கெளரி,
நான் பெண் வெறுப்பினை அடையாளமாக வைத்திருந்தவன். வெறுப்பில்லை. வெறுப்பென்னும் அடையாளம். சின்னச் சலுகைகளிலிருந்து பெரிய மரியாதைகள் எதிர்பார்க்கும் சுய நலத்திற்கு எதிரான விளையாட்டு. ஒட்டுமொத்தமாக அல்ல. பெண்காதலை மட்டும். தொந்தரவில்லாத தொலைவிலிருக்கும் பெண்கள் அல்ல. அவர்கள் மீது விருப்பமே. அவர்களை அவர்களின் தொலைவில் இருத்தியபடி அவர்களிடம் பழகுவதில் எனக்கு எந்த குழப்பமும் இல்லை. தொலைவிலிருப்பவர்களுக்கான மரியாதைகளை அளிப்பதில் என்னைப்போல் சமர்த்தனில்லை. ஆண்பெண் வேறுபாடின்றி பரஸ்பர மரியாதையை வழங்குவதில் எனக்கு குழப்பமில்லை.
பெண்களை நெருங்கவிடும்போது அவர்கள் அதிகமாக நெருங்கிவிடுகிறார்கள். நம்மை ஒட்டுமொத்தமாக கையில் எடுத்துக்கொள்கிறார்கள். ஒவ்வொரு கணத்தையும் அவர்கள் தங்கள் இஷ்டப்படி ஆட்டுவிக்கிறார்கள். அவர்களை நாம் நெருங்கமுடியாத தொலைவில் இருந்துகொண்டு நம்மை எடுத்தாட்கொள்ளும் கணத்திற்கு அத்தனை தெளிவாக வந்து சேர்ந்துவிடுகிறார்கள். அவர்களின் நகப்பூச்சு வண்ணத்தை நாம் மாற்ற நினைத்தால் கூட கோபம்கொண்டு உடைத்துக்கொண்டு விலகிவிடுவதாக பயமுறுத்தியபடியே ஆடைகளை தலைமயிர் வடிவங்களை அவர்கள் சொற்படி நாம் மாற்றவேண்டுமென எதிர் நோக்குகிறார்கள். பெருங்கால எதிருக்கு வராமலேயே இன்றைய நாளை மட்டும் அவர்கள் இஷ்டப்படி வாழப்பணிக்கிறார்கள்.
இது என்னால் கூடியதில்லை நான் அவர்களை வெறுத்திருந்தேன். என்னை மாற்ற முயற்சி செய்யும் ஒவ்வொரு பெண்ணையும் நான் ஓட ஓட விரட்டியிருக்கிறேன். சொற்களால். அவர்கள் திரும்பி வர அஞ்சும் சொற்களால். விஷம்தோய்ந்த, வெறுப்பு தோய்ந்த சொற்களால் துரத்தியிருக்கிறேன். பேசாமல் இருப்பேன். மூஞ்சைத்திருப்பிக்கொள்வேன். இரவெல்லாம் அழுது வீங்கிய முகத்துடன் வந்து புன்னகைக்காமல் விலகிச் செல்வேன் போனற சில்லறை விளையாட்டுகள் எதுவும் என்னை ஒருபோதும் பாதிப்பதில்லை
அத்தனை ஆடடமும் சலித்து அவர்கள் திரும்பி வரும் இன்னொரு நாளில் மீண்டும் துரத்துவேன். அதே சொற்களால். நான் முற்றிலும் மாறாதாவனாக. இடைப்பட்ட சோக நாட்களுக்காக அவர்கள் என்னிடமிருந்து காரணம் கேட்கும் ஒரு அப்பாவி முகத்தை எதிர்பார்த்திருக்கிறார்கள் என்பது நிச்சயமாக தெரியும் அவர்கள் தொனியில். அப்பொழுதெல்லாம் அ ந் நாட்களில் அவர்களை மேலும் வெறுப்பேற்றுவதற்காகவே அந் நாட்களின் நான் எவ்வளவு சந்தோசமாக இருந்தேன் என்பதைச் சொல்லுவேன். இடை நாட்களின் வெற்றிகள், இடை நாட்களின் கொண்டாட்டங்கள். மிகச்சிறிய சிரிப்பு நிகழ்வுகள். அவை அவர்களைச் சீண்டும். அவர்களின் அகங்காரத்தை. நாம் கண்ணீருடன் திரிந்த நாட்களின் சிரித்துக்கொண்டு நமமைக் கவனிக்காமல் திரிந்திருக்கிறான் என்பது அவர்களின் ஆழ்மன் ஆங்காரத்தைத் தூண்டுவது கண்களீன் அப்பட்டமாகத் தெரியும். ஆனாலும் தொடர்ந்து சொல்லியிருக்கிறேன்.
நெருங்கியவர்கள் மட்டுமே நம்மை துன்புறுத்த முடியும் கெளரி. நம் எண்ணங்களை அசைக்க, வாழ்வில் ஒரு அங்கமாக மாறுவதன் முதற்படி அது. புதியவர்களை வாழ்வின் உள்ளே விடுவதில் எனக்கெதுவும் தயக்கமில்லை. என் கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஆனால் தொலைவில் நிற்கவைத்திருந்தேன். நெருங்கிய ஒவ்வொரு பெண்ணும் தொலைவிற்கு போவதற்கு காத்திருப்பதை அறிந்திருந்தேன். விலகும் பெண்கள் உருவாக்கும் வெற்றிடம் தாங்க முடியாததாக இருக்கிறது. நட்பாக, உறவாக, அத்தனை முகங்களுடன் வருபவர்கள் அத்தனை தொலைவிற்கு அத்தனை முகங்களுக்கான வெற்றிடங்களை உருவாக்கிப் போகிறார்கள்.
என் வெற்றிடங்களுடனே நான் மகிழ்ந்திருக்கும்போது அதை ஏன் இவர்கள் நிரப்பவருகிறார்கள். பிறகு ஏன் அந்த இடத்தை என்னிடம் கையளித்துவிலகுகிறார்கள். அந்த வெற்றிடம் ஏன் மீண்டும் பழைய வெற்றிடமாக இருப்பதில்லை. இந்தக் குழப்பம் இந்த வெற்றிடம் இந்த மாற்றம் என்னை பித்துகொள்ளச் செய்கிறது. வெறியேற்றுகிறது. என் காலங்களை மாற்றிப்போடுகிறது. என் கனவுகளை முகம் மாற்றுகிறது. இதை நான் வெறுக்கிறேன். இந்த வெற்றிடத்தை. இந்த வெற்றிடம் உருவாக்கும் பெண்களை. வெற்றிடம் உருவாக்கும் நெருங்கும் பெண்களை.
தொலைவில் நிறுத்துவது ஒரு எளிய சமன்பாடு. உங்களிடமிருந்து வெளியேறி என் வெற்றிடங்களுடன் என் கனவுகளுடன் என் கூட்டினை சுத்தமாக வைத்திருக்க நெருங்காமலிருபபது நியாயமாக இருக்கிறது. இந்த விலக்கத்தில் என்னை நான் சுதந்தரிக்கிறேன். இந்த கனவுகளை அதன் முகம் மாறாமல் பொத்தி வைத்துக்கொள்கிறேன். என் காலங்களை என் விருப்பப்படி எவருக்குமான ஏக்கமுமின்றி வாழ்ந்து திரிகிறேன். எளிதாக இருக்கிறது அழகாக இருக்கிறது. இப்படியே இருக்க விடுங்கள் என பெண்களை இறைஞ்சுகிறேன்.
பெண்கள் இந்த வெற்றிடங்கள் அறிந்திருக்கவில்லை. இந்த துயரத்தை உணர்வதில்லை. தினம் வருடிச் செல்லும் விரல்கள் ஒரு நாள் இல்லாமலாகும்போது உண்டாகும் வெயிலை மலர்கள் உணர்வது போல விரல்கள் உணர்வதில்லை. உண்மையில் விரல்கள் செடிகளுக்கு வெளியில் இருக்கின்றன. அவை வருடுவதற்கு பெருந்தோட்டமெங்கும் மலர் இருக்கிறது. நான் வருடபடாத மலர் கூட்டத்தில் விரல்களிலிருந்து மறைந்திருக்கும் ஒரு மலராக இருக்க விரும்பினேன்.
விதைகளைப் பரப்பும் பொருட்டு மரம் விட்டு பிரியும் மலர் திரும்பி பார்ப்பதேயில்லை. கூழாங்கற்களை கரையொதுக்கும் நதியலைகள் பிறகு மீண்டும் ஒருபோதும் தொடுவதில்லை. மரமாக கூழாங்கல்லாக கைவிடப்பட்டவனாக வெளியேறியவனாக திரும்ப முந்தைய தேவ கணத்திற்கு திரும்ப இயலாதவனாக என்னால் இருக்க முடியாது. உறவுகளிலிர்ந்து வெளியேறிவிட நினைப்பவன் புதிய உறவுகளை உருவாக்க எண்ணுவது முட்டாள்தனம் என்பதை அறிந்திருந்தேன். ஆகவே விலகியிருந்தேன்
கெளரி, பட்டாம்பூச்சிகள் பறப்பதற்காக பிறப்பெடுத்தவை. நான் நெடுமரமென நிலைக்காமல் கிடைத்த இளைப்பாறுதல் மரங்களைக் கடந்து பறந்து கொண்டிருக்க நினைப்பவன். என்னால் பட்டாம்பூச்சிகளை ரசிக்கமுடியும். அவற்றைக் கையிலேந்தி பார்த்துக்கொண்டிருக்கலாம்தான். வைத்திருந்தால் இறந்துவிடும். விரும்பிய வண்ணங்களில் இறப்பினை தாங்காதவன் நான். விட்டுவிடக்கூடும். விட்டபின் வண்ணங்களை மற்க்கக்கூடியவன் அல்ல. தாழமுடியாமல் ஏங்கிச்சாகிறவன். இந்த விளையாட்டை வெறுக்கிறேன். கையில் வந்தமரும் பட்டாம்பூச்சிகளை விரட்டிவிடுவது இதற்காகத்தான். வைத்திருந்து பின் விட்டு விடுதலையாகி ஏங்கி செத்து எலலா விளைவுகளின் கண்ணிகளையும் அறுத்துச் சூடி இந்த அலகிலா விளையாட்டில் எந்தப்புள்ளியில் அமரவிரும்பாதவனாக இருந்தேன்.
திருவிழாக்கடைகள் எடுத்துவைக்கப்படும் போது போக விரும்புகிறவனாகியிருக்கிறேன். அந்த மெல்லிய துயரம் ஒரு சிறுகுருவியுடன் இணைந்து அந்த ஆற்றுமணலில் தத்திதத்தி நடந்துபோய்க்கொண்டிருக்கிறது. நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரு வேகமூட்டப்பட படக்காட்சியில் உறைந்து நிற்பவனைப்போல துயரத்தையும் பற்வையையும் பார்த்துக்கொண்டே மணல்புதையபுதைய நடந்துவந்திருக்கிறேன். எதையும் வாங்காமல் எதையும் அறியாமல் எதனுடனும் இணையாமல் சுற்றிவருகிறவன் வியாபாரம் முடிந்து கிளம்பிச் செல்கிறவர்களுக்கு எரிச்சலை ஊட்டுகிறான். அவர்கள் பொருட்களை இன்னும் வேகமாக அடுக்கிறார்கள். இன்னும் கோபமாக மண்பாண்டங்களை தரையில் வைக்கிறார்கள்.
மிட்டாய்கடைகளிலிருந்து எறியப்படும் மீந்த இனிப்புகளை தின்று அலையும் நாய்களை வெறுமனே பார்த்திருக்கிறேன். அவை தலையுயர்த்தி ஒருமுறை பார்த்துவிட்டு சில இனிப்புகளை தூக்கிக்கொண்டு மறைவிடங்களுக்கு ஓடுகின்றன. நான் இனிப்புகளுக்கு காத்திருக்கவில்லை நண்பர்களே என்று மானசீகமாக சொல்லிக்கொள்கிறேன். திருட்டுத்தனமாக மட்டுமே இனிப்புகளைத் தின்னமுடியும் என நாய்களுக்கும் கற்றுக்கொடுத்த மனிதர்களை நான் வெறுக்கிறேன். மனிதர்களிடமிருந்து வெளியேறி அந்த நாய்களுடன் நாயாக அமர்ந்து பகிர்ந்துண்ண முடிந்தால் நிச்சயம் செய்திருப்பேன். ஆனாலும் வெளியிலிருந்து விளையாட்டுகளை பார்த்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கிறது.
அலையா துயரத்தின் வாசனை என் நாசிகளுக்கு பிடித்திருக்கிறது. திருடி ஓடும் நாய்களின் கீழ்மை கண்களில் சிரிப்பைத்தருகிறது. இப்படித்தான் வாழ்கிறேன். என் கனவுகளை நானே தேடியலைந்து கண்டடைவதில் ஒரு ஆணவம் உருவாகிறது. வெற்றிபெற்ற ஆணுக்குப்பின்னால் இருப்பவளாக தோழியாக ஆசிரியையயாக கடவுளாகக்கூட பெண்களை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. பொதுவாகவே மனிதர்களிலிருந்து விலகி நடக்கிறேன். பெண்களிடமிருந்து விலகிஓடுகிறேன். புரிகிறதா?
தெருவில் அலையும் நாய்க்குட்டிகளை தூக்கிக் கொஞ்சி மீண்டும் தெருவிலேயே விட்டுச் செல்பவர்களை நாய் வெறுக்கிறது. தூக்க எத்தனிக்கும் கரங்களை அந்த விரல்களை குதறி விரட்டுகிறது. உனக்குத்தெரியுமா வீட்டு நாய்களை விட தெரு நாய்கள் ஆக்ரோசம் ஏன் அதிகமாக இருக்கிறதென்று? அவை மனிதர்களை அறிந்திருக்கின்றன. தெருவில் விட்ட விரல்களை. வாஞ்சையுடன் தடவி மெல்ல சத்தமில்லாமல் பின்புறமாக நடந்து மறைந்துவிடுபவர்களை அவை நினைவில் வைத்திருக்கின்றன. கூடவே காலடியில் உரசித்திரிந்த நாட்களையும். அந்த ஆங்காரம் இழப்புகளிலிருந்து உருவானது. இழப்பினை விரும்பாத ஆளமனதிலிருந்து. தலைவருடும் கரங்கள் உண்மையில் சத்தமில்லாமல் விலகப்போகும் நாளைத்தான் அவை நினைவில் வைத்திருக்கின்றன.
நீங்கள் வீட்டிற்கு ஒரு நாய்வளர்க்கிறீர்கள். அதற்கான எலும்புத்துண்டங்களை பத்திரமாக பையில் சுற்றி எடுத்துச் செல்கிறீர்கள். செல்லும் வழியில் தவறிவிடப்பட்ட நாய்குட்டிகள் உங்களுக்கு க்யூட்டாகத்தெரிகின்றன. அதற்கு நாலு எலும்புத்துண்டங்களை போகிற போக்கில் வீசுகிறீர்கள். அதை வீட்டிற்கு அழைத்துச் செல்ல நீங்கள் விரும்பவில்லை எனும்போது, நீங்கள் வேலையின் அவசரத்திலிருக்கும் பிற நாட்களில் உங்களால் தலைவருடமுடியாது எனும்போது வீட்டு நாய்க்கு வாங்கிச்செல்லாதபண்டங்கள் நீங்கள் தெரு நாய்க்கு அளிக்க முடியாது எனும்போது எதற்காக அந்த ஆரம்பம். நாளை உங்களை வாலாட்டும் நாய்களுக்கு கல்லெறிகளை அளிப்பதற்கு நீங்கள் தயாராக இருப்பீர்கள் எனில் எதற்காக தெரு நாய்களை அன்பிற்கு பழக்க வேண்டும். வெறுப்பில் குரைக்கும் நாய்களை மெல்ல பழக்கப்படுத்தி அன்பினால் கட்டி வாலாட்டி அழைத்துச் சென்று மிகச் சரியாக உங்கள் தெரு முனையில் ஏன் மீண்டும் சத்தமில்லாமல் பிரிந்து நடக்க வேண்டும்
உங்கள் நாடகங்கள் அலுத்துவிட்டன. அன்பென்பது விலகத்தயாராக எ ந் நாளும் என்பதென்ற உங்கள் சட்டகங்கள் எனக்கு உவப்பாக இல்லை. ஆகவே பெண்களிடமிருந்து விலகியிருக்கேன். அன்பென்ற பெயரில் நீங்கள் எதிர்பார்க்கும் வாலாட்டும் நாய்க்குட்டிகளை உங்களுக்காக உருவாக்கி தருவதில் எனக்கு விருப்பமில்லை. ஓனாய்கள் வளர்க்கப்படுவதற்கல்ல. அவை வாழ்வதற்கு. தன் உணவை தான் வேட்டையாடி உண்டு தனித்து மலை மீது அமர்ந்திருக்கும் பெரும் ஓ நாய்கள் எனக்கு உவப்பாக இருக்கின்றன. மழை மரங்களை ஒட்டி சுற்றிப்படரும் கொடிகளின் வாழ்வினை எனக்காக நான் நினைத்திருக்கவில்லை.
ஆனாலும் நீங்கள் விடாமல் நெருங்கி வருகிறீர்கள். ஓ நாய்களைப்பழக்கிவிட விரும்புகிறீர்கள். அவற்றை ஒரு நாய்க்குட்டியைப்போல புறங்கைகளை நக்கிக்கொண்டு கிடப்பதற்கு பழக்கப்படுத்த விரும்புகிறீர்கள். அடிபட்ட ஓனாய்கள் உங்களை வந்தடையும் நாளின் அவற்றின் குருதியைத்த்துடைத்து காயங்களுக்கு மருந்திட்டு மெல்ல ஆற்றுப்படுத்தி அன்பினை அவற்றின் நினைவுகளில் இருத்திவிட எத்தனிக்கிறீர்கள். எந்தக்கணத்தில் பிறர் குருதி வெளிப்படும்போதும் ஓ நாய்கள் தங்கள் கூர்பற்களை வெளிக்காட்டி மொத்தமாக உறிஞ்சிவிட காத்திருக்கின்றன என்பதை நீங்கள் அறிவதேயில்லை இல்லை.
அல்லது அறிந்திருக்கிறீர்களா? அந்தக்கணத்திற்காகத்தான் அத்தனையுமா? எங்கள் கோரப்பற்களை நாங்கள் வெளிக்காட்டுகிறோமா எனில் எப்பொழுது வெளிக்காட்டுகிறோம் என்பதை அறிந்து கொள்வதுதான் உங்கள் நோக்கமா? நான் நான் நினைப்பது போல நான் காட்டில் இல்லையா? உங்கள் சோதனைச்சாலையில் சிறு பெட்டிக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் சிறு குட்டியா நான்? எந்தக்கணத்திலும் எழுந்துவிடும் ஆறுகளை ஒரே தாவலில் கடந்துவிடும் எனது வேகம் வெறும் கனவா?
உங்கள் மருந்துகள் என்னை மயக்க்த்தில் வைத்திருக்கின்றனவா? என் குருதியை ஆற்றுப்படுத்த நீங்கள் அளித்த மருந்து வாசம்தான் பிறர்குருதியைப்போல் என் நாசி அறிந்துகொள்கிறதா? நான் அடைய விரும்பும் காடு இனி இல்லையா? உங்கள் பூட்டுகளிலிருந்து வெளியேறிச்செல்லும் பாதைகளை நான் அறியப்போவதில்லையா? இந்த மருந்தும் இந்த கூண்டும்தான் என்னிடமிருந்து நினைவாக அடுத்த தலைமுறைக்கு கடத்தப்போகிறேனா?
காதுகளுக்குள் குரல்கள் ஒலிக்கும் பால்யத்த்தின் நினைவுகளை பிறர் அறிய முடியாது கெளரி. இந்த அடையாளத்திலிருந்து மீட்டெடுக்க பெண்வெறுப்பினை அடையாளமாக்குவது எனக்குப்பிடித்திருந்தது. பதின்மத்தில் உடல் ஆடும் ஆட்டத்திலிருந்து முற்றிலும் வெளியேறி முகம் பார்க்கும் கண்ணாடியைப்போல பெண்களை பார்த்துக்கொண்டிருக்க வெறுப்பு மட்டுமே உதவியாக இருந்தது. அவ்வெறுப்பினை மெல்ல மெல்ல கூர்தீட்டி என் நானை வந்தடைந்தேன். நட்பற்ற வெறுப்பின் முகத்திலிருந்து ஆழ்ந்த நட்புடனான கவனமற்ற சீண்டல்காரனை உருவாக்க ஆண்டுகள் பிடித்தன. ஆனாலும் அதை வெற்றிபெற்று மெல்ல மெல்ல என் கோபுரத்தைக் கட்டினேன்.
பெண்களின் முன்னால் ஒரு நல்ல நண்பனாக, வலிகளை சொஸ்தப்படுத்தும் தந்தையாக, புலம்பல்களை வேடிக்கை பார்க்கும் சக மனிதனாக இருக்கும் அதே நேரத்தில் அவர்களிடம் என்னை உடைக்காதவனாக, என்னை திறந்து காட்டாதவனாக, என்னை முற்றிலும் மூடியவனாக உணர்வற்றவனாக வெறித்த பார்வையும் கசந்த புன்னகையுமாக அவர்களுடன் பெரும் இடைவெளிகளை உருவாக்கிக்கொள்ள முடிந்தது.
இந்த முகமூடி அளித்திருந்த சுதந்திரத்தை நீ ஒரு பொழுதும் உணரமுடியாது கெளரி. இது ஒரு பெரு நாடகம். அந்தரங்களுக்குள் இறங்கி ஒரு பல்லாண்டு அனுபவங்கொண்ட சிற்பியைப்போல அவர்களுக்கான தீர்வுகளை வெளி ஆளாக நின்று வேடிக்கைபார்த்தபடி தீர்த்துவைப்பது கொடுக்கும் ஆண்மையின் அகங்காரத்தை ஒரு பெண் எக்காலத்திலும் அறியப்போவதில்லை. சொல்ல விரும்பாத ஒரு சொல்லைக்கூட ஒருவரிடமும் சொல்லத்தேவையில்லாத வாழ்வென்பது கடவுளாக உணரச்செய்வது. எல்லார்கதைகளையும் கேட்டிருப்பவன். எல்லா குறைகளுக்கும் தீர்வு வைத்திருப்பவன். எதையும் குற்றம் சொல்லாதவன். எதன் மீதும் குறையில்லாதவன் என்றொரு முகத்தை வைத்திருந்தேன்.
எந்தக்காயத்தின் மீதும் எத்தனை பெரிய கத்தியைக்கொண்டும் என்னால் கீறி ரணமாக்க முடிந்தது. அவர்களின் அந்தரங்கச்சுவர்களில் என் பெயரை எழுதிக்கொண்டபடி தீர்வுகளை உருவாக்கிக்கொடுத்தேன். புலம்பவிட்டேன். வேடிக்கை பார்த்திருந்தேன். அத்தனை குரூரத்தையும் நம் பெண்கள் அத்தனை இலகுவாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்று இப்பொழுது தோன்றுகிறது. மெல்லிய மனதினை தூக்கிக்கொண்டு அலைகிறவர்களை வெறுப்பதுபோல குரூர மனங்களை அவர்கள் விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது.
என் பெண் நட்பு வட்டம் மிகப்பெரியது கெளரி. நீ நம்ப முடியாத அளவு பெரியது. அவர்கள் இந்தக்குரூரத்தை விரும்பி, காது கொடுத்துக்கேட்கும் ஒருவனை விரும்பினார்கள். எந்தக்கணத்திலும் எந்த தொந்தரவையும் அளிக்காது கண்பார்த்து பேசும் என்னை தாங்கிக்கொண்டார்கள். புலம்பல்களை உளவியல் விளையாட்டாக பிய்த்து எறியும் என் குரூரத்தை ரசித்தார்கள். நிறைய அழவிட்டேன். அழுதார்கள். அவர்களுக்கு அது தேவையாக இருந்தது. என் அகங்காரத்தை தீர்த்துக்கொள்ள அவர்கள் தேவையாய் இருந்தார்கள்.
உண்மையில் நான் செய்ததை ஒரு அறுவைச்சிகிச்சை என்றே சொல்வேன் கெளரி. நடுக்கத்தில், பயத்தில். அழுவதற்கான சரியான காரணங்கள் இல்லாமல் , காரணம் தெரியாமல் அழும் வேட்கையுடன் வந்து பேசிக்கொண்டிருந்தவர்கள் நான் சீண்டி அழவைத்தேன். அதையே விரும்பி வந்தவர்கள் கைகூப்பி அதைப்பெற்றுக்கொண்டு அழுது தீர்த்தார்கள். அழுது நிறைந்தபின் ஒரு இரவு உறங்கி எழுந்து அதுவரை காணாத முகத்துடன் வந்து நன்றி சொன்ன எத்தனையோ பெண்களை என்னால் காட்டிக்கொடுக்க முடியும். ஆனால் அதில் பிறர் பலரின் அந்தரங்களையும் சொல்லவேண்டியிருக்கும் என்பதால் சொல்வதற்கில்லை.
ஆனாலும், இதெல்லாம் நீ அறியவேண்டும் கெளரி. என் மனப்பெருங்கோட்டையின் மதில்சுவர் மீது நின்று இறங்காமல் ஆசியளித்தவனைத்தான் நீ இறங்கிவரச்செய்தாய் என்பதை நீ அறியவேண்டும். பிறரின் ஆழ்மனக்காயங்களின் மீது ஆடல் புரிந்து கொண்டிருந்தவனைத்தான் நீ சொற்களில் காலெடுத்து அளந்து பேசி சொல் உன்னைச் சீண்டிவிடும் என அஞ்சுகிறவனை உருவாக்கினாய் என்பதை நீ அறியவேண்டும். இடையறாத ஆட்டத்தின் எல்லா மூலையிலும் உன் கண்ணீர் சுவரில் தெரியாமலும் மோதிவிடக்கூடாதென்று மெல்ல மெல்ல ஆடலைக் குறைத்தவனை நீதான் கண்டறிந்தாய் என்பதை நீ தெரிந்துகொள்ளவேண்டும் கெளரி.
பொய்முகங்களில் நெருங்கி வருகிறவர்கள் நிஜத்தின் கோரத்தினை விட்டு விலகி ஓட விரும்புவதன் காரணத்தை நான் அறிய வேண்டும். என்னுடன் நான் பேசிக்கொண்டிருந்த காலத்தில் வெறும் நிழல்களுக்கு உன் பெயரை இட்டுப்போன கதையை எங்காவது சொல்லிவிடவேண்டும். அலைகடலின் முக்ங்களில் தன் சிலைகளை நிறுவிப்போகிற கூத்தினை யாராவது கேள்விகேடகவேண்டும். ஒற்றைப்பறவைகள் தன் இறகுகளை உறைந்த பனிச்சிலைகளின் மீது விட்டு அவற்றை உடைப்பதின் காரணத்தை எப்படியாது அறிந்து கொள்ளவேண்டும்
சொற்கள் அலையடிக்கும் பெருங்காட்டிலிருந்து வெளியேறி மோனத்தில் ஆள்வதிற்கு முன்னதாக. சொல்லற்றுப்போன காலங்களை சொற்களில் மீளுருவாக்கம் செய்யும் விளையாட்டாக. எழுதக்கூடாதென்று சொல்லப்பட்ட நினைவுகளை எழுத்தின் மூலமாக மட்டுமே வெளியேற்ற வேண்டிய துயரத்தை சொற்களை உணவாக அள்ளி கடல்மீன்களுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.
அஞ்சிய எல்லாவற்றையும் விலகியிருந்த எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்க நீ வந்திருக்கவேண்டும். அலையற்ற பெருங்குளத்தில் மிதக்கும் கற்களை எறிந்து தொடர்ந்து அலைகளை உருவாக்கிப்போயிருக்கவேண்டாம். உணவை உரமாக்கிக்கொண்டிருந்த ஒரு மண்புழுவை எடுத்து நீ தார்ச்சாலையில் விட்டுப்போயிருக்கவேண்டாம். வீழத்தயாராக இல்லாத ஆழவேர் மரங்களை மெல்ல அசைத்து சிறுகாற்றில் ஆட்டும் நாணல்களை நீ உருவாக்கியிருக்கவேண்டாம்.
எதற்கெல்லாம் அஞ்சியிருந்தேனோ எதற்கெல்லாம் விலகியிருந்தேனோ அதிலேயே என்னை ஆழ்த்திச் சென்றிருக்கவேண்டாம். பிறர் குருதியில் எழுதப்பட்ட விதிகளை அழித்து என் குருதியில் அதே விதிகளை எழுதச் செய்திருக்கவேண்டாம். இது ஏற்கனவே தெரிந்தது. இதற்காகவே நான் விலகியிருந்தது. இதிலிருந்துதான் என்னை காத்துக்கொண்டிருந்தேன். ஏற்கனவே அறிந்ததை மிக அழுத்தமாக மீண்டும் ஒரு முறை நீ உருவாக்கிச் சென்றிருக்கவேண்டாம் கெளரி. இந்தச் சொற்களை எழுதாமலேயே உணர்ந்திருந்த காலத்திற்கு நான் திரும்பிச்செல்லவிரும்புகிறேன். இந்தக் கதைகளை யாரோ ஒருவருவருடைய கதைபோல விலகிச் செல்கிறேன். சொற்களின் ஆடல்களிலிருந்து மெல்ல மெளனத்தின் உயர் மலையுச்சிக்கு நான் சென்று சேர விரும்புகிறேன்.
அலைகளின் வெளியிருந்து கடலாழத்தைக் கணக்கிடுபவனை கன்னிகள் எதற்காக உள்ளே அழைக்கிறார்கள். இடைவெளிகளற்ற பெருந்தொலைவிற்கு அழைத்துச் சென்றபின் மெல்ல விலகிச்செல்ல எந்தத் தருணத்தில் முடிவெடுக்கிறார்கள். நெருங்குதல் ஒரு விளையாட்டாகவும், விலகுதல் ஒரு தேவையாகவும் என்று முடிவெடுக்கிறார்கள். நெருங்குதலின் வேகம் விலகுதலில் ஏன் கூடுவதில்லை. பறித்த பழங்களை தயக்கத்துடன் வேரருகில் வைத்துப்போகும் குழந்தையைப்போல, விலகும்போது ஏன் அத்தனை தயக்கமும் துணிவின்மையும்?
நீங்களே அறிந்திருக்கிறீர்களா மரத்திலிருந்து பறித்த கனிகள் ஒருபோதும் தண்டுகளுக்கு திரும்பாது என்று? பழைய காலத்திற்கு திரும்பிச் சென்றுவிட அம்மரத்தால் முடியாதென்பதை அறிந்து ஏற்படும் குற்றவுணர்ச்சி பாவனைதானா விலகுதலின் தயக்கங்கள்? இந்த விளையாட்டுகளை வெறுத்து இதிலிருந்து விலகியிருக்க விரும்பினேன். நெருங்கிப்பின் விலகும் ஆடல்களில் பங்குகொள்ளாமல் தள்ளியிருந்தபடி பார்த்துக்கொண்டிருக்கும் தூரத்துப்பனையாக இருந்துகொள்ள விரும்பினேன்.
கரைகளை உடைப்பதற்கென்றே நடுக்கடலில் உருவாகி வரும் அலைபோல எங்கிருந்தோ வந்து என் வேலிகளை நிலமதிர பிடுங்கி எறிந்தவள் நீ. என் நாடகங்களை முற்றிலும் நிறுத்தி என் ஒப்பனைகளைக் கலைத்து முகமற்றவனாக நிலையழிந்து நிற்கச் செய்தவள். சணல்கயிறுகளில் கட்டப்பட்ட மாமத யானைகள் வெறிகொண்டு விலக ஒற்றைப்புள்ளியில் அறைந்த நிகழ்வு நீ. பாலையில் தனித்தலையும் ஒட்டகங்களை பதறியோடச்செய்யும் மணற்புயல் அல்லது ஆற்றங்கரையில் கடிவாளமற்று ஓடிக்களைத்து இறக்கும் குதிரையின் முதற்சேணம் இரவுப்பறவையின் தூக்கமழிக்கும் ஒளி அல்லது பகல்பறவையின் இருள் நிலம்.
இந்தக்கனவிலிருந்து என்னை நானே எழுப்பிக்கொள்ள முயற்சிக்கிறேன். என் பழைய ஆடைகளை மீண்டும் எடுத்து அணிந்து கொள்ள முயற்சி செய்கிறேன். மீண்டும் பழைய மனதிற்கு திரும்பிச் செல்ல வேண்டுகிறேன். ஆனாலும் எழுகிறது எங்கிருந்தொ ஒரு சொல். ஒரு பெயர். சிறு நிகழ்வு. ஒரு தென்றல். அல்லது எங்கோ நிகழ்கிறது ஒரு கொடும் போர் எங்கோ விளைகிறது ஒரு முதல் நெல்மணி. மீண்டும் என்னை இழுத்து உன்னிடம் கொண்டு சேர்க்க. அடுக்கிய சட்டங்களை உடைத்து வெளியேறிச் செல்ல. கட்டற்ற பெரும் கனவிற்கு மீண்டும் தள்ள. ஒரு அற்புத கணம் மீண்டும் நிகழ்ந்து மீண்டும் வெற்றுக்கோப்பையாக நிலவொளியில் காய.
அத்தனை அகங்காரங்களையும் மீறி உன்னருகில் அமர்ந்திருந்த சில நிமிடங்களில் உணர்ந்ததென்ன? எடையிழந்த இறகு நீரில் மிதக்கையில் தொட்டுச்செல்லும் தென்றல் கொடுக்கும் அசைவை மனமாகக் கொண்டிருந்த நிகழ்வு எங்கனம் நேர்ந்தது. எதை உன்னிடத்தில் கண்டெடுத்தேன். எதை இன்று என்னில் இன்மையாக உணர்கிறேன் எதற்காக காத்திருக்கிறேன். எதற்காக இன்னபிற பெண்களில் உன்னைத் தேடி கண்டடைய முடியாமல் தோற்றுப்போகிறேன். காமமற்ற இந்த உணர்விற்கு எப்படி நான் என்னை ஒப்புக்கொடுத்தேன்?
யாரை நான் இப்பொழுது தேடிக்கொண்டிருக்கிறேன் என்பதை நான் இன்னும் அறியவில்லை கெளரி. யாருக்காக இந்தக் கதைகளை மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்து மறக்காமல் இருக்கிறேன் விலகிச்செல்லாமல் இந்த மனமயக்கி வனங்களுக்குள்ளேயே அலைந்திருக்கிறேன் என்பதை நான் அறிந்திலேன். அந்த வெறுப்பு முகமூடிகளை எங்கே தொலைத்தேன் என்பதை நிச்சயம் நான் அறிந்திருக்கவில்லை.
தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறேன். நீ முற்றிலுமா என் கனவுகளிலிருந்து வெளியேறிவிட்டாய் என்றறிந்த பின்னரும். இன்ன பிற சொற்கள் யாவும் யாருக்காக எழுதப்படுகின்றனவோ அவர் சீண்டலுக்குக் கூட சாத்தியமில்லை என்றறிந்த பின்னரும் எழுதிக்கொண்டிருக்கிறேன். உன்னை அடைதலா, இல்லை பழைய என்னை மீண்டும் அடைதலா என் விருப்பமென்ன என்பதை நானே அறியாமல் இருக்கிறேன். நான் தேடுவது பழைய உன்னையா இல்லை இத்தனை ஆண்டுகள் கழித்தும் நீ மாறாமல் இருக்கக்கூடும் என்றொரு முட்டாள்தனமான ஆசையா என்பதை நான் அறிகிலேன். திசைமாறி உதித்து ஒருவேளை நீ திரும்பி வந்தால் அடையப்போவது எந்த கெளரியை என்பதில் குழப்பம் தீராமலிருக்கிறது.
ஆனாலும் அறிந்து கொள்ள முடிகிறது . விழைவு மட்டுமே மனிதர்களை தொடர்ந்து வாழவைக்கிறது. தூரதேசத்தின் கனவுதான் தொடர்ந்து நடமாட வைக்கிறது. வாழ்வின் மீதான பிடிப்பென்பது எதையாவது தேடுவது. திரும்பிவராத ஒன்றுக்காக காத்திருப்பது. ஓடிக்கொண்டிருப்பவர்கள் ஓய்வினை நினைத்து வேகமெடுப்பது போல. பயணத்திலிருப்பவர் சென்றடையும் தூரத்தில் கனவை வைப்பதுபோல. செல்வதற்கு பாதைகள் அற்றவர்கள் இல்லாத தேசங்களை கனவுகளில் உருவாக்கியதைப்போல் உருவாக்கி வைத்திருக்கிறேன் உன் மீதான விழைவை.
திரும்பிப்பார்க்கும்போது இந்தக்காலங்கள் ஒரு கனவாக மிச்சமிருக்கிறது. நினைவுகளும் கனவுகளும் கலந்துவிட்ட ஒரு மீப்பெரு சித்திரம். இச்சித்திரத்தில் எது உண்மை எது பொய் என்றறியறியமுடியாத பெரு நிகழ்வுகளின் தொகுப்பு. எல்லாவற்றையும் உண்மையென நம்ப விரும்பும் மனதிற்கும் எல்லாம் பொய்யாக இருக்கக்கூடுமென்ற நிகழ்வுதகவுக்கு அஞ்சும் நனவிலிக்குமான போராட்டம். இந்தப்போராட்டத்திலிருந்துதான் விலகியிருக்க விரும்பினேன் கெளரி. நிகழாத வாழ்வின் நினைவுகள் தூக்கத்தில் நழுவும் குழந்தைகைப்பொம்மையைப்போல தவறவிட விரும்பாமலும் பற்றியிருக்க வாய்ப்பின்றும் விளையாடிக்கொண்டிருக்கும் இந்த சூழலை நான் அஞ்சினேன்.
விலகியிருத்தலின் சுதந்திரம் நெருங்கிப்பின்விலகுதலில் அழியும் கணத்திற்கு அஞ்சினேன். மெல்ல என் பனிக்கட்டிச் சுவர்களை உடைத்தவள் நீ. விலகுதலுக்காக் உருவாக்கி வைத்திருந்த மதிற்சுவர்களை தகர்த்தவள் நீ. எதன் மீதும் பற்றற்ற பெருங்காலத்திலிருந்து சிறு நிகழ்வுகளுக்கு நெகிழ்ந்து கண்ணீர் சிந்தும் காலத்திற்கு என்னை அழைத்து வந்தவள் நீ. விலகுதலின் சுவையின் அதன் பெருங்காவிய ஆடலை நிகழ்த்திப்பின் பிரிவதற்காக அத்தனை தொலைவிலிருந்த சிறுசெடிக்கு பனித்துளிகளை வேர்தொட அனுப்பியவள் நீ.
காயங்களுக்கு அஞ்சுதல் வீரர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. ஆயுதங்கள் அற்றவர்களும் பாதுகாப்பின் அங்கிகளை அணிந்திருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கிகளை அழித்து அகங்காரங்களை அழித்து நிராயுதபாணிகளாக நிறுத்தி பிறகு வடுக்களை விட்டுச் செல்வது எந்த தந்திரத்தின் போர்முறை கெளரி?
– நந்து
மறுமொழியொன்றை இடுங்கள்