பறையன் காட்டில் முதற்காலடி வைக்கும்போது இருள் தொடங்கியிருந்தது. நெல்லரியில் எறியப்பட்ட சரல்களேன காடு கூடடையும் பறவைகளில் அதிர்ந்து கொண்டிருந்தது. இல்லாத பறையை காற்றில் அறைந்து கொண்டிருந்தன விரல்கள். ஒவ்வொரு அதிர்வுக்கும் காடு நகர்ந்து மீண்டெழுந்தது. காட்டின் அதிர்வினை இறுக்கும் கயிற்றினைத் தேடி பறையன் கண்கள் அலைபாய்ந்தன. காடே பெரும் இசையக்கருவியென ஆடிக்கொண்டிருந்தது. சிறு செடிகள் அசைந்துஅருகமைந்த பெருமரங்களை அறைந்தன. பெருமரங்கள் அசைந்து இருளை அறைந்தது. இருள் பறவைகளை அறைந்து கூடுகளுக்குத் திருப்பியது. ஒலியின் வழியாகவே கூட்டினை அறியும் பறவைகள் தன் குஞ்சுகளை சொற்களால் தேடி அடைந்தன.
சருகுகள் உரசும் ஒலியும் இலைகள் உரசும் ஒலியும் ஒத்திசைவுடன் பேரிசையை உருவாக்குவதாக தனக்குள் நிறைந்தான். பழுத்த இலைகளை பாதம் கூசி ஒலி நிரப்பினான். மழைவண்டுகள் ரீங்காரம் அதிர்வுகளின் பெருங்கடலில் ஒற்றைக் கம்பிகொண்டு கட்டுவதான சித்திரம் தோன்றியது. கனவில் எழுந்த அதிர்வென இசைக்குறிப்புகள் உள்ளெ எழுந்து உடனே மறைந்தன.
நிகழ்தலின் கணத்திலும் நினைவின் கணத்திலும் ஒருங்கே நின்றிருந்தான். கால்கள் முன்பின்னாக ஆடலை நிகழ்த்தியபடியிருந்தன. இடக்கை காற்றின் பறையை ஏந்தியிருந்தது. வலக்கை நிறைந்த காற்றில் அறைந்தபடி இருந்தது. அதிர்வுகளை உடலே பழக்கத்தினால் அறிந்து அதிர்ந்துகொண்டிருந்தது. அடுத்து அடுத்து என விரல்கள் முன்சென்றன. பாதங்களில் தாளம் எழுந்தது. ஒற்றை ஒலிகளால் ஆன பெரும் இசை நிகழ்வென காடு அசைந்து கொண்டிருப்பதைக் கண்டான்.
சுவடுகளின் இடைவெளிகள் இசையின் ஒருங்கு கொண்டிருந்தன. வீசும் கைகளில் சிக்கும் இலைகளில் வெளிப்பறையின் தாளம் கண்டு அறைந்தபடி முன்சென்றான். பாதையெங்கும் சென்ற தடங்கள் முறிந்த கிளைகளாலும் உதிர்ந்த இலைகளாலும் விரிந்தது. உடலதிர்வு நடையைச் சோர்வுகொள்ளும் f தருணமெங்கும் காய்ந்து உடைந்து உளுத்து வீழ்ந்திருந்த தண்டுகளை அறைந்து பொடிசெய்தபடி நின்றிருந்தான். விலங்குத்தோலில் அறைந்து வறண்டிருந்த உள்ளங்கைகள் உழுத்த மரங்களின் தும்பு நிறம் கொண்டன. மரங்களை அறைவதற்கும் தும்புகளை கையிலிருந்து தட்டுவதற்கும் சீரான இடைவெளி இருந்தது. இடைவெளிகளில் தடாரி இசை கொண்டது. கைகள் சலிக்கும்போது பாதங்களாலும் பாதங்கள் சலிக்கும்போது கைகளாலும் அளந்தபடி காட்டின் உள்ளே உள்ளெ என்றறிந்தபடி சென்றுகொண்டிருந்தான். உதிர்மலர்கள் அறைந்த நீர்ப்பாதைகளின் இசைவில் குரவையிருந்தது.
இசையற்ற இசைவளிகளில் பாடல்களை பறையண் கண்டான். அதிரும் பறையில் எழுந்துவரும் பாடலை உடல் வருடும் அனலென உள்ளுக்குள் கேட்டான். நாப்பழக்கமற்ற காப்பியங்கள் சொற்களால எழாமல் இசையாகவே எழுந்தது. இல்லாத பறையறையும் ஒலிகளை நாவில் எழுப்பியபடியே முன்னகர்ந்தான். இடைவெளி விழும் கணங்களில் காடு அவன் காப்பியங்களை பறவைச்சிறகடிப்பில் மூங்கிலுரசும் மரகுகைகளில் கரைமோதும் நதியலைகளில் நீட்டிச்சென்றது. பாதம் இடறும் புள் கடித்த பழங்களை மரங்களை நோக்கி எறிந்தான். மரங்கள் பிற மரங்களை இலையுரசி இலையுரசி செய்தியனுப்ப வழிகாத்திருந்த மரங்கள் மறுசொல்லென மலர்களை அவன் மீது எறிந்தன. நகரும் விதையென காட்டினுள் அலைந்தபடி இருந்தவனை பாதங்களின் ஆடல் தரையொட்டி இணைத்திருந்தது.
சுழித்தோடும் சிற்றோடைகளில் கால் வீசி நடனம் கொண்டான். எதிர்த்தோடும் சுழிப்புகள் பதிலுக்கு நீரறைந்து வாழ்த்தின. சிறு சீண்டல்களில் வலித்து முகம் சுழித்து பின் மீண்டு புன்னகைக்கும் மகவென காடு இருந்தது. மகவின் ஒலியில் இசையறியும் அன்னையென இணைந்துகொண்டான். நண்பகல் மழை சகதியென காயாமல் கலந்து பாதங்களில் படிந்தது. உதறலில் கணமெங்கும் இசையைக் கண்டறிந்தான். உடல் சலித்து மரங்களில் அமர்ந்தபோதும் காடு அவனை ஒலியெழுப்பி அழைத்தது. சோர்வுற்ற மனத்தினை மலரெறிந்து உரசியது. கனிந்த பழங்கள் தலைவிழுந்து உடையாமல் நிலம் அடைந்தன. கனிகளை உறிஞ்சிச் சுவைத்தபின் விதைகளை சிற்றோடைகளில் எறிந்தான்.
தூரத்து பேரருவியின் இசை எல்லா திசைகளிலிருந்தும் எதிரொலிப்பதை உணர்ந்தான். உள நோக்கு குரல் தேறி தேடி அலைந்தும் பேரருவி தன் கண்மறை ஆட்டத்தை ஆடுவதாக இருந்தது. தொடுவான மயக்கென நீரோசை எங்கோ தூரத்தில் எழுந்தது. பாதை தேர்ந்து இசையெழுப்பி சலிப்புற நடந்தபின் அதே அருவி எதிர்திசையிலிருந்து ஒலியெழுப்பியது. கனவுக்குள் அலைபவனென மீண்டும் மீண்டும் வந்த இடத்திற்கே திரும்பத்திரும்ப வருவதாக உணர்ந்தான். ஆனாலும் சிறு மலர்கள், புதிய மரங்கள், தளிர் இலைகள் இல்லை நாங்கள் அன்னியர்கள் என்றன. ஏற்கனவே வந்த பாதையில் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டேயிருந்தான். பேரருவி அல்லது அழிமுக சுழல் அல்லது விசைகொண்டோடும் ஒரு நதியை அடைந்தால் அதன் ஊற்றுக்கண் தேறி அடையலாம் என அலைந்து உடல்மனம் சலித்தான்.
இருள் காட்டினை முழுதாக மூடும்முன்னதாக காடு கண்களுக்கு பழகியிருந்தது. பழகிய காடு வளர்ப்புப்பிராணியென நெகிழ்ந்து வழிவிட்டு குழைந்து முகம் பார்த்தது. நகரும் முன்னாத அடுத்த காலடியில் அருகணையும் சருகுகளை பசுந்தளிரென உடலில் அறிந்தான். பேரிசையின் அடுத்த அடிக்கென காத்திருக்கும் தண்டங்களை உளுத்த மரங்களை விரல் அறிந்திருந்தது. பாதவிரல் தொடும் கனிகள் இன்னதென அகம் உணர்ந்தது.அதிர்வின் இடைவெளிகளில் இசையின் பரிமாணங்கள் உருவாகிவருகின்றன. தூரத்து நதி ஒரு கனவில் எழுந்த ஒலியென எண் திசைகளிலும் எதிரொலிக்கிறது. பெருவீழ்வின் அருவி, பேராற்றலின் நதியை உருவாக்குகிறது. பாறைகளால் வழிகாட்டப்பட்ட நதி வழித்துணைக்கு அப்பாறையினையே இசையெழ உருட்டிச் செல்கிறது. பறையன் தன் காலடி சிறு கற்களை அப்படியே உருட்டியபடி இருந்தான். கூழாங்கற்கள் நதியின் பாதையை அறிந்தவை. நதியிலிருந்து பெருங்காட்டின் நடுப்பாதைக்கு வழிதவறி வந்துவிட்டவை. இவற்றை அதிரச் செய்வதன் மூலம் எங்கிருந்தோ இணையென நதி இசையெழுப்புவதை அறியக்கூடும். இவற்றை எறிதலின் மூலம் நதியின் பாதையில் காற்று இச்சிறுகற்களை கொண்டு செல்லக்கூடும். கனவிலிருந்து எழும் இசை மறு கனவில் தொடர்வதைப்போல.
வெறுங்கை அளையும் காற்று பறையின்மையின் சுமைகொண்டு கைஇணைப்புகளில் உளைச்சல் தந்தது. இன்மையின் வலி இருத்தலில் பெரிதாக வளர்ந்துகொண்டே செல்வதை பறையன் கண்டான். உளுத்தமரங்களின் உட்பாகங்களை உரித்தெடுத்து இலைகளால் கட்டி மெல்ல விரல்தட்டி ஓசை எழுப்பினான். அதிர்வற்று நீர் அளையும் கல்லென ஓசை கொண்டு மயங்கியது. பின் இலைகள் பொதிந்து உள்மடிந்தன. பருத்த தண்டங்களைக் குடைந்து பேரரச இலைகள் தைத்துக் கட்டினான். தோலறையும் பறையன்றி இலையறையும் பறை ஓசையின்றி உள்ளே அடங்கியபடி இருந்தது.
ஒரு கணு விட்டு மூன்றாம் கணுவில் மூங்கில் தண்டமொன்றை உடைத்தான். இருபுறம் துளையிட்டு சக்கைகளை ஊதி வெளியேற்றினான். பறவையின் இறகுகளை உள்ளடைத்துப் பொதிந்தான். நாகத் தோல் போர்த்தி துளைகளைக் கற்றதிரக் கட்டினான். ஆனாலும் விரல்களுக்குப் போதவில்லை. பேரதிர்வின் கரங்கள் உள்ளங்களை கொண்டு அறைய அச்சிறுகுழல் போதுமானதாய் இல்லை. இருளில் கண் தெரியாத தொலைவிற்கு அந்தக்குழலை எறிந்தான். எங்கோ சிறுவேர்களில் மோதி அந்தக்குழல் வீழ்ந்தது.
கைகள் அறிவதென்னபதை அறிந்திருந்தான். பெருவட்டத்தை விரும்பும் கரங்களுக்கு சிறு உறிகள் போதாதென்பது தெளிந்தது. இருள் மேலும் மேலும் என மூடி எழுந்தது. மேலும் மேலும் என கண்களைச் சுருக்கி தன் பறையை தேடித் திரிந்தான். தூரத்து கனவின் அருவியோசை எழுந்தபடியே இருந்தது. இசை அதிர்கிறது நதி அதிர்கிறது. இலை அதிர்கிறது. ஒத்திசைவின் கணங்களின் வழியே இங்கே எங்கோ எனது நதி ஒளிந்திருக்கிறது என்றொரு எண்ணம் எழுந்தது.
மழையொளிக்கீற்றென பெருநிலவு அடரிலைகளில் கரைந்து வழிந்திருந்தது. வழியும் நிலவொளி பட்டு எதிரொளிக்கும் இரு கண்களை தூரத்து மரத்தின் மறைவினில் கண்டான். மெல்ல மரங்களைச் சுற்றி நெருங்கிய போதும் அசையாமல் இருந்தது. அருகிருந்த நீண்ட மரக்கிளையை ஒடித்து அவற்றின் கண்ணருகே அசைத்தான். அசைவின்றி இருந்தது. நெற்றிப்பொட்டில் வைத்து அழுத்தியபோது கிளை மெல்ல நெகிழ்ந்து உடல் நுழைந்தது. எருது சற்று மரம் சாய்ந்தபடி இறந்திருந்தது.
முன்கழுத்தின் மறைவுப்பகுதியில் ஆழமாகப் பற்கள் பதிந்திருந்தன. வேங்கைகளின் கடிதப்பிய எருது ஓடிச் சலித்து மரமணுகி சாய்ந்து பின்னர் இறந்திருக்கக்கூடும் எனக் கணித்தான். மெல்ல விரல்தொட்டு நீவி கண்மூடி கையெடுத்தான். ஊன். உண்பவர்களிடமிருந்து தப்பி உண்பவர்களுக்காகக் காத்திருக்கும் பெரும் ஊன் என்றொரு சொல் உள்ளே எழுந்து துணுக்குற்றான். உயிருள்ள ஆவினை வாஞ்சையுடன் நீவும் கரங்களுடன் மெல்ல உடலெங்கும் உள்ளங்கைகளால் நீவினான். சிறு ஊணுயிர்கள் வாய்கொள்ளுமளவு ஊனினை கடித்துப்பிய்த்து பின் மழை கொண்டபின் விட்டுச் சென்றிருந்த தடங்கள் உடலெங்கும் இருந்தன.
மீண்டும் காலை அவை திரும்பிவரக்கூடும். அல்லது நீர்மை வடிந்து குளிர்மட்டும் எஞ்சும் நள்ளிரவில் அவை திரும்பி வரக்கூடும். எண்ணங்கள் அதிர்ந்து நினைவில் அலைந்து நிகழ்வினுக்கு திரும்பிவரும்போது விரல்கள் இறந்த எருதின் திமிலில் தாளமிடுவது கண்டு துணுக்குற்று பின் நகர்ந்தான். ஆம், இதுவே எனக்கான பறைக்காக காத்திருக்கும் எருது. ஆம் இதுவே பசியற்ற என் ஆணவம் இளைப்பாறுவதற்கான இசை. ஆம் அதற்காகத்தான் எங்கோ பல்பட்டு இங்கே வந்து என் பாதை மறித்து விழிதிறந்து காத்திருக்கிறது இவ்வெருது என தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்.
கணு உடைந்த மூங்கில்களிலிருந்து இளம் நுனிகள் சில ஒடித்துவந்தான். பிறகு கால் இடறிய சிறு கற்களில் கூர் கொண்டிருந்த சில பொருக்கி கூரற்ற பிறகற்களில் உரசி இன்னும் கூர்மை கொண்டான். கூர்மையின்மை சிறுகூர்மைகளை இன்னும் கூர்செய்கிறது. வளைவற்ற பெருமரத்து வேர்களை நீர் நனைத்து உலராமல் பாறைகளின் அறைந்து திரித்தான். கூர்கற்கள் கொண்டு முன்னோர்களை ஆதிதெய்வங்களை வணங்கி எருதினைக் தோல்கிழித்தான்.
கைகள் அறையும் தொலைவினையும் கட்டும் தொலைவினையும் கணக்கிட்டு தோல்கிழித்து மண்ணிலிட்டு புரட்டினான். எருது இன்னும் கண்மூடி அமர்ந்திருந்தது. சிற்றோடை ஒன்றில் குருதி நீங்க தோலினை கழுவினான். மண்ணிலுட்டு மெல்லப்புரட்டி கரைந்த மணல் ஓடும் ஆழ நீர் குழைத்து சகதிகொண்டு தோலினைப்பூசினான். பின் இளம்மூங்கில்களை வளைத்து சகதிபூசிய எருதுத்தோல் சுற்றி நனைந்த வேர்களைக் கொண்டு கட்டினான். அரையில் நிறுத்தி கைவீசி அளந்தான். மனம் குவிந்து மீண்டும் சகதி பூசி சகதிகுழைத்து சகதிபூசினான். கூரற்ற இரு முனைமழுங்கிக் கூழாங்கற்களை உரசி எரியெழுப்பினான். மழையூறிய கிளைகள் நீர்பற்றி காற்றில் புகை எழுப்பின.
பெரு நடைக்குப்பிறகான சலிப்பு மூச்சுக்காற்றினை முற்றிலுமாக ஈரம் உலர்த்தியிருந்தது. இதழ்குவித்து எரிக்காக ஊதும் தோறும் வளி தடை பட்டு நெஞ்சடைத்தது. மீண்டும் பரல்களைப் பற்றி நீரூறிய இலைகளைக் கிளறி காய்ந்த சருகுகளைக் கண்டடைந்து கொண்ர்ந்து குவித்தான். எரி தீட்டும் கற்களை மரவுரியில் மேலும் மேலும் என சூடேற தோய்த்து பின் உரசினான். பொறி எழுந்தது. எழும்பொறி சருகுகளைப் பற்றும்முன் வெளியின் ஈரம் குடித்து சருகுகள் உள்மடிந்தன. மெல்ல மெல்ல எரியெழும் பசி உடலென சருகுகள் ஒன்றையொன்று இருகப்பற்றி எரியினைப் பற்றிக்கொண்டன. இரட்டைச் சருகுகள் மெல்லப்பற்றியபின் குவி சடசடவென நரம்புகளை ஒடித்துக்கொண்டு பரவத்த்தொடங்கியது. உடல்பதறி குவியினை பிறசருகுகள் அருகாவண்ணம் சுற்றிவட்டமிட்டான். வெறுங்கைகளால் ஈரம்குழப்பிய சகதிகொண்டு அணையிட்டான்.
தாளத்திரும்பாத எரி வானம் ஏறிப்பரந்தது. காலிணைப்பு உயரம் எழுந்தபின் மெல்ல அடங்கக்காத்திருந்தான். ஒடித்த மரத்தண்டங்களை சருகுகளின் மீது அடுக்கினான். சகதிபூசிய எருதின் தோலை மெல்லத்தீட்டி எரியில் வாட்டினான். ஈரமறிந்த சகதியினை எரி முதலில் ஈரத்தை முழுக்க உறிஞ்சி விண்ணெழுந்தது. பின் ஈரமற்ற தோலின் மீது கரிபடிந்தது. துடைத்து அடித்து நெகிழ்வித்து பின் வாட்டினான். இறுக்கிக் கட்டி விரல்சுழற்றி ஈரம் அற சகதி காய்ந்து உதிர்ந்து இடைவெளிகளை நிரப்பும்வரை ஆட்டி அசைத்து ஆடி அதிரவைத்து ஈரமிழக்கினான். ஈரம் அழிந்தபின் சதைக்கொழுப்புகள் உருகிய பின் குருதியும் காய்ந்தபின் தோல் பறையென அதிரத்தொடங்கியது. மழை நிறைந்த காட்டில் முளைத்துவரும் சிறு மகவென இசையெழுந்துவந்தது. அடித்து அதிரச்செய்தான். காயாத சிறு குருதி நினைவுகள் எரியுருகி நெருப்பில் சொட்டின. மீண்டும் எரி பெரும் பனையென மேலெழுந்து அமர்ந்தது. உப்புக்காற்று ஊறிய கரங்களை மண் துடைத்து எரியில் காட்டி மீண்டும் இறுகிய தோலறைந்தான். பறை தன் முதல் அதிர்வை அடைந்தது.
எரியும் தண்டங்களை விலக்கி எல்லை வளையத்தின் வெளியில் சகதி நனைத்து அணைத்து தூரத்து மரங்களுக்கு எறிந்தான். தனக்குள்ளான தணலடங்கும் சருகுகளுக்கான பறைகளை நாடியில் பொருத்தி காத்திருந்தான். விரல்கள் காற்றின் பறைகளுக்காக அலைந்து தோலில் மோதி அதிர்ந்து குதித்தன. சருகுகள் அடங்கிய பின்னரும் கனல் இருந்தது. குதிங்கால் கொண்டு சருகுகளைப் பரத்தி சகதிகளில் மிதித்தான். கனல் அடங்கியபிறகு தன் பாதைகள் தேறி மீண்டும் காட்டினுள் நடக்கத்தொடங்கினான்.
ஒத்திசைவின் அதிர்வுகளுக்கு ஊடாக இடைவெளிகளை எளிதாக கணிக்கமுடிந்தது. நனவிலியின் ஆழத்திலிருந்து இசைஞனின் உள்ளுணர்விலிருந்து திசைகள் துலங்கத்தொடங்கின. தூரத்து அருவியின் எதிரொலிப்புகளுக்கு ஈடாக தன் பறையை இடக்கையில் அறையும்போது நீரொலியெலுப்பி இங்கிருக்கிறேன் என்றது. பாதைகள் மாறி எதிர்திசை கண்டு சிம்பு அறைதலுக்கு எதிராக நதி அங்கில்லை இளையோளே என்றழைத்தது. மனமயக்கி செடிகளுக்குள் நடக்கும்போது சிற்றோடைகள் விலகச்சொல்லி எச்சரித்தன.
ரீங்காரங்களின் இசைவுகளுக்கு நடுவில் பாதையிருந்தது. தூரத்து மரங்கள் உரசும் இசைகளின் வழியாக சாரல் நுழைந்து வெளியேறி முகம்தொட்டு உரசி புன்னகைத்தது. கூடடையும் பறவைகள் திரும்பிவரும் பாதைகண்டு எதிர்வழியில் சென்றான். உளுத்த மரங்களை தயங்கிக்கடந்த பாதங்கள் மிதித்து பறையனை விண்ணுக்கழைத்தன. ஒடித்த சிறுசெடிகளின் பாதைகளின் வழியாக அதிர்வின் கணங்களைக் குடித்தபடி தொடர்ந்தான். பாதைகளற்ற அடர்மரங்களை அறுத்து நுழையும் வெறியாட்டு சாக்காட்டுப்பறையின் இசையில் எழுந்தது. பாதை தெளியும் தோறும் பாதங்கள் கொண்டாட்டம் கொண்டு தேங்குவதாக உணர்ந்தான்.
உள்ளங்கைக்கு மிக அருகில் அடையும் பொருள் இருக்கையில் கொண்டாடும் உடற்சோம்பல் பாதங்களை பின்னிழுக்கிறது. கணித்த திசைகள் துலங்கி அடைவின் பொற்கரங்கள் நீளும்போது பாதையின் அழகுகளை விழிகடக்காமல் உள்வாங்கி நிறைப்பதை அறிந்து அதிர்ந்து பின் புன்னகைத்தான். விரல்கள் தன் பாதையைத் தானே தேரும் குழவி மீன்களென இசைகளுக்குள் நீந்தியபடியிருந்தன. சிம்பு தன் ஆடலை பறையின் நெகிழ்வுகளுக்குள் தொலைத்து மீண்டு நுழைந்து வெளியேறியது.
அதிர்வுகள் அதிர்வில் இணைந்து இசையென்றாயின. ஒலிகள் மேலும் மேலுமென ஒலிகளை தனக்குள் இணைத்து ஒத்திசைவின் கணங்களுக்கு இழுத்துச் சென்றது. தூரத்து நீரோசையும் மிதிபடும் சருகோசையும் அசையும் இலையோசையும் அதிரும் தோலோசையும் வெளிவிடும் மூச்சும் ஒத்திசையும் கணத்திலிருந்து இசை உருவாகிவந்ததது. ஒத்திசைவின் கணங்களை அடைந்தபின்னர் நீரோசையினை கண்டறிவது எளிதாக இருந்தது. பாதைகள் துலங்கி வந்தன. பாதை மாறி திசை திரும்பும்போது ஒத்திசைவின் கணங்கள் தடுமாறி இசை நின்றது. பின் பறையன் தன் பறையினைத் திருப்பி ஒத்து எழும் திசை நோக்கி பாதைகளை அமைத்தான்.
அதிர்வுகள் கொண்டாடும் கணம்தோறும் நீரோசை எழுந்தபடியே இருந்தது. இன்னும் இன்னும் என முன் சென்றான். வேகம் வேகமென பறை எழுந்தது. சருகுகளின் அசைவுகளின் வழியாக ஆடல் நீண்டது. இருள் கவியும் நிலமெங்கும் பாதைகள் கால்கள் மட்டும் அறிந்த பேரொளியின் திசையென நீண்டன. தாள்மரக்கிளைகளை மிதித்து விண்ணெழுந்து இறங்கினான். உயர்மரங்களின் சிறுகாய்களை உதைத்து மரமேகினான். கவிந்த மரக்கிளைகளுக்கு ஊடாக வெண்ணிலவு வழிந்து எங்கோ தான் இருப்பதை அறிவித்திருந்தது.
விழிமயக்கென கண்கள் சுழல, இசையின் அதிர்வுமட்டுமே கைத்துணையென முன்னகர்ந்தான். எங்கொ சிவமூலிகையின் மணம் எழுந்தது. பிறகு இன்னெதென பிறித்தரியமுடியாத பல ஆயிரம் மலர்களின் மணம். பின்னர் மட்கிக்குவையும் இலைகளின் வீச்சம். சிற்றுயிர்கள் பதறி ஓடிஒளியும் புதர்களை ஓசைகளால் அறிந்தான். பேருயிர்கள் வழிவிட்டு ஒதுங்கி நின்று எரியும் அகலென விழிகளை நிறுத்தி வழியனுப்பின. அருகே மேலும் அருகேயென நீரோசை நெருங்கிக்கொண்டிருந்ததது. மண்குவைகளை கரைத்த அழிமுகப்பின் மணம். மெல்ல காற்றிலாடும் இலைகளின் பேரிரைச்சல். நீரில் ஆடும் வேர்களின் நிழலென ஓசை முன்வந்தது. மீன்கள் நீந்தும் அசைவின் ஒலி அதிரும் பறைகளின் இடைச்செவியென நிறைந்தது. இசை உருவாக்கும் மொழியெனவும் மொழி செவிகொண்டு உறைந்து நிற்கும் குழவியெனவும் மனம் கொண்டான்.
அதிர்ந்த மரங்கள் வழிவிட்டு நிலவொளி துலங்கும் திசையைக் தொலைவில் கண்டான். அருவியிறங்கும் மலையின் முதல் ஆற்றொழுக்கென மனம் உணர்ந்தது. அதிரும் பறையிலிருந்து கையெடுத்தான். இறுகப்பற்றுவதற்காக சுற்றியிருந்த நாரினை சுழல் இழுத்து தொங்கும் இலையென இடையின் ஓரத்தில் கட்டினான். கால்கொண்டு வேகம் கொண்டு நடக்கும்போது மரத்திலாடும் குரங்கென பறை இடையில் ஆடியது. காலெடுத்து ஓடி அருவி ஆறென முகம் மாற்றி ஓடித்திரியும் முதல் நதியின் கரை நின்றான். மனம் நிறைந்து ததும்பி ஒளியென்றாகிறது. நிலவொளி ஆடிப்பிம்பனெ அதிரும் பறையென நீரில் விழுந்து எழுந்த்து இரட்டைக்குளவியென முன் நின்றது. பெருந்தாலத்தில் எறியப்படும் பறவை உணவென ஓசையுடன் அருவி வீழ்ந்து நதியாகிக்கொண்டிருந்தது.
ஓடும் நதியின் தெளிவில் அசையாமல் நின்றிருக்கும் ஆடியென தன் முகத்தினை பறையன் கண்டான். பெரு நடையின் சோர்வும் உதிர்சருகுகளின் ஈரமும் ஒட்டியிருந்தது. ஓடும் நதியினை ஒரு குவை கையள்ளி பார்த்து நின்றிருந்தான். ஒற்றை சிறு துண்டு நிலவு. பேராடியின் ஒரு சிறு களவு. கைதுடைத்து மீண்டும் நதியில் விட்டான். முகத்தின் ஒரு பகுதி உருகி எங்கோ அலைந்து சென்றது. நிலவு பின் செல்வதாக நினைத்திருத்தல் துலக்கமாக இருந்தது. பின் கைகுவித்து சிறிது நீரள்ளி முத்தமிட்டான். வாய்குவித்து கொப்பளித்தான். மெல்ல விரல்களால் உள்ளங்கைகளால் ஓடும் நீரினை அறைந்தான். பெரும் பறை. இயற்கையின் நில்லாத அசைவிலாத தொடர்ந்து நகரும் பறை. ஒற்றை பெரும் நடன ஆடல்வல்லான் ஒரு கையை மட்டும் அருவியென நீட்டியறையும் பெரும்பறை.
இரு காலடி பின் வைத்து மணல் நீர்குடித்து உறைந்திருந்த தொலைவிற்கு வந்தான். சிறுபாத இடைவெளிகளுக்கு அப்பால் நில்லாமல் பெரும்பாறைகளை உருட்டும் ஒரு நதி. கொஞ்சம் பின்னடங்கி பெரு நதிகளைக் குடிக்கும் மணற்பாறைகள். அரையிலிருந்து அவிழ்த்து புலித்தோல் பறையை இரு கைகளின் ஏந்தினான். இறைவன் முன் இறைஞ்சி நிற்கும் புரவலரின் கைத்தாலம். கால்களால் சிறிது மண்குவித்து ஒருபக்கமாக சாய்த்து நிறுத்தினான். இதுவரை நிரவப்பட்ட அத்தனை மலைகளின் ஆடிபிம்பம். நதிக்கரையில் அமர்ந்து வீழருவியைப் பார்த்து அமர்ந்திருக்கும் பெருமுதியவனின் ஒற்றைத் தலை. ஒரு முறை தலைகுவித்து தன் பறையை வணங்கினான். பின்னர் ஓடிச்சென்று ஓடும் நீரில் பாய்ந்தான்.
இடப்புறமிருந்து வலப்புறம் பாயும் நதியில் குறுக்காக நீந்தியபடி இருந்தான். நீர்விசை அசைத்து அவனைப் புரட்டியது. நதியோட்டத்தின் முறிந்த கிளைகள், பேரருவியின் உயரத்திலிருந்து உடல்தொட விதிக்கப்பட்ட சிறுவெள்ளை மலர்கள் மோதிக்குலைத்தன. தொடர்ந்து நீந்தியபடியிருந்தான். ஓடும் நதியின் திசை நோக்கி பாயத்தொடங்கும் சிறுமீன்களென கண்கள் தனித்திருந்தன. நீண்ட கிளையொன்று மோதும்படி வர மூழ்கி சுழன்று மீண்டான். நதியோட்டத்தின் தப்பிய சிறு எறும்பென மிதந்து கிடந்தான். வேகத்தின் முகம் போர்வையெனத் தழுவி மூதாதையென வாழ்த்தி சிறுவனென விளையாடி தொடர்ந்தது. கன்னியைக் குலாவும் இளமைந்தனென நதிப்போக்கில் மிதந்து முத்தமிட்டான். ஊடலில் முகம்திருப்பும் இளைஞனென விசையெதிர்த்து கால்களிட்டான். அருகமர்ந்து கண்பார்த்துச் சிரிக்கும் வாழ்வோனென குறுக்கே கிடந்து கடந்து மீண்டுவந்தான். ஊழ்கத்திலமர்ந்து மரணம் காத்திருக்கும் முதியவனென மிதந்துகிடந்தான்.
இரவு குளிர்ந்து நீரென கிடந்ததன. வீழருவியின் விசை ஒன்றோடொன்று உரசி வெப்பம் கொண்டிருந்தது. நிலவொளியில் மறைந்திருக்கும் சூரியென குளிர்போர்வையின் உள்ளாக வெப்பம் ஓடிக்கொண்டிருந்தது. விரல்நுனிகள் நீர் ஊறி குருதி நிறம் கொள்ளும் வரை நதியாடிக்கிடந்தான். பின் மெல்லச் சலித்து மீண்டும் ஒரு நீள் மூச்சு கொண்டு நதியாழத்தின் வேர்வரை சென்று ஒற்றைக் கூழாங்கல் கண்டெடுத்து மீண்டான். நதியோட்டத்திலிருந்து விலகி கரையேறிறான். மூதாதையின் புன்னகையுடன் பறை காத்திருந்தது. கனிகளை இறைசாட்டும் பூசகனென பணிவுடன் கொண்டுவந்த கூழாங்கல்லை பறை முன் வைத்தான். எதற்காக இந்த நாடகத்தை நடிக்கிறோம் என்றொரு கேள்வி எழுந்தது. எங்கோ கிளம்பி எங்கோ அலைந்து இந்த நதிக்கரையின் தன்னை கொண்டுவந்து சேர்த்திருக்கும் விசையெதுவென அறியாமல் உளம் குமைந்தான். முதியவன் அருகமரும் இளையோனின் தயக்கத்துடன் மணல் ஆடையொட்ட பறையின் அருகமர்ந்தான். தூரத்து அருவி சென்று சேரும் மலை முகட்டில் அவள் நின்றிருந்தாள்.
எண்ணைப்பசையொட்டிய அன்னையின் கற்சிலையென அவள் உடல் ஒளிகொண்டிருந்தது. மஞ்சள் மலரால் கோர்த்த ஆடை அணிந்திருகக்கூடும் என கணித்தான். நிலவொளி முகம்துலங்காமல் உடல்பட்டு எதிரொளிப்பதாக இருந்தது. அவள் அங்கிருந்து சற்று கூர்ந்து நோக்கினால் தன்னை அறிந்துகொள்ளமுடியும் என்பதை உணர்ந்தான். ஆனால் அவள் உடலசைவுகளில் அதற்கான நோக்கு இல்லை.மொத்தக்காட்டினையும் தன் ஒருத்திக்க்கென உள்ளாக்கிக்கொண்ட நிமிர்வு இருந்தது. காட்டில் தனித்திருக்கும் பேரன்னைகள் சிற்றுயிர்கள் பேருயிர்கள் எல்லாம் கடந்து காடே தானாகிறார்கள் எனும் காவிய வரி நினைவுக்கு வந்து உடல் சிலிர்த்தான். தானும் ஒரு குளவியென மடியொட்டி கிடக்கும் கனவு எழுந்து வந்தது. முலையுறிஞ்சும் வேட்கை. அன்னையெனவும் துணைவியெனவும் எழும் உளமயக்கு. அருவியென வீழ்வது நதியென எழுவது போன்றதொரு வேட்கை. மயிர்க்கால்கள் கூச்செரிந்தன. உயிர்களற்ற வனாந்தரமென எழுந்த கனவு ஒற்றைப்பெண் அத்தனை வெற்றிடத்தையும் நிரப்பும் விந்தையென வியந்தான்.
ஒற்றைச்சொல் காப்பியங்களை உருவாக்கிவிடுகிறது. ஒற்றை அதிர்வு பறையினை காட்டிக்கொடுக்கிறது. ஒற்றைச் செடி காட்டினை தொடங்கிவைக்கிறது. வெற்றிடங்களை தானாகவே நிரப்புதல் கன்னிகளுக்கு வரமென அளிக்கப்பட்டிருக்கிறது. மண்குழைத்துப்பூசி காய்ந்த சுவர்களுக்குள் ஒரு பெண் முதற்காலடி எடுத்துவைத்து ஒற்றை அகலை நிரப்பும்போது இல்லமென சூல்கொள்கிறது. பெரும்போரில் தோற்று ஓடிய குலங்கள் ஒற்றைப்பெண் விதையிலிருந்து மீண்டுவந்து கருவறுத்திருக்கின்றன. அலைஅலையென சொற்கள் எழுந்தபடி இருந்தன. கையில் பறையில்லாபோது சொல்லற்று அலைந்ததை நினைத்துக்கொண்டான். இந்த ஊற்று காப்பியங்களை எழுதும் விரல்களை தரக்கூடும். ஓவியங்களின் மறைந்திருக்கும் பெருஞ்சொற்றொடர்கள், பெருங்காட்டினை எரிக்கும் சிற்றகலினை இந்த சொற்போக்கு கொண்டு வந்து தரக்கூடும்.
அவள் மலராடை அவிழ்த்து கால்வழியும் சிற்றொடையில் விட்டாள். எங்கென்று அறியாத வேகத்துடன் அது அருவியென்றாகி விழுந்தது. பின்னர் மலைமுகட்டின் உச்சியிலிருந்து கால்தூக்கி நீரில் பாய்ட்ந்தான். ஒரு கணம் விண்ணில் எழுந்து பின் ஆழத்தின் இரைச்சலுக்குள் நீர்கொத்திப்பறவையெனப் பாய்ந்தாள். உளம் அதிர்ந்து உடல் நடுங்கி கால் குழைந்து தரை அமர்ந்தான். பேரணங்கே என் அன்னையே என சொல் எழுந்தது.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...