திரும்பும்பாதையில்
எதிர்ப்படும் மரங்களைக்

கொத்திச்செல்லும் பறவை

அல்லது

புத்துணர்ச்சி முகாமிலிருந்து
திரும்பி வந்த
யானையின்
துதிக்கை நுனி
துழாவும் தார்ச்சாலை

அல்லது

மூச்சடக்கப்பட்டதுபோல்
நின்றுபோகும்
மேல்வீட்டுக்காரியின் அழுகுரல்

அல்லது

எல்லாம் சுகம். 
இனியொன்றுமில்லை எனும் சொற்களுக்கிடையேயான
இடைவெளி.

O

பழையகணக்குகளின் தீ சுடர்விடும்
கண்களை
மரணப்படுக்கைக்கு அருகிலமர்ந்து
பார்த்துக்கொண்டிருக்கும் 
மாலைகளில் 
மழை சத்தமில்லாமல் பெய்கிறது.

வருகிறவர்களின் எல்லாருக்கும் கொடுப்பதற்கு
எதையாவது தயார் செய்யச்சொல்லி
அவள்
என்னைப்பணித்துக்கொண்டேயிருக்கிறாள்

திடீரென இருள் கவிகிறது
ஏகப்பட்ட பெருமூச்சுகள்

சிலர்மட்டும்
நினைத்து நினைத்து தேம்ப விதிக்கப்பட்டவர்களாக
பணிக்குத்திரும்புகிறார்கள்.

O

சோப்புக்குமிழிகள் காற்றெங்கும்
பறக்கும் 
ஒரு பின்மதியத்தில்

நீரில்
இறங்கும்
குமிழி மட்டும் 
உடையாமல் நீண்ட நேரத்திற்கு ஆடிக்கொண்டிருக்கிறது

உடையாமல் காத்திருக்கும் குமிழிகளின் பதட்டம் 

நீயும் அறிவாய்தானே?

O