ஆற்றுப்பாலத்தின் மலர்கள்

பின்னூட்டமொன்றை இடுக

இதோ
காலுக்கு அருகிலிருக்கும்
இந்த ஆழங்களிலிருந்துதான் மேலேறி
வந்தேன்

இதோ
கைக்கெட்டும் தொலைவிலிருக்கும்
நீரின் ஓட்டத்திலிருந்துதான்
கைப்பிடித்து  வந்தேன்

சுழற்பாதைகளில்
கீழிறங்கும் மனிதர்கள்
மேலேறும் மனிதர்களுடன் சேர்ந்துதான்
கட்டிடமே சுற்றி வரும்
மயக்கத்தை உருவாக்கினார்கள்

ஆழங்கள் அழகானவை
மேலிருந்து பார்க்கும்போது.
மேலேயே இருக்கும்போது.

O

ஒருமுறை முயற்சி செய்யச் சொல்லித்தாம்
அந்த மலரைக் கொடுத்தார்

ஒரே ஒரு முறை
ஒரு நாளைக்கு ஒரு முறை
ஒவ்வொரு தேவைக்கும்
ஒரு முறை.

மலர் விதை இடுகிறது
விதை மரம் இடுகிறது
மரம் மீண்டும் மலர் இடுகிறது

இன்றைய காட்டில் மலர்கள்
மூட
நினைத்துக்கொள்கிறேன்

கழிவோடையின் கரையில்
வைத்து
என்னிடம் அளிக்கப்பட்ட முதல் மலரை.

O

உண்மையில்
அடுத்தவருக்கு ஆறுதல்சொல்வதென்பது திரும்பி வர
முடியாத ஒரு புதிர்பாதை.

ஆற்றுப்பாலத்தின் மேல் நின்று
படகுக்கு வழிசொல்லும்
தற்கொலைக்காரனின் குரல்

அத்தனை தொலைவிலும்
அத்தனை அருகிலும் நிற்கும்
அதே ஆறு

படகுகள் கடந்து சொல்லும்
குரல் நின்றுவிடும்
ஆறு அங்கையே இருக்கும்.
ஆற்றுப்பாலமும்.

பிறகு யாரோ ஒருவர்
அங்கே நின்று மலர்களை வீசி
மெளனம் செலுத்துவார்.

முன்பொருமுறை பெய்த மழை

பின்னூட்டமொன்றை இடுக

இப்படித்தான் ஒருமுறை
வெற்று நெற்றியாக இருந்தது
யாரோ திருநீறு வைத்தார்கள்

இப்படித்தான் முன்பொருமுறை
பனிக்கால ஜன்னலருகில்
தனித்திருந்தேன்
யாரோ புன்னகைத்தார்கள்

இப்படித்தான் ஒருமுறை
யார்கையையோ பிடித்து
தார்ச்சாலை ஓரத்தில் அமரவேண்டியிருந்தது
யாரோ தண்ணீர் கொடுத்தார்கள்

இதுவரை நடந்தவை
எல்லாமே ஏற்கனவே நடந்தவை

கொஞ்ச நாள் காத்திருக்கலாம் தவறில்லை
எப்போதும் நடக்காத
ஒன்றிற்காக

O

பொறிகள் மழையெனப்பொழியும்
காலத்திலிருந்து
நீண்ட உறக்கத்திற்கான பனிக்காலத்திற்கு
கரடிகள் மெல்ல
அசைந்தாடி வருகின்றன

மகரந்தங்களின் பரந்த நிலத்தில்
பனிமூடியிருக்கிறது.
ஒரு நாள் வெயில் வரும்
எப்பொழுதாவது மலர் வரும்
கண்டிப்பாக மழை வரும்

வாசலுக்கு வெளியே
மரணச்செய்திகளின் தபால்காரன்
காத்திருக்கிறான்

O

திடீரெனப் பெய்யும் மழையில்
குழந்தைகள் இந்த நிலத்தில்
வந்து இறங்கக்கூடும்

பாணன் தன் ஆயுதங்களைத் துடைத்து
பைத்தியக்காரனிடம்
அளித்துவிட்டு திரும்பி நடக்கிறான்

செய்திகள் அற்ற நிலம்
அங்கே இருக்கிறது
எங்கோ தொலைவில்.

அடுத்த தப்படியில் அடைந்துவிடும் தொலைவில்.

குமரித்துறைவி : மழையீரம் பூக்கும் மலர்

2 பின்னூட்டங்கள்

சேர்ந்தார்போல் நூறுவார்த்தைகள் எழுதி சில மாதங்களாவது இருக்கும். புத்தகத்தைப்பற்றி எழுதி பல வருடங்கள் ஆகியிருக்கும் என நினைக்கிறேன். எதோ ஒரு அலைக்கழிப்பு அல்லது விலக்கம் அல்லது மொழியின் மீது கூர்மையின்மை.

சில நீண்ட வருடங்களாக தடைபட்ட பயணமும் கையருகில் வந்து தட்டிப்போக டிசம்பரில் ஒரு நிலையற்ற கொந்தளிப்பில் இருந்தேன். தொழிலுக்குச் சம்பந்தமே  இல்லாத புதிய நிரல்மொழியொன்றைக் கற்று எழுதி அழித்துக்கொண்டிருந்தேன். வழக்கம்போல கரிபீயன் கடற்கொள்ளை திரைப்பட வரிசையை முழுவதுமாக பார்த்து வைத்தேன்.  ஜாக்கிசான் திரைப்படங்கள், Buddycop வகையறா நகைச்சுவைத் திரைப்படங்கள், கடைசியாக காலவரிசைப்படி முழுவதுமாக ஜாக்கிசான் திரைப்படங்கள்.  ஆனாலும் எதோ ஒரு வெற்றிடம் மிச்சமிருந்தது. செவிகளில் இடைவிடாது வந்துவிழும் இல்லாத கடலின் பேரிரைச்சல்.

எதோ ஒரு புள்ளியில் ஜெயமோகன் வலைத்தளத்தை நீண்ட நாட்களாக வாசிக்கவில்லை என நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட ஆண்டுகளாக. கடைசியாக புனைவுக்களியாட்டு சிறுகதை வெளியாகும் காலத்தில் தொடர்ச்சியாக வாசித்துக்கொண்டிருந்தேன். வெண்முரசின் கண்ணி எங்கோ தொலைவில் அறுந்திருந்தது. நினைவு சரியானால், நீலம் தொடங்கப்பட்டதும்.  இடைவெளிக்கு பிறகு வெய்யோன், பன்னிருபடைக்களம் இரண்டும் தொடர்ச்சியாக வாசித்தது. அதன்பிறகு முழுக்க அறுந்த கண்ணி, புனைவுக்களியாட்டு வரிசையை மட்டும் முழுதும் வாசிக்க அமைந்தது.அதற்குப்பிறகு பூரண மவுனம்.  அவ்வப்போது தோன்றுவதுண்டு. முதற்கனலில் தொடங்கி முழுக்க வாசிக்கவேண்டும், அதைக்குறித்த விரிவான அல்லது கைக்கெட்டும் குறிப்புகளை எழுதிப்பார்ப்பதென்றும். நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமில்லை கதையே.

ஆக, மீண்டும் டிசம்பர் மத்திய வாரங்களில் ஜெயமோகன் வலைத்தளம். நவம்பர்-31ல் தொடங்கி பின்னோக்கி வாசித்துக்கொண்டிருந்தேன். கதைகள், கட்டுரைகள், கடிதங்கள். எண்ணவேகத்தில் எழுதமுடியாது, எழுதும் வேகத்தில் பேசமுடியாது எனும் பிரபல சொல் ஜெயமோகன் வலைத்தளத்தை வாசிக்கும்போதெல்லாம் நினைத்து புன்னகைக்க வைப்பது. எண்ண வேகத்தில் எழுத வாய்க்கப்பெற்ற ஒரு இயற்கை வரம்.

ஏப்ரல்-22, அவரது பிறந்த நாளன்று வெளியிட்டிருக்கிறார். பின்குறிப்பில் கொந்தளிப்பான மனநிலை குறித்தும், முன்னரே எழுதப்பட்ட குறு நாவல் அந்த நாளுடன் தொடர்புபடுத்திக் காரணமின்றி கொள்வதைப்பற்றியும் குறிப்புகள் வருகின்றன.  கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு, மறு ஆண்டின் ஜனவரி 25ல் அதைக் கையில் வைத்திருக்கிறேன். கிட்டத்தட்ட ஒப்புநோக்கும் ஒருவித மனநிலையில்.  இறுதி பகுதில் வரும் 
“களவாணிச்சிறுக்கி நம்மகிட்டே விளையாடியிருக்காடா… குறும்பியா இருந்தாலும் கனிவுள்ளவளாக்கும்டே” வரிகளுக்கு செண்பகராமன் போல நிலமறைந்து சிரிக்கும் மன நிலை எழுந்தது.

திருநெல்வேலி, மதுரை , நாகர்கோயில் எனக்கு பால்யத்துடன் தொடர்புகொண்ட நிலங்கள். திரும்பும் திசையெல்லாம் பெண்தெய்வங்கள். இசக்கி, பேச்சி, உச்சினிமாகாளி, மாரி, முப்புடாதி. இவர்களை முழுங்கிச்சிரிக்கும் நெகிழித்தாளில் திடீரென கடந்த இருபதாண்டுகளில்  முளைத்திருக்கும், அல்லது புதிய பெயர் சூட்டப்பட்டிருக்கும் ஸ்ரீலஸ்ரீ அருள்மிகு அம்பாள்கள். டவுசர்களை இழுத்துக்கொண்டு ஆள்காட்டி விரல் பிடித்து நடந்த காலம் முதல் மடித்துக்கட்டிய வேட்டியை தழைய விட்டு ஏசிக்காற்று முகத்திலறைய உள் நுழையும் , நோய்தொற்றுக்கு முந்தைய வருடாந்திர விடுமுறை நாட்கள் வரை அதே வண்ணத்தில் நிறைந்திருப்பவை, திருச்செந்தூர் முருகனும், குமரி அம்மனும் எனத்தோன்றுகிறது. இவர்களிடம் பக்தி குறித்த எதிர்பார்ப்பில்லை என்பது போன்ற ஒரு சகஜ நிலையில் இன்றும் இருக்க முடிகிறது.

முன்னெப்போதோ பாவாடைச்சட்டை அலங்காரத்தில் கன்னியாக்குமரி கோயிலில் மூக்குத்தி ஒளியில் குமரியன்னையைப் பார்த்து பள்ளிசெல்லும் சக சிறுமி என்றெண்ணிக்கொண்ட அதே பாவனைகள் இன்றும் அங்கே கிடைக்கின்றன.

பின்னட்டைக்குறிப்புகளை, பாராட்டுக்குறிப்புகளக் முதலில் வாசித்துவிட்டு புத்தகங்களைப் படிப்பது ஒரு அழகிய விளையாட்டு. நூறு சதவீத நகைச்சுவைக்கு சாத்தியமுள்ள விளையாட்டு.  குமரித்துறைவியின் பின்னொட்டுக்குறிப்பு, இது முழுக்க மங்கலம், மங்கலமன்றி வேறில்லை என்கிறது. சரி. முழு நகைச்சுவையாகத்தாகத்தான் இருந்தாகவேண்டும் இல்லையா?  சிறு பிழையின்றி, சிறு அமங்கலமின்றி, எதிர்சொல் ஒன்று எங்கும் அமையால் ஒரு படைப்பு நிறைவுருமா என்பது போன்ற கேள்விகள்.  குறைக்காகக் காத்திருக்கும் அல்லது அதைத் தேடி உள்நுழையும் ராயசத்தின், திவானின் நிலை எனத்தோன்றுகிறது.

கடிதமொன்றில் ஜெயமோகனே சொல்லியிருப்பது போல, “கதைகள் வாசிப்பவனுக்கு எதையும் சொல்வதில்லை, அவனது அகத்தில் ஏற்கனவே இருக்கும் அனுபவப்புள்ளிகளைத் தீண்டுகின்றன” என்பது எத்தனை மெய்.  எங்கெங்கோ தீண்டிச்செல்லும் நினைவுகள். முதல் பாகத்தில் செண்பகராமனின் குடிவழிக்குறிப்புகளில் தாண்டித்தாண்டி சென்று கொண்டிருந்தேன்.  பழைய ஏற்பாட்டு ஆதியாகமகத்தில் வரும் அவன் இவனுக்குப்பிறந்தான் எழு நூறு வருடம் வாழ்ந்து இவனைப்பெற்றான் வரிசை சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்தது.  நிகழ்வுக்கு முந்தைய போர்களைப் பற்றிய வரலாற்று மயக்கு புனைவு பகுதியும் அவ்வாறே. ஆனாலும் இருகாந்தங்களின் ஒரே துருவம் போல ஈர்த்தலும் விலக்கமும் ஒருங்கே நிகழும் ஒரு மாயம்.

அம்மை ஆரல்வாய்மொழிக்கு வந்துசேரும் கதையை செண்பகராமன் சொல்லத்தொடங்கியதுமே முழுக்க கதைக்குள் வந்துவிட்டேன் எனத்தோன்றுகிறது. கொண்டையத்தேவன் பல்லக்குத்திரைக்குப் பின்னால் கண்ட கிளி கொண்ட கரிச்சிறுமி இடத்தில் முதல் துணுக்குறல். சிறுமி பாதம் பணியும் தருணத்திலிருந்து அலையென முட்டிமோதி அதே இரவில் முடித்து, என்னையே கொஞ்சம் தொகுத்துக்கொண்டபோது, இதைப்பற்றி எழுதினால் மட்டுமே வெளியேற முடியும் எனத்தோன்றியது.

ஈர்க்கப்பட்ட புனைகதைகளுக்குள் நாம் என்னவாக நம்மை அடையாளம் கண்டுக்கொள்கிறோம் என்பதில் மிகப்பெரிய கூட்டு நனவிலி வேலை செய்கிறது என நம்புகிறேன். குமரித்துறைவி முழுவதும் பல பாத்திரங்களாக பொருத்திக்கொண்டேன் எனத்தோன்றுகிறது.  நம்பூதிரி “மகளாக வந்தவள் மங்கலமாக வீட்டைவிட்டுப்போகும் ஒரே  நாள்” எனச் சொல் எடுக்கும்போது செண்பகராமன் உணரும் திடுக்கிடல் ஒரு மூத்த தமையனுடையது. நினைகாலமெல்லாம் தெரிந்திருந்தாலும் அருகில் வரும்போது அர்த்தமற்ற பதட்டம் கொள்ளும் பொறுப்பான தமையன். முன்னதாக உள்ளீடற்ற காரணங்களைச் சொல்லி தமக்கையைப் பிரிதலை தள்ளிப்போடும் முதிரா இளைஞன். எல்லாம் துலங்கும்போதும், அடிவயிற்றில் சுரக்கும் பெயரற்ற அமிலம்.

“பித்தன் பேய்ச்சியை மணந்த ஊர், அரண்வாய்மொழி” எனும் வரியில் துணுக்குற்று நிறுத்திவிட்டு என்னைத் தொகுத்துக்கொள்ளவேண்டியிருந்தது. எழுதத்தொடங்கி அந்தரந்தில் நிற்கும் ரிபு நாவலில் கெளரிக்கு அளிக்கப்பட்ட ஊர் இது. கிட்டத்தட்ட இந்த வரியை  நான் பல ஆண்டுகளா விரித்தெடுக்க விரும்பும், முயற்சி செய்யும்  நாவலின் கதைச் சுருக்கம் எனலாம். கூடவே கொன்றை மரங்கள். சரக்கொன்றை மலர் தூவ ரயில் நிலைய இருக்கைகளில் பேசிக்கொண்டிருக்கும் சித்திரமொன்று இருக்கிறது. மகளாக, தங்கையாக, தோழியாக, அன்னையாக குமரியை பாத்திரங்கள் காணும்போதெல்லாம் நானும் உடன் காண்கிறேன். திருக்கல்யாண நிகழ்வுகளில் வல்லப கணபதி குறும்புகளில் குறும்புச் சிறுவனை மட்டுமே காணமுடிகிறது. சுந்தரேசரை பல்லாக்கில் ஆராட்டி மண்டபத்துள் கொண்டுவருகையில் ஒரே நேரத்தில், அதை அங்கே  சுமப்பவனாகவும்,  பால்யத்தில்  திருவிழா பார்க்கும் சிறுவனாகவும் , இதே ஆராட்டின் தற்கால நிகழ்வில், கூரிய எதிர் கருத்துக்கள் நண்பர்களுடன் பகிர்ந்த முதிர்ந்த இளைஞனாகவும் பல புள்ளிகளை தொட்டுத்தொட்டுச் செல்கிறேன்.

தொடக்கம் முதலே பூரண மங்கலம். அத்தனை அமங்கல வாய்ப்புகளிலும் , மழைக்கால வெக்கையின் குளிர்க்காற்றென பூத்து வரும் ஒரு சொற்றொடர். மதுரையிலிருந்து வரும் திருமுகத்தில், பேரரசனின் சீண்டும் சொல்லை நோக்கிச் சென்று, பூத்து மலரும் அரசியின் அன்பான வேண்டுகோள். பொய் சொல்ல வாய்ப்பிருக்கும் அரசனிடம் ஒரு மறுப்புச் சொல்.  திரித்துச் சொல்ல வாய்ப்பிருக்கும் கணியனுக்கு ஒரு எதிர்ச்சொல்.  

நம்பூதிரியிடம் தமக்கு வசதியான ஒரு சொல்லைப்பெற செண்பகராமன் செல்லும்போது,
“அஸ்வத்தாம ஹத: குஞ்சரக” வின் வெண்முரசுச் சொல் “இறந்தான் அஸ்வத்தாமன் எனும் யானை” நினைவுக்கு வந்தது. ஆனால் மனம் நிறைந்தவன் கைபிடித்துச் செல்லும் மகள் கொடுக்கும் மங்களம் எனப்பொருள்படும் உரையாடலில், உடல் சிலிர்ந்து நெஞ்சம் நிறைந்து விம்மக்கூடியது.  ஒவ்வொரு எதிர்ச்சொல்லுக்கும் ஒரு எதிர்ச்சொல் விழுந்து நேராக்கிக்கொண்டே செல்கிறது.

கடைசிவரையிலும் ஒரு எதிர் நிகழ்வை ஆளுள்ளம் எதிர்ப்பார்த்துக்கொண்டே இருந்தது எனத்தோன்றுகிறது. கள்ளழகர் திருவிழாவில் நிகழ்வது போல, ஒரு பானை காணாமலாவது. அல்லது புனைவின் சாத்தியங்களில் ஒரு யானை மதம் கொண்டு பாகனை உடல்முறிப்பது. அல்லது ஒரு இடறல்.  செண்பகாரமன் சங்கறுக்கும் சூளுரைக்கும்போது உண்மையிலேயே அதைவிரும்பினேன் என நினைக்கிறேன். மங்கல பலி.  முழுமங்கல நிகழ்வின் ஒரு குருதித்துளி. அரசன் காணாமல் ஆகும்போது ஒரு வயோதிக மரணம். வடக்குவாசல் செல்வியம்மன் கோயில் பலிபீடத்தில்  வெறுமை பீடித்த ஒரு தலை.

இல்லை இல்லையென மறுத்து பூத்துச் செல்கிறது நிறைவுகளின் மலர். இறுதியாக நிகழ்கிறது ஒரு தடுக்கல். பிழை. திவான் வந்து நகையாடவேண்டும், தளவாய் இழித்துரைக்கவேண்டும் என வேண்டுகிறது ஆழுள்ளம்.  மன்னிப்புக்கோருகிறார் திவான். பின்கதையொன்று வெட்டி வருகிறது. கணக்கை நேர்செய்கிறது. மழையீரத்தின் மலர் பூத்து மலர்கிறது மீண்டும்.

பூத்து பூத்து நெஞ்சு நிறைந்து மகிழ்வில் கண்ணில் நீர் கோர்த்து நாளாயிற்று எனத்தோன்கிறது. அல்லது வருடங்கள். அத்தனை கொந்தளிப்பும் அலைக்கழிப்பும் வெறுமையும் நீங்கி குளிர்க்காற்றில் தூரத்து மலைமுகடுகளை அதிகாலையில் பார்த்து நிற்கும் மனநிலை.  தரைதட்டிப்போன குறிப்புகளைத் தூசுதட்டலாம், ரிபுவை எழுதத்தொடரலாம், எதுவும் அமையாவிடில் வெண்முரசையாவது வாசித்து முடிக்கலாம்

சவப்பெட்டியின் ஆயிரம் திரைச்சீலைகள்

பின்னூட்டமொன்றை இடுக

உங்கள் துயரங்கள்
கோப்பையின்
நீர் போல
ஆழத்திற்குச் செல்வதாயிருக்க
உங்கள்
கோப்பைகளின் அளவுகள்
விரிவடைய வேண்டியிருக்கிறது

சிறிய கூண்டின்
சிறிய கம்பிகள்
வழியாக வெளியேற
முகமூடிகளை உரிதல்
நம்மைக் கொஞ்சம் எடையிழக்கச் செய்யக்கூடும்

பறப்பதற்கு பெரிய சிறகுகளை
விட
முக்கியம்
உங்களிடம் இருக்கும் சிறிய
இறகுகள்தான் என்பதை
நம்புவதில் என்ன கடினம்?

o

அலையும் ஆத்மாக்களின் மரணம்
குரூர நிம்மதியைத்
தருகிறது என்பதை
மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுவேன்

அம்புகள் குறிபார்க்கும்
வானத்தில்
அலைந்து திரியும்
பறவைகள்
நமது
வசதியான இருக்கைகளிலிருந்து
பார்க்கும்போது
அழகாகத்தான் இருக்கும்

பாதங்களை
நகர்த்தினால் 
தட்டுப்படக்கூடும்
மங்கலான குருதியில் நிற்பவர்களின்

கைதட்டலுக்காக
எவ்வளவுதான் சொடுக்குவான்
தெருக்கலைஞன்
தன் சாட்டையை?

o

இதுவரை ஏற்றுக்கொள்ளமுடியாத
அறிவுரைகளை
யாருமே சொன்னதில்லை

மூளையின் அடியாழத்திலிருந்து
பூத்து வரும்
பனியில்
நனைந்த மலரின் பரிசுத்தம்

கழுவப்பட்ட சிசுவின் செம்பாதத்தின்
வாசனை

தொடுவதற்கு மிருதுவான பட்டுத்துணியின் திரைச்சீலை

ஒரே ஒரு பிரச்சினை

வீடெங்கும் திரைச்சீலைகள்
அறையெங்கும் திரைச்சீலைகள்
சவப்பெட்டிகளில்
மரியாதை நிமித்தம்
மடித்து வைக்க
ஆயிரம் ஆயிரம் திரைச்சீலைகள்

ஒருபோதும் உடையாத குமிழிகள்

பின்னூட்டமொன்றை இடுக

திரும்பும்பாதையில்
எதிர்ப்படும் மரங்களைக்

கொத்திச்செல்லும் பறவை

அல்லது

புத்துணர்ச்சி முகாமிலிருந்து
திரும்பி வந்த
யானையின்
துதிக்கை நுனி
துழாவும் தார்ச்சாலை

அல்லது

மூச்சடக்கப்பட்டதுபோல்
நின்றுபோகும்
மேல்வீட்டுக்காரியின் அழுகுரல்

அல்லது

எல்லாம் சுகம். 
இனியொன்றுமில்லை எனும் சொற்களுக்கிடையேயான
இடைவெளி.

O

பழையகணக்குகளின் தீ சுடர்விடும்
கண்களை
மரணப்படுக்கைக்கு அருகிலமர்ந்து
பார்த்துக்கொண்டிருக்கும் 
மாலைகளில் 
மழை சத்தமில்லாமல் பெய்கிறது.

வருகிறவர்களின் எல்லாருக்கும் கொடுப்பதற்கு
எதையாவது தயார் செய்யச்சொல்லி
அவள்
என்னைப்பணித்துக்கொண்டேயிருக்கிறாள்

திடீரென இருள் கவிகிறது
ஏகப்பட்ட பெருமூச்சுகள்

சிலர்மட்டும்
நினைத்து நினைத்து தேம்ப விதிக்கப்பட்டவர்களாக
பணிக்குத்திரும்புகிறார்கள்.

O

சோப்புக்குமிழிகள் காற்றெங்கும்
பறக்கும் 
ஒரு பின்மதியத்தில்

நீரில்
இறங்கும்
குமிழி மட்டும் 
உடையாமல் நீண்ட நேரத்திற்கு ஆடிக்கொண்டிருக்கிறது

உடையாமல் காத்திருக்கும் குமிழிகளின் பதட்டம் 

நீயும் அறிவாய்தானே?

O

ரிங்மாஸ்டர்களின் யானை

பின்னூட்டமொன்றை இடுக

இன்றே இப்படம் கடைசி
போஸ்டர் ஒட்டப்படாத
சுழல்களுக்குள்
மீண்டும் மீண்டும் போய் நிற்கும்
நமது
தவ்ளூண்டு மனசை
எரி கொள்க

நீ எனக்கு பொருட்டே
இல்லை
என
மீண்டும் மீண்டும் சொல்லப்படும்
காலடிகளில் தாள் பணியும்
நமது
தவ்ளூண்டு கரங்களை
எரி கொள்க

ஒற்றைக்கால் யானைகளின்
வால் நுனியினும் சிறிய
ரிங் மாஸ்டர்களின்
தவ்ளூண்டு சாட்டைகளை
யானைகளே கொள்க.

O

முன்னூறு முறை மறுதலிக்கப்பட்டபின்
முதல்முறையாக
உங்களை விரும்புவதாக
சொல்லும்
குரல் அளிப்பது
காதலை
அல்ல
புதிய பதட்டத்தை

காத்திருக்கிறோம்
முன்னூற்றி ஓராவது முறையாக
மறுதலிக்கப்படுவதற்கு

இவர்கள்
ஒருபோதும் ஏமாற்றுவதேயில்லை.

O

ரகசிய யானைகளை இவர்கள்
பழக்கிக்கொண்டிருக்கிறார்கள்
படுக்கைக்குக் கீழே

துதிக்கைகள் மீது
தலையணைகள்
அடுக்கப்பட்டிருக்கின்றன
வாலின் மீது சிறுபோர்வை
முதுகில் அம்பாரியென
ஒரு
காபிக்கோப்பை

கண்திறக்க அஞ்சும் ஆனைகள்
ஒரு நாள்
பிளிறியபிறகு

அவை அறிவது
அம்பாரிகளின்
வெற்றிடத்தை

இனி துதிக்கைகளும்
வால் நுனிகளும்
அம்பாரி இறங்காது

என்பதை
ரிங் மாஸ்டர்கள் அறியப்போவதேயில்லை

நூற்றாண்டுகளுக்கும் பெய்யும் மழை

பின்னூட்டமொன்றை இடுக

ஒரு யானையை
நீங்கள் புகைபோட்டு பிடித்துவிடமுடியும்
என்பது
நீங்கள் நம்ப முடியாத  ஒரு ரகசியம்

அன்புக்கு தாழ் பணியும்
ஓநாய்களுக்கு
கொஞ்சம் சதை

மலை மீது ஆடும் சிறுமலருக்கு
ஒரு துளி நீர்

அல்லது

எல்லாருக்கும் அன்பளிப்பாக
ஒரு
கடைசி நம்பிக்கை

O

கடைசியாக ஒருமுறை
மழை பொழிகிறது
நீண்ட வருடங்களுக்குப்பிறகு

சில முத்தங்கள்
சில புகைப்படங்கள்
சில பழைய டைரிக்குறிப்புகள்

அனந்தா
உன்னை நான் முத்தமிடத்தான் விரும்பினேன்

ஆனால் இன்று
நீ இறக்கலாம் தவறில்லை

மழை நின்றுவிட்டது.
அனந்தன் நின்று கொண்டிருக்கிறான்
மழை விட்டபிறகு
சொட்டச்சொட்ட நனைந்தபடி

காயும் வரைக்கும்.
பலகோடி நூற்றாண்டுகளாய்
காயாத ஆடைகளுடன்

O

அறிபுனைகளின் பின்னால்
ஓடுகிறவர்களின் கதை
ஒன்று

ஒரு நாள் அவர்கள் கற்றுக்கொண்டார்கள்
எல்லா காலங்களையும்
மாற்றி எழுதமுடியுமென

எல்லா கண்ணீரும் மீண்டும் கண்களுக்குள்
புகுந்து கொள்ளும்
அவர்கள் திரும்பிப்போகமுடியும்
திருத்தி எழுதமுடியும்
மீண்டும் இழந்த
நாட்களை வாழமுடியும்
ஒருமுறை

இதுவரை நடந்ததெல்லாம்
அத்தனைபேரின் நினைவிலிருந்தும்
அழிந்துபோகும்.

ஒரு
பெருத்த நியாயம்

பயணத்தில் இருந்தவர்கள்
அத்தனை
நேரக்கோடுகளையும் நினைவில் வைத்திருக்கவேண்டும்

இந்த நியாயம்தான் அத்தனை
நேரக்கோடுகளையும்
பற்றவைக்கிறது

இல்லையா?

அலறும் குரல்களின் கதை

பின்னூட்டமொன்றை இடுக

ஒரு முத்தத்தைக் கடத்துவதற்கு
எவ்வளவு பிரயாசைப்படவேண்டியிருக்கிறது

உடல் எத்தனை
வெறுப்புடன் உன்னை நோக்கி
எறியப்படுகிறது

இந்த முகம்தான்
உன்னை
பழக்கப்பட்ட இடங்களிலிருந்து
விரட்டியது

இந்த முத்தம்தான் உன்னை
பழக்கமில்லாத இடங்களில்
அமர்ந்து
அழச் செய்தது

இந்தக்கரம்தான் உன்னை மறுதலித்து புன்னகைத்தது

திரும்பிச்செல்லும் பாதைகளில்தான்
எத்தனை பழைய முற்கள் காத்திருக்கின்றன
அறிவாயா தோழி?

O

அதே வேலையிலிருந்துதான் அவன்
தெறித்து ஓடியிருக்கிறான்

அதே காதலைத்தான் அவள்
கண்ணீருடன் நினைவு கூர்கிறாள்

அதே காட்டிற்குள்தான்
அவன் இன்னும்
நடந்துகொண்டிருக்கிறான்

ஒரு கோப்பை தேனீரில்
எல்லாம் மாறும்
சினிமாக்கள்
இப்பொழுதுதெல்லாம் திரைக்குக்கூட
வருவதில்லை தோழி

O

சிறுபிள்ளையின்
விளையாட்டில்
புண்பட்டு
மாரில் அடித்துக்கொண்டு கதறும்
இன்னொரு சிறுமி

தோத்துட்டே இருக்கேன்மா என சின்னவிசயத்தில்
புண்பட்ட சிறுவனின் குரல்

மறுபடியும் தோத்துட்டேன் எனும்
ஒரு பெண்மணியின்
குரல்

கதறல்களின் இரைச்சல் தாங்கமுடியாததாக
இருக்கிறது

குறிப்பாக சுவற்றில் பட்டு அறையெங்கும்
எதிரொலிக்கும்போது

குறிப்பாக சுவற்றிற்கு அந்தபக்கமும் இன்னொருவன் குரலற்று அமர்ந்திருக்கும்போது.

ரிபு – 7

1 பின்னூட்டம்

நந்து அறைக்குள் நுழைந்தபோது அறை சிதறிக்கிடந்தது. காலியான புட்டிகள் உருண்டிருந்தன. செய்தித்தாள் மீது பரத்தியிருந்த கிழங்குவறுவல் துண்டுகள் காற்றில் பறந்து அலங்கோலமாக இருந்தது. இன்னும் ஒரு புட்டி மிச்சமிருந்தது. இன்பா கதை சொல்பவனைப்போல கை நீட்டி அமர்ந்திருந்தான். சந்துரு கைகளை பின்னால் ஊன்றி கதை கேட்டுக்கொண்டிருந்தான். மீதி இருவரும் புன்னகையுடன் திரும்பி நந்துவைப்பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டார்கள். இடங்கள் மாறியிருந்தன. ஒரு இடவெளியைக் கண்டறிந்து நந்து போய் அமர்ந்தான். இன்பா தலை திருப்பி நந்துவைப்பார்த்து `அவன மிதிக்கணும்ல. அதான் சொல்லிட்ருக்கேன்` என்றான். எவனை எதற்காக என்ற கேள்விகள் தேவையில்லை. சொல்லத்தொடங்கப்ப்ட்ட கதைகள் அதன் பாதைகளைத் தானே கண்டறியட்டுமென அமைதியாக இருந்தான். இன்பா பதில் வராததில் குழம்பி சந்துரு பக்கம் திரும்பி மறுபடி `அவனை மிதிக்கணும்ல` என்றான்.

`மிதிப்போம் சரி. எதுக்காம்` சந்துரு சொல்லிவிட்டு நந்துவைப்பார்த்து மறுபடி சிரித்தான். `எங்கிட்டையே லெட்டர் குடுக்க வாரான் பாத்துக்க. அவட்ட குடுக்கச் சொல்லி. உன் ஆளுக்கு. நீயாரு நாம யாருன்னு தெரியும்ல அவனுக்கு. அப்புறமும் கொழுப்பு. அவன விட்டுட்டே இருக்கியல. அதான் ஆடுதான்` சொல்லிவிட்டு இன்பா ஆசுவாசமானான். சந்துரு தன் கதையைச் சொல்கிறவனுக்கும் தனக்கும் சம்பந்தமில்லாதவன் போல சுவற்றின் மூலையில் ஆடிக்கொண்டிருக்கும் சிலந்தியைப் பார்த்துக்கொண்டிருந்தான். சிலந்தி வலையை இன்னும் பெரிய பரப்புக்கு விரிப்பதைப்போல சுவரினை அளைந்து கொண்டிருந்தது. ஒரு நூலில் வலையிலிருந்து பழைய திரைப்பட நாயகர்களைப்போல ஆடியிறங்கி பின் மேலேறி சுவற்றில் கால்களை வைத்து உந்தி மறு முனையைத் தொட்டது. அங்கிருந்து மீண்டும் ஆடல் மறு முனை. நாங்கள் பார்த்துக்கொண்டிருக்குமே வலை தன் பரப்புகளை இழுத்து பெரிதாகிக்கொண்டேயிருந்தது. திடீரென சன்னதம் வந்தவன் போல ` அடிக்கிறது இல்ல. அடிச்சா நாலு நாளாவது கிடைல கிடக்கணும். இன்னும் காலேஜ்ல பண்ணாப்ல அவன் கிட்ட போய் பஞ்ச் பேசிட்டு வர்றது மறு நாளே அவன் வந்து திருகுத்தாளம் பண்றதுன்னு இருக்கக்கூடாது` என்றான் சந்துரு.

`லேய் பண்றதெல்லாம் செர்ரி நான் நாளைக்கு ராத்திரிக்கு ஊருக்குப்போவணும். அதுக்கு முன்னாடி பண்னுங்க. நானும் ரெண்டு போட்ருதேன். ஆபிஸ் கருமம் தத்தியாப்போவுது கை சுருசுருங்கு` என்றான் நந்து. `இங்கதான் சிஎஸ்ஸி வாரான் பய. கனராபேங்க் வாசல்ல வச்சு அடிப்போம். அல்லது ஆரெம்பி பைக்ஸ்டாண்ட்ல வச்சுப்போம்` இன்பா சிரித்தான். `பேங்கு அப்பா வந்தாலும் வருவாரு. இன்பா நீ அவன பேச்சுக்காட்டி பைக்ஸ்டாண்டு கூட்டி வா பாத்துப்போம்`என்றான் சந்துரு. `லேய் போதவாக்குல எதாவது பேசிட்டு நாளைக்கு விடிஞ்சதும் முருகான்னு மலந்துராதீங்கடே. நாளன்னிக்கு இழுத்தா நான் வரமுடியாதுபாத்துக்க` நந்து பெப்சியின் கடைசி சிப்பைக் கவிழ்த்துக்கொண்டான். இன்பா தரையைத்துடைப்பவ்ன்போல கண்ணை மூடியபடியே துளாவி சிப்ஸை எடுத்து போட்டுக்கொண்டான். `அடிச்சுட்டு ஊருக்கு ஓட்ற நாய்க்கு பேச்சப்பாத்தியா. நாங்க இங்கதாம்ல இருப்போம். அடிக்கிறொம் நாளைக்கு` என்றான். மிச்சம் இருந்த இருவரும் எல்லாவற்றுக்கும் எப்போதும் தயாராக இருக்கிறவர்கள். போதையின் கடைசி கணங்களில் இருந்தார்கள். கண்கள் சுருங்கி மின்விசிறியைப் பார்த்தபடி `இருக்கோம்ல. நாங்களும் வருவோம். நாளைக்குச் சாயங்காலம் என்ன` என்றான் ஒருவன்.

நால்வரும் ஒருவருக்கொருவர் முகம் பார்த்து சிரித்துக்கொண்டார்கள். பிறகு நந்துவைப்பார்த்து சிரித்தார்கள். `சரில கடைசி கட்டிங். எடு ஒரு சியர்ஸ்` என்றான் இன்பா. `முடிஞ்சிருச்சு மாப்ள இரு வர்றேன்` நந்து எழுந்தான். கதவைத் திறந்து பட்டாசலுக்கு வந்தான். குளிர்சாதனப்பெட்டி இருட்டில் பூனையைப்போல உறுமிக்கொண்டிருந்தது. இருளில் அதன் கசியும் ஒளியை நோக்கி நடந்து கதவைத்திறந்து குனிந்து சின்ன ஒரு பெப்சி கேனை எடுத்துக்கொண்டான். நிமிர்ந்த போது அங்கே அவள் நின்றிருந்தாள். கெளரி. `என்ன கொள்ளக்கூட்டத்தலைவனாட்டம் திட்டமெல்லாம் முடிஞ்சுதா` என்றாள். நந்துவிற்கு முழங்கை மயிர்கள் கூச்செறிந்தன. `ம். சும்மா பேசிட்டு இருந்தோம்` திரும்பி நடந்தான். `உங்க நம்பரென்ன` தன் அலைபேசியை கையில் பிடித்தபடி கேட்டாள். நோக்கியா. எண்களின் வெள்ளைக்கண்ணாடி இருளில் மின்னியது.

`எதுக்கு` தன் அலைபேசி வீட்டில் வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது.

` நாளைக்கு யார் கிடைல கிடக்குறாங்கன்னு கதை கேட்கணும்ல`

`ப்ரியாகிட்ட கேட்டுக்கங்க`

`ம்ம்க்கும். அவ உங்க பேச்சுல தலையிடக்கூடாதுன்னு புலம்பிகிட்டு இருந்தா. என் காதுல விழுந்தத வச்சுக்கேட்டா ஒட்டுக்கேட்டியான்னு அதுக்கு வேற மல்லுக்கு நிப்பா`

`ம்`

`என்ன ம். குடுக்க விருப்பமில்லைன்னா சொல்லுங்க. நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்கமாட்டேன்`

பள்ளியில் வாய்ப்பாடு ஒப்பிக்கும் சிறுவனைப்போல எண்களைச் சொன்னான். சொன்னபிறகு ஆங்கிலத்தில் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. `இப்ப மொபைல் இல்ல. ஒரு ஹாய் அனுப்பி விடுங்க. நாளைக்கு நம்பர சேவ் பண்ணிக்கிறேன்` என்றான். அவள் எதுவும் சொல்லாமல் திரும்பி பிரியாவின் அறைக்குச் சென்றாள். கதவருகில் `ம்` என்பதுபோல் கேட்டது. அல்லது பெருமூச்சாக இருக்கலாம். சிறிது நேரம் குழம்பி நின்றிருந்துவிட்டு சந்துருவின் அறைக்குவந்தான். மற்றவர்கள் அப்டியே படுத்திருக்க, சந்துரு மீதிக்குப்பைகளைச் சுருட்டி மூலையில் பிளாஸ்டிக் பையில் போட்டுவிட்டு படுக்கைகளைப் போட்டுக்கொண்டிருந்தான். ` நீ வரவரைக்கும் இருப்பாங்களா. முடிஞ்சுது. நீ கட்டில்ல படு. நான் இவனுக கூட படுத்துக்கிறேன்`

நந்து தரையில் படுத்திருந்தவர்களைத்தாண்டிப்போய் கட்டில் ஏறினான். மின்விசிறி சத்தமாக தலைக்குள் சுழன்றது. சந்துரு புரண்டு எதையோ முனகி அமைதியானான்.

o

வெயில் இறங்கிக்கொண்டிருந்தது. நந்து கண்ணன் கபே தகரக்கூரையின் கீழாக நின்று காபியைக் குடித்துக்கொண்டிருந்தான். கூப்பிடும் தூரத்தில் நாகர்கோயிலுக்கும் திருனெல்வேலிக்குமான பேருந்துகள் ஒன்றையொன்று எதிர்முட்டுவது போல் ஓடிவந்து பேருந்து நிலையத்திற்குள் வளைந்து திரும்பிக்கொண்டிருந்தது. கபே கனராபேங்க் மாடியிலிருக்கும் சிஎஸிக்கான வழிக்கும் பைக்ஸ்டாண்டுக்கான வழிக்கும் மிகச் சரியாக மத்தியில் இருந்தது. சுழல் படிக்கட்டுகளின் நெரிசல் தூரத்தில் தெரிந்தது . முந்தைய வகுப்பு முடிந்திருக்கவேண்டும். அடுத்த வகுப்பிற்கான நுழைகிறவர்களும் மேலிருந்து இறங்கி வருகிறாவர்களும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டும் விலகிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சென்றனர். இன்பா வந்திருக்கவில்லை. கிட்டு நிலையத்திற்கு வளையும் திருனெல்வேலி பெயரிட்ட பேருந்திலிருந்து ஓட்டத்திலிருந்து இறங்கி இருபுறமும் பார்த்துவிட்டு சாலையைக் கடந்து மறுபுறம் வந்தான். சாலையைக் கடந்தபிறகு நந்துவைப்பார்த்துவிட்டு சற்றுக்குழ்ம்பி கையசைப்பதா வேண்டாமா எனக்குழம்பினான். நந்து கிளாஸை கபே சுவற்றில் வைத்துவிட்டு கையசத்தான். கிட்டுவும் கையத்துவிட்டு அவனை நோக்கி தயங்கியபடியே வந்தான். நந்து காசைக்குடுத்துவிட்டு அவனை நோக்கிச் சென்றான்.

`என்னல இங்க நிக்க. உன் பசங்க இல்லாம, மெட்ராஸ்லதான இருக்க` என்றான் கிட்டு. `ஆமா லிவுக்கு வந்தேன். ஏர்வாடி போணும் அதான் நிக்கேன் . நீ எப்படில்ல இருக்க. என்ன பண்ற` நந்து சிந்தனையில்லாமல் வாயில் வந்ததைச் சொன்னான். இன்பா வரும்வரை பேச்சுக்குடுக்கவேண்டும். `ம். மாமா திருவனந்தபுரத்துல கூப்ட்றேன்னு சொல்லிருக்காரு. சும்மா இருக்கோம்னு அப்டியே கம்யூட்டர் கிளாஸ் போய்ட்டு இருக்கேன்` என்றான். நந்து அலுவலகக் கதைகளைச் சொல்லியய்படியே பைக்ஸ்டாண்ட் நோக்கி நடந்தான். கிட்டு பேசிக்கொண்டே கூடவந்தான்.`கிளாஸ் போய்க்கலாம் இப்ப என்ன. சும்மா சர்டிபிகேட்டுக்காக பண்றதுதான இதெல்லாம்`. நந்து பைக்ஸ்டாண்டில் மறைவான வெளியேறும் வழியில் ஒதுங்கி நின்று சுவற்றில் ஒற்றைக்கால் மடித்து நின்றான். கிட்டு எதிரில் கையாட்டி பேசிக்கொண்டிருந்தான். சராசாரிக்கு சற்று அதிகமான உயரம். அண்னாந்து பார்த்து பேசிக்கொண்டிருந்ததில் நந்துவிற்ர்கு கழுத்து இழுத்தது. நெளித்து கழுத்திற்குச் சொடக்கெடுத்து திரும்பும்போது இன்பாவும் சந்துருவும் பைக்கை ஸ்டாண்டிற்குள் நுழைத்தார்கள். விரல்களில் சொடக்கெடுத்து நந்து தயாரானான். பின்வாசல் வழியாக வெளியேறி எதற்கும் சம்பந்தமில்லாதவர்கள் போல இன்பாவும் சந்துருவும் வந்தார்கள். `இந்தா வந்துட்டாங்க்கல்ல பாண்டவனுகளுல்ல ரெண்டு பேரு. மிச்ச ரெண்டு பேரும் வரானுகளாமா` கிட்டு சொல்லிவிட்டு சுற்றிலும் பார்த்தான்.

பதட்டம் தெரிந்தது. நந்து எதுவும் அறியாதவன் போல கால்மாற்றி நின்றான். கைகாட்டினான். `என்னல மூத்துரசந்துல என்ன பண்ணுதிய` என்றான் இன்பா. `சார் வருவீங்கன்னு வெயிட் பண்றோம், மிச்ச ரெண்ட எங்க` என்றான் கிட்டு. `சார் பெரிய சூரரு இவருக்கு படையத்தான் கூட்டிவரணும். நான் ஒருத்தன் போதாதா` இன்பா சீண்டினான். கிட்டு மையமாப் புன்னகைத்தான். `என்ன இப்ப` என்றான். `ஒண்ணுமில்ல. சந்துரு ஆளு பின்னாடி சுத்துறத நிறுத்திக்க என்கிட்ட அவளுக்கு லெட்டர் குடுக்கிற சீன விட்ரு. அவ்ளொதான்` இன்பா கோணலாகச் சிரித்தான். கிட்டு ஒன்றும் சொல்லவில்லை. முத்துவும் மணியும் மறுபுறத்திலிருந்து வந்தார்கள். `என்னல சும்மா பேசிட்ருக்கிய` வந்த வேகத்தில் மணி துள்ளி கிட்டுவை அடித்தான். காதுக்கு சற்று மேல் அடிவிழுந்து கிட்டு நின்ற இடத்தில் தடுமாறினான். இன்பா இருவரின் தோளில் கைவைத்து எக்கி வயிற்றில் மிதித்தான். கிட்டு வயிற்றைப்பிடித்துக்கொண்டு மடங்கி அமர்ந்தான். ஐவரும் சுற்றிலிருந்து கை நீட்டி கன்னத்தில் மாற்றி மாற்றி அறைந்தார்க்ள். கிட்டு ஓடமுடியாமல் திமிறி சில அடிகளை விலக்கிவிட்டு பல அடிகளை தலையிலும் மறைத்திருந்த கைகளிலுமாக வாங்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். சந்துரு கண்ணைக்காட்ட இன்பா பேண்ட்பாக்கெட்டிலிருந்து அதை எடுத்தான். சைக்கிள் பல்சக்கரத்தை இரண்டாகவகுந்து கூர்முனைகளை மழுங்கடிட்த்து தேய்க்கப்பட்டிருந்த இரும்பு வளையம். இடைவெளியில் கைவிட்டு இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு ஓங்கி குத்தினான். முதல் குத்து ம்ணிக்கெட்டில் விழுந்தது. கிட்டு பதறி கையை உதற அடுத்த குத்து ஆளமாக கன்னத்தில் விழுந்தது. வாயிலிருந்து ரத்தம் கொட்டியது. ரத்தைத்தைக் காறித் துப்பும்போது இரண்டு பல்துண்டுகள் விழுந்தன. சந்துரு அதை வாங்கி தானும் ஒரு குத்து குத்தினான். காதில் மண்டையெலும்பில் ஆழமாக அடிவிழுந்த சப்தம் நங்கென்று கேட்டது. கிட்டு மல்லாந்து விழுந்தான். கண்காட்டிவிட்டு மணியும் முத்துவும் நடந்துசென்று திருனெல்வேலி செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டனர். சந்துரு ஓடிப்போய் பைக்கை எடுத்துவந்தான். இன்பாவும் நந்துவும் ஏறிக்கொண்டனர். பைக்கைக் கிளப்பி சந்துரு சாலையில் கலந்தான். வளைவெடுத்து பாதையைக் கடக்கும்போது நந்து திரும்பிப்பார்த்தான். கிட்டு அதே இடத்தில் மல்லாந்து கிடந்தான்.

`லே என்னல இப்படி அடிச்சுப்புட்டிய. செத்துகித்து போய்ருக்கப்போறான்ல. ` நந்து குரல் நடுங்கிக்கொண்டிருந்தது. ` நீ வாயவைக்காத. பல்லு ரெண்டு விழுந்துருக்கும். இனி மொளைக்காது. எங்ககிட்ட வச்சுக்கிட மாட்டான். நீ ஊருக்குப் போறவன் ஏங்கிடந்து சலம்புத`. சந்துரு நந்துவை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு வாரம்ல என்று கைகாட்டிவிட்டுச் சென்றான். நந்து உள்ளே போய் சட்டையைக் கழற்றி ரத்தம் இருக்கிறதா என சுற்றிப்பார்த்துவிட்டு இல்லையென்றதும் திருப்தியாகி வெளுப்புத்துணி மூட்டை மீது எறிந்துவிட்டு சாரம் மாற்றி வந்து மறு நாள் கிளம்புவதற்காக துணிகளை மடித்து வைத்தான்.

அலைபேசியை எட்டிப்பார்த்தான் அது சிணுங்கும் விளக்குகளின்றி உயிரற்றுக்கிடந்தது. ஒரு பகல் முடியப்போகிறது. இன்னும் அவளிடமிருந்து எந்த குறுஞ்செய்தியும் வந்திருக்கவில்லை. கையில் வைத்திருந்தால் அவள் எண்ணை வாங்கியிருக்கலாம். அவளாக அனுப்பும் வரை அவள் எண் தெரியாது. எதோ ஒரு தயக்கம் பிரியாவிடம் அவள் எண் கேட்பதிலிருந்து தடுத்தது. ஒரு இரவில் அறைகுறையாகப் பார்த்த பெண்ணைப்பற்றி ஏன் இவ்வளவு குழம்புகிறோம் என்று தோன்றியது. இது நிகழ்வது எதிர்பார்த்திருந்தோம் என்ற எண்ணம் வந்து பழைய எண்ணத்தில் மீது மோதியது. தலையை உலுக்கிக்கொண்டான். அடுக்களை சென்று வீட்டுத்தீவனங்கள் சிலவற்றை கவரில் கட்டி வந்து பெட்டியில் வைத்தான். மீண்டும் ஒருமுறை சுற்றிவந்து கொடியில் காய்ந்துகொண்டிருந்த துணிகளை மடித்து வைத்தான். வந்து படுத்து எப்போது உறங்கினோம் என்றறியாமல் உறங்கிப்போனான்.

o
நந்து எழுந்தபோது நன்றாக இருட்டியிருந்தது. பதறி மணி பார்த்தான். ஏழரை ஆகியிருந்தது. குருவாயூர் எக்ஸ்பிரஸுக்கு இன்னும் நேரமிருந்தது. ஆசுவாசமானான். போய் முகங்கழுவி அடுப்படிக்குப் போனான். கடுங்காப்பி இருந்தது. சுற்றிலும் பார்த்தான் பால் இல்லை. சுடவைத்துக் குடித்தான். ` நாந்தான் வரும்லால. நீயென்ன அடுப்புல நிக்கது. ஆம்பள அடுப்படில நிக்காதன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்` டிவியிலிருந்து அம்மா எழுந்துவந்தார். `பால் இல்ல பாத்துக்க. சரி வரட்டும் போடுவோம்னு இருந்தேன் நீபாட்டு வந்துட்ட` என்றார். ` சென்னைக்குப்ப்போய் தான் தான் போடவேண்டும் என்றாலும், கடையில்தான் குடிப்பேன் என்றாலும் என்ன சொன்னாலும் அவருக்கு குரல் உடைந்துவிடும். சமாதனப்படுத்துவது பெரும்பாடாகிவிடும். ஒண்ணும் சொல்லாமல் காபியை எடுத்துக்கொண்டு அடுக்களையைவிட்டு வெளியே வந்தான். குடித்துவிட்டு டம்ப்ளரை உணவுமேசையில் பாத்திரங்களுடன் வைத்துவிட்டு துண்டை எடுத்துக்கொண்டு குளிக்கப்போனான். வெந்நீர் சூடு இறங்கியிருந்தது. கன்னத்தில் ஓங்கி அடித்ததில் முழங்கைக்கு அருகே இருந்த உளைச்சலுக்கு இதமாக இருந்தது. குளித்துவிட்டு வெளியே வந்தான். `போன் கத்திட்டே இருந்துது போய் என்னானு பாரு` என்றார்.

வழக்கமான குறுஞ்செய்திகள். மாலை வணக்கங்கள். பல எண்களுக்கு நடுவே அவள் குறுஞ்செய்திகள் வரிசையாக இருந்தன. `ஹாய்` . `என்ன சில்லுண்டித்தனமெல்லாம் முடிஞ்சுதா` ` நாளைக்கு யார அடிக்கிறதா இருக்கீங்க` `பிசியா“ நான் கெளரி தெரியலையா“ஹலோ` . பதினைந்து நிமிடத்தில் வரிசையாக அனுப்பியிருந்தாள். `ஹாய். கிளம்பிகிட்டு இருக்கேன். ஊருக்கு` ஒரே குறுசெய்தியாக அனுப்பிவிட்டு கிளம்பினான். ஜீன்ஸுக்கு மாறினான். போட்டோவாகத் தொங்குகிறவர்கள். அருகிலிருக்கும் அம்மன் கோயில் குங்குமம். வரிசையாக ஆசீர்வாதங்கள். முடித்துவிட்டு மீண்டும் அலைபேசியையும் பேக்கையும் எடுத்துக்கொண்டான். அம்மாவிற்கு ஒரு வணக்கம். `வரேன்`. `ம். பாத்துப்போ`. தெருவில் இறங்கி நடந்தான். இருள் கவிந்திருந்தது. வழக்காமன நாய்கள் காலடி கேட்டு குரைத்தபடி வந்து முகம் பார்த்து ` நீயா. யாரோன்னு நினைச்சேன். போய்ட்டுவா போய்ட்டு லெட்டர் போடு` வகை முகக்குறிகளுடன் தலையாட்டிவிட்டு வீட்டுக்குள் போயின. சிரித்துக்கொண்டான். இருபது சொச்ச வருடங்களில் திருடர்க்ளையே பார்த்திராத குறு நகரத்திலேயே ஒதுக்குப்புறமான வீட்டுத்தொகைகளில் யாரைத்தேடி அலைகின்றன இந்த நாய்கள் என்று தோன்றியது. மீண்டும் அலைபேசியை எடுத்துப் பார்த்தான் ` அடேங்கப்பா. அதுக்குள்ள சென்னை ஊராவும், ஊர் வேறயாவும் மாறிடுச்சா` அவள்தான். அவளின் சீண்டல்கள் இரண்டே இரவுகளில் பழகி புன்னகைக்க வைத்தன. `அப்டியே சொல்லிப்பழகிட்டேன்` `ம். எப்படி போறீங்க பஸ்ஸா?` என்றாள் `இல்ல ட்ரெயின் . ஒம்பதரை குருவாயூர்` என்றான்.

`சரி கேட்டதுக்கு பதில் வர்லியே` `என்ன கேட்டீங்க? எதுக்கு பதில்வரல` `உங்க ரவுடித்தனம் பத்தி` `ம்ம். அதெல்லாம் முடிஞ்சுது. பல்லு பேந்துருக்கும். இனி எங்க வழில வரமாட்டான்` ` உங்க வழின்னா. ஊருக்குப்போற வழியா` `இல்ல. சந்துரு வழிக்கு` அனுப்பியபிறகு அவளுக்குத் தெரியுமா என்ற சந்தேகம் வந்தது ` எங்க அஞ்சு பேர் வழிக்கும்தான் அதுக்குத்தான அடிச்சது` இன்னொரு குறுஞ்செய்தியை அனுப்பினான். `ஹா ஹா. சந்துரு லவ் மேட்டர்தான. இதுகூடயாத் தெரியாம இருக்காங்க` என் குழப்பங்களை எங்கோ அமர்ந்து புரிந்துகொள்கிறாள் என்பது மேலும் குழப்பமாக இருந்தது ` பிரியா சொல்லிருக்கா. உங்க பாண்டவ பிரண்ட்சிப். லெட்டர் எழுதுறதுக்கு நீங்க குடுக்கிறதுக்கு அவர் இன்பா. லவ் பண்றதுக்கு மட்டும் சந்துரு. நல்லாருக்கு உங்க கதை.` என அதற்கும் பதில் வந்தது. ` நாளைக்கு எனக்கு ஒரு பிரச்சினைன்னா அவன் வருவான். இதெல்லாம் இருக்கிறதுதான` என்றான் நந்து. பதில் வரவில்லை. பார்க்கவில்லை எனத் தோன்றியது. முக்கியமான வேறு வேலையில் அவள் இருப்பாள். அல்லது அவள் அலைபேசியை வைத்து பேசிக்கொண்டிருப்பதைப் பிடிக்காத யாராவது அறைக்கு வந்திருக்கவேண்டும். அவளுக்கான காரணங்களை தான் ஏன் உருவாக்கிக்கொள்கிறோம் என்ற எண்ணம் வந்து புன்னகைத்தான்.

ரயில் நிலையத்தில் முன்பதிவற்ற பெட்டிக்கு ஒரு சீட்டு வாங்கிக்கொண்டு திறந்து கிடந்த பாதை வழியாகப்போய் ரயில் நிலையப்பெஞ்சில் அமர்ந்து கொண்டான். தூரத்தில் பாண்டவ கூடுகை ஆலமரம் கிளைபரப்பி ஹோவென நின்றிருந்தது. வனாந்தரத்தில் வேட்டையாடிவிட்டு இளைப்பாறும் மிருகமொன்றின் சித்திரம் அந்த மரத்தை எப்போது தூரத்திலிருந்து பார்த்தாலும் நினைவுக்கு வரும். சிறுவயதில் பள்ளி விட்டு வந்து ஊஞ்சலாடிக்கிடந்த காலத்திலிருந்து கல்லூரி மாலைகளில் கூடியமர்ந்து கதையளந்த காலங்கள் வரை ஆலமரம் அவர்கள் ஐவருக்கும் முக்கியமான இடமாக இருந்தது. சிறுவயதில் அவர்கள் அந்த ஆலமரத்தில் மரக்குரங்கு விளையாடுவார்கள். இறங்கினால் கீழே நின்று விரட்டுகிறவன் தொட்டுவிட்டால் தோல்வி. ஆலமர விழுதுகள் மண் தொடாமல் மரத்திலேயே இருந்தபடி கால் இறங்க வசதியானவை. பழுத்த மரங்களின் கிளைகள் தரைதொலைவிற்கே இணையாக வந்து திடிரென மேல் நோக்கி வளைகிறவை. வளைந்த மரங்களின் விழுதுகள் தரையைத் தொடுவதற்காக ஆடிக்கொண்டு கீழிறங்குபவை. விளையாட்டு மரங்கள் தொடர்ந்து மனிதக் கைபட்டு தரைதொடாத விழுதுகளை தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருப்பவை. சுண்டு விரல் பருமன் முதல் தொடை பருமன் வரை விதவிதமான விழுதுகள். இளமைக்கு அவர்கள் வந்தபோது மரவிளையாட்டுகள் முற்றிலுமாக ஊரிலேயே குறைந்திருந்தது. புதிய சிறுவர்கள் அந்த மரத்தை பாரம்பரியத்தின் படி தத்தெடுத்துக்கொள்ளவில்லை. அவர்களே மரத்தை தங்கள் மாலை சந்திப்புக்கள்மாக்கிக் கொண்டார்கள். சிறுவயதில் ஏறி விழுந்து கை உடைத்துக்கொண்ட மர நிழலில் இளமையில் சாய்ந்திருந்து உடல் மாற்றங்களைப் பற்றி பேசிக்கொண்டார்கள். சந்துரு தன் காதலைப் பற்றி நண்பர்களுக்கு அந்த மரத்தடியில் வைத்துதான் அறிவித்தான். பிற நண்பர்களும் தங்கள் வாழ்விலும் காதலென்று ஒன்று வந்தால் அந்த மரத்தடியில்தான் நண்பர்களுக்கு அறிவிப்போம் எனச் சொன்னார்கள். சாதாரண மரம் திடீரென வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக அன்றிலிருந்து மாறிப்போயிருந்தது.

`ட்ரெயின் எப்போ` குறுஞ்செய்தி ஒளிர்தது. `இன்னும் அர மணி நேரம் இருக்கு. வெறும் ஸ்டேசன்ல தேவுடு காத்துட்டு இருக்கேன்` என்றான். `எங்க`. `வேற எங்க பெஞ்சுலதான். ` `அந்த மஞ்சப்பூ மரம் இருக்குமே அந்த பெஞ்சா` அவள் குறுஞ்செய்திக்குப்பிறகுதான் அதைக் கவனித்தான். அந்த சிறு சிமெண்ட் மேடைக்கு அருகிலேயே சரக்கொன்றை மரமொன்று நின்றிருந்தது. மரமென்றும் சொல்லமுடியாமல் செடியென்றும் சொல்லமுடியாத உயரம். நிலையத்தின் குழல்விளக்கில் பொன்னென ஒளிரும் மலர்கள். பாதி உதிர்த்த கிளைகள். தனி இரவில் பெஞ்சில் அம்ர்ந்து பேசிக்கொண்டிருந்தால் அருகமர்ந்து தலையாட்டும் பாவனையில் அது கேட்டுக்கொண்டிருக்கூடும் என்று தோன்றியது. `அதேதான். சரக்கொன்றை. அரபுல இது பேர் கியார்சாம்பார் தெரியுமா` என்று சொன்னான். `மஞ்ச கலர்னா சாம்பார்ன்றதா… இதெல்லாம் ஏன் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க` என்று பதில் வந்தது. ` யாரோ எப்பவோ சொன்னது. ` `அரபுல சொல்லுறாங்கன்னா முஸ்லீமா?` என்றாள். `ஆமா. பேரு ஆயிஷா. வேண்டியவங்கதான்` என்றான். அனுப்பியபிறகு சொல்லியிருக்கக்கூடாதோ என்று தோன்றியது. அவள் அமைதியாகும் நேரங்களிலெல்லாம் அவன் அமைதியிழந்தான். அமைதியிழப்பதை உடல் நடுங்கத்தொடங்குவதை தொண்டை அடைப்பதை அவனே ஆச்சர்யமாக கவனித்தான். அவள் அங்கே வேறு வேலைகளில் பிசியாகியிருக்கக் கூடும். அல்லது எதையாவது அனுப்புவதற்காக எழுதி எழுதி அழித்துக்கொண்டிருக்கவேண்டும். ரயில் தண்டவாளங்கள் இரவில் தொடமுடியாத தூரத்திலிருந்து கிளம்பி காலடி நழுவி தொடமுடியாத தூரங்களுக்கு நீண்டு போய்க்கொண்டிருக்கிறது. ஆலமரங்கள் பகலெல்லாம் வெயிலாடிய தலையை காற்றில் அலைந்து உளைச்சலெடுத்த விழுதுகளை இளைப்பாறச் செய்கின்றன. சரக்கொன்றை மரத்தின் சீனப்பெயரில் ஒரு திருனெல்வேலி அண்ணாச்சியின் குரல் இருக்கிறது. சம்பந்தா சம்பந்தமில்லாத சொற்றொடர்கள் உள்ளே ஓடின. `லவ்வரா` ஒரே வார்த்தை அவளிடமிருந்து வந்தது. `இல்ல. ஸ்கூல் பிரண்டு. இப்ப எங்க இருக்காங்கன்னு கூட தெரியாது. இந்தவயசுக்கு அவங்கள்ள கல்யாணமே பண்ணி வச்சிருப்பாங்க` நீளமாக விளக்கவேண்டிய அவசியம் எழுந்தது கண்டு குழம்பி தலையை உலுக்கிக்கொண்டான். `ம். ரொம்பத்தான். குட் நைட்` இரவின் கடைசிக் குறுஞ்செய்தி என்ற அறிவிப்பு இது. ரயில் வருவதற்கு இன்னும் நேரமிருந்தது. அல்லது வந்து சென்றிருக்கலாம். அல்லது வராமலே ரத்தாகி வீட்டுக்குத் திருப்பிச் செல்லவேண்டியிருந்தால், அல்லது சந்துருவீட்டிற்கு செல்லவேண்டியிருந்தால், அங்கு கெளரிவரவேண்டியிருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. குட் நைட் அனுப்பி இந்த இரவை இப்படியே முடித்து வைக்கலாமா அல்லது எதாவது கேள்விகளை அனுப்பி பேச்சைத்தொடரலாமா எனக் குழம்பினான். பெண்கள் எப்பொழுதும் இருபுறமும் கூரான கத்திகளைத்தான் நம் கையில் கொடுக்கிறார்கள் எனத்தோன்றி சிரித்துக்கொண்டான். எறிந்தே ஆகவேண்டும். எந்தப்பாதி அவளைக் காயப்படுத்தும் எனச் சொல்லமுடியாது. பேச்சைத் தொடர்வதையும் பேச்சைத்தொடராதையும் இரண்டையுமே நாளைய குற்றச்சாட்டாக வைத்துக்கொள்ள முடியும். குட் நைட் என மீண்டும் மீண்டும் எழுதி எழுதி அனுப்பாமல் அழித்தான். `ட்ரெயின் ஏறிட்டீங்களா` மீண்டும் அவளிடமிருந்தே குறுஞ்செய்தி வந்தது. அவர்கள் எறியும் போது கைப்பிடி மட்டுமே இருக்கிறது. அதை நாம் பிடிக்கும்போதுதான் இருபுறமும் கத்திகளை வெளிப்படுத்துகிறது. ஏறியிருந்தாலும் அதனால்தான் பதில் சொல்லவில்லை என்றாகிவிடும். ஏறாவிடில் ஏன் பதில் இல்லை என்ற குற்றச் சாட்டு வரலாம். மீண்டும் கத்திகள். ` இன்னும் இல்ல. உங்க மரத்துக்கிட்ட பேசிக்கிட்ருக்கேன்` என்றான். `ம். எனக்கும் பேசப்பிடிக்கும். ஆனா நான் ட்ரெயின்ல போறதே அபூர்வம். அதுவும் எதிர்திசைல போகணும். எதிர்பகுதில பாத்தீங்களா பெஞ்சு தனியா மரம்தனியா பிரிச்சு பிரிச்சு நட்டு வச்சிருக்காங்க. மெட்ராஸ் போறதுலதான் மரமும் பெஞ்சும் ஒண்ணாக்கிடக்கு` என்றாள்.

அவள் சொன்னது சரிதான். இருபுறமும் மரம் நட்டவர்கள் வேறு வேறு ஆட்களாக இருக்கவேண்டும் எனத் தோன்றியது. மூன்று ஆதிகாலத்து பெஞ்சுகள் மூன்று மரங்கள். எதிர்புறத்தில் இரண்டு பெஞ்சுகளுக்கு நடுவில் ஒரு மரம் கணக்கில் நட்டிருந்தார்கள். இந்தபுறம் ஒரு பெஞ்சுக்கு அருகில் ஒரு மரம் என்ற கணக்கு. சிறு செடியாக வைக்கும்போதே பெஞ்சில் அமரப்போகிறவனை எண்ணுவதற்கு தனி மனம் வேண்டும். அது குழந்தையின் மனமாக இருக்கலாம். அல்லது பருவத்திலிருக்கும் பெண்ணின் மனம். பெண்ணின் மனம் மட்டும்தான் இப்படி காலாதீதங்களைக் கடந்து கண்னக்குகளை உருவாக்கும். காலாதீதங்களுக்கு கணக்குகளை நியாபகம் வைத்திருக்கிறவர்கள். அந்த் இருவர் கணவன் மனைவியாக இருக்கலாம். கணவன் எதிர்புறம் இடைவெளிகளில் மரம் வைக்க அவள் இந்தப்புறம் பெஞ்சுக்கொன்றாக மரங்களை நட்டிருக்கவேண்டும். அவர்களுக்கொரு குழந்தையிருந்தால் அது நடுவில் தண்டவாளத்தில் அமர்ந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்ற பதறினான். இல்லை. அந்தக்குழந்தை இந்தப்பெஞ்சுகளில் எதாவது ஒன்றில் அமர்ந்திருக்கக்கூடும். பெரும்பாலும் அம்மாவின் புறத்தில். அவள் கணக்குகள் இல்லாதவள் ஆயினும் பெஞ்சில் அமர்ந்திருக்கும் குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காக இடைவெளி விடாமல் சரக்கொன்றைச் செடியை பெஞ்சுக்கு அருகிலேயே நட்டிருக்கவேண்டும். அவன் இதுவரை சரக்கொன்றை மரமாக மஞ்சள் நிறத்தில்தான் பாத்திருக்கிறான் செடியாகப் பார்த்திருக்கவில்லை என்பது நியாபகம் வந்தது. கெளரியை முதல் முறைப் பார்த்தபோது அவளும் மஞ்சள் சுடிதாரில் இருந்தாள். பூத்துக்குலுங்கும் மரமாக. அவள் செடியாக இருந்த சிறுவயதுகள் எங்காவது புகைப்படத்தொகுப்பில் உறங்கிக்கொண்டிருக்கக்கூடும். `ம்ம்` என்றொரு குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தான். . `ட்ரெயின்ல தூங்கிருவீங்களா` ` பொதுவா தூக்கம் வராது. சீட்ல எங்கியாவது உக்காந்து அரத்தூக்கம் தூங்குவேன். முழிச்சிருந்தாலும் மெசேஜ் அனுப்ப முடியாது. டவர் விட்டுவிட்டு கிடைக்கும். மொபைல் சார்ஜ் போய்டும்னு ஆப் பண்ணிடுவேன்` என்றான். ` நீளமா பேசுறீங்க. மெசேஸ்க்கு கேட்கல. சும்மா கேட்டேன்` என்றாள். அமைதியாக இருந்தாள். அவளிடமிருந்தே மறுபடி `சரி இதுக்குமேலையும் மொபைல நோண்டுனா ஹாஸ்டல்ல கூட இருக்கதுக மேல விழுந்து பிறாண்டும். நானும் தூங்குறேன் இப்ப நெஜமாவே குட் நைட்` என்றாள். ` குட் நைட்` என்றான். அலைபேசியை அணைத்து மடித்து பெட்டியைத் திறந்து மடித்த துணிகளுக்கு நடுவில் பாதுகாப்பாக வைத்தான். சரக்கொன்றை மரத்தைத் திரும்பிப்பார்த்தான். இருளில் அது இன்னும் தலையாட்டிக்கொண்டிருந்தது. புன்னகத்தது போல் இருந்தது. அவனும் புன்னகைத்து தலையசைத்தான். காற்றில் ஒரு மலர் உதிர்ந்து அவன் தோள் பட்டையில் விழுந்தது.

ரிபு – 6

பின்னூட்டமொன்றை இடுக

பறையன் காட்டில் முதற்காலடி வைக்கும்போது இருள் தொடங்கியிருந்தது. நெல்லரியில் எறியப்பட்ட சரல்களேன காடு கூடடையும் பறவைகளில் அதிர்ந்து கொண்டிருந்தது. இல்லாத பறையை காற்றில் அறைந்து கொண்டிருந்தன விரல்கள். ஒவ்வொரு அதிர்வுக்கும் காடு நகர்ந்து மீண்டெழுந்தது. காட்டின் அதிர்வினை இறுக்கும் கயிற்றினைத் தேடி பறையன் கண்கள் அலைபாய்ந்தன. காடே பெரும் இசையக்கருவியென ஆடிக்கொண்டிருந்தது. சிறு செடிகள் அசைந்துஅருகமைந்த பெருமரங்களை அறைந்தன. பெருமரங்கள் அசைந்து இருளை அறைந்தது. இருள் பறவைகளை அறைந்து கூடுகளுக்குத் திருப்பியது. ஒலியின் வழியாகவே கூட்டினை அறியும் பறவைகள் தன் குஞ்சுகளை சொற்களால் தேடி அடைந்தன.

சருகுகள் உரசும் ஒலியும் இலைகள் உரசும் ஒலியும் ஒத்திசைவுடன் பேரிசையை உருவாக்குவதாக தனக்குள் நிறைந்தான். பழுத்த இலைகளை பாதம் கூசி ஒலி நிரப்பினான். மழைவண்டுகள் ரீங்காரம் அதிர்வுகளின் பெருங்கடலில் ஒற்றைக் கம்பிகொண்டு கட்டுவதான சித்திரம் தோன்றியது. கனவில் எழுந்த அதிர்வென இசைக்குறிப்புகள் உள்ளெ எழுந்து உடனே மறைந்தன.

நிகழ்தலின் கணத்திலும் நினைவின் கணத்திலும் ஒருங்கே நின்றிருந்தான். கால்கள் முன்பின்னாக ஆடலை நிகழ்த்தியபடியிருந்தன. இடக்கை காற்றின் பறையை ஏந்தியிருந்தது. வலக்கை நிறைந்த காற்றில் அறைந்தபடி இருந்தது. அதிர்வுகளை உடலே பழக்கத்தினால் அறிந்து அதிர்ந்துகொண்டிருந்தது. அடுத்து அடுத்து என விரல்கள் முன்சென்றன. பாதங்களில் தாளம் எழுந்தது. ஒற்றை ஒலிகளால் ஆன பெரும் இசை நிகழ்வென காடு அசைந்து கொண்டிருப்பதைக் கண்டான்.

சுவடுகளின் இடைவெளிகள் இசையின் ஒருங்கு கொண்டிருந்தன. வீசும் கைகளில் சிக்கும் இலைகளில் வெளிப்பறையின் தாளம் கண்டு அறைந்தபடி முன்சென்றான். பாதையெங்கும் சென்ற தடங்கள் முறிந்த கிளைகளாலும் உதிர்ந்த இலைகளாலும் விரிந்தது. உடலதிர்வு நடையைச் சோர்வுகொள்ளும் f தருணமெங்கும் காய்ந்து உடைந்து உளுத்து வீழ்ந்திருந்த தண்டுகளை அறைந்து பொடிசெய்தபடி நின்றிருந்தான். விலங்குத்தோலில் அறைந்து வறண்டிருந்த உள்ளங்கைகள் உழுத்த மரங்களின் தும்பு நிறம் கொண்டன. மரங்களை அறைவதற்கும் தும்புகளை கையிலிருந்து தட்டுவதற்கும் சீரான இடைவெளி இருந்தது. இடைவெளிகளில் தடாரி இசை கொண்டது. கைகள் சலிக்கும்போது பாதங்களாலும் பாதங்கள் சலிக்கும்போது கைகளாலும் அளந்தபடி காட்டின் உள்ளே உள்ளெ என்றறிந்தபடி சென்றுகொண்டிருந்தான். உதிர்மலர்கள் அறைந்த நீர்ப்பாதைகளின் இசைவில் குரவையிருந்தது.

இசையற்ற இசைவளிகளில் பாடல்களை பறையண் கண்டான். அதிரும் பறையில் எழுந்துவரும் பாடலை உடல் வருடும் அனலென உள்ளுக்குள் கேட்டான். நாப்பழக்கமற்ற காப்பியங்கள் சொற்களால எழாமல் இசையாகவே எழுந்தது. இல்லாத பறையறையும் ஒலிகளை நாவில் எழுப்பியபடியே முன்னகர்ந்தான். இடைவெளி விழும் கணங்களில் காடு அவன் காப்பியங்களை பறவைச்சிறகடிப்பில் மூங்கிலுரசும் மரகுகைகளில் கரைமோதும் நதியலைகளில் நீட்டிச்சென்றது. பாதம் இடறும் புள் கடித்த பழங்களை மரங்களை நோக்கி எறிந்தான். மரங்கள் பிற மரங்களை இலையுரசி இலையுரசி செய்தியனுப்ப வழிகாத்திருந்த மரங்கள் மறுசொல்லென மலர்களை அவன் மீது எறிந்தன. நகரும் விதையென காட்டினுள் அலைந்தபடி இருந்தவனை பாதங்களின் ஆடல் தரையொட்டி இணைத்திருந்தது.

சுழித்தோடும் சிற்றோடைகளில் கால் வீசி நடனம் கொண்டான். எதிர்த்தோடும் சுழிப்புகள் பதிலுக்கு நீரறைந்து வாழ்த்தின. சிறு சீண்டல்களில் வலித்து முகம் சுழித்து பின் மீண்டு புன்னகைக்கும் மகவென காடு இருந்தது. மகவின் ஒலியில் இசையறியும் அன்னையென இணைந்துகொண்டான். நண்பகல் மழை சகதியென காயாமல் கலந்து பாதங்களில் படிந்தது. உதறலில் கணமெங்கும் இசையைக் கண்டறிந்தான். உடல் சலித்து மரங்களில் அமர்ந்தபோதும் காடு அவனை ஒலியெழுப்பி அழைத்தது. சோர்வுற்ற மனத்தினை மலரெறிந்து உரசியது. கனிந்த பழங்கள் தலைவிழுந்து உடையாமல் நிலம் அடைந்தன. கனிகளை உறிஞ்சிச் சுவைத்தபின் விதைகளை சிற்றோடைகளில் எறிந்தான்.

தூரத்து பேரருவியின் இசை எல்லா திசைகளிலிருந்தும் எதிரொலிப்பதை உணர்ந்தான். உள நோக்கு குரல் தேறி தேடி அலைந்தும் பேரருவி தன் கண்மறை ஆட்டத்தை ஆடுவதாக இருந்தது. தொடுவான மயக்கென நீரோசை எங்கோ தூரத்தில் எழுந்தது. பாதை தேர்ந்து இசையெழுப்பி சலிப்புற நடந்தபின் அதே அருவி எதிர்திசையிலிருந்து ஒலியெழுப்பியது. கனவுக்குள் அலைபவனென மீண்டும் மீண்டும் வந்த இடத்திற்கே திரும்பத்திரும்ப வருவதாக உணர்ந்தான். ஆனாலும் சிறு மலர்கள், புதிய மரங்கள், தளிர் இலைகள் இல்லை நாங்கள் அன்னியர்கள் என்றன. ஏற்கனவே வந்த பாதையில் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டேயிருந்தான். பேரருவி அல்லது அழிமுக சுழல் அல்லது விசைகொண்டோடும் ஒரு நதியை அடைந்தால் அதன் ஊற்றுக்கண் தேறி அடையலாம் என அலைந்து உடல்மனம் சலித்தான்.

இருள் காட்டினை முழுதாக மூடும்முன்னதாக காடு கண்களுக்கு பழகியிருந்தது. பழகிய காடு வளர்ப்புப்பிராணியென நெகிழ்ந்து வழிவிட்டு குழைந்து முகம் பார்த்தது. நகரும் முன்னாத அடுத்த காலடியில் அருகணையும் சருகுகளை பசுந்தளிரென உடலில் அறிந்தான். பேரிசையின் அடுத்த அடிக்கென காத்திருக்கும் தண்டங்களை உளுத்த மரங்களை விரல் அறிந்திருந்தது. பாதவிரல் தொடும் கனிகள் இன்னதென அகம் உணர்ந்தது.அதிர்வின் இடைவெளிகளில் இசையின் பரிமாணங்கள் உருவாகிவருகின்றன. தூரத்து நதி ஒரு கனவில் எழுந்த ஒலியென எண் திசைகளிலும் எதிரொலிக்கிறது. பெருவீழ்வின் அருவி, பேராற்றலின் நதியை உருவாக்குகிறது. பாறைகளால் வழிகாட்டப்பட்ட நதி வழித்துணைக்கு அப்பாறையினையே இசையெழ உருட்டிச் செல்கிறது. பறையன் தன் காலடி சிறு கற்களை அப்படியே உருட்டியபடி இருந்தான். கூழாங்கற்கள் நதியின் பாதையை அறிந்தவை. நதியிலிருந்து பெருங்காட்டின் நடுப்பாதைக்கு வழிதவறி வந்துவிட்டவை. இவற்றை அதிரச் செய்வதன் மூலம் எங்கிருந்தோ இணையென நதி இசையெழுப்புவதை அறியக்கூடும். இவற்றை எறிதலின் மூலம் நதியின் பாதையில் காற்று இச்சிறுகற்களை கொண்டு செல்லக்கூடும். கனவிலிருந்து எழும் இசை மறு கனவில் தொடர்வதைப்போல.

வெறுங்கை அளையும் காற்று பறையின்மையின் சுமைகொண்டு கைஇணைப்புகளில் உளைச்சல் தந்தது. இன்மையின் வலி இருத்தலில் பெரிதாக வளர்ந்துகொண்டே செல்வதை பறையன் கண்டான். உளுத்தமரங்களின் உட்பாகங்களை உரித்தெடுத்து இலைகளால் கட்டி மெல்ல விரல்தட்டி ஓசை எழுப்பினான். அதிர்வற்று நீர் அளையும் கல்லென ஓசை கொண்டு மயங்கியது. பின் இலைகள் பொதிந்து உள்மடிந்தன. பருத்த தண்டங்களைக் குடைந்து பேரரச இலைகள் தைத்துக் கட்டினான். தோலறையும் பறையன்றி இலையறையும் பறை ஓசையின்றி உள்ளே அடங்கியபடி இருந்தது.

ஒரு கணு விட்டு மூன்றாம் கணுவில் மூங்கில் தண்டமொன்றை உடைத்தான். இருபுறம் துளையிட்டு சக்கைகளை ஊதி வெளியேற்றினான். பறவையின் இறகுகளை உள்ளடைத்துப் பொதிந்தான். நாகத் தோல் போர்த்தி துளைகளைக் கற்றதிரக் கட்டினான். ஆனாலும் விரல்களுக்குப் போதவில்லை. பேரதிர்வின் கரங்கள் உள்ளங்களை கொண்டு அறைய அச்சிறுகுழல் போதுமானதாய் இல்லை. இருளில் கண் தெரியாத தொலைவிற்கு அந்தக்குழலை எறிந்தான். எங்கோ சிறுவேர்களில் மோதி அந்தக்குழல் வீழ்ந்தது.

கைகள் அறிவதென்னபதை அறிந்திருந்தான். பெருவட்டத்தை விரும்பும் கரங்களுக்கு சிறு உறிகள் போதாதென்பது தெளிந்தது. இருள் மேலும் மேலும் என மூடி எழுந்தது. மேலும் மேலும் என கண்களைச் சுருக்கி தன் பறையை தேடித் திரிந்தான். தூரத்து கனவின் அருவியோசை எழுந்தபடியே இருந்தது. இசை அதிர்கிறது நதி அதிர்கிறது. இலை அதிர்கிறது. ஒத்திசைவின் கணங்களின் வழியே இங்கே எங்கோ எனது நதி ஒளிந்திருக்கிறது என்றொரு எண்ணம் எழுந்தது.

மழையொளிக்கீற்றென பெருநிலவு அடரிலைகளில் கரைந்து வழிந்திருந்தது. வழியும் நிலவொளி பட்டு எதிரொளிக்கும் இரு கண்களை தூரத்து மரத்தின் மறைவினில் கண்டான். மெல்ல மரங்களைச் சுற்றி நெருங்கிய போதும் அசையாமல் இருந்தது. அருகிருந்த நீண்ட மரக்கிளையை ஒடித்து அவற்றின் கண்ணருகே அசைத்தான். அசைவின்றி இருந்தது. நெற்றிப்பொட்டில் வைத்து அழுத்தியபோது கிளை மெல்ல நெகிழ்ந்து உடல் நுழைந்தது. எருது சற்று மரம் சாய்ந்தபடி இறந்திருந்தது.

முன்கழுத்தின் மறைவுப்பகுதியில் ஆழமாகப் பற்கள் பதிந்திருந்தன. வேங்கைகளின் கடிதப்பிய எருது ஓடிச் சலித்து மரமணுகி சாய்ந்து பின்னர் இறந்திருக்கக்கூடும் எனக் கணித்தான். மெல்ல விரல்தொட்டு நீவி கண்மூடி கையெடுத்தான். ஊன். உண்பவர்களிடமிருந்து தப்பி உண்பவர்களுக்காகக் காத்திருக்கும் பெரும் ஊன் என்றொரு சொல் உள்ளே எழுந்து துணுக்குற்றான். உயிருள்ள ஆவினை வாஞ்சையுடன் நீவும் கரங்களுடன் மெல்ல உடலெங்கும் உள்ளங்கைகளால் நீவினான். சிறு ஊணுயிர்கள் வாய்கொள்ளுமளவு ஊனினை கடித்துப்பிய்த்து பின் மழை கொண்டபின் விட்டுச் சென்றிருந்த தடங்கள் உடலெங்கும் இருந்தன.

மீண்டும் காலை அவை திரும்பிவரக்கூடும். அல்லது நீர்மை வடிந்து குளிர்மட்டும் எஞ்சும் நள்ளிரவில் அவை திரும்பி வரக்கூடும். எண்ணங்கள் அதிர்ந்து நினைவில் அலைந்து நிகழ்வினுக்கு திரும்பிவரும்போது விரல்கள் இறந்த எருதின் திமிலில் தாளமிடுவது கண்டு துணுக்குற்று பின் நகர்ந்தான். ஆம், இதுவே எனக்கான பறைக்காக காத்திருக்கும் எருது. ஆம் இதுவே பசியற்ற என் ஆணவம் இளைப்பாறுவதற்கான இசை. ஆம் அதற்காகத்தான் எங்கோ பல்பட்டு இங்கே வந்து என் பாதை மறித்து விழிதிறந்து காத்திருக்கிறது இவ்வெருது என தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான்.

கணு உடைந்த மூங்கில்களிலிருந்து இளம் நுனிகள் சில ஒடித்துவந்தான். பிறகு கால் இடறிய சிறு கற்களில் கூர் கொண்டிருந்த சில பொருக்கி கூரற்ற பிறகற்களில் உரசி இன்னும் கூர்மை கொண்டான். கூர்மையின்மை சிறுகூர்மைகளை இன்னும் கூர்செய்கிறது. வளைவற்ற பெருமரத்து வேர்களை நீர் நனைத்து உலராமல் பாறைகளின் அறைந்து திரித்தான். கூர்கற்கள் கொண்டு முன்னோர்களை ஆதிதெய்வங்களை வணங்கி எருதினைக் தோல்கிழித்தான்.

கைகள் அறையும் தொலைவினையும் கட்டும் தொலைவினையும் கணக்கிட்டு தோல்கிழித்து மண்ணிலிட்டு புரட்டினான். எருது இன்னும் கண்மூடி அமர்ந்திருந்தது. சிற்றோடை ஒன்றில் குருதி நீங்க தோலினை கழுவினான். மண்ணிலுட்டு மெல்லப்புரட்டி கரைந்த மணல் ஓடும் ஆழ நீர் குழைத்து சகதிகொண்டு தோலினைப்பூசினான். பின் இளம்மூங்கில்களை வளைத்து சகதிபூசிய எருதுத்தோல் சுற்றி நனைந்த வேர்களைக் கொண்டு கட்டினான். அரையில் நிறுத்தி கைவீசி அளந்தான். மனம் குவிந்து மீண்டும் சகதி பூசி சகதிகுழைத்து சகதிபூசினான். கூரற்ற இரு முனைமழுங்கிக் கூழாங்கற்களை உரசி எரியெழுப்பினான். மழையூறிய கிளைகள் நீர்பற்றி காற்றில் புகை எழுப்பின.

பெரு நடைக்குப்பிறகான சலிப்பு மூச்சுக்காற்றினை முற்றிலுமாக ஈரம் உலர்த்தியிருந்தது. இதழ்குவித்து எரிக்காக ஊதும் தோறும் வளி தடை பட்டு நெஞ்சடைத்தது. மீண்டும் பரல்களைப் பற்றி நீரூறிய இலைகளைக் கிளறி காய்ந்த சருகுகளைக் கண்டடைந்து கொண்ர்ந்து குவித்தான். எரி தீட்டும் கற்களை மரவுரியில் மேலும் மேலும் என சூடேற தோய்த்து பின் உரசினான். பொறி எழுந்தது. எழும்பொறி சருகுகளைப் பற்றும்முன் வெளியின் ஈரம் குடித்து சருகுகள் உள்மடிந்தன. மெல்ல மெல்ல எரியெழும் பசி உடலென சருகுகள் ஒன்றையொன்று இருகப்பற்றி எரியினைப் பற்றிக்கொண்டன. இரட்டைச் சருகுகள் மெல்லப்பற்றியபின் குவி சடசடவென நரம்புகளை ஒடித்துக்கொண்டு பரவத்த்தொடங்கியது. உடல்பதறி குவியினை பிறசருகுகள் அருகாவண்ணம் சுற்றிவட்டமிட்டான். வெறுங்கைகளால் ஈரம்குழப்பிய சகதிகொண்டு அணையிட்டான்.

தாளத்திரும்பாத எரி வானம் ஏறிப்பரந்தது. காலிணைப்பு உயரம் எழுந்தபின் மெல்ல அடங்கக்காத்திருந்தான். ஒடித்த மரத்தண்டங்களை சருகுகளின் மீது அடுக்கினான். சகதிபூசிய எருதின் தோலை மெல்லத்தீட்டி எரியில் வாட்டினான். ஈரமறிந்த சகதியினை எரி முதலில் ஈரத்தை முழுக்க உறிஞ்சி விண்ணெழுந்தது. பின் ஈரமற்ற தோலின் மீது கரிபடிந்தது. துடைத்து அடித்து நெகிழ்வித்து பின் வாட்டினான். இறுக்கிக் கட்டி விரல்சுழற்றி ஈரம் அற சகதி காய்ந்து உதிர்ந்து இடைவெளிகளை நிரப்பும்வரை ஆட்டி அசைத்து ஆடி அதிரவைத்து ஈரமிழக்கினான். ஈரம் அழிந்தபின் சதைக்கொழுப்புகள் உருகிய பின் குருதியும் காய்ந்தபின் தோல் பறையென அதிரத்தொடங்கியது. மழை நிறைந்த காட்டில் முளைத்துவரும் சிறு மகவென இசையெழுந்துவந்தது. அடித்து அதிரச்செய்தான். காயாத சிறு குருதி நினைவுகள் எரியுருகி நெருப்பில் சொட்டின. மீண்டும் எரி பெரும் பனையென மேலெழுந்து அமர்ந்தது. உப்புக்காற்று ஊறிய கரங்களை மண் துடைத்து எரியில் காட்டி மீண்டும் இறுகிய தோலறைந்தான். பறை தன் முதல் அதிர்வை அடைந்தது.

எரியும் தண்டங்களை விலக்கி எல்லை வளையத்தின் வெளியில் சகதி நனைத்து அணைத்து தூரத்து மரங்களுக்கு எறிந்தான். தனக்குள்ளான தணலடங்கும் சருகுகளுக்கான பறைகளை நாடியில் பொருத்தி காத்திருந்தான். விரல்கள் காற்றின் பறைகளுக்காக அலைந்து தோலில் மோதி அதிர்ந்து குதித்தன. சருகுகள் அடங்கிய பின்னரும் கனல் இருந்தது. குதிங்கால் கொண்டு சருகுகளைப் பரத்தி சகதிகளில் மிதித்தான். கனல் அடங்கியபிறகு தன் பாதைகள் தேறி மீண்டும் காட்டினுள் நடக்கத்தொடங்கினான்.

ஒத்திசைவின் அதிர்வுகளுக்கு ஊடாக இடைவெளிகளை எளிதாக கணிக்கமுடிந்தது. நனவிலியின் ஆழத்திலிருந்து இசைஞனின் உள்ளுணர்விலிருந்து திசைகள் துலங்கத்தொடங்கின. தூரத்து அருவியின் எதிரொலிப்புகளுக்கு ஈடாக தன் பறையை இடக்கையில் அறையும்போது நீரொலியெலுப்பி இங்கிருக்கிறேன் என்றது. பாதைகள் மாறி எதிர்திசை கண்டு சிம்பு அறைதலுக்கு எதிராக நதி அங்கில்லை இளையோளே என்றழைத்தது. மனமயக்கி செடிகளுக்குள் நடக்கும்போது சிற்றோடைகள் விலகச்சொல்லி எச்சரித்தன.

ரீங்காரங்களின் இசைவுகளுக்கு நடுவில் பாதையிருந்தது. தூரத்து மரங்கள் உரசும் இசைகளின் வழியாக சாரல் நுழைந்து வெளியேறி முகம்தொட்டு உரசி புன்னகைத்தது. கூடடையும் பறவைகள் திரும்பிவரும் பாதைகண்டு எதிர்வழியில் சென்றான். உளுத்த மரங்களை தயங்கிக்கடந்த பாதங்கள் மிதித்து பறையனை விண்ணுக்கழைத்தன. ஒடித்த சிறுசெடிகளின் பாதைகளின் வழியாக அதிர்வின் கணங்களைக் குடித்தபடி தொடர்ந்தான். பாதைகளற்ற அடர்மரங்களை அறுத்து நுழையும் வெறியாட்டு சாக்காட்டுப்பறையின் இசையில் எழுந்தது. பாதை தெளியும் தோறும் பாதங்கள் கொண்டாட்டம் கொண்டு தேங்குவதாக உணர்ந்தான்.

உள்ளங்கைக்கு மிக அருகில் அடையும் பொருள் இருக்கையில் கொண்டாடும் உடற்சோம்பல் பாதங்களை பின்னிழுக்கிறது. கணித்த திசைகள் துலங்கி அடைவின் பொற்கரங்கள் நீளும்போது பாதையின் அழகுகளை விழிகடக்காமல் உள்வாங்கி நிறைப்பதை அறிந்து அதிர்ந்து பின் புன்னகைத்தான். விரல்கள் தன் பாதையைத் தானே தேரும் குழவி மீன்களென இசைகளுக்குள் நீந்தியபடியிருந்தன. சிம்பு தன் ஆடலை பறையின் நெகிழ்வுகளுக்குள் தொலைத்து மீண்டு நுழைந்து வெளியேறியது.

அதிர்வுகள் அதிர்வில் இணைந்து இசையென்றாயின. ஒலிகள் மேலும் மேலுமென ஒலிகளை தனக்குள் இணைத்து ஒத்திசைவின் கணங்களுக்கு இழுத்துச் சென்றது. தூரத்து நீரோசையும் மிதிபடும் சருகோசையும் அசையும் இலையோசையும் அதிரும் தோலோசையும் வெளிவிடும் மூச்சும் ஒத்திசையும் கணத்திலிருந்து இசை உருவாகிவந்ததது. ஒத்திசைவின் கணங்களை அடைந்தபின்னர் நீரோசையினை கண்டறிவது எளிதாக இருந்தது. பாதைகள் துலங்கி வந்தன. பாதை மாறி திசை திரும்பும்போது ஒத்திசைவின் கணங்கள் தடுமாறி இசை நின்றது. பின் பறையன் தன் பறையினைத் திருப்பி ஒத்து எழும் திசை நோக்கி பாதைகளை அமைத்தான்.

அதிர்வுகள் கொண்டாடும் கணம்தோறும் நீரோசை எழுந்தபடியே இருந்தது. இன்னும் இன்னும் என முன் சென்றான். வேகம் வேகமென பறை எழுந்தது. சருகுகளின் அசைவுகளின் வழியாக ஆடல் நீண்டது. இருள் கவியும் நிலமெங்கும் பாதைகள் கால்கள் மட்டும் அறிந்த பேரொளியின் திசையென நீண்டன. தாள்மரக்கிளைகளை மிதித்து விண்ணெழுந்து இறங்கினான். உயர்மரங்களின் சிறுகாய்களை உதைத்து மரமேகினான். கவிந்த மரக்கிளைகளுக்கு ஊடாக வெண்ணிலவு வழிந்து எங்கோ தான் இருப்பதை அறிவித்திருந்தது.

விழிமயக்கென கண்கள் சுழல, இசையின் அதிர்வுமட்டுமே கைத்துணையென முன்னகர்ந்தான். எங்கொ சிவமூலிகையின் மணம் எழுந்தது. பிறகு இன்னெதென பிறித்தரியமுடியாத பல ஆயிரம் மலர்களின் மணம். பின்னர் மட்கிக்குவையும் இலைகளின் வீச்சம். சிற்றுயிர்கள் பதறி ஓடிஒளியும் புதர்களை ஓசைகளால் அறிந்தான். பேருயிர்கள் வழிவிட்டு ஒதுங்கி நின்று எரியும் அகலென விழிகளை நிறுத்தி வழியனுப்பின. அருகே மேலும் அருகேயென நீரோசை நெருங்கிக்கொண்டிருந்ததது. மண்குவைகளை கரைத்த அழிமுகப்பின் மணம். மெல்ல காற்றிலாடும் இலைகளின் பேரிரைச்சல். நீரில் ஆடும் வேர்களின் நிழலென ஓசை முன்வந்தது. மீன்கள் நீந்தும் அசைவின் ஒலி அதிரும் பறைகளின் இடைச்செவியென நிறைந்தது. இசை உருவாக்கும் மொழியெனவும் மொழி செவிகொண்டு உறைந்து நிற்கும் குழவியெனவும் மனம் கொண்டான்.

அதிர்ந்த மரங்கள் வழிவிட்டு நிலவொளி துலங்கும் திசையைக் தொலைவில் கண்டான். அருவியிறங்கும் மலையின் முதல் ஆற்றொழுக்கென மனம் உணர்ந்தது. அதிரும் பறையிலிருந்து கையெடுத்தான். இறுகப்பற்றுவதற்காக சுற்றியிருந்த நாரினை சுழல் இழுத்து தொங்கும் இலையென இடையின் ஓரத்தில் கட்டினான். கால்கொண்டு வேகம் கொண்டு நடக்கும்போது மரத்திலாடும் குரங்கென பறை இடையில் ஆடியது. காலெடுத்து ஓடி அருவி ஆறென முகம் மாற்றி ஓடித்திரியும் முதல் நதியின் கரை நின்றான். மனம் நிறைந்து ததும்பி ஒளியென்றாகிறது. நிலவொளி ஆடிப்பிம்பனெ அதிரும் பறையென நீரில் விழுந்து எழுந்த்து இரட்டைக்குளவியென முன் நின்றது. பெருந்தாலத்தில் எறியப்படும் பறவை உணவென ஓசையுடன் அருவி வீழ்ந்து நதியாகிக்கொண்டிருந்தது.

ஓடும் நதியின் தெளிவில் அசையாமல் நின்றிருக்கும் ஆடியென தன் முகத்தினை பறையன் கண்டான். பெரு நடையின் சோர்வும் உதிர்சருகுகளின் ஈரமும் ஒட்டியிருந்தது. ஓடும் நதியினை ஒரு குவை கையள்ளி பார்த்து நின்றிருந்தான். ஒற்றை சிறு துண்டு நிலவு. பேராடியின் ஒரு சிறு களவு. கைதுடைத்து மீண்டும் நதியில் விட்டான். முகத்தின் ஒரு பகுதி உருகி எங்கோ அலைந்து சென்றது. நிலவு பின் செல்வதாக நினைத்திருத்தல் துலக்கமாக இருந்தது. பின் கைகுவித்து சிறிது நீரள்ளி முத்தமிட்டான். வாய்குவித்து கொப்பளித்தான். மெல்ல விரல்களால் உள்ளங்கைகளால் ஓடும் நீரினை அறைந்தான். பெரும் பறை. இயற்கையின் நில்லாத அசைவிலாத தொடர்ந்து நகரும் பறை. ஒற்றை பெரும் நடன ஆடல்வல்லான் ஒரு கையை மட்டும் அருவியென நீட்டியறையும் பெரும்பறை.

இரு காலடி பின் வைத்து மணல் நீர்குடித்து உறைந்திருந்த தொலைவிற்கு வந்தான். சிறுபாத இடைவெளிகளுக்கு அப்பால் நில்லாமல் பெரும்பாறைகளை உருட்டும் ஒரு நதி. கொஞ்சம் பின்னடங்கி பெரு நதிகளைக் குடிக்கும் மணற்பாறைகள். அரையிலிருந்து அவிழ்த்து புலித்தோல் பறையை இரு கைகளின் ஏந்தினான். இறைவன் முன் இறைஞ்சி நிற்கும் புரவலரின் கைத்தாலம். கால்களால் சிறிது மண்குவித்து ஒருபக்கமாக சாய்த்து நிறுத்தினான். இதுவரை நிரவப்பட்ட அத்தனை மலைகளின் ஆடிபிம்பம். நதிக்கரையில் அமர்ந்து வீழருவியைப் பார்த்து அமர்ந்திருக்கும் பெருமுதியவனின் ஒற்றைத் தலை. ஒரு முறை தலைகுவித்து தன் பறையை வணங்கினான். பின்னர் ஓடிச்சென்று ஓடும் நீரில் பாய்ந்தான்.

இடப்புறமிருந்து வலப்புறம் பாயும் நதியில் குறுக்காக நீந்தியபடி இருந்தான். நீர்விசை அசைத்து அவனைப் புரட்டியது. நதியோட்டத்தின் முறிந்த கிளைகள், பேரருவியின் உயரத்திலிருந்து உடல்தொட விதிக்கப்பட்ட சிறுவெள்ளை மலர்கள் மோதிக்குலைத்தன. தொடர்ந்து நீந்தியபடியிருந்தான். ஓடும் நதியின் திசை நோக்கி பாயத்தொடங்கும் சிறுமீன்களென கண்கள் தனித்திருந்தன. நீண்ட கிளையொன்று மோதும்படி வர மூழ்கி சுழன்று மீண்டான். நதியோட்டத்தின் தப்பிய சிறு எறும்பென மிதந்து கிடந்தான். வேகத்தின் முகம் போர்வையெனத் தழுவி மூதாதையென வாழ்த்தி சிறுவனென விளையாடி தொடர்ந்தது. கன்னியைக் குலாவும் இளமைந்தனென நதிப்போக்கில் மிதந்து முத்தமிட்டான். ஊடலில் முகம்திருப்பும் இளைஞனென விசையெதிர்த்து கால்களிட்டான். அருகமர்ந்து கண்பார்த்துச் சிரிக்கும் வாழ்வோனென குறுக்கே கிடந்து கடந்து மீண்டுவந்தான். ஊழ்கத்திலமர்ந்து மரணம் காத்திருக்கும் முதியவனென மிதந்துகிடந்தான்.

இரவு குளிர்ந்து நீரென கிடந்ததன. வீழருவியின் விசை ஒன்றோடொன்று உரசி வெப்பம் கொண்டிருந்தது. நிலவொளியில் மறைந்திருக்கும் சூரியென குளிர்போர்வையின் உள்ளாக வெப்பம் ஓடிக்கொண்டிருந்தது. விரல்நுனிகள் நீர் ஊறி குருதி நிறம் கொள்ளும் வரை நதியாடிக்கிடந்தான். பின் மெல்லச் சலித்து மீண்டும் ஒரு நீள் மூச்சு கொண்டு நதியாழத்தின் வேர்வரை சென்று ஒற்றைக் கூழாங்கல் கண்டெடுத்து மீண்டான். நதியோட்டத்திலிருந்து விலகி கரையேறிறான். மூதாதையின் புன்னகையுடன் பறை காத்திருந்தது. கனிகளை இறைசாட்டும் பூசகனென பணிவுடன் கொண்டுவந்த கூழாங்கல்லை பறை முன் வைத்தான். எதற்காக இந்த நாடகத்தை நடிக்கிறோம் என்றொரு கேள்வி எழுந்தது. எங்கோ கிளம்பி எங்கோ அலைந்து இந்த நதிக்கரையின் தன்னை கொண்டுவந்து சேர்த்திருக்கும் விசையெதுவென அறியாமல் உளம் குமைந்தான். முதியவன் அருகமரும் இளையோனின் தயக்கத்துடன் மணல் ஆடையொட்ட பறையின் அருகமர்ந்தான். தூரத்து அருவி சென்று சேரும் மலை முகட்டில் அவள் நின்றிருந்தாள்.

எண்ணைப்பசையொட்டிய அன்னையின் கற்சிலையென அவள் உடல் ஒளிகொண்டிருந்தது. மஞ்சள் மலரால் கோர்த்த ஆடை அணிந்திருகக்கூடும் என கணித்தான். நிலவொளி முகம்துலங்காமல் உடல்பட்டு எதிரொளிப்பதாக இருந்தது. அவள் அங்கிருந்து சற்று கூர்ந்து நோக்கினால் தன்னை அறிந்துகொள்ளமுடியும் என்பதை உணர்ந்தான். ஆனால் அவள் உடலசைவுகளில் அதற்கான நோக்கு இல்லை.மொத்தக்காட்டினையும் தன் ஒருத்திக்க்கென உள்ளாக்கிக்கொண்ட நிமிர்வு இருந்தது. காட்டில் தனித்திருக்கும் பேரன்னைகள் சிற்றுயிர்கள் பேருயிர்கள் எல்லாம் கடந்து காடே தானாகிறார்கள் எனும் காவிய வரி நினைவுக்கு வந்து உடல் சிலிர்த்தான். தானும் ஒரு குளவியென மடியொட்டி கிடக்கும் கனவு எழுந்து வந்தது. முலையுறிஞ்சும் வேட்கை. அன்னையெனவும் துணைவியெனவும் எழும் உளமயக்கு. அருவியென வீழ்வது நதியென எழுவது போன்றதொரு வேட்கை. மயிர்க்கால்கள் கூச்செரிந்தன. உயிர்களற்ற வனாந்தரமென எழுந்த கனவு ஒற்றைப்பெண் அத்தனை வெற்றிடத்தையும் நிரப்பும் விந்தையென வியந்தான்.

ஒற்றைச்சொல் காப்பியங்களை உருவாக்கிவிடுகிறது. ஒற்றை அதிர்வு பறையினை காட்டிக்கொடுக்கிறது. ஒற்றைச் செடி காட்டினை தொடங்கிவைக்கிறது. வெற்றிடங்களை தானாகவே நிரப்புதல் கன்னிகளுக்கு வரமென அளிக்கப்பட்டிருக்கிறது. மண்குழைத்துப்பூசி காய்ந்த சுவர்களுக்குள் ஒரு பெண் முதற்காலடி எடுத்துவைத்து ஒற்றை அகலை நிரப்பும்போது இல்லமென சூல்கொள்கிறது. பெரும்போரில் தோற்று ஓடிய குலங்கள் ஒற்றைப்பெண் விதையிலிருந்து மீண்டுவந்து கருவறுத்திருக்கின்றன. அலைஅலையென சொற்கள் எழுந்தபடி இருந்தன. கையில் பறையில்லாபோது சொல்லற்று அலைந்ததை நினைத்துக்கொண்டான். இந்த ஊற்று காப்பியங்களை எழுதும் விரல்களை தரக்கூடும். ஓவியங்களின் மறைந்திருக்கும் பெருஞ்சொற்றொடர்கள், பெருங்காட்டினை எரிக்கும் சிற்றகலினை இந்த சொற்போக்கு கொண்டு வந்து தரக்கூடும்.

அவள் மலராடை அவிழ்த்து கால்வழியும் சிற்றொடையில் விட்டாள். எங்கென்று அறியாத வேகத்துடன் அது அருவியென்றாகி விழுந்தது. பின்னர் மலைமுகட்டின் உச்சியிலிருந்து கால்தூக்கி நீரில் பாய்ட்ந்தான். ஒரு கணம் விண்ணில் எழுந்து பின் ஆழத்தின் இரைச்சலுக்குள் நீர்கொத்திப்பறவையெனப் பாய்ந்தாள். உளம் அதிர்ந்து உடல் நடுங்கி கால் குழைந்து தரை அமர்ந்தான். பேரணங்கே என் அன்னையே என சொல் எழுந்தது.

Older Entries

%d bloggers like this: