளிப்படுத்தி
தனியாக வெளிதேசத்தில் வந்து
தெருவில் விழுந்து கிடந்தார்

பிறகு நந்து எவரிடமும்
எதையும்
வெளிப்படுத்த முடியாமல்
சிலுவையில் அறையப்பட்டான்.

நிழற்குருதி

பின்னூட்டமொன்றை இடுக

சனியிரவுகளில்

யானைகள்
வழிதவறி கூடாரத்திற்குள்
நுழைந்துவிடுகின்றன

கொல்ல நினைத்தவர்கள்
இறந்துவிடுவது
எதிர்பாராமல்
நிகழ்ந்துவிடுகிறது

சனியிரவுகளில்

ஊரின் அத்தனை குழந்தைகளும்
குறிப்பாக நமது
சுற்றுவட்டாரங்களில்
இருப்பழிந்து நள்ளிரவுகளில்
அழுகின்றன

தெருநாய்கள் அற்ற
தேசத்தில்

சனியிரவு
நீண்டு கிடக்கிறது

ஆதூர மரணத்தின்
அழுகைக்கான காரணங்களுடன்.

o

ஒரு கொடுங்கனவு

எதிர்பாராமல் இறந்துவிட்டவள்

இந்தமுறை
தெளிவாக
எனது சொல்படி
எடுத்த முடிவின் படி
இறந்துபோகிறாள்

கடைசியாக ஒருமுறை
முகம் பார்த்து
என் மரணத்திற்கு
நீதான் காரணம்
என்று
தீர்க்கமாகச் சொல்லிவிட்டு

இதற்குப்பிறகு எங்கே உறங்குவது
இதற்காகத்தான் இத்தனை உறக்கமுமா?

o

ஒரு மழையிரவில் முடிவெடுத்து
சொல்லற்ற போதத்தில்
உறைந்திருக்கும்போது

கண்ணிகளை அறுத்துக்கொண்டு
ஏகாந்தத்தின்
கடைசிதுளி குருதியை பருகியிருக்கும்போது

அத்தனை
வாய்ப்புகளையும் தவிர்த்துவிட்டு
மெளனத்தை சூடிக்கொள்ளும்போது

நிழல்
விழுகிறது

கோபுரத்தை மறைக்கும் சொற்களின்
நிழல்

o

Older Entries Newer Entries

%d bloggers like this: